Monday, October 15, 2012

மக்கள் துணையே மகேசன் துணை



     ஒரு புகைப்படம் ஆயிரம் செய்திகளைச் சொல்லும் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் பெண் போலீஸ் பிரமீளா பதி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தாக்கியதால் காயமுற்றார்.  செய்தியில் வந்த புகைப்படத்தில் பிரமீளாவை ஒருவர் மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறார்.  பின்னால் இருந்து ஒருவர் உருட்டுக் கட்டையை ஓங்கியவண்ணம் பின் தொடர்கிறார்.  இன்னொருவர் கண்ணில் அனல் பறக்கிறது,  வன்முறை வழிகிறது. மற்றொருவர் கதறும் அப்பெண்ணை வீடியோ காமிரா மூலம் முகபாவங்களை பதிவு செய்கிறார்.
     தெருவிற்கு கூட்டமாக வந்துவிட்டால் நல்லது கெட்டது என்ற உணர்வு மறந்து விடுகிறது.  சேர்த்திருக்கும் கும்பலின் ஒட்டு மொத்த குணம் வெளிப்படுகிறது.  தவறு செய்தாலும் நம்மை யாரும் இனம் கொள்ள முடியாது என்ற தைரியம் வந்து விடுகிறது இந்த உருட்டுக்கட்டை கலாச்சாரம் சென்னையில் கல்லூரித் தேர்தலில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் பிரதிபலித்தது.  கூச்சலிடும் மாணவர்களைப்பற்றி தமிழ் ஆசிரியரின் அங்கலாய்பு எவ்வளவு உண்மை “ஒண்ணு சேர்ந்தா குப்பை, தனியா மாணிக்கம்”!  எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நிலை வந்தால் நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும். போராட்டங்கள் நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.

