Wednesday, December 10, 2008

சிறைகளையும் ஊடுருவும் உரிமைகள்

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டது. 1914-18 -ல் நடந்த முதல் உலகப் போர், தொடர்ந்து 1939-45-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் எண்ணில்லா மனித உயிர்களை பலி கொண்டது. இனவெறித் தாக்குதல் நடைபெற்றது. இம்மாதிரி கொடுமை மீண்டும் நிகழக் கூடாது என்ற அடிப்படையிலும், நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு மனித நேய அடிப்டையில் வளர்க்கவும், 1945-ம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி மனைவி எலினா ரூஸ்வல்ட் தலைமையில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு மனித உரிமைகள் சாசனம் வரையறுக்க பல நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 30 பிரிவுகள் கொண்ட அடிப்படை மனித உரிமைகள் தெரிவு செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ம் வருடம் ஐக்கிய நாடுகளின் பொதுக்கழு பாரீஸ் மாநகரத்தில் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்தது. அங்கீகாரம் அளித்த 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த புனித நாளை மனித உரிமைகள் தினமாக 1950-ம் வருடத்திலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினை முன்னிறுத்தப்பட்டு அதற்காக விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுத்தப்படும். கடந்த வருடங்களில் வறுமை ஒழிப்பு, மனித உரிமைக் கல்வி, குழந்தைகளின் உரிமைகள், பெண்ணுரிமை, அகதிகளின் உரிமைகள், விசாரணை கைதிகளின் உரிமைகள் என்று பல உரிமை பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சமநீதி, கண்ணியம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்ற உயரிய குறிக்கோளை செயலாக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. பல நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. பிப்ரவரி 2008-ல் மனித இழி தொடர் வாணிபம் மூலம் மனிதர்கள் நாடு கடத்தப்பட்டு வியாபார பொருளாக ஈடுபடுத்தப்படும் கொடிய செயல் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சிறைவாசிகள் மற்றும் காவலில் உள்ளவர்களின் உரிமைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், சிறைவாசிகளுக்குரிய உரிமைகள் பற்றியும் கருத்தரங்கு நடத்தியது. சிறையில் உள்ளவர்களை மனித நேயத்தோடு நடத்துவதில்லை என்பது சிறை நிர்வாகத்தின் மிது பொதுவாக தொடுக்கப்படும் குற்றச்சாட்டு. இதை மனதில் கொண்டுதான் மகாத்மா காந்தி அவர்கள் மிக அழகாகச் சொன்னர்கள் “சிறைவாசிகள் அடிமைகள் அல்ல, அவர்கள் நாட்டின் உடமைகள்”.

உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் மனித உரிமைகளின் தூண்கள் எனலாம். இந்திய அரசியல் சட்டம் பாகம் மூன்றில் இந்த அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரிமைகளுக்கு சட்டப்படி சில வரைமுறைகள் வகுக்கலாமே தவிர எக்காரணம் கொண்டும் மறுக்கப்பட முடியாது. காலில் ஜிப்ரான் பலம் படைத்தவர்களின் அடக்குமுறை போக்கை “கல் உடைத்தோம் அதை வைத்து சிறை கட்டினாய், நூல் நூற்றோம் அதை சாட்டையாக்கி பிரயோகித்தாய்” என்று விவரிக்கின்றார். தொன்றுதொட்டு வரும் இம்மாதிரியான அடக்கு முறைகளால் சிறைச்சாலைகள் கொடூர மையங்கள் என்ற கணிப்புதான் மேலோங்கியுள்ளது.
எந்த ஒரு குற்ற நிகழ்வும் ஒருவருடைய உரிமை மீறல் சம்பந்தப்பட்டது. இதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினுடையது. அந்த விசாரணை நியாயமானதாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். முறையற்ற விசாரணையால் காவல்துறையின் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுவது வேதனைக்குரிய விஷயம். ஒரு வழக்கு விசாரணையின்பொழுது குற்றம் புரிந்தவரை கண்டுபிடித்து ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து புலனாய்வு மேற்கொள்வது ஒரு முக்கிய கட்ட நடவடிக்கை. ஆனால் இத்தகைய கைது சட்டத்திற்கும், விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். முறையற்ற கைதினால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

மத்திய ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2006-ம் வருடம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 26.53 லட்சம் குற்றவாளிகளும், சமூக நல சட்டங்களின் கீழ் 35.54 லட்சம் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த முப்பது வருடங்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 92.20% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2007-ம் வருடம் 2.01 லட்சம் குற்றவாளிகள் இந்திய தண்டனை சட்ட வழக்குகளிலும், 5.31 லட்சம் குற்றவாளிகள் சமூக நல சட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 65,091 பெண் குற்றவாளிகள் அடங்குவர். கைது நடவடிக்கையின் பொழுது டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வரைமுறைப்படுத்தியுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக கைது செய்த 24 மணி நேரத்திற்குள் பிரயாண நேரம் நீங்கலாக நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் விளைவிக்கக்கூடிய வழக்குகள் தவிர்த்து மற்ற சாதாரண வழக்குகளில் கைது செய்தவரை காவல்துறையே ஜாமீனில் விடுவித்து மனித உரிமை மீறல் குற்றங்களைக் குறைக்கலாம். இங்குதான் காவல்துறையின் மேலதிகாரிகள் முதிர்ச்சியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டும். மேலும் எதிர்மறைத் தாக்குதல் (என்கௌண்ட்ர்) மிக அபாயகரமான நேர்வுகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். சாதாரண நிகழ்வுகளில் இத்தகைய அணுகுமுறை தவறானது.

சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது அந்த நாட்டின் சமுதாய கலாச்சாரத்தின் பிரதிபலப்பு என்பது உண்மை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காவலில் உள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கிறது.

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கைது நடவடிக்கை, காவலில் வைப்பது (சட்டத்தின் அடிப்படையில்) தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் எடுக்கப்பட வேண்டும்.

மனிதாபிமானம், கண்ணியம் பாதிக்கும் வகையில் ஒருவரும் நடத்தப்படக்கூடாது. காவலில் உள்ளவர்களை கொடுமைப்படுத்துதல் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

காவலில் உள்ளவர்கள் கண்ணியமான முறையில், மனிதாபிமான முறையில் நடத்தப்படவேண்டும்.

காவலில் வைக்கபடுவர்கள், காவலுக்குள்ளான உரிமைகளைத்தவிர மற்ற சிவில், பொருளதார, கலாச்சார, சமுதாய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்குண்டான உரிமைகளை பாகுபாடின்றி அனுபவிக்க உரிய சூழல் உருவாக்க வேண்டும்.

உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில் அதைப் பற்றி புகார் கொடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

தேசிய மனித உரிமைகள் ஆணையமும், காவலில் உள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியதை முக்கியமான மனித உரிமையாக அறிவித்துள்ளது (Custodial Justice). எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை வளாகங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20,000 இல்லவாசிகள் தங்க வசதி உள்ளது. இல்லவாசிகளின் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இன்றி பணிகள் நிறைவு செய்யப்படுகின்றன.
சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

· சிறைச்சாலை வளாகங்களில் அடைப்பில் உள்ள சிறைவாசிகளை ‘இல்லவாசிகள்’ என்று சுயமரியாதை பேணும் வகையில் அழைக்கும் முறை அமல்படுத்தல்.

· உணவுப் பண்டங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க தரமான, அத்தியாவசியமான அரிசி, பருப்பு, சக்கரை வகைகளை அரசு சிவில் சப்ளை நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய பரிந்துரையின் பேரில் அரசு ஆணையிடல்.

· எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கு விசேஷ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் எல்லா மத்திய சிறை வளாகங்களிலும் அமைத்தல். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு வழங்கல்.

· 60 வயதுக்கு மேற்பட்ட இல்லவாசிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தனி பராமரிப்பு ஏற்பாடு.

· உடல் ஊனமுற்ற இல்லவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ வசதி மற்றும் உணவு.

· இல்லவாசிகள் கல்வி பயில்வதற்கு முன்னுரிமை. வளர்கல்வி, ஆரம்பக் கல்வி, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் திறந்தவெளி பல்கலை கழகங்கள் மூலம் இளங்கலை கல்வி முறைகளுக்கு ஏற்பாடு.

· செயல் வழிக் கல்வித்திட்டம் அமல்படுத்தல்

· தொழில்நுட்ப கல்வி பயிற்சி அளித்தல்

· சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தி இல்லவாசிகளுக்கு சிறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தல்.

· தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து உழைப்பதற்கு வாய்ப்பளித்து இல்லவாசிகள் பணம் ஈட்ட வழிவகுத்தல்.
· விடுதலையாகும் இல்லவாசிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடு.

· யோகா, தியானம், வாழும்கலை பயிற்சிகள் மூலம் இல்லவாசிகளுக்கிடையே மன அமைதி ஏற்படுத்தல்.

· தேச பக்தி பாடல்கள் தினமும் சிறைச்சாலைகளில் ஒலிக்க ஏற்பாடு. இதன்மூலம் அவர்களின் நாட்டுப்பற்றை வளர்த்தல்.

· எல்லா மத பண்டிகைகளையும் இல்லவாசிகளோடு கொண்டாடுதல்.

· சிறைச்சாலை நிர்வாகப் பணியாளர்கள் பணிகள் பரிமளிக்க விசேஷ பயிற்சி துவக்கம்.

மனித உரிமைகள் புனிதமானவை அவை மனிதனின் இதயத்தில் இயற்கை அன்னையின் விரல்களால் எழுதப்பட்டவை. மனித நேயம் பேணுவோம் மனித உரிமைகள் காப்போம்.

உலக மனித உரிமை நாள் 10.12.2008 அன்று தினமணி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.

No comments: