Friday, March 6, 2009

மாமனிதர் பூர்ணம் விசுவநாதன்





வாழ்க்கை ஒரு சங்கீதம். நீலாம்பரியில் ஆரம்பித்து முகாரியில் முடியும் என்பார்கள். ஆனால் பூர்ணம் விசுவநாதன் வாழ்க்கை நீலாம்பரியில் ஆரம்பித்து நீலாம்பரியில் முடிவில்லாமல் தொடர்கிறது. எனது தமக்கை உமா அப்பாஜியின் பூத உடலைப் பார்த்து கடந்த இரண்டு வருடம் “எனது குழந்தையாக இருந்தாயே அப்பாஜி” என்று ஏங்கியது மனதில் அப்படியே நிற்கிறது.

பூர்ணம் விசுவநாதன் என்றதுமே நினைவுக்குவருவது அரவது பிரசன்னமான Personality. 1958 என்று நினைக்கிறேன். எனது தாத்தா பூர்ணம் ஐயர் பெரியகுளத்தில் காலமானார். எனது தந்தை உடனே பெரியகுளம் சென்றுவிட்டார். டில்லியிலிருந்த எனது சித்தப்பா சென்னைக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார். சிறுவனாகிய எனக்கு அப்போது அவர் பெரிய ‘Hero’ மாதிரி காட்சி அளித்தார்!

ஆஜானுபாகுவான செக்கச்செவேர் என்ற உருவம். சுருட்டைத்தலை. Hirthik Roshan கண்ணாடி, full Suit. அப்போதே அவரிடம் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். பிறகு அவர் நாடகத்துறையில் முழுமையாக ஈடுபடுவதற்காக சென்னைக்கு மாற்றலாகி வந்தார். சித்தப்பா, சித்தி மாதத்திற்கு ஒரிரு முறையாவது எங்களது வீட்டிற்கு வருவார்கள் வீடே களை கட்டிவிடும் - சந்தோஷமான நாட்கள்.

ஒருமுறை நானும் எனது தம்பியும் அப்பாவிடம் போராடி ஒரு சினிமா பார்ப்பதற்கு அனுமதி பெற்றிருந்தோம். அன்று சித்தப்பா, சித்தி வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல சுவாரஸ்யமான ஹாஸ்யப் பேச்சு. அதில் மெய் மறந்து இதைவிட வேறென்ன entertainment வேண்டும் என்று சினிமாவிற்குச் செல்ல தோன்றவில்லை.

எங்களது தந்தை, சித்தப்பவின் தாயார் ஒரு கடமை வீராங்கனை – தியாகத்தின் வடிவம். பாட்டியிடம் எனது தந்தையும் சித்தப்பாவும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். டில்லியிலிருந்து எங்கள் பாட்டி அவரது கடைசி காலத்தில் எங்களோடு இருந்து சென்னையில் காலமானார். சித்தப்பா தனது உணர்ச்சிக் குமுறலை ‘அம்மா....!’ என்று ஒரு காவியமாக எழுதி அது ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக பிரசுரம் செய்யப்பட்டது.

1968-ம் வருடம் எனது அக்காவின் கல்யாணநாளின் முந்தையநாள் எனது அத்தை (தந்தையின் அக்கா) அகால மரணம் அடைந்தார். அப்போது எனது சித்தப்பா தான் கல்யாணம் தடைபடாமல் நடக்கட்டும் என்று தான் முன்னின்று மற்ற காரியங்களை கவனித்துக் கொண்டார். அது மறக்க முடியாததொன்று.

அவரது நாடகங்கள் ஒன்று விடாமல் நான் பார்த்ததுண்டு. நான் ஐ.பி.எஸ்-ல் சேர்ந்த சமயம். பயிற்சிக்கு சென்னை வந்திருந்தபோது எனது சக அதிகாரிகளான திரு.விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், சேஷாத்திரி, சித்தப்பாவின் நாடகம் பார்க்க வேண்டும் என்றனர். அப்போது அவர் நடித்த வாஷிங்டனில் திருமணம் பிரபலமாக நடந்து கொண்டிருந்தது. நான் சித்தப்பாவிடம் சொல்லி எனது சக அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அந்த நாடகம் பார்த்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவர்களுக்கு இணையாக பேசுவார். அவர்களை சந்தோஷப்படுத்துவதில் அவருக்கு ஆனந்தம். எங்களது பள்ளி நாட்களில் எங்களை sub-urban train-ல் தாம்பரம் வரை அழைத்துக் சென்று முதல் ரயில் சவாரி கொடுத்தார்.
அவரது நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல எழுத்திலும் உண்டு. அவரது ஹாஸ்யக் கதைகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்ததுண்டு. தனது மகள் பத்மஜாவை வைத்து பத்மஜாவின் மூக்கு என்று நகைச்சுவையான கதை எழுதினார்.

அவருக்கு உறுதுணையாக எல்லாவிதத்திலும் இருந்தார் எங்களது சுசீலா சித்தி. எல்லா நாடகங்களுக்கும் அவர் தவறாது சென்று முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார். சித்தப்பா அதை ராசியாகவே கருதினார். மணிக்கணக்காக வீட்டில் ஒத்திகை நடக்கும். எல்லோருக்கும் சளைக்காமல் டிபன் காப்பி கொடுப்பார். சித்தப்பா வீட்டிற்கு சாப்பிட போவது என்றால் நன்றாக பசி வரவழைத்துக் கொண்டு போவோம். சாப்பாடு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். உபசரிப்பு அதைவிட சிறப்பாக இருக்கும்.

நான் ஜனாதிபதி விருது வாங்கும் விழாவிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நான் சென்னை மாநகர ஆணையராகப் பொறுப்பேற்ற வருடத்தில் எனது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து அகமகிழ்ந்தது மறக்க முடியாதது.

சித்தப்பா ஒரு உணர்ச்சி பிழம்பு. என்னை எங்கு பார்த்தாலும் ‘என்ன பிரதர்’ என்றுதான் விளையாட்டாக கூப்பிடுவார். அவர் ஒரு பெரிய கலா ரசிகர். எல்லாக் கச்சேரி, நாடகங்களுக்கும், நாட்டியங்களுக்கும் செல்வார். சாப்பாட்டுப் பிரியர். அவர் சாப்பிடுவதே ரசிக்கக் கூடியதாக இருக்கும் எல்லோரிடமும் அதிகமாக அன்பு செலுத்துவதால் நாங்கள் அவரது அன்புக் கட்டளைக்கு படிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

நான் அவர் நடித்த பெரும்பாலான படங்களைப் பார்த்து விட்டேன். இப்போதும் எந்த டி.வி.சேனலை அலசினாலும் அவரது படம் இல்லாமல் இருக்காது. அவரது இயல்பான நடிப்பு எல்லோரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. மகாநதியில் அவரது நடிப்பு எல்லோரையும் நெகிழவைக்கும் “அவர் மகாநதியில் கொடுமைப்படுத்தும் சிறைக் காவலர் பற்றி ‘மஹா பாபி அவன் சாப்பாட்டிற்கு உலை வைப்பான்” என்று சொல்வது, கேவலத்துடனும், அருவருப்புடன் அவனைப் பார்ப்பதும் மறக்க முடியாத காட்சிகள்”. நான் சிறைத்துறை பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி எடுத்து கொண்டிருப்பதற்கு அவரது தத்ரூபமான நடிப்பு உந்துதலாக அமைந்தது.

சீனக் கவிதை ஒன்று உண்டு -----
“மலைஉச்சிக்கு மூச்சிறைக்க ஓடினேன்
உச்சி மீது மரம் கண்டேன்
மரத்தின் மேல் ஒரு பட்டாம் பூச்சி
பறந்து கொண்டிருந்தது
இறங்கி வந்தேன் – இன்னும்
அது என் நெஞ்சில் படபடத்துக்
கொண்டிருக்கிறது ”.
அநாயாசமாக மலை உச்சியை எட்டிய பட்டாம்பூச்சி பறப்பது போல சிகரத்தை எட்டிய அவரது நடிப்பு அநாயாசமானது, இயல்பானது, தத்ரூபமானது!. அதனால்தான் அவர் இன்றைக்கும் நமது நினைவில் படபடத்துக் கொண்டிருக்கிறார்.

மரணம் அவரிடம் தோற்றது. ஏனென்றால் அவர் இன்னும் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கை தொழவேண்டிய வாழ்க்கை. மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதில் சந்தோஷம் அடைந்தவர்.

Caesar தோன்றிய இடத்தில் ரோஜா அதிக சிறப்பாகவும், ஜொலிப்புடன் இருக்கும் என்பார்கள். அதேபோல் பூர்ணம் விசுவநாதன் சந்ததியனர் அவரால் உருவாக்கப்பட்டவர்கள், வளர்ந்தவர்கள், வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

2 comments:

ROAD TRAFFIC said...

yes, pooranam viswanathan was a great man and actor. he staged writer sujatha's dramas also. there is a void after his death. his soul may rest in peace.
with regards
pudumai balakrishnan
http://chieftrafficwarden.blogspot.com/

Chandramohan said...

நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.