     முன்னறிவிப்பில்லாத கூட்டங்கள், போராட்டங்கள், திசை திருப்பும் அறிக்கைகள், அப்பாவி மக்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.  ஒடிசா மாநிலத்தில் காவலர் பிரமீளா தாக்கப்பட்ட சம்பவம் இத்தகைய முறையற்ற போராட்டங்களின் விளைவு.  ஜனநாயக அமைப்பில் எதிர்ப்புகளை தெரிவிக்க உரிமையுண்டு.  அமைதியாக துவங்கும் இத்தகைய கூட்டங்கள் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறி சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து விளைவிக்கும் பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.  பொது இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.  அனுமதி அளிக்கும் உத்தரவுவில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கடைபிடிக்க வேண்டிய விதிகள் தெளிவாக போடப்பட்டு கூட்டம் ஏற்பாடு செய்யும் அமைப்பின பெறுப்பாளருக்கு சார்வு செய்யபட்டு பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் பெறப்படும்.
     காவல்துறை அனுமதியோடு நடத்தப்படும் கூட்டங்களில் பல முறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படும். உதாரணமாக பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கூட்டமோ ஊர்வலமோ நடத்தப்பட வேண்டும் என்பது விதி.  ஆனால் தடையிருந்தும் தடைகளை தடையின்றி மீறினால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி என்று கணக்கிடுகிறார்கள்!  பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு எப்படியோ நிலமையை சமாளித்தால் போதும் என்று இத்தகைய தடைமீறல்களை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிர்பந்தம்.  எந்த விதியை கராராக அமல்படுத்துவது, எதை தளர்த்துவது என்பது பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரி முடிவு எடுக்க வேண்டும்.
     கூட்டம் ஏற்பாடு செய்பவர்களோடு நயமாக பேசி விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு விதம்.  ஆரம்ப முதலே கெடுபிடி செய்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைப்பது இனொரு வழி.  கடனே என்று முறை கழிக்கும் பாதுகாப்பு அலுவலர்கள், விதிகள் மீறப்பட்டாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடும் நிலையும் உண்டு.  இந்த சொதப்பல் அணுகுமுறைதான் பல பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது.  அமைதியான கூட்டங்களில் கலகக்காரர்கள் கலந்துவிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் போக காவல்துறை கடைசி யுக்தியான கண்ணீர்புகை, தடியடி துப்பாக்கி சூடு என்ற நடவடிக்கை எடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சில கூட்டங்கள் தடையை மீறி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே நடத்திப்படுகிறது.  இத்தகைய சமூக விரோத செயல்கள், அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளின் துஷ்பிரயோகம். எந்த ஒரு அரசும் அராஜகத்தை சகித்துக் கெள்ள முடியாது. சகித்துக் கொள்ளவும் கூடாது.
     ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பாதுகாப்பு முறைகள், சட்டவிரோத கூட்டங்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய சட்டத்திற்கு உட்பட்ட வழிமுறைகள் பற்றிய பயிற்சி காவலர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. காவல் பணி அடிப்படைப் பயிற்சியிலும், புத்தாக்கப்பயிற்சியிலும் இவை விளக்கப்படுகின்றன. செயல் வழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.  பயிற்சியில் வியர்வை சிந்தினால் களத்தில் இரத்தம் சிந்த நேராது என்பது முது மொழி.  ஆனால் பயிற்சியில் கற்றவை எந்த அளவிற்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதுதான் பிரச்சனைக்குரியது.  சில நேர்வுகளில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.  இங்குதான் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆளுமை சோதிக்கப்படுகிறது.
     பொது அமைதி என்பது அன்றாட சமுதாய நிகழ்வுகளின் அடிப்படையில் மாறுபடும்.  ஒரு சீராக இருக்காது.  உள்ளூர் சச்சரவுகள், வட்டார நிகழ்வுகள், மாநிலம், நாடு ஏன் உலக அளவில் நடக்கும் சம்பவங்களின் தாக்கம் இவற்றைப் பொறுத்தது.  செய்திகள் மின்னல் வேகத்தில் பறக்கும் இந்நாளில் உடையும் செய்திகளை ஆராயாவிட்டால் உறைய வைக்கும் காட்சிகளை எதிர் கெள்ள நேரிடும். 
     ஜாதிப் பிரச்சனைகள் அதிகமாக தலைதூக்கும் மாநிலம் பீஹார்.  அங்கு ஒவ்வொரு ஜாதித்தலைவரும் ஒரு பாதுகாப்புப்படை உருவாக்கி தொண்டர்கள் என்ற பெயரில் வலைய வருவார்கள்.  அரசியலில் ஜாதிகளின் ஆதிக்கம் பீஹார் மாநிலத்தில் அதிகம்.  ரணவீர் சேனா என்ற உயர் ஜாதி பாதுகாப்புப்டை தலைவர் பிரம்மேஷ்வர் சிங் இந்த வருடம் ஜீன் மாதம் கொல்லப்பட்டார்..  அதன் விளைவாக பெரும் கலவரம் ஏற்பட்டது.   வாகனங்கள் எரிக்கப்பட்டன.  சாலைகள் முடங்கயது. மதிப்பிடமுடியாத சொத்து சேதமாகியது.    
காவல்துறைக்கு தர்மசங்கடம். கடுமையான நடவடிக்கை எடுத்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.  அதன் விளைவுகள் மேலும வன்முறையைத் தூண்டக்கூடும்.. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மெத்தனப் போக்கு என்று குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்.  ஆனால் நிதானமான நடவடிக்கைதான் பீஉறார்  காவல்துறை எடுத்தது.  காலப்போக்கில்தான் நிலமையும் கட்டுக்குள் வந்தது.  காவல்துறை எடுத்த நடவடிக்கைப் பற்றி விவரிக்கும் பொழுது, பீஹார் டிஜிபி, தனது அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை தவிர்த்து, பார்த்து, கவனித்து நிதானமாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். வன்முறை நிகழம் பொழுது கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வரும்.  ஆனால் அவ்வாறு ஒரு உத்தரவும் பிஹார்  போலீஸ் வன்முறையை கட்டுப்படுத்த எச்சரிக்ககை கொடுக்கவில்லை. இதன்விளைவாக கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
     மும்பையில் ஆகஸ்ட் 10-ம் நாள் அஸ்ஸாம் மாநில மதவாத வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.  இந்த கண்டனக் கூட்டத்தில் வன்முறை வெடித்தது.  இரு இளைஞர்கள் உயிர்ழிந்தனர் மேலும் 50-க்கும் மேற்பட்டவர் பத்திரிக்கையாளர்கள் உள்பட காயமுற்றனர்.  அரசு  ஊடக வண்டிகள் சேதப்படுத்தப்பட்டன.  மும்பாய் போலீஸ் தீர்கமான உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் தடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.   இத்தகைய சுணக்க அணுகுமுறை கலகக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும், வரும் காலங்களில் கோரமான கலவரங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது என்ற வாதங்கள் வைக்கப்பட்டன.  இதன் எதிரொலியாக நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்ட காவல் ஆணையர் ஆரூப் பட்நாயக் மாற்றப்பட்டார். பதவி உயர்வு நிமித்தமாக  மாற்றப்பட்டார் என்று அரசு விளக்கம் கொடுத்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதுதான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை.
     2011 ஆகஸ்ட் மாதம் லண்டன் மற்றும் அண்மை நகரங்களில் பெரும் கலவரம் வெடித்தது.  அப்போது லண்டன் போலீஸார் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கத்தவறினர் என்று அரசே குற்றம் கூறியது. ஆனால் லண்டன் போலீஸ் ஆணையர் எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்தார்.  கடும் நடவடிக்கையால் உயிரிழப்பிற்கு வாய்ப்புண்டு, அதன் விளைவுகளை போலீஸார் சந்திக்க வேண்டும் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுக்கும் என்ற லண்டன் போலீஸார் வாதத்திற்கும் ஆதரவு இருந்தது.  பல கோடி டாலர் சொத்து பாழடைத்தது.  கலவரக்காரர்கள் வெளிப்படையாக கொள்ளையில் ஈடுபட்டனர்.  அதையும் புகைப்படம் எடுத்து சமுதாய இணையதளத்தில் வெளியிட்டனர்.  காலம் தாழ்ந்து லண்டன் போலீஸார் நடவடிக்கை எடுத்தப்பிறகு தான் கலவரம் ஒய்ந்தது.
     நுண்ணறிவு தகவல்கள்மூலம் பிரச்சனைகளை அறிந்து ஆராய்ந்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும். சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை மூலம் வன்முறை பரவாமல் தடுத்தல், முக்கியமாக கலவரக்காரர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் என்பது தான் காவல்துறையின் சரியான அணுகுமுறையாக இருக்கவேண்டும்.  பல சமயங்களில் பிரச்சனைகளை பெரிதாக்க வெளியிலிருந்து தூண்டுவார்கள்.  மக்களை திசை திருப்ப அறிக்கைகள் விடப்படும்.  போராட்டம் நடத்துபவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் முன் நிறுத்தி காவல்துறையை செயலிழக்கக் செய்வார்கள்.  சமீபதில் கூடங்குளம் போராட்டத்தில் ஒரு சிறுமி காவல் படையினர் முன் நின்று கொண்டிருந்த படம் வெளியானது.  ஏதோ சடுகுடு விளையாடுவது போல் அந்த சிறுமி சிரித்துக் கொண்டிருக்கிறாள். காவலர்களும் விளையாட்டாக பார்க்கிறார்கள்.  சமயோஜிதமாக, மிக கட்டுப்பாடுடனும் அதே சமயம் திறமையுடன் தமிழக காவல் துறை கூடங்குளம் பிரச்சனையை கையாள்வதை பாராட்ட வேண்டும்.
     மேலை நாடுகளில் கலவரங்கள்  எதிர்கொள்ளும் அணுகுமறை வித்தியாசப்படும்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகள் அல்ல நம் மக்கள்தான்.  ஆதலால் பொறுமையுடன் தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும்.  மனித உயிர் விலை மதிக்க முடியாதது.  எந்த விதத்திலும் உயிர் பலி தவிர்க்கப்பட வேண்டும்.  பொருள் சேதம் ஏற்பட்டாலும் அவை காப்பீடு செய்யபட்டிருக்கும். ஈடு கிடைத்துவிடும்  பொருள்களை காப்பாற்ற வன்முறையைதுண்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அசம்பாவிதங்களை வீடியோ மூலம் பதிவு செய்து,  குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் வருங்காலத்தில் கலவரங்களை தவிர்க்கலாம் என்பது மேலை நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் நிலைப்பாடு.
     உடனடி கடும் நடவடிக்கை எடுத்து நிலமையை சமாளிப்பதா, காலம் தாழ்ந்தாலும், சேதம் ஏற்பட்டாலும் நிதானமாக குற்ற வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தருவதா,  அல்லது இரண்டு வழிகளையும் கலந்து செய்வதா?  இது காவல் துறைக்கு உயர் அதிகாரிகளுக்கு சவால்! எந்தவழி தெரிவு செய்தாலும் விமர்சனங்கலிருந்து தப்ப முடியாது.  ஏதற்கெடுத்தாலும் காவல்துறையை பழிப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள்.  மக்கள் நலனைப்பற்றி அக்கறையில்லை.  ஊர் இரண்டுபட்டால்தான் அவர்களுக்கு ஆதாயம்.
ஆனால் காவல்துறை  எந்த முடிவு எடுத்தாலும் பொது அமைதி காப்பதே முதல் நோக்கம் என்ற அளவில் நேர்மையாக செயல்பட்டால் மக்கள் துணை இருப்பார்கள். மக்கள் துணையே மகேசன் துணை!
----
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 18.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது














1 comment:

ரவி said...

சிறப்பான கூர்மையான எழுத்து !!! கட்டுரையின் பல இடங்களில் உங்கள் பரந்த வாசிப்பனுபவமும், ஆழ்ந்த பணி அனுபவமும் பளிச்சிடுகிறது.