Wednesday, November 24, 2010

எப்படி மாய்ந்தனரோ


பயங்கர குற்றவாளிகளை என்கவுண்டர் என்று சொல்லப்படும் எதிர்மறை தாக்குதலில் சுட்டு வீழ்த்துவது மீண்டும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு வந்துள்ளது. கோயமுத்தூரில் முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தைகளை கடத்திச்சென்று கொல்லப்பட்ட நிகழ்ச்சி எல்லோர் நெஞ்சையும் உறையவைத்தது. என்ன பாவம் செய்தார்கள் அந்த அப்பாவி குழந்தைகள் இத்தகைய கோர முடிவு ஏற்படுவதற்கு? சாதாரணமாக எடுக்கக்கூடிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்தனர் குழந்தைகளது பெற்றோர்கள். தமது குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்க வேண்டும் என்று பெற்றவர்கள் நினைப்பதில் தவறில்லை. நல்லப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது வீட்டின் அருகில் இருப்பதில்லை. வசதிக்கு ஏற்றவாறு சைக்கிள் ரிக்.ஷா, ஆட்டோ, தனியார் வேன் அல்லது சொந்தக் காரில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தான் எல்லா நகரங்களிலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புவது பெரும்பாடாகி விட்டது.

தூக்கு தண்டனை மிக அரிதான வழங்குகளில் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், கிடைத்த சந்தேகமற்ற சான்றாவணங்களின் அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது. பல சிக்கல்களுக்கிடையில் நடந்த குற்றத்தில் வெற்றிகரமாக புலன் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கப்பெற்ற பிறகும் நிறைவேற்றுவதில் தடங்கலும், சிக்கலும் இருப்பதால் குற்ற ஆளுமையில் நம்பிக்கை குறையும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் சேலத்தில் ஒரு சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை உச்சநீதிமன்ற முறையீட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தது பிப்ரவரி 2009ம் வருடம். தண்டனை மார்ச் 2010ம் வருடத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 16 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

குறைவான சக்தியைதான் காவல்துறை எதிரிமீது பிரயோகிக்க முடியும் என்பது சட்டம். இந்நிலையில் சந்தேகம் வரும் வகையில் பல நிகழ்வுகளில் என்கவுண்டர் முறையை பின்பற்றுவது அபாயகரமானது. கொடுங்குற்றங்கள் நிகழும்பொழுது சில சமயம் மக்கள் மத்தியில் என்கவுண்டர் முறைக்கு ஆதரவு இருக்கலாம். அதற்காக கொடுங்குற்றவாளிகளின் கதையை அவ்வாறு முடிப்பது சர்ச்சைக்குரியது. நடந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆளினர்கள் பதில் அளிக்க நேரிடும். கேரள மாநிலத்தில் நக்சலைட் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்ட வர்கீஸ் என்ற இளைஞர் காவல் பிடியில் உயிரிழந்த வழக்கில் ஓய்வு பெற்ற 75 வயது நிரம்பிய காவல்துறை ஐ.ஜி திரு லஷ்மணன் குற்றவாளி என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவல்பிடி மரணம் ஏற்பட்டது. ஆனால் என்கவுண்டரில் பங்கு பெற்ற ஒரு காவலரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ புலனாய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எல்லா காவல்துறை ஆளினர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.

குற்றங்களின் தன்மையைப் பொறுத்து குற்ற நிகழ்வுகள் மக்களால் உணரப்படுகிறது. எங்கு ஒரு குற்றம் நடந்தாலும் அந்த செய்தி தொலைக்காட்சி மூலம் பரவி விடுகிறது. ஒரு விதத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உணர்த்தினாலும் மற்றொரு பக்கம் இது பீதியை கிளப்பிவிடுகிறது என்பது உண்மை.

1978ம் வருடம் ஆகஸ்ட் 26ம் நாள் கோயமுத்தூர் சம்பவம் போலவே தில்லி புத்தாபார்க் அருகில் சஞ்சய், கீதா என்ற சோப்ரா தம்பதியரின் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது பில்லா, ரங்கா என்ற இரு கொடியர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டது இந்திய மக்களை உலுக்கியது. இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை 1982-ல் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் ஆளுமை சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மதிப்பைப் பெற்றது.

இந்தியாவில் வருடத்திற்கு சராசரி 20,000 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. 2008ம் ஆண்டு 21,467 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் தில்லியில் 396 கற்பழிப்பு சம்பவங்கள், சென்னையில் 35, மும்பையில் 218 நிகழ்வுகள். இதில் தண்டனையில் முடிவுற்ற வழக்குகள் 26 சதவிகிதம் தான். கற்பழிப்பு குற்றத்திற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சட்டதிருத்தம் அமலில் வந்தால் தண்டனையில் முடிவுறும் வழக்குகள் மேலும் குறையும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. 2008ம் ஆண்டு மொத்த குற்றங்கள் 22,500 அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காக கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்திற்கு உதவுகிறோம் என்று இந்த கொடுமைக்கு காரணம் காட்டுகிறோம். அந்த பச்சிளம் குழந்தைகளின் பிள்ளை பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையை கவனிக்க மறுக்கிறோம்.

எவ்வாறு குழந்தைகளை கடத்துவதற்கும், அதைவிட கொடுமை அவர்களை களங்கப்படுத்துவதற்கும் மனம் வருகிறது? இந்தக் கொடூர நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? குழந்தைகளை பெற்றெடுத்து பராமரிப்பது மிகப்பெரிய பொறுப்பு. மேலை நாடுகளில் வருங்காலப் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு பற்றி வகுப்புகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பொறுப்பு ஏற்க தயார் செய்யப்படுகின்றனர். அவசர உலகில் பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும் பொழுது வேலையாட்களைத் தவிர மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுனர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.

வேலைக்கு ஒருவரை அமர்த்துவதற்கு முன் ஓரளவாவது அவரது பின்னணி தணிக்கை செய்யப்படவேண்டும். அரசு வேலை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கு முன்னர் அவரது நன்னடத்தை ஆராயப்பட்டு சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால் நமது இல்லங்களில் வேலைக்கு வைப்பவரின் பின்னணி ஆராயப்படுவதில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அவசர அவசரமாக ஒருவரை வேலைக்கு அமர்த்திவிடுகிறோம். பின்னால் அவரது மோசமான நடவடிக்கை வெளிச்சத்திற்கு வரும்பொழுது வருத்தப்பட்டு பயனில்லை.

பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. மிட்நைட் மசாலாவாக துவங்கி விரச காட்கள் இப்போது பட்டப் பகலுக்கு வந்துவிட்டது. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்ப திரும்ப விரச காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் எந்த பார்வையில் அவர்களை பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். எலக்ட்ரானிக் ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாக காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் பார்க்ககூடாத காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன என்பதால் அந்த தொடர் இரவு பதினோரு மணிக்கு மேல் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரையைப் பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.

பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர் வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்று கூட ஆய்வு செய்வதில்லை. வேலையாட்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது உண்மையானாலும் மேற்பார்வையே இல்லாமல் முழுமையாக நம்புவது விபரீதத்தில் முடியும்.

ஒரு குற்றம் புரிந்தால் உறுதியாக தண்டனை கிடைக்கும், சட்டம் நம்மை விடாது என்ற பயம் இருக்க வேண்டும். சட்டம் இயற்றுகையில் குற்றத்தின் விகாரம் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பை வைத்து கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது. கற்பழிப்பு சம்பவங்களின் கொடூரம் அதிகமாக உணரப்பட்டதால் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை என்ற மாற்றம் விவாதத்தில் உள்ளது. அதிகபட்ச தண்டனை அவசியம் தான். ஆனால் விரைவான உறுதியான தண்டனைதான் குற்றங்களை கட்டுப்படுத்தும்.

சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படை பணிகளான குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டு பிடித்தல், அமைதி காக்க தகவல் சேகரிப்பது, இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும். இப்பணிகளை நிறைவு செய்ய காவல் நிலையங்களை பலப்படுத்த வேண்டும். காவல்நிலைய அதிகாரிகள் தமது சரகத்தில் எந்த ஒரு போக்கிரியும் வாலாட்ட முடியாது என்று பெருமை கொள்ள வேண்டும். அத்தகைய தன்மானம் போற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்சனையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டு துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடி என்ன பயன். சட்டங்களை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பை பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாக குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளை குறிவைக்கும் நிலைவராது.

The Article published in the Newspaper Dinamani on 24.11.2010

Tuesday, November 23, 2010

EFFECTIVE COMMUNICATION – 7 STEPS


The quint essence of Effective Communication is referred in Epic Ramanayana. Rama describes the value of Effective Communication after listening to Hanuman who returns from Lanka after meeting Sita Devi. Rama praises Hanuman for the effective way he communicated and the impact of his communication had on himself and Laksmana.

Rama elaborates the important attributes of Effective Communication.

1.

அவிஸ்தா

:

Not too elaborate nor too winding nor too short.

2

. அசந்திக்த்தம்

:

Unambiguous and clear-clearity of expression.

3

சமஸ்காரக்ரம சம்பந்நம்

:

Impeccable grammar

4

ந கிஞ்சித் அப ஷப்திதம்

:

The words used were with care and not one word was out of place. Not one word could be replaced or rephrased. A perfect choice of words.

5

மத்யமேஸ்வரம்:

:

The message was delivered in even tone not too loud or too soft. Hanuman did not shout to create any vibes on the listener. The message was delivered in a pleasant and unattached tone.

6

உச்சாரயதி

கல்யாணி

:

The pronunciation was impeccable and perfect and was pleasing to the ear. Here Rama stresses the importance of pronunciation how each word should be clearly pronounced to ensure clarity. If pronunciation is clear the words will flow automatically.

7.

வாசம்

உறிருதயஉறாரிணி

Such clearly pronounced words will reach the heart of the listener. The purpose of communication is that if should reach the listener in the manner intended.

Hence these 7 principles of Effective Communication are so clearly brought out in the Epic Ramanayana.

Tuesday, November 2, 2010

விழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம்



இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல், குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் ஆட்சி செலுத்தி வந்த துண்டு துண்டாக இருந்த பகுதிகளை இணைத்து இந்திய தேசத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இந்திய காவல்துறையை ஒருங்கிணைத்தார். இந்திய காவல் பணியில் சேரும் போலிஸ் அதிகாரிகள் பயிற்சி பெறும் ஐதராபாத்தில் அமைந்துள்ள உயர் பயிற்சி மையம் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் புனிதப் பெயரை தாங்கியுள்ளது.

எளிமையான வாழ்க்கை, பாரபட்சமற்ற அப்பழுக்கற்ற தூய்மையான பொதுப்பணி என்று நேர்மையான கோட்பாடுகளை பின்பற்றிய உயர்ந்த மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல். வலிமையான மத்திய அரசு உருவாக்கத்திற்கு அடிகோலினார். அக்டோபர் 31ம் நாள் அன்னாரது பிறந்தநாள். ஊழல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அவரது பிறந்தநாளை முன்வைத்து அனுசரிக்கப்படுவது உகந்தப் பொருத்தம் என்பதில் ஐயமில்லை.

மத்திய விழிப்பாணையம் இந்த வருடம் ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஊழலில் வேரூன்றுவதற்கு இரண்டு காரணங்கள். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் ஏதாவது ஒரு அரசுத் துறையை நாடவேண்டிய நிலை சுற்றிவளைத்து இடப்படும் அரசாணைகள், அரசுப் படிவங்களை படித்து புரிந்து கொள்வதற்கு தனி அறிவாற்றல் வேண்டும் என்றால் மிகையில்லை. இதைதான் ஒரு ஆளுமை நிபுணர் நடைமுறை படிப்பாற்றல் என்கிறார். சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தவரை படித்தவர் என்ற கணக்கில் சேர்க்கிறோம். ஆனால் நடைமுறைப் படிப்பாற்றல் பெற்றவர் இந்தியாவில் 30 சதவிகிதத்திற்கும் குறைவு என்று அளவிடலாம். இது ஒரு புறம் என்றால் நெளிவு சுளிவுகள் தெரிந்து சாதித்துக்கொள்பவர்கள் இருப்பதால் குறுக்குவழி தான் பிழைக்கும் வழி என்ற நிலை.

ஒரு நாட்டின் வெளிப்படையான நிர்வாகத் திறனை கணிக்கும் சர்வதேச நிறுவனம் 120 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்திய 89-வது இடம் பெற்றுள்ளது. போன வருடத்தைவிட இந்த வருடம் இரண்டு இடம் குறைந்துள்ளது. சத்யம் நிறுவன ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் இந்த பின்னடைவிற்குக் காரணமாக கூறப்படுகிறது. சீனா 77வது இடம் இந்தியாவைவிட 10 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

எவ்வளவோ சிறந்த நலத்திட்டங்கள் அரசால் மக்கள் நலனுக்காக வகுக்கக்படுகின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைமக்கள் தான். ஊழல் மக்கள் நலனுக்கு எதிரானது.

1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் பல உயிர்கள் பலியாயின. வெடிப்பொருட்கள் மறைத்து கொண்டு வரப்பட்ட வாகனங்களை செக் போஸ்டுகளில் சரியாக தணிக்கை செய்யாததால் அவை சுலபமாக கயவர்கள் கைகளுக்கு சென்றடைந்தன என்பது விசாரணையில் வெளிவந்த உண்மை. தணிக்கை சாவடிகளில் நிலவும் ஊழல்களால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு பயங்கரவாதம் ஊடுருவ துணைபோகிறது என்பது நெத்தியடி உண்மை. ஊழல் தேசிய பாதுகாப்பிற்கு விரோதமானது.

சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகள் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிகிதம் இருந்தது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதார அணுகுமுறைகளால் வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீடும் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் நிலவினால் மேலும் பெருகும் ஊழல் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல் என்பது தெளிவு.

உறாங்காங் என்ற சிறிய நகரம் இங்கிலர்ந்து நாட்டின் ஆளுகையில் இருந்தது. இப்போது சைனாவின் கைவசம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முகப்பில் அமைந்துள்ளதால் முக்கிய வணிக நகரமாக வளர்ந்துள்ளது. பலவருடங்களுக்கு முன் உறாங்காங் நகரத்தில் நிர்வாகம் நிலைகுலைந்து ஊழல் எல்லா இடங்களிலும் பரவி இருந்தது. இங்கு நிலையை சரிசெய்ய ஒருங்கிணைந்த ஊழல் அழிப்பு திட்டம் வகுக்கப்பட்டது. ஊழலில் உழல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஊழல் தடுப்பு முறைகள் மற்றும் மக்களிடையே ஊழலை அழிப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்ற மும்முனை திட்டம் பாரபட்சமின்றி நடைமுறை படுத்தப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பு ஒருபுறம் நிர்வாக பொறுப்பிலுள்ளவர்களின் முழுஈடுபாடும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். தனியார் துறையில் உள்ள ஊழலும் சட்ட விரோதமானது என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு தவறு செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பெறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, உறாங்காங் வெற்றியின் மற்றொரு சிறப்பு அம்சம். கடுமையான தண்டனை சட்ட ஏடுகளில் இருந்தால் மட்டும் போதாது அவை நடைமுறைக்கு வரவேண்டும். தகுந்த தண்டனை உரிய நேரத்தில் என்ற நிலைதான் குற்றங்களை கட்டுப்படுத்த உதவும்.

ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரம் துவக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2015-ற்குள் நிறைவேற்றப்படவேண்டிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. வறுமை ஒழிப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதஉரிமைகளுக்கு முக்கியத்துவம் என்ற இலக்குகளை அடைவத்ற்கான முயற்சிகளை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்குகள் அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு அதனைக் களைய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

ஊழலில் லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் வாங்குபவர் இருவருக்கும் பங்கு உண்டு. சட்டம் லஞ்சம் வாங்குபவரை குறிவைக்கிறது ஆனால் லஞ்சம் கொடுப்பவரும் ஊழல் தழைப்பதற்கு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதனைக் கருத்தில் கொண்டுதான் லஞ்சம் கொடுப்பவரையும் சட்டப்பிடியில் கொண்டுவருவதற்கு திருத்தங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கு அரசுத் துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அளவிடக்கூடிய முறைகள் பற்றியும் விஜிலன்ஸ் கமிஷன் விளக்கியுள்ளது. விழிப்புத் துறையின் பணிகள் ஒரு துறையை சிறப்பாக இயக்க உதவ வேண்டும். தண்டனை மற்றும் தடுப்பு முறைகள் லஞ்ச ஒழிப்பில் முக்கியம் என்றாலும் நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும் உரிய கௌரவம் கொடுத்தால்தான் துறையின் மேலாண்மை உயரும். விதிமுறைகளை சுலபமாக்குதல் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை.

விதிகளும், அலுவலக நிபந்தனைகளும் நிர்வாகம் பாரபட்சமின்றி இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பணியை செய்ய முடியாது என்பதற்கு காரண காரியங்கள் ஆராயப்படுகின்றன. விதிகளை மேற்கோள் காட்டி தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு முன் செய்ததுண்டா இல்லையெனில் மாற்றம் தேவையில்லை என்று ஆணையிடப்படுகிறது. முன்மாதிரியை தேடாதே முன் மாதிரியை உருவாக்கும் முன்னோடியாக இரு என்று மக்களுக்கு உதவும் வகையில் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சமயத்திற்கு தகுந்தாற்போல், சம்பந்தப்பட்ட பயனாளியைப் பொறுத்து விதிகள் நடைமுறைப்படுத்தலும் நிர்வாகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

Transparency in Tenders (ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம்) சட்டம் இயற்றப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்வதில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இணையதளம், நேர்முக விவாதங்கள் மூலம் வெகுவாக டெண்டர்களில் பங்குபெறும் நிறுவனங்களின் சந்தேகங்களை போக்கலாம். டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு, மற்றவர்கள் டெண்டரில் வெற்றி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேக சாபக்கேட்டினைப் போக்குவதற்கு ஒரே வழி வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை மற்றும் நடைமுறை.

ஊழலைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு உரிய ஆணைகள், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் மக்கள் குறைகள் இலாகா மூலம் 2004ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர், முறைகேடுகள் பற்றிய தகவல் நேராகவோ, மறைமுகமாகவோ அளிக்கலாம். அதன் அடிப்படையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு விசாரணை மேற்கொள்ளும். உண்மை வெளிவரும் பட்சத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள ஆணையிடலாம். தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு முழுஅதிகாரம் விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் தவறு நேர்ந்தாலோ விதிகள் மீறப்பட்டாலோ, நடுவர் விசில் மூலம் ஒலி எழுப்பி விளையாட்டை நிறுத்தி ஒழுங்கான முறையில் விளையாட்டு தொடர வழிசெய்வார். அதேபோல் ஊழல் பற்றி தகவல் கொடுப்பவரும் ஒரு விதத்தில் நடுவராக இருந்து முறைகேடுகளை நிவர்த்தி செய்வதில் உதவுகிறார் என்பதால் அவர் ஒலி எழுப்பி எச்சரிக்கும் நடுவராக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலிருந்து சமுதாயத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலை நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ஊழல் ஒழிப்பில் வெற்றி கண்டுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஊழலுக்கு இணங்காத துணைபோகாத நிலைப்பாடும் தான் என்பது நம்மை சிந்திக்க வைக்கவேண்டும். ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கட்டாமல் யாரை அணுகி சரிசெய்யலாம் என்று யோசிக்கிறோம் அல்லது பணியில் இருக்கும் காவலருக்கு ஏதாவது கொடுத்துவிட்டு சென்றுவிடலாம் என்று முயற்சிக்கிறோம். இவ்வாறு தான் ஊழல் பரவி வளர்கிறது.

ஊழலை ஒழிப்பது நம்கையில். அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற சமுதாயம் உருவாகும்.

ஊழலுக்கு துணைபோவது விழலுக்கு நீர்பாய்ச்சுவதைவிட கொடியது.விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்என்று பெருமைபாடிய மகாகவியின் கனவு மெய்ப்படவேண்டும்.