Monday, October 15, 2012

காந்திஜிக்கு உண்மையான அஞ்சலி



காந்தியடிகளை புத்தகத்திலும் ரூபாய் நோட்டிலும் பதித்துவிட்டு காந்திய கோட்பாடுகளைப் புதைத்துவிட்டோம்.  காந்தீய சிந்தனைகளில் மிக முக்கியமானது அஹிம்சை மற்ற உயிரினங்களை வதைக்காமல் இருத்தல்,  பாதுகாத்தல் அஹிம்சை என்று பரவலாக உணரப்படுகிறது.  ஆனால் அஹிம்சை என்பது இது மட்டுமல்ல.  தன்னடக்கத்தின் உச்சகட்டம் தான் அஹிம்சை என்கிறார் காந்தியாடிகள்.  அதாவது தன்னைப்பற்றி சிந்தனையை குறைத்து மற்றவர்கள் நலனில் அதிக கவனம் கொடுப்பது உண்மையான சுயநலமற்ற நிலை. தன்னடக்கம் என்பது தன்னைப்பற்றி குறைவாக மதிப்பிடுவது அல்ல.   தன்னைப் பற்றியல்லாமல் பிறரைப்பற்றி அதிகமாக நினைப்பதே தன்னடக்கம்.  பிற ஜீவரசிகளை பரிவோடும் பாசத்தோடும் பாதுகாக்க நினைப்பவன் உயர்ந்த அஹிம்சைவாதி, தன்னடக்கம் மிகுந்தவன்.  இது தான் அஹிம்சையின் இலக்கணம்.
தனது வாழ்க்கையே இந்தியாவிற்கு தான் அளிக்கும் செய்தி என்றார் காந்தியடிகள்.  தனது சிந்தனைகளையும், கருத்துக்களையும் நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்.  எண்ணங்களும், வாக்கும், செயல்களும்.  ஒருங்கிணைய வேண்டும்.  சொல்வது ஒன்று செயல்வேறு என்ற நிலையால்தான் பின்னடைவு ஏற்படுகிறது.  உண்மையான ஆளுமை என்பது முன் உதாரண செயல்களில்தான் வெளிப்படும்.  காந்தி மகான், அன்னை தெரேசா, விவேகானந்தர் போன்றவர்கள் நேர்மையின் அடிப்படையில் உழைத்தால் வெற்றி கண்டனர்.  சமுதாயம் பயன் பெற்றது.  ‘கொடுப்பதில் ஆனந்தம்’, “கனிவான மக்கள் ஆனந்தமான நகரம்” என்று காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது நிறைவு தருகிறது.
     வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  அந்தப்பிரச்சனைகளைத் தீர்பதற்கான முடிவு நமது கையில்.  எந்த முடிவு எடுப்பது என்பது அன்றாட போராட்டம்.  சிறு விஷயங்களிலிருந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டங்களில் நாம் எடுக்கக்ககூடிய முடிவு திருப்பு முனையாக அமையும். பல நேர்வுகளில் நாமும் எடுத்த முடிவைப்பற்றி வருத்தப்படும் நிலை ஏற்படும்.  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், யோசிக்காமல்  வருவது வரட்டும் என்று அகங்காரத்தோடு செல்லக்கூடிய பாதையை தெரிவு செய்யும் பொழுது இடர்பாடுகள் நிச்சயமாக வரும்.
     பேராசையால் பெரு நஷ்டம் என்பதை கண்கூடாக பல நிகழ்வுகளில் பார்க்கிறோம்.  ஆனாலும் விட்டில் பூச்சிகள் போல் மனிதர்கள் ஆசை என்ற மாயையில் சிக்கி மடிகிறார்கள்.  ஈமு கோழிப்பண்ணை என்று விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் ஒரு கும்பல் சுருட்டிவிட்டது.  ஏமாறுவதற்காகவே சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பணம் பாதாளம் பாயும் என்பார்கள். பணத்தாசை நம்மை ஆட்டுவிக்கிறது.  பண்டம் பரிமாற்றங்களுக்கு பணம் தேவைதான்.  உபயோகமானதும் கூட.  ஆனால் பணம் நமக்கு கீழ்படிய வேண்டுமே தவிர நாம் பணத்திற்கு அடிமையாகக் கூடாது.  பணம் நமக்கு  உதவக்கூடிய வகையில் வழியைக் கண்டுபிடித்தால் அது மனித குலத்திற்கே சேவை செய்யும்.  ஆனால் பணம் பேராசைப் பிடியில் சிக்கியவர்களை கட்டி ஆள்கிறது.
     பணம் சேகரிப்பு என்பது ஒரு கொடிய நோய்.  அது பரவி நம்மை ஆட்கொண்டு விடுகிறது.  எவ்வளவு பணம் சேர்ப்பது.  ஒரு சேர எவ்வளவு அனுபவிக்க முடியும்.  இருப்பதோ ஒரு வயிறு,  இரு கால்கள், இரு கைகள், ஐம்புலன்கள்.  அதிக பணம் சேர்ந்தவுடன் ஒரு வித சோகம் படர்கிறது.  நெஞ்சு குருகுருக்கிறது.  ஏதோ ஒரு குற்ற உணர்வு வாட்டுகிறது.  பணம் குறுக்கு வழியில் சம்பாதித்திருக்கலாம்.  பலரை ஏமாற்றி சேர்த்திருக்கலாம்.  ஏழைகளுக்கு சேர வேண்டியதை மடக்கி வைத்திருக்கலாம். 
     இத்தகைய நிலையில் பணக்கார மனிதன் இரண்டு வகைப்படுகிறான்.  குற்ற உணர்வைப் போக்குவதற்காக  மற்றவர்களுக்கு பண உதவி செய்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறான்.  குற்ற உணர்விலிருந்து விடுபட முயற்சிக்கிறான்.  மற்றொரு வகை பேராசைப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மனம் நொந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறான். எவ்வளவு பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை பணம் இருந்தும் வருவதில்லை.
     வாழ்க்கையில் சிலவற்றை விலைபேச முடியாது.  பணத்தால் வாங்க முடியாது.  அன்பு, பாசம், பரோபகாரம், தியானம், நன்றி மனப்பான்மை நம்முள் வளர வேண்டும்.  பணத்தால் வாங்க முடியாது.  ஆனால் இவற்றைப் பற்றி பலர் யோசிப்பதில்லை, யோசித்தார்கள் என்றால் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் பெருகியிருக்குமா,  இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன, மலைகள் மடுவாகின்றன.  பெயர்த்தெடுத்த கிரானைட்டுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்,  ஏற்றுமதி வளர்கிறது என்று இருமாப்படைய முடியுமா?  நமது வளங்கள்தான் அழிகின்றன.  ஆந்திர மாநிலத்தில் மலைகள் கொடையப்படுவது எல்லை மீறியது என்பதால், மலைகளைப் பாதுகாக்க பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன.  ஆயினும் கிரானைட் க்வாரிகளின் அழித்தொழிப்பு தொடர்கிறது.  ஆங்கிலேயர் ஆண்டபோது கூட இந்த அளவு கொள்ளைப் போகவில்லை என்று சில கணிப்புகள் கூறுகின்றன.  தேசத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா?
            தாராளமயம், உலகளாவிய வர்த்தகம் என்ற புதிய பொருளதார கொள்கைகள் சில வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் கூடவே ஊழலும் பெருகியுள்ளது என்பதை ஐக்கிய உலக நாடுகள் அமைப்பு கவனத்தில் கொண்டு, 2000-ம் ஆண்டு ஊழல் ஒழிப்பதற்கான கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான தீர்மானம் பொதுச்சபையில் கொண்டு வந்தது.  2005-ம் வருடம் டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.  ஊழல் நடவாமல் இருப்பதற்கான தடுப்பு வழிகள், கடுமையான சட்டம் அதன் அமலாக்கம், ஊழல் புரிந்தவர்களின் சொத்துக்கள் முடக்கம், சர்வதேச குற்றவாளிகள் இனம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்தல்,  பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார்துறை நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் போன்ற பல முக்கியமான பிரிவுகள் ஒப்பந்தத்தில் உள்ளன. 2005-ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு இந்தியா 2011-ம் வருடம் மே 9-ம் தேதி தான் ஒப்புதல் அளித்தது.  ஆனால் இந்திய ஊழல் தடுப்பு சட்டத்தில் மாற்றம் இன்னும் கொண்டுவரப்படவில்லை.
சமீபத்தில் மத்திய புலனாய்வுப்பிரிவுகளின் தேசிய கூட்டத்தில் பேசிய பிரதமர் அவர்கள் சட்டம் மாற்றப்பட வேண்டியதின் அவசியத்தை வலுயுறுத்தியுள்ளார்.  லஞ்சம் பரிமாற்றங்களில் தனியார் நிறுவனங்களின் இணக்கமாக துணைபோகும் முறையற்ற நடவடிக்கைகளை சட்ட மாற்றங்கள் மூலம் குற்றங்களாக கருதப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.  இங்கிலந்து நாட்டில் லஞ்ச ஒழிப்பு புதுச்சட்டம் “ப்ரைபரி ஆக்ட்” ஜீலை 1 2011-ம் வருடம் அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களின் மோசடி நடவடிக்கை உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் நடைபெற்றிந்தாலும் சட்டம் பாயும். ஏழு வருடம் முதல் 10 வருடம் வரை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம்.
     சட்ட நடவடிக்கை ஒருபுறம் அதே சமயம் நேர்மையாக செயல்படுவர்களுக்கு ஊக்கம் அளிப்பதும் அவசியம்.
     அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு ஏழையின் நிலையை மனதில் இறுத்தி எடுக்கப்படவேண்டும் என்றாரே காந்தியடிகள்,  எவ்வளவு  உண்மை! நாம் ஈட்டுவது நமது முயற்சியில், உழைப்பில் பெற வேண்டும்.  ஒரு பதவியில் இருப்பதாலோ அல்லது பதவியில் இருப்பவர்கள் உறவினர் என்ற முறையில் ஏதாவது பெற்றால் அது எந்த வகையிலும் நேர்மையான முறை ஆகாது.   இதைத்தான் காந்தியடிகள் அவர்கள் திரும்பத் திரும்ப நேர்மையின் உறை கல்லாக  ஒவ்வொரு செய்கையையும் நாம் சோதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.  சத்திய சோதனை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது கடினம்.  நேர்மை பாதையிலிருந்து வழுவா நிலை எய்துவதற்கு கடுமையான பயிற்சியும் சத்தியத்தின் மீது அசையா நம்பிக்கையும் அவசியம்.
உலக நாடுகளில் இளம் வயதுள்ள ஜனத்தொகை அதிகமாக உள்ள நாடு நமது நாடு.  உலகிற்கு உழைப்பாளிகளை இந்தியா அளிக்கும்.  அதற்கு நாம் இளைஞர்களை நல்ல நிலையில்  தயார் செய்ய வேண்டும்.  செயலாக்கத்தையும் தனித்திறன் வளர்ப்பது ஒரு பக்கம்.  அதே சமயம் ஆத்ம பலத்தை வளர்க்க வேண்டும்.  வலிமையான பாரதம் உருவாக வேண்டும் என்றால் மனித வளம் உயர வேண்டும்.  அதற்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் அவசியமாகிறது.
n  நாட்டுப்பற்று, இந்தியாவைப் பற்றி உயர்வான எண்ணம்,  நாடு மேன்மையுற தன்னை அர்ப்பணித்தல்.
n  ஆரோக்கியமான வாழ்க்கை, நன்நடத்தை, மது, மாது, போதை, முறையற்ற உறவு போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்த்தல்.
n  யோகா, தியானம் மூலம் மனவலிமையை வளர்த்தல், மனவலிமை வளர்ந்தால்தான் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும்.
n  அறிவாற்றல் பெற வேண்டும் அறிவாற்றலை ஆக்கப்பூர்வமாக உயயோகிக்கும் திறன் வளர்க்க வேண்டும்.
n  இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். பேணிப்போற்ற வேண்டும்.
n  ஆத்ம பலம் பெற வேண்டும்
n  பரந்த விரிந்த பார்வை, உலகளாவிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒன்றுமை, இணைந்திருப்பதற்கு இறைவுணர்வும் ஆன்மீக பலமும் தான் முக்கிய அடிப்படை காரணம் என்பது நிதர்சன உண்மை.  சுவாமி விவேகானந்தார் கூறுவார் சகிப்புத்தன்மையே இந்தியாவின் பலம் நாம் சகித்துக்கெள்ள முடியாதது சகிப்புத்தன்மையின்மையே!
காந்தியடிகளின் பிறந்த நாள் உலக அஹிம்சை தினமாக அனுவரிக்கப்படுகிறது.  வன்முறையை ஒழித்து அமைதிகாக்க உறுதியெடுக்க வேண்டும்.   ஊழலின் பாதிப்புதான் கொடுமையான வன்முறை.  மனித உரிமை மீறலும் கூட. சத்தியத்தை நம்பவேண்டும்.  ஆத்ம சக்தியின்றி இலக்கை அடைய முடியாது.  அவை இருந்தால் தோல்வி நம்மை தழுவாது.
காந்தி மகானுக்கு நாம் செலுத்துக்கூடிய குறைந்தபட்ச அஞ்சலி ஊழல் ஓழிப்பு ஒன்றுதான்.
000
இக்கட்டுரை தினமணி நாளிதழில் சனிக்கிழமை நாள்.13.10.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

No comments: