Monday, October 24, 2011

தேவை தரமான உயர் கல்வி


Infosys என்ற மிகப் பெரிய IT company-யை உருவாக்கிய
திரு. நாராயணமூர்த்தி அவர்கள் சமீபத்தில் ஒரு பொது நிகழச்சியில் பேசும்பொழது IIT-யில் சேரும் மாணவர்களின் தரம் குறைந்து வருவதைப்பற்றி கவலை தெரிவித்துள்ளார்கள். மிக அதிகமான செலவில் உயர்ந்த தொழில் நுட்பக்கல்வியை வழங்கும் Indian Institute of Technology சென்னை, மும்பாய், தில்லி, கான்பூர், கடக்பூர் என்ற இடங்களில் முதலில் துவங்கப்பட்டது. கடினமான நுழைவுத் தேர்வுக்குப்பின் தான் உயர்நிலை பள்ளி முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். IIT -யின் நுழைவுத்தேர்வின் சிறப்பு நுணுக்கமான கேள்வி கேட்கும் முறை. விஞ்ஞானத்திற்கு அடிப்படையான விதிகளை சரியாக புரிந்து கொள்வது மட்டுமில்லாமல் தொழில் நுட்பத்தில் எவ்வாறு உயயோகிக்கலாம் என்பதையும், கடுவினாக்களுக்கு விஞ்ஞானரீதியாக விடையளிப்பது ஆகியவற்றில் சிறப்பாக பதில் கொடுப்பவர்கள்தான் தேர்வில் வெற்றிப் பெற முடியும். காலப்போக்கில் எல்லா நிலைகளிலும் தரம் தேய்வது போல IIT தேர்வு முறையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது பற்றி திரு. நாராயணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சறுக்கல்ளுக்குக் காரணம் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் தனியார் விசேஷப்பள்ளிகள் என்று கூறியுள்ளது நம்மை சிந்திக்கவைக்க வேண்டும்.

நமது கல்விமுறையில் பெரியகுறை பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ‘rot’ system என்ற முறை. ஆழ்ந்து புரிந்து கொண்டு தொளிவடைவதுதான் உண்மையான பயனுள்ள அறிவை வளர்க்கும். சிலகுறுக்கு வழிமுறைகள் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்களால் IIT-யில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை பயில முடிவதில்லை. IIT யில் பயிலும் 80 சதவிகித மாணவர்களின் நிலை இது தான் என்ற உண்மையை கூறியிருக்கிறார்
திரு. நாராயணமூர்த்தி அவர்கள். IIT -யிலேயே இந்த நிலை என்றால் மற்ற பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை பற்றி யோசிக்க வேண்டும். ஏதோ கல்லூரிக்குச் சென்றோம் படித்தோம் பட்டம் பெற்றோம் என்றில்லாமல் எதிர்கால சவால்களை சந்திக்க தயார் செய்து கொள்ள வேண்டிய புனித இடம் கல்விக் கூடங்கள். Life time employment வாழ் நாள் முழுவதும் குறைவில்லாமல் வேலை வேண்டும் என்று பேராசை இருக்கிறது.

ஆனால் Life time employability வாழ் நாள் முழுவதும் பணி செய்யக்கூடிய திறன் நம்மிடம் இருக்கிறதா, அதை வளர்த்துக்கொண்டுள்ளோமா என்று பார்க்க வேண்டும்.

பல விதமான கலைகளை பயிற்றுவிப்பதாலும், பயிலுவதற்கு ஊக்கம் அளிப்பாதாலும், பல்கலைக்கழகம் University எனப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் கல்லூரிகளிலிருந்து வெளிவருகின்றார்கள். அவர்களில் 20 சதவிகிதம் தான் உரிய வேலைப் பெறுகின்றனர். மற்றவர்கள் பட்டம் இருந்தும் பயனின்றி கிடைத்த வேலையில் காலம் தள்ளுகின்றனர். இந்நிலை மாற வேண்டும் பள்ளிக்கூடங்கள்தான் எதிர்கால இளைஞர்களை உருவாக்குத் தளம். எல்லோருக்கும் ஒரே வழிக்கல்வித் திட்டம் சமச்சீர் கல்வி என்ற சமத்துவ நிலையில் பெருமை கொள்ளாலாம். ஆனால் அது தரமான வலிமையான கல்வித்திட்டமாக மாற வேண்டும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு பொறுப்பு முடிவதில்லை. பெற்றோர்களும் ஒரு நிலையில் ஆசிரியர்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் என்பது உண்மையான வாக்கு கல்விப்புரட்சி என்பது கூட்டு முயற்சி. இது பற்றி தேவை சமுதாய விழிப்புணர்வு. கல்வித்தரம் எல்லா நிலையிலும் மேன்மையடைய வேண்டும்.

--------

No comments: