Friday, February 13, 2009

கடமை புரிவோம், உரிமை பெறுவோம்


எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் போராட்டத்தில் ஈடுபடுதல் என்பது கலாச்சாரமாக வளர்ந்துள்ளது. ஏன் ஒரு கொண்டாட்டம் என்றாலும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தால்தான் ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு அலாதியான திருப்தி. ஆனால் இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் போராட்டங்கள் அமைய வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் விரும்புவார்கள்.

காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிர்த்து நடத்தப்பட்ட அறப் போராட்டம். தனது அறப்போராட்டத்தின் சித்தாந்தத்தைப் பற்றி பல இடங்களில் காந்தியடிகள் விவரிக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தது. அந்த அடிமை நிலை மாறுவதற்க்கு இத்தகைய அறப்போராட்டம் மூலம் அஹிம்சை வழியில்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று திடமாக நம்பினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் இத்தகைய போராட்டம் தேவையில்லை என்பதை தெளிவு படுத்தியதாக அவருடன் காரியதரிசியாக பணியாற்றிய திரு கல்யாணம் அவர்கள் கூறியுள்ளார். ஏனெனில் மக்களாட்சியில் தேர்தல் மூலமாக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு வழி செய்வதால் இத்தகைய போராட்டங்கள் தேவையற்றது என்பது காந்தியடிகளின் அறிவுரை. ஆனால் காந்தியடிகள் அவர்களின் அறப்போராட்டம் எந்த அளவுக்கு தவறான வழியில் பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதை இப்போதுள்ள சமுதாய சூழலில் காண்கிறோம். மறியல், பந்த், உள்ளிருப்பு போராட்டம், ஒத்துழையாமை, ‘ரோட் ரோக்கோ’ என்று பல வகை போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன. அதற்கும் மேலாக, காவல்துறை, குற்றத்தடுப்புப் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியாத அளவில் அவர்களது களப்பணி விரயமாகிறது.

அரசியல் சாசனத்தில் பாகம் மூன்றில் அடிப்படை உரிமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், பேச்சுரிமை, கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ள உரிமை, போன்ற பல அடிப்படை உரிமைகள் நமது அரசியல் சட்டத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. 21-ம் பிரிவுப்படி சட்டத்தின் அடிப்படையில் அல்லாது ஏவரது தனி சுதந்திரமும் பறிக்க முடியாது. வெளிநாட்டவர் உட்பட எல்லோருக்கும் இப்பிரிவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் தற்போது ஒரளவு புரிதலும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டுள்ளது எனலாம். ஆனால் கிராமப்புறங்களிலும், பின்தங்கிய மாவட்டங்களிலும் உரிமைகள் பற்றிய அறியாமை இன்றும் நிலவுகிறது என்பது உண்மை.

நகர்புறங்களிலும், பல இடங்களில் சில அமைப்புகளின் தூண்டுதல் பேரிலும், போராட்டம் என்ற பெயரில் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. தனி மனிதன் சுதந்திரத்தைப் பற்றி அரிய பல கருத்துக்களை சமுதாயத்திற்கு அளித்து விழிப்புணர்வுக்கு வழி செய்தவர் ஆங்கில மேதை ஜான் ஸ்டுவர்ட் மில் ஆவார். இத்தகைய சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு உண்டு என்றும் மற்றவர்கள் சுதந்திரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதையே இன்னொரு 19-ம் நூற்றாண்டு சிந்தனையாளன், ‘தோரூ’ அவர்கள் ‘கை நீட்டத்தின் அளவுதான்’ தனி மனிதன் சுதந்திரம் என்ற நிதர்சன உண்மையை விளக்குகிறார். சமுதாய சட்டதிட்டங்கள் என்ற எல்லைக்குட்பட்டுதான் சுதந்திரத்தின் சுவாசத்தை நுகர வேண்டும்.

நமது சமுதாயத்தில் சுதந்திரம் தவறாகத்தான் பொறுப்பில்லாது அனுஷ்டிக்கப்படுகிறது. சுதந்திர நாட்டின் பிரஜை என்ற மமதையில் நடுரோட்டில் நடக்க முடியுமா? பறக்கும் வாகனங்களால் அடிபடுவது நிச்சயம். மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து பொறுப்போடு நடந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும், விவேகமும்கூட.

அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிமைகள் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளதோ அதே அளவில் அடிப்படைக் கடமைகள்பற்றி பிரிவு 51(A)-ல் விரிவாக கூறப்பட்டிருக்கின்றது. இதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய கடமைகளாவன:
- தேசியக்கொடி, தேசிய கீதம், அரசியலமைப்புச் சட்டம், அதன் கடமைகள் எல்லாவற்றுக்கும் மதிப்புக் கொடுத்து நடத்தல்.

- நாட்டு விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்களைப் போற்றியும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் முழுமையாகப் பாதுகாத்தல்.

- நாட்டைப் பாதுகாத்து நாட்டுப்பணியாற்றுவதற்குத் தம்மை அர்ப்பணித்தல்.


- மத நல்லிணக்கம், இன மொழி வேறுபாடுகள் கடந்து பரஸ்பர சகோதரத்துவத்தை வளர்த்தல்.

- பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுதல்.

- பன்முக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்.

- இயற்கைச் சூழல், காடுகள், வன உயிர்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல்.

- அரசியல் சார்ந்த ஆராய்ச்சிகள், சமுதாய சீர்திருத்தங்கள், மனித நேயம் ஆகியவற்றைப் போற்றி வளர்த்தல்.

- பொதுச் சொத்தைப் பாதுகாத்து, வன்முறையை அறவே தவிர்த்தல்.

-இந்தியா உன்னத நிலைமையை அடைய ஒருங்கிணைந்து, ஓயாது பாடுபடுதல்.

இந்தப் பிரிவு 1976-ம் வருடம் 42 சட்டத்திருத்தப்படி அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டது. எந்த அளவுக்கு உரிமைகள் முக்கியமோ அந்த அளவுக்கு கடமைகளும் முக்கியம். இத்தகைய அடிப்படைக் கடமைகள் மற்ற நாடுகளிலும் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளன. சோவியத் யூனியன் அரசியலமைப்பிலும் சீனா, ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலும் மக்களின் கடமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.


உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணரவேண்டும். உரிமைகளுக்காக போராட்டம் என்ற பெயரில் கடமைகளை காற்றில் பறக்க விடுகிறோம்.

மத நல்லிணக்கத்தை பலப்படுத்தவும், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை கடந்து அனைவரிடமும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கடமையாக கூறப்பட்டுள்ளது. இதை கடைபிடித்தால் இத்தகைய தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்காமல் மக்கள் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். இதற்கு மாறாக வேற்றுமையைத்தான் முனைப்பாக வளர்ப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.
பெண்களின் கண்ணியத்தை தாழ்த்தச் செய்யும் செய்கையை விட்டொழிக்க வேண்டும் என்ற கடமை சிரத்தையோடு மீறப்படுவதைத்தான் சமுதாயத்தில் காணமுடிகிறது. வரதட்சணை கொடுமைகள் ஓய்ந்தபாடில்லை. 2008-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று குற்றப் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதில் ஒரு வழக்கில் தான் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. பெண்களை விரசமாக சித்தரிப்பதில் சினிமாவிற்கு போட்டியாக இப்போது சின்னத்திரையும் வந்துவிட்டது. பெண் ஒரு கொடுமைக்காரியாகவும், குடும்பத்தில் சதித்திட்டம் தீட்டுபவளாகவும் காட்டுவது இன்னும் கொடுமை.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆறுகள், காடுகள், வன உயிர்களைப் பாதுகாப்பது மற்றுமொரு முக்கிய கடமையாகும். “வன மஹோத்சவம்” என்று ஆண்டுக்கு ஒருமுறை மரம் நடும் விழா அனுசரிக்கப்படுகிறது. ஆனால், ஊரில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக போராட்டம் என்றால், அருகிலுள்ள மரத்தை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டு, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வழி, பொதுமக்களை அவதிக்குள்ளாக்குகிறது. காடுகளை அழிப்பது தனது பிறப்புரிமை போல் சிலர் சட்டத்தின் பிடியில் சிக்காது செயல்படுவது நமது அமைப்பில் உள்ள தளர்ச்சியைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ரெவின்யூ கிராமங்களின் எண்ணிக்கை 17292. எல்லா இடங்களுக்கும் தார் ரோடு வசதி உள்ளது என்ற முன்னேற்றக் குறியீட்டினைக் கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், அதுவே கலகக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. முதலில் அங்குமிங்கும் முறையிட்டு, கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்பட அப்பகுதி சமூக நல்லுள்ளம் படைத்தவர்கள் பாடுபடுகின்றனர். கஷ்டப்பட்டு வரவழைக்கப்பட்ட பேருந்தை, போராட்டங்களின்போது நொடிப்பொழுதில் தீக்கிரையாக்குவதில் போராளிகள் தயங்குவதில்லை.

கப்பல், விமானம், பேருந்துகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் நம்மை தாங்கிச் செல்வதால், அவை தாய்க்கு ஈடாக இலக்கணத்தில் பெண்ணினமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனிதமான பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது நமது தாயை இழிவுபடுத்துவது போன்றது என்று ஏன் உணர்வதில்லை? சமீபத்தில் இத்தகைய போராட்டத்தில் ஒன்பது பேரூந்துகள் தமிழகத்தில் கொளுத்தப்பட்டன. பல பேருந்துகள் கல் வீச்சில் சேதமடைந்தன. பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஒரு நிகழ்வில் பஸ்ஸில் சுமார் 50 பயணிகள் இருந்தும் வன்முறையாளர்கள் இரக்கமின்றி கொளுத்தினர். தெய்வாதீனமாக பயணிகள் உடனடியாக இறங்கியதால், உயிரிழப்பிலிருந்து தப்பினார்கள்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ்தாக்கரே என்பவரின் அமைப்பு நடத்தும் போராட்டம், நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது அன்றி, வேறென்ன? பீஹாரிகள் மும்பையில் தாக்கப்பட்டதை எதிர்த்து பீஹாரில் நடந்த ‘பந்த்தில்’ பல பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமது மாநில மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போரட்டத்தில் தமது மாநிலத்தின் பஸ்களை கொளுத்தியது விநோதமான கொடுமை. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ‘போடோ’ தனிமாநிலம் கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஒரு மரப் பாலத்தை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர். பாலம் சேதமானதால் போராளிகள் தம் கிராமத்துக்கே செல்ல முடியாமல் அவதியுற்றனர் என்பது முகம் மேல் உள்ள வெறுப்பில் மூக்கை உடைத்துக் கொண்ட கதையாயிற்று!

அறப்போராட்டம் என்று பெயரளவில் துவங்கப்பட்டாலும், வன்முறை தலைதூக்காமல் இருப்பதில்லை. சில இடங்களில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பற்றிய செய்தியைப் பார்த்து மற்ற இடங்களில் போராட்டம் நடத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஏதோ தாம் கடமையில் இருந்து தவறிவிட்டது போல் மேலும் வன்முறையைப் பரவச்செய்து, போராட்டம் வெற்றி அமைந்ததாக இறுமாப்புக் கொள்கின்ற மனப்போக்கு கண்டிக்கத்தக்கது. பொதுச் சொத்துக்களை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென்றே, பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டம் 1992ல் இருந்து அமலில் உள்ளது. இதில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடம் வரை தண்டனை விதிக்க இடமுள்ளது. ஆயினும், வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

நல்லவர்களின் மௌனம்தான் சமுதாயத்தில் தீமைகள் தலைதூக்குவதற்கு வழி செய்கிறது. நல்லவர்கள் ஏன் மௌனம் சாதிக்க வேண்டும்! ஏன் வன்முறையைக் கண்டிக்கக்கூடாது? அண்டை வீடுகளில் பிரச்சனைகள் என்றால் அதைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதைவிடுத்து, நமது வீட்டையே நாம் சேதப்படுத்திக் கொள்வோமா? மறற்வர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக நமது வீட்டு மக்களைக் கொடுமைப்படுத்த வேண்டுமா? இது எந்த விதத்தில் பிரச்சனைக்குத் தீர்வு?

கடமைகளைப் பற்றி விழிப்புணர்ச்சி தேவை. கடமைகளைப்பற்றி ஒவ்வொரு நாளும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அலுவலகங்களிலும் நாம் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பணிபுரிபவர்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எல்லோரின் விருப்பம். ஆனால் கடமைகள் நிறைவேற்றப்படுவதில்தான் உரிமைகளின் பாதுகாப்பு உள்ளது என்பதுதான் உண்மை. தற்போது தேவை இதற்கான விழிப்புணர்ச்சி. நல்லவர்கள் மௌனம் காதைப் பிளக்கிறது மௌனம் சாதித்தது போதும். விழிப்போம், விழிப்படையச் செய்வோம்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 13.02.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது



Tuesday, February 3, 2009

பலப்படுமா புலன் விசாரணை?


காவல்துறையில் முக்கியமானதும் கடினமானது என்று கருதப்படுவது குற்றப்புலனாய்வு. ஸ்காட்லேண்டு யார்ட் என்ற லண்டன் போலீஸின் புலனாய்வுப்பிரிவு பல நுணுக்கமான வழக்குகளை திறமையாக கண்டுபிடித்ததால் உலக காவல்துறை அமைப்புகளில் பிரதானமானதாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த நிகழ்வில் ஸ்காட்லாண்ட் யார்ட் நிபுணர்கள் புலன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பாரபட்சமின்றி ஒரு குற்ற நிகழ்வில் குற்றவாளிகள் புலப்படும் வரை ஓயமாட்டார்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் பொது அமைதியை குலைக்கும் விதத்தில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமுக விரோதிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டு காவல்துறை அமைப்புகளுக்கு சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். குற்றவாளிகள் சட்ட மீறலில் ஒரு படி மேலேயும் ஒரு படி கீழே போலீஸ் என்ற நிலை இருப்பதை காண்கிறோம்.

இந்திய அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் ஆளுகைக்குள் உள்ளது. மாநிலங்களில் அமைதியை காப்பதும் வழக்கு புலன் விசாரணை செய்வதும் மாநில காவல்துறையின் பொறுப்பு. மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் அந்தந்த காவல்துறை இயங்குகிறது. சி.பி.ஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சட்டுகளை விசாரிப்பதற்கும், கலாச்சாரப் பொருட்கள் திருட்டு வழக்குகளிலும், பல மாநிலங்களில் விசாரணை செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ள வழக்குகளிலும் புலனாய்வை மேற் கொள்கிறது. மாநில அரசின் சம்மதத்தின் பேரில் மாநில அரசுகளால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட வழக்குகள், மேலும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரணைக்காக உத்தரவிடும் வழக்குகளிலும் சிபிஐ புலனாய்வை மேற்கொள்கிறது. ஃபெடரல் குற்றங்கள் என்று மத்திய புலனாய்வுத்துறை பிரத்யேகமாக மேற்கொள்ள வேண்டிய வழக்குகள் என்று குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை. அமெரிக்காவில் எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ள வேண்டிய வழக்குகள் என்று திட்டவட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல குற்ற நிகழ்வுகளில் எஃப்.பி.ஐ அமெரிக்க ஐக்கிய மாநில காவல் துறைக்கு புலனாய்வில் உதவி செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு வழி செய்கிறது. அம்மாதிரியான நிலை இந்திய அமைப்பில் இல்லை.

குற்ற நிகழ்வு எத்தன்மை உடையதாக இருந்தாலும் உள்ளூர் காவல்துறை விசாரணைக்கும், மாநில சிபிசிஐடி விசாரணைக்கும், அதற்கும் மேலாக மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைந்த புலனாய்வுக்கும் விசாரணயின் தரத்தை பொறுத்தவரையில் வித்தியாசம் இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால்தான் மக்கள் கவனத்தை ஈர்க்கும் பரபரப்பான வழக்குகளிலும், அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் உயர் புலன் விசாரணைக்கான கோரிக்கை எழுப்பப்படுகிறது. சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். ஏன் உள்ளூர் காவல்துறையினர் வழக்குகளை விசாரிக்க முடியாதா? சட்டப்படி விசாரிக்க முடியும். அவர்களுக்கு தகுதியும் இருக்கலாம். ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் குறுக்கீடு இருக்கும் என்ற ஒரு காரணம். நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் உள்ளூர் காவல்துறை அந்த சரக சமுதாயத்தை சார்ந்து பணிபுரிய வேண்டியுள்ளதால் முக்கிய வழக்குகளில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படுமா என்ற சந்தேகம், மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் உள்ளூர் போலீஸார் சமாளிக்க வேண்டியுள்ள நிலையில் முக்கிய வழக்குகளில் தங்கு தடையின்றி முழுக் கவனம் செலுத்த முடியுமா என்ற கேள்விக்குறி, போன்ற பல காரணங்கள் உள்ளன.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிரத்யேக விசாரணைக் குழுவால்தான் நேர்மையான, துரிதமான புலன் விசாரண மேற்கொள்ள முடியும். வளர்ந்துவரும் பயங்கரவாத தாக்குதல்களினால் ஒவ்வொரு மாநிலமும் எஸ்.ஐ.டி என்ற பிரத்யேக விசாரணை குழுவினை அமைத்து இத்தகைய வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக் குழுக்கள் ஓரளவுதான் பயங்கரவாதத்தை ஒடுக்க வெற்றி கண்டுள்ளனர் என்பது தொடர்ந்து வரும் பயங்கரவாத நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பல மாநிலங்களில் ஊடுருவி திட்டமிட்டு நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களை முழுமையாக விசாரிக்க மத்திய அளவில் அமெரிக்க ஃபெடரல் குற்றப்பிரிவு போல் ஒரு புலனாய்வு குழுமம் அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் 26/11 மும்பாய் தாக்குதலுக்குப் பிறகு எழுந்துள்ளது.


பயங்கரவாத சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விசாரிக்க நடைமுறையில் உள்ள சட்டங்களும், குற்றவியல் முறையும் போதுமானதல்ல. ஆனால் பிரத்யேகமாக இயற்றப்பட்ட சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டன என்ற சர்ச்சை 1980-ல் பஞ்சாப் மாநில தீவிரவாதத்திலிருந்து தொடர்ந்து முடிவில்லாமல் விவாதிக்கப்பபடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு, பாபர் மஸ்ஜித் நிகழ்வுக்குப் பிறகு நடந்த வன்முறைகள், தொடர்ந்து முக்கிய நகரங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் நம்மை விழிப்படையச் செய்யவில்லை. தடா, பொடா போன்ற சட்டங்கள் இத்தகைய சர்ச்சைகளுக்குள்ளாகி காலாவதியாக்கப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்கு காவல்துறையும் ஒரு விதத்தில் பொறுப்பு. குற்றவாளிகள் காவல்துறையினரிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்கப்படமாட்டாது. ஆனால் தடா, பொடா சட்டங்களில் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில் அவை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், உண்மைக்கு புறம்பான ஒப்புதல் வாக்குமூலம் வரையப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்தது. ஆனால் இதற்கு விதிவிலக்காக, தமிழக காவல்துறை, திறமையாகவும், நேர்மையாகவும் புலனாய்வு மேற்கொள்ள முடியும் என்பதை கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்குகள் போன்ற வழக்குகளில் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் தேசிய புலனாய்வு குழுமம் - நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (என்.ஐ.ஏ) உருவாக்கும் சட்டம் சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத குற்றங்களை வரையறுக்கும் முகமாகவும், குற்ற விசாரணையை வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடா, பொடாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்த சட்டத்தோடு ஒன்றியிருந்தாலும், காவல்துறையினரிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படாதவிதத்தில் இந்த சட்டம் மாறுபட்டுள்ளது. மதசார்பின்மைவாதிகளுக்கு இது ஓரளவு திருப்தி அளிக்கலாம். மற்றபடி விசாரணையினை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கலுக்கான அவகாசம் தொண்ணூறு நாட்களிலிருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டு அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்க சட்டத்தில் இடமுண்டு. காவல்துறை வசம், குற்றவாளிகள் விசாரணைக்கு ஒப்படைக்கும் நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக “சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டமும்” அமலுக்கு வந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நாட்டில் எந்தப் பகுதியில் நடந்தாலும் மத்திய அரசு என்.ஐ.ஏ மூலமாக வழக்குகளை விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள், குண்டுவெடிப்பு சம்பவங்கள், விமானம், கப்பல் கடத்தல், அணுமின் நிலையங்களில் தாக்குதல் போன்ற நிகழ்வுகளிலும் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ளும்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக எல்லா மாநில தலைநகரங்களிலும் தகவல் பரிமாற்ற மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு பிறகு ‘ஹோம்லாண்ட் செக்யூரிட்டி’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தகவல் பரிமாற்ற மையங்கள் நிறுவப்பட்டது போல், ‘மாக்’ எனப்படும் மல்டி ஏஜென்ஸி சென்டர்ஸ் (பல்வகை குழுமங்களின் மையம்) மூலம் இந்தியாவிலும் எல்லா மாநிலங்களிலும் பெறப்படும் தகவல்களை ஆராய வழி வகை செய்யப்பட்டுள்ளது. மும்பாய், பெங்களூரூ, சென்னை, ஹைதராபாத், ஸ்ரீநகர், கொல்கத்தா, அகமாதபாத் நகரங்களில் ஏற்கனவே இம்மாதிரியான துணை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பயங்கரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகள் பற்றிய தகவல்களை சேகரித்து தகவல் வங்கிகளாக செயல்படும். இத்தகைய தகவல் பரிமாற்றத்திற்கு சட்டரீதியான ஆதாரம் கொடுத்தது நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்கும், நுண்ணறிவு பிரிவுகள் கொண்ட எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி செய்துள்ளது.

திரு. ராதா வினோத்ராஜு என்ற டி.ஜி.பி. அந்தஸ்த்தில் உள்ள திறமையான அதிகாரி என்.ஐ.ஏ-விற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த குழுவின் முதன்மை அதிகாரியாக பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரிந்த தென்னிந்திய அதிகாரி. மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி, உருது, சரளமாக பேசக்கூடியவர். பயங்கரவாத நிகழ்வுகளை நேரில் கையாண்ட அனுபவம் உள்ளவர். முக்கிய நகரங்களில் சிறப்புப் புலனாய்வு குழுக்களை அமைத்து, சிறந்த புலனாய்வு அதிகாரிகளை தேர்வு செய்வது அவரது முதல் கட்ட நடவடிக்கையாக அமையும். புலனாய்வு மையங்களுக்கான ஆதார நிலைகள் நிறுவுவதற்கு முழுமையான அதிகாரம் கொடுப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நிலுவையில் உள்ள வழக்குகளில் மேல்விசாரணையையும் இந்த அமைப்பு மேற்கொள்ளுமா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுக்கப்படுமா என்பது முடிவு செய்யவேண்டிய ஒன்று. பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க விசேஷ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். திறமையான சட்டவல்லுநர்கள் விசாரணைக்கு உதவவும், நீதிமன்றத்தில் வாதாடவும் நியமிக்கப்பட வேண்டும். இவை வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்பலாம்.


“மும்பாய் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்” என்ற அறிக்கையை சர்வதேச பாதுகாப்பு சட்ட வல்லுநர்கள், வெளியுறவு விவகார வல்லுநர்களைக் கொண்டு ராண்ட் கார்பரேஷன் என்ற லாபநோக்கமில்லாத ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவில் மேலும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது.

மும்பை தாக்குதலில் நடந்த முதல்கட்ட புலனாய்வில் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள் ஆனால் அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பிய வெளிநாட்டவர்களை உடனடியாக விசாரிக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு தீவிரவாதி அதுவும் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் உயிருடன் சிக்கினான் என்ற உவப்பில் விசாரணை அதிகாரிகள் தவற விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. தாக்குதலில் இருந்து தப்பிய வெளிநாட்டவரின் வாக்குமூலம் வழக்கு விசாரணைக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் தாக்குதலின் பயங்கர பரிமாணங்களை நமது நாடு எடுத்துரைப்பதற்கு முக்கிய ஆதாரமாக இருந்திருக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து. என்.ஐ.ஏ இத்தகைய விசாரணை சறுக்கல்களை தவிர்த்து நேர்த்தியான புலன்விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்பில் சோடை போன நாடு என்ற கணிப்பை தனது சிறப்பான செயல்பாடுகளால் மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு இந்த புதிய புலனாய்வுப் பிரிவுக்கு உண்டு. குற்றம் புலப்படும் வரை முனைப்போடு செயல்பட முதலில் இந்த அமைப்பை சர்வதேச தர வரிசை அளவில் பலப்படுத்த வேண்டும். புதிய சட்டங்களின் தீவிரமான, விரைவான அமலாக்கம் மூலம் தான் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்க முடியும். குற்றம் புரிந்தவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை தரமான குற்றவியல் ஆளுமை உறுதி செய்ய வேண்டும்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.