Friday, December 26, 2008

இரண்டாவது சுதந்திரப் போர்


டி மேல் இடி என்று இந்த வருடம் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல அப்பாவிகள் உயிர் இழந்தனர். உத்திரபிரதேசம், பெங்களூரூ, குஜராத், ராஜஸ்தான், ஐதராபாத், தில்லி இப்போது மும்பாய் ஆகிய முக்கிய நகரங்களையும் சேர்த்து 59 இடங்களில் நடந்த தாக்குதலில் 441 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபடும் திவிரவாதிகளின் நோக்கம் சகஜ வாழ்க்கையை நிலைகுலைய செய்து சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது, விரோதத்தை வளர்ப்பது, முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பது, பாதிப்பு அடைய செய்வது, கலகம் விளைவித்து ஆதாயம் தேடுவது. நடந்த நிகழ்வுகளில் சமுதாயத்தில் வேறு விதமான மதம் சார்புடைய கலகங்கள் நடவாமல் தடுக்கப்பட்டதில் ஒரளவு திருப்தி அடையலாம். இது சாதாரண மக்களின் முதிர்ச்சியான அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். நவம்பர் 26-ம் நாள் மும்பாயில் நடந்த கொடூரமான தாக்குல் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. மக்களை பிளவுபடுத்த நினைத்த கலகக்காரர்களின் குறிக்கோள் வெற்றியடையவில்லை மாறாக தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், ஒன்று சேர்ந்து தகர்த்தெறிய வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் வளர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.
பலவிதங்களில் மும்பாய் தாக்குதல் வித்தியசமானது எல்லாவிதத்திலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில் இருக்கக்கூடிய குறைகளையும், தவறுகளையும் படம் பிடித்து காட்டியுள்ளது.
தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது.எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை.
தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.பொது மக்கள் காவல்துறையின் பணிகளில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பை பெற காவல்துறையினரும் தமது பணிகளை திறம்பட செய்திட வேண்டும். பொது இடங்களில் சந்தேகிக்கும் பொருள்கள் இருந்தாலோ, சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. இது இந்திய ஆளுமைக்கே சவால். மக்கள் சக்தி மகத்தானது. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி லத்தி மட்டும் ஏந்திய துணிச்சலான காவலர்களால் சாதிக்க முடிந்தது என்பது நெஞ்சுறுதியும் வீரமும்தான் உண்மையான ஆயுதங்கள் என்று தெளிவுபடுத்துகிறது. மக்களிடையே விரோதத்தை வளர்க்கும் பிரிவினை சக்திகளுக்கு இடம் கொடாது தீவிரவாதத்தை ஒடுக்குவோம், பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்போம். மனித நேயத்தை வளர்த்து பாரதி கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்.


இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 21.12.2008 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

No comments: