Thursday, October 21, 2010

இந்தியாவை இணைக்கும் காவல்



தேசிய பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. இராணுவமும் காவல்துறையும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எது நமக்குப் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லை பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததது என்பது தெளிவாகும்.

சுதந்திர இந்தியாவில் 1960-ல் இருந்து 1971 வரை மூன்று பெரிய யுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் உயிரிழப்புப் பொருள் சேதமும் ஈடுசெய்ய முடியாதவை. அதற்குப் பிறகு 1999ம் வருடம் பாகிஸ்தானோடு கார்க்கில் யுத்தம். பனிபொழியும் வடமேற்குப் பகுதியான சியாசன், வடகிழக்கு இந்திய சீனா எல்லையில் தொடர் கண்காணிப்பு என்று நமது எல்லைப் பாதுகாப்பினை பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்.

அண்டை நாடுகள் அச்சம் கொள்ளும் வ்கையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தினால்தான் அமைதி காக்கமுடியும் என்பது பாதுகாப்பில் டிடெரன்ஸ் என்று சொல்லப்படும் முக்கிய சித்தாந்தம். முப்படையான இராணுவம், வான்படை, கடற்படை இவைகளை முறையாக காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் வேண்டும். சமீபத்தில் பாதுகாப்புப் பிரிவுகளை நவீனப் படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சத்து 25,000 கோடி ரூபாய் திட்டம் வகுத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நவீனமயமாக்குவதில் காவல்துறைக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் ரூபாய் 2500 கோடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு சராசரி 250 கோடி. இது 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசத்திற்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதத்தில் காவல்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டும். எல்லைப் பிரச்சனைகளைப் போல எப்போதும் வருவதல்ல உள்நாட்டுப் பிரச்சனை தொடர் விழிப்புணர்வோடு கவனித்தால் தான் சட்டம் ஒழுங்கினை சீராக சமாளிக்க முடியும்.

1992ம் வருடம் அயோத்தியா பிரச்சனை தலைதூக்கிய போது நாடெங்கிலும் கலவரம் வெடித்தது. 1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சமுதாயத்தைப் பிளவு படுத்தியது. 2002ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்.

1990ல் துவங்கிய பாப்ரி மஸ்ஜித் ராமர் பிறந்த இடம் விவகாரம், மதவாத பிரச்சனைக்கு வித்துட்டுள்ளது. மிகைவதும் குறைவதுமாக இருந்தாலும் பிரச்சனை முடிந்தபாடில்லை.

புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள் முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மதவாத மோதல்கள் குறைவு என்றாலும் வன்முறை சம்பங்களின் கொடூரம் குறையவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்கள் என்று விட்டுவிட முடியாது. 2001 முதல் 2009 வரை 6541 வகுப்புவாத கலவரங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதில் 2864 உயிர்கள் மடிந்தன. 21,640 மக்கள் காயமுற்றனர். இவை காவல்துறையினரால் பதியப்பட்ட வழக்குகளாகும். பதியப்படாத சிறுவழக்குகள் பன்மடங்கு இருக்கும் என்று அனுமானிக்கலாம். குஜராத் மாநிலத்தில் கோத்ரா பயங்கரம் 2002ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான மோதல்கள். ஒரு சிறிய பொறி போதும் பற்றி எரிய என்ற நிலையில் சில இடங்களில் மதவாத பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் புகைந்து கொண்டிருக்கின்றன. சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 130 உயிர்கள் 600 வகுப்புவாத மோதல்களில் பலியாகின்றன.

இனக்கலவரங்களின் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 1993ம் வருடம் நிகழ்ந்த மும்பை கலவரம் மற்றும் 2002ல் குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதலும் இதற்கு எடுத்துக் காட்டு. நமது நாட்டில் 2004-ல் இருந்து 28 பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் உயிரிழப்பு 990 காயமுற்றவர்கள் 2791.

இனக்கலவரங்களால் ஏற்படும் பொருட்சேதம் மதிப்பிட முடியாது. 1992-93ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் மட்டும் ரூ.9000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கலவரத்தின் போதும் இயல்பு வாழ்வு பாதிப்பு, எப்போதும் மக்கள் ஒரு பீதியில் வாழவேண்டிய நிலை, கல்விக் கூடங்கள் செயலிழத்தல் போன்று சமுதாயத்திற்கு ஒட்டு மொத்த பின்னடைவு ஏற்படுகிறது. அயோத்தியா பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30 தீர்ப்பு வழங்கியபோது என்ன நடக்குமோ என்ற பயம் இந்தியா முழுவதும் சூழ்ந்தது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மஉறாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்றும் மற்ற மாநிலங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மூச்சைப் பிடித்துக் கொண்டு மக்கள் செய்தி ஒளிபரப்பினை கவனித்தனர்.

எதிர்பார்த்தது போல் அசம்பாவிதங்கள் ஒன்றும் நிகழவில்லை. நடுநிலை பிறழாது தீர்ப்பு அமைந்தது ஒரு காரணம் என்றாலும் விவேகத்துடன் பொதுமக்கள் தீவிரவாரத்தை அண்டவிடாமல் அமைதி காத்தது ஒரு புறம், எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினர் மிகச்சிறப்பாக கடமைஉணர்வோடு பணியாற்றியது நமது நாட்டின் இறையாண்மையை தலை நிமிரச் செய்தது.

உத்திரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மதவாத பயங்கரம் தலைதூக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த மாநில காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் எப்போதும் போல் சம்பரதயாத்திற்காக ஆலோசனைக்கூட்டம் நடத்தாமல் சரகத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்பிக்களுக்கும் தெளிவான ஆலோசனை வழங்கியதோடில்லாமல் உட்கோட்டம், தாலுக்கா அளவில் எல்லா அதிகாரிகளுக்கும் எவ்வாறு நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. சரகத்தில் உள்ள அதிகாரிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கு குறுக்கீடு ஒன்றும் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அந்தந்த சரகத்தில் கைது செய்து அவர்களது சட்ட விரோத செயல்கள் முடக்கப்பட்டன. யாரும் அவர்களது உதவிக்கு வரவில்லை. வந்ததையும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. சுதந்திரமாக செயல்படவிட்டால் காவல்துறை சிறப்பாக செயல்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் சமுதாயத்தோடு இணைந்து செயல்பட்டால் காவல்துறையின் செயல்திறன் மேலும் சிறப்படையும். சமுதாயக் காவல்பணியை முழுமையாக செயல்படுத்தும் மாவட்டங்களிலும் காவல் நிலைய சரகங்களிலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் கட்டுப்பாடாக சமாளிக்கப்படுவதை காணலாம். சாதாரண நாட்களில் நேர்மையாக பணிகள் செய்தால்தான் அவசர காலத்திலும் அசாதாரண நாட்களிலும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற முடியும். இத்தகைய ஒத்துழைப்பு சாதாரணமாக வராது. குற்றங்கள் நிகழாமல் தடுப்பது. சட்டம் ஒழங்கு பிரச்சனைகளை முளையிலேயே தலையிட்டு களைவது. நம்பகரமான தகவல்கள் சேகரித்து அமைதி காப்பது போன்று ஒழுக்கமாக தன்னார்வத்தோடு செயல்பட்டால் மக்கள் ஒத்துழைப்பு தாராளமாக வரும்.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர் படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒன்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பது காவல் துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையை குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள் மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களும், சிறப்பாக பாதுகாப்புப் பணி செய்த காவல்துறையும் வேறு சர்ச்சைகள் மறையும் வகையில் இந்தியாவின் புகழை நிலை நாட்டினர். காவல்துறை விளையாட்டு வீரர்கள் இந்தியா வென்ற 101 பதக்கங்களில் 17 பதக்கங்களை வென்றனர் என்பது பெருமைக்குரிய வெற்றி.

தேசிய விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. உலகளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் காவல்துறையின் பொறுப்பு அசாதாரணமனது மட்டுமல்ல, அதை நிறைவேற்ற அமானுஷ்ய சக்தி உடலளவிலும் மன அளவிலும் ஓங்குதல் வேண்டும். தீயதை ஒடுக்க நடக்கும் தர்மயுத்தத்தில் உயிரிழந்த காவல் வீரர்கள் பலர். ஒவ்வொரு வருடமும் சராசரி 1000 காவல்துறை ஆளினர்கள் உயிர்தியாகம் செய்கின்றனர். காயமுற்றவர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பணிச்சுமையினால் எல்லா விதமான உடல் உபாதைகளையும் சுமந்து கடமையாற்றுவோர் ஏராளம். 1999-ல் இருந்து 2009 வரை 9310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர் இந்த வருடம் மட்டும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

1959ம் வருடம் திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.ஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சவாலாக இருந்த வீரப்பன் பிரச்சனை 18.10.2004ம் நாள் முடிவுக்கு வந்தது. வீரப்பன் வேட்டையில் உயிரிழந்த 44 வீரர்களுக்கு பர்கூர் வனப்பகுதியில் உள்ள தட்டக்கரை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 18ம் நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. உயிர் தியாகம் செய்த எஸ்.பி உறரிகிருஷ்ணன், எஸ்.ஐ செந்தில் மற்றும் காவலர்கள் ரமேஷ், செல்வராஜ் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது.

சுயநலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் தான், தன் குடும்பம், ஜாதி, இனம் என்ற உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கின்றன. சமுதாயம் மற்றும் நாடு பற்றி சிந்திக்க நேரமில்லை. இத்தகைய சூழலில் சமுதாய நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரை போற்றுவோம். இந்த வருடம் ஜனவரி மாதம் தவித்த வாய்க்கு தண்ணீர் இன்றி நடுரோட்டில் கயவர்களால் வெட்டப்பட்டு உயிர் துறந்த உதவி ஆய்வாளர் வெற்றிவேல், ஆய்வாளர் அந்தோணி ஆரோக்கியதாஸ், உதவி ஆய்வாளர் அப்துல் லத்திப், உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், உதவி ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பரமசிவம், தலைமை காவலர் ஜெகநாதன், முதல் நிலை காவலர் கணேசன், முதல் நிலை காவலர் நாகரத்தினம், முதல் நிலை காவலர் ஆசைக்கனி, பெண் காவலர் நாகஜோதி, காவலர் செங்காலி, போக்குவரத்துப் பணியின்போது உயிரிழந்த கூடுவாஞ்சேரி தலைமைக் காவலர் தேவன் மற்றும் நாடெங்கிலும் இந்த வருடம் அமரர்களான சுமார் 800 காவல்துறை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவை இணைக்கும் இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.


This Article published in Dinamani on 21.10.2010

No comments: