கல்லூரி படிப்பு என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆரம்பப் பள்ளி படிப்பு, உயர்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து முடிவில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை பட்டம் பெற்றவர்களில் ஏழு சதவிகிதம் தான் என்பது புள்ளி விவரம். இதைப்பார்க்கும் பொழுது கல்லூரி படிப்பு ஒரு வரப் பிரசாதம் என்றே கொள்ள வேண்டும். கல்லூரி வளாகத்தைத் தாண்டும் பொழுது நன்றி கலந்த நிறைவுடன் சென்று முழுமையாக தம்மை ஈடுபடுத்தி அறிவை வளர்த்துக் கொள்வதுதான் சரியான அணுகுமுறை.
நவம்பர் 12-ம் நாள் சென்னை சட்டக் கல்லூரி வாயிலில் நிகழ்ந்த கொடூர சம்பவம் கல்லூரி வாசலின் புனிதத் தன்மையையே அழித்து விட்டது. ‘கல்லூரி வாசல்’ என்றாலே அன்று நடந்த அந்த கோர சம்பவம் தான் எல்லோருடையை நினைவுக்கும் வரும். தொலைக் காட்சியில் பார்த்தவர்கள் கதறாமல் இருந்திருக்க முடியாது. நம்மை அறியாமலேயே ‘ஐயோ அடிக்காதீங்ய்யா’ என்று காப்பாற்ற டிவியை நோக்கி ஓடத் தூண்டியது. கையில் தடியை வைத்திருந்தவர்கள் கண்களில்தான் எத்தனை கொடூரம், வெறுப்பு, வன்மை. கீழே விழுந்து கிடக்கும் சக மாணவனை ‘டேர்ன்’ போட்டுக் கொண்டு அடித்தார்கள். வேட்டையாடும் மிருகம் கூட தனது இரை கீழே விழுந்த பிறகு மீண்டும் தாக்காது.
அஹிம்சைவழியில் சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தி பிறந்த நாட்டிலா இந்த கொடுமை? சாதிக்கப் பிறந்த இளைஞர்கள் ஜாதி என்ற வட்டத்துக்குள் அடைபட்டு தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்கள், அவர்களது உரிமைகளை நிலைநாட்டிட வேண்டியவர்கள் ஒரு சலனமில்லாது பார்த்துக் கொண்டிருந்தது நெஞ்சில் ஈரமுள்ள எந்த காவலைரையும் தலைகுனிய வைத்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த டில்லி போலீஸார், தீவிரவாதிகள் ஒரு வாகனத்தில் டில்லிக்கு வருகிறார்கள் என்ற தகவலின் பேரில் காரில் வந்து கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை ஒரு முகாந்திரமும் இல்லாமல் சுட்டனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் டில்லி கரோல் பாகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் என்று. கடமை தவறிய காவல்துறையினருக்கு நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. ஆனால் போன உயிர் மீளுமா?
சென்னையில் ஒரு பிரபல ரௌடியை அடையாறில் ‘என்கெளன்ட்டர்' செய்த போது சைக்கிளில் சென்ற ஒரு நபர் உயிர் இழந்தது ஒரு கோர நிகழ்வு. சில மாதங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் திருட முயன்றான் என்று மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட ஒருவரை உதவி ஆய்வாளர் தனது மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற காட்சியை மறந்திருக்க முடியாது. அரியானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கொடுமையாக தாக்கிய காட்சி பத்திரிக்கையில் வந்தது. அதே மாநிலத்தில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆசிரியர்கள் மறியலின் போது ராஜ்ராணி என்ற பெண் ஆசிரியை சுடப்பட்டு உயிரிழந்தார். அரியானா, பிவானி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி குல்தீப் என்ற கல்லூரி மாணவர் மீது தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அந்த மாணவர் உயிர் இழந்தார். வேறு ஒரு நபர் என்று நினைத்து சுட்டோம் என்றது காவல்துறை.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது காவல்துறையின் செயல்முறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒன்று அவசர நடவடிக்கை, இல்லாவிட்டால் ஏதோ ஒரு காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயக்கம் என்ற நிலை. காவல்துறைக்கு வெளியிலிருந்து வரும் தாக்குதலைவிட அதன் உள் ஆளுமையின் பலவீனம் தான் பேராபத்தானது என்ற முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் திரு.சர்மா அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது!
சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 23 போலீஸாரின் கடமைகளை வரையறுக்கிறது. அவரது முதல் கடமை குற்றங்களை தடுப்பது, பொது அமைதி காப்பது. குற்றம்புரிபவர்கள், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் மற்றுமொரு முக்கிய பணி. மேலும் காவல் சட்டம் பிரிவு 15-ல் கடமை தவறுபவர்கள், பணிகளை செய்யாமல் தட்டிக்கழிக்கும் காவல் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், தண்டனையாக சிறைவாசமும், அபராதமும் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, அது எல்லோருக்கும் பொருந்தும், ஒரு சாராரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது என்பது சட்டம் சார்ந்த ஆளுமையின் அடிப்படை சித்தாந்தம். சட்ட அமலாக்கத்தின் போது சில முக்கிய அத்தியவாசிய பணிகளில் உள்ளவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த துறையின் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. இது அந்த அத்தியாவசிய பணி தடைபடாமல் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக பொதுப்பணியில் இருப்பவர்கள், ரயில் வாகன ஓட்டுநர்கள், ரயில் நிலையப்பணியில் இருப்பவர்கள், மின்சாரத்துறை போன்றவர்களுக்கு பொருந்தும்.
கல்வி வளாகங்களுக்குள் காவல்துறை அனுமதியின்றி செல்லக்கூடாது என்பது ஒரு சம்பிரதாயம். கல்விக்கூடங்களின் புனிதத்தன்மையை காப்பதற்கும், அநாவசிய சர்ச்சைகள் எழும் என்பதற்காகவும் கல்விக் கூடங்களில் உள்ள பிரச்சனைகளில் கல்வி நிர்வாகம் உதவிக்காக அழைத்தால் மட்டுமே காவல்துறை செல்ல வேண்டும் என்ற அறிவுரை இருக்கிறது. ஆனால், எப்பொழுது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கிறதோ, அப்போது காவல்துறை நிச்சியமாக அமைதி ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும், கண்முன் நடக்கும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் காவல்துறையின் முக்கிய கடமை. கல்வி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது. இதில் விவாதத்திற்கோ, குழப்பத்திற்கோ இடமில்லை. எந்த உயர் அதிகாரியும் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்காதே என்று சொல்ல மாட்டார்கள். அப்படி ஒரு அறிவுரை வந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்திற்கு மாறான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கக் கூடாது.
ஊடகங்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் காண முடிகிறது. எந்த ஒரு நிகழ்வும் சூடான செய்தியாக வெளி வந்து விடுகிறது. இது ஒருவிதத்தில் நல்லது. எதையும் மறைக்க முடியாது. உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும், செய்ய வேண்டும். கடமை தவறுதல், ஊழல், நேர்மையின்மையை படம் பிடித்து காண்பிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் ஏன் சம்பவத்தன்று குறைந்தபட்ச நடவடிக்கையும் எடுக்காமல் நின்றது காக்கிச்சட்டைக்கே இழுக்கு. கொலை வெறி தாக்குதலை ஆயத்த நிலையிலேயே தடுத்திருக்கலாம். ஒன்றுமில்லை, கேட்டில் சுருண்டு விழுந்த ஆதரவற்ற மாணவனை அடுத்தடுத்த தாக்குதலிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இவற்றையெல்லாம் காவல்துறை உள்நிர்வாகம் தெளிவாக விவாதித்து, ஆரம்ப பயிற்சியிலிருந்து தொடர் பயிற்சியில் எவ்வாறு இம்மாதிரியான தவறுகள் நேராமல் தடுப்பது பற்றி ஆராய்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதில் ஐயமில்லை.
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று அடி உதையில் இறங்கும் மனப்போக்கு சமுதாயத்திற்கு நல்லதல்ல. தேசிய உணர்வு வளர்க்கப்பட வேண்டும். மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும். அதற்கு பெரியோர்கள், பெற்றோர்கள் முன் மாதிரியாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டுதல் சரியில்லை என்றால், இம்மாதிரி நிகழ்வுகளுக்குத் தான் வழி வகுக்கும். தொலைகாட்சி, இளைஞர்களை வசீகரிக்கும் சினிமா, இவைகளில் வன்முறையும், ஜாதி சண்டையும், விரசமும் தான் பிரதானமாக இடம் பெறுகிறது. சமுதாயத்தில் உள்ளதைத்தான் காண்பிக்கிறாம் என்ற ஒரு வாதம், சமுதாயத்தில் அவலங்களை இக்காட்சிகள் மேலும் வளர்க்கின்றன என்ற மற்றொரு வாதத்திற்கும் முடிவில்லை. முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கதை. ஆனால் இம்மாதிரியான வன்முறையைத் தூண்டும் காட்சிகள் துண்டிக்கப்பட்டால்தான் சமுதாயத்திற்கு நல்லது.
நாட்டின் பாதுகாப்பில் காவல்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு அசம்பாவிதத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையை சாடுவது விவேகமாகாது. இதே காவல்துறை தான் வருங்காலத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தான் நமது தெருக்களில் ரோந்து சென்று பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காவல்துறை மனபலத்தை இழந்தால் சமூக விரோதிகள் தான் பயனடைவார்கள். நடந்தது மோசமான நிகழ்வு. அதனை ஆராய்ந்து அதிலிருந்து என்ன பாடம் கற்க வேண்டும், எவ்வாறு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், பல துறை வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அணுகுமுறை சீரிய முறையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மனச்சோர்வடையாமல் தலை நிமிர்ந்து பணிகளை திறம்பட மனித நேயத்தோடு செய்து மக்களின் மதிப்பை பெற முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
தினமணி நாளிதழில் 23.11.2008 அன்று பிரசுரிக்கப்பட்டது
Wednesday, November 26, 2008
Saturday, November 15, 2008
சேவை மனப்பான்மை ஓங்கினால் ஊழல் குறையும்
“தீயது விட்டீட்டல் பொருள்” என்பது சான்றோர் வாக்கு. பொருள் ஈட்டுவதில் நேர்மை கடைபிடித்தால்தான் சமுதாயம் நல்ல முறையில் இயங்கும் என்பதை உலகளவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவின் விளைவுகள் உணர்த்துகின்றன. கதை ஒன்று சொல்வார்கள். ஊர் கோவிலில் படையலுக்காக எல்லோரும் ஒரு பிடி அரிசி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். ஒரு சிலர் நேர்மையாக அரிசி கொடுத்தார்கள். சிலர் கல், உமி சேர்த்து போட்டனர். ஆனால் பலர் மொத்தத்தில் நாம் போட்டது எப்படித் தெரியும் என்று பொடி பொடியான கற்களை போட்டார்களாம். கடைசியில் உமியும், கல்லும் தான் மிஞ்சியது. பொங்கலிட முடியவில்லை!
நாட்டின் முன்னேற்றதிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தடைக்கற்களில் ஊழல் ஒன்று. அது நிர்வாகத்தின் அடித்தளத்தையே நிலைகுலைய செய்கிறது. சமீபத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழலைப் பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்றும், பொது மக்கள் நேரிலோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஊழலைப் பற்றி மக்களிடம் இரட்டை நிலைப்பாடு காணலாம். தமக்கு சாதகமாக இருக்கும் வரை அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. மற்றவருக்கு ஆதாயம் ஏற்பட்டால் ஆதங்கப்படுகிறோம். போக்குவரத்து விதி மீறியதால் பிடிபடும் வாகனஒட்டி காவலரின் கையை மொழுகி தப்பிக்கப் பார்க்கிறாரே ஒழிய தனது தவறுக்கு வருந்துவதும் இல்லை, திருந்துவதும் இல்லை.
1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் என்ற அமைப்பை நிறுவியது. அரசு துறைகளிலும், மத்திய நிறுவனங்களிலும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனை வழங்கவும், ஊழல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மொத்ததில் அக்கறையுடன் நாணயத்தை காக்கும் ஆணையமாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட தொடங்கியது. இந்த அமைப்புக்கான சட்டம் 2003-அன்று நாடாளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
பொதுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு பொது நலன் கருதி தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு நல்கும் அறிக்கையை ஏப்ரல் 2004-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒரு பொது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஊழல் பற்றி தகவல் கொடுத்தால் அவருக்கு நிர்வாக ரீதியில் பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கப்பட்ட தகவலை பூரணமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதை கண்காணிக்கும் பொறுப்பு அந்த பொது நிறுவனத்தின் விழிப்புத்துறை உயர் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி வாரம் மத்திய ஆணையம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ல் இருந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்ச்சி வாரமாக அனுசரிக்கப்படும் என்று 2000- ம் ஆண்டு முதன்முதலாக அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கௌடில்யாவின் அர்த்தசாஸ்த்திரத்தில், எவ்வாறு தண்ணீரில் நீஞ்சும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்று தெரியாதோ, அதே போல் பொதுப் பணியாளர்கள் எப்போது ஊழல் புரிகிறார்கள் என்பது கணிப்பது கடினம் என்று மிக அழகாக உவமையோடு விவரிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், அரசு துறை தனியார் துறை என்று எந்த ஒரு அமைப்பிலும் ஊழலின் விளைவுகள் சரி செய்ய முடியாதவை. அவை மீள முடியாத பாதையில் கொண்டு சேர்க்கும். அதுவும் சட்ட அமலாக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காவல் துறையில் இம்மாதிரியான நெறியின்மை குற்றங்கள் வளர்ந்திட வழி செய்யும். சட்டம் சார்ந்த நிர்வாகத்திற்கு கேடு விளைவிக்கும்.
காவல் துறையின் மீது சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள் - நிகழ்வுகளை உண்மையாக பதிவு செய்வதில்லை.
• முறையற்ற கைது
• பண பலம், முக பலத்திற்கு அடிபணிதல்.
• ஒரு தலைபட்ச நடவடிக்கை.
• குற்றவாளிகளுக்கு துணைபுரிதல்.
• கையூட்டு பெறுதல்.
இவ்வாறு சிலர் செய்யும் தவறுகளால் பலர் செய்யும் நற்பணிகள் சோபிக்காமல் போகின்றன.
உயிர், சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் என்பவை மனித உரிமைகளின் முக்கிய அங்கங்களாக கருதப்படுகின்றன. எந்த ஒரு நேர்மையற்ற பணியும் இந்த மனித உரிமைகளை பாதிக்கும் என்பது மறுக்க முடியாது. ஊழல் ஒரு முக்கிய மனித உரிமை மீறலாகவே கொள்ள வேண்டும்.
சர்வதேச காவல் கூட்டமைப்பு – ‘இண்டர்போல்’ போலீஸ்துறையில் இருக்கும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகளவில் போலீஸ் தரம் உயர்த்துவதற்கான இலக்குகள் நிர்ணயித்தது. 2002-ம் ஆண்டு காமீருன் நாட்டில் 181 நாடுகள் பங்கேற்ற இண்டர்போல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய சி.பி.ஐ.இயக்குநர் திரு.ஷர்மா அவர்கள் போலீஸ் துறையில் ஊழலின் ஊடுருவலை விவரிக்கையில் காவல்துறைக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களைவிட போலீஸ்துறையின் ஆளுமையின் பலவீனம்தான் கொடுமையானது என்று கூறியுள்ளார். குற்றங்களைக் களைய மேற்கொள்ளப்படும் எந்த போலீஸ் திட்டமும் ‘குற்றவாளிகள் -காவல்துறை’ பரஸ்பர மறைமுக தொடர்பால் வெற்றியடைவதில்லை என்று இண்டர்போல் கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இழிதொழில் வாணிப முறையில் மனிதர்களை கடத்துவது, பாலியல் கொடுமைகள், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்ற சின்டிகேட்டுகள் தழைத்து வருவது உலக அமைதிக்கு பெரும் அபாயம் என்பது கண்கூடு. இதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி போலீஸ்துறையில் உயர்ந்த செயல்திறனை வளர்க்கும் கோட்பாடுகளை பின்பற்றுவதில் தான் உள்ளது. இந்த கோட்பாடுகள் எல்லா காவல்துறை அமைப்புகளுக்கும் பொருந்தும். இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னோடியாக இருந்து அப்பழுக்கற்ற நேர்மையான வழிகாட்டுதலைக் கொடுக்க வேண்டும். ஒரு நேர்மையான அதிகாரி அபரிமிதமான அளவிற்கு நன்மை பயக்கும் மாறுதலைக் கொண்டு வரமுடியும். அதே சமயத்தில் கோட்பாடற்ற உயர் அதிகாரி மற்றும் அவர் கீழ் பணிபுரியும் நேர்மைற்ற ஊழியர்களின் கூட்டணி நிர்வாகத்தின் முதல் எதிரி என்பதில் ஐயமில்லை.
தமிழக காவல்துறை தோன்றி வளர்ந்த சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் முதலில் ‘கொத்வால் போலீஸ்’ என்ற முறையில் வணிக சந்தைகளுக்கு பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்காமல் பார்த்துக் கொள்வது, பொது இடங்களில் சுகாதாரம் தரம் குறையாது கவனித்தல் போன்ற பொறுப்புகள் இருந்தன, பணம் புரளும் இடங்களில் பணி செய்வதால் மனம் தடம் புரண்டு மாமுல் வாங்கும் பழக்கம் காவல்துறையை தொற்றிக் கொண்ட நோய் இன்றும் தொடர்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைவு. சுய சாமர்த்தியத்தில் குறைவை நிறைவு செய்ய வேண்டும். அலுவலகம் வருவதற்கு சம்பளம், வேலை செய்ய ‘கிம்பளம்’ என்ற நிலை இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் பல வசதிகள் பெருகியும் ஊழல் என்ற நோய் தொடர்வது நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும்.
ஊழலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள் தான். சட்ட அமலாக்கமும் ஏழை மக்கள் மீது தெளிவாகப்பாயும். சிறைச்சாலைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கக்கூடிய இல்லவாசிகளின் பொருளாதார தரத்தைப்பார்த்தாலே வெட்ட வெளிச்சமாகும். தப்பித்தவறி வசதி படைத்த குற்றவாளி சிறைக்கு வர நேரிட்டால் வசதி செய்து கொடுக்க முனைபவர்களும் இருக்கிறார்கள்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்பது அறிஞர் அண்ணா அவர்களின் அமர வாக்கு. தன்பணிகளை செவ்வனே செய்து ஏழை மக்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரம் பொருளைக் உணரக்கூடிய வாய்ப்பு அரசுப்பணியில் தான் உள்ளது. அதுவும் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையில் நற்பணிகளின் பிரதி பலன் உடனே காணக்கூடியது. அதில் வரக்கூடிய ஆத்மதிருப்தி அலாதியானது. வீரப்பன் வேட்டைப் பணியில் பல நேரங்களில் கிராம மக்களின் தன்னலமற்ற போக்கையும் நேர்மையையும் உணர முடிந்தது. விடிவதற்கு பல மணிநேரம் முன்னால் இருட்டிலேயே 10 நாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் காட்டிற்குள் சென்றுவிடவேண்டும். வனப்பகுதியில் பரிச்சியமான அங்குள்ள ஆதிவாசிகள் உதவியை நாடவேண்டிவரும். அவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தால் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் தனக்கு தெரிந்ததை சொல்லி உதவியதற்கு எதற்கு வெகுமதி என்று மறுத்துவிடும் வெகுளியான ஏழை மக்களின் நடத்தை எங்களுக்கு ஒருபாடமாக அமைந்தது. அவர்களது கிராமங்களுக்கு சென்று மருத்துவ வசதியும் மற்ற அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டு பல மக்கள் நல நற்பணிகள் அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மனித நேய அணுகுமுறை முடிவில் வீரப்ப வதத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.
அரசுப்பணி என்பது மக்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பை அளிக்ககூடியது. அரசுப்பணியாளார்கள் கையாளும் கோப்புகள் முகமற்றதல்ல. அதனுள் பலரின் எதிர்காலம் புதைந்திருக்கிறது. சாதி ஜனம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் நம்மை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முன்னேற்றத்தின் பயன் சென்றடைந்தால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்ற உணர்வு வளர வேண்டும். இல்லையேல் ஏழையின் சிரிப்பில் இறைவனுக்கு பதில் ஏழையின் வெறுப்பில் சாத்தானைத்தான் காணமுடியும். “தம்மில் மெலியவரை நோக்கி நமதுடமை அம்மா பெரிதென்ற” அகமகிழ்வோடு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மேலோங்கினால் தான் ஊழல் குறையும் பணிகள் பரிமளிக்கும்.
தினமணி நாளிதழில் 14.11.2008 தேதி அன்று பிரசுரிக்கப்பட்டது
நாட்டின் முன்னேற்றதிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தடைக்கற்களில் ஊழல் ஒன்று. அது நிர்வாகத்தின் அடித்தளத்தையே நிலைகுலைய செய்கிறது. சமீபத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழலைப் பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்றும், பொது மக்கள் நேரிலோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஊழலைப் பற்றி மக்களிடம் இரட்டை நிலைப்பாடு காணலாம். தமக்கு சாதகமாக இருக்கும் வரை அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. மற்றவருக்கு ஆதாயம் ஏற்பட்டால் ஆதங்கப்படுகிறோம். போக்குவரத்து விதி மீறியதால் பிடிபடும் வாகனஒட்டி காவலரின் கையை மொழுகி தப்பிக்கப் பார்க்கிறாரே ஒழிய தனது தவறுக்கு வருந்துவதும் இல்லை, திருந்துவதும் இல்லை.
1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் என்ற அமைப்பை நிறுவியது. அரசு துறைகளிலும், மத்திய நிறுவனங்களிலும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனை வழங்கவும், ஊழல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மொத்ததில் அக்கறையுடன் நாணயத்தை காக்கும் ஆணையமாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட தொடங்கியது. இந்த அமைப்புக்கான சட்டம் 2003-அன்று நாடாளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
பொதுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு பொது நலன் கருதி தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு நல்கும் அறிக்கையை ஏப்ரல் 2004-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒரு பொது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஊழல் பற்றி தகவல் கொடுத்தால் அவருக்கு நிர்வாக ரீதியில் பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கப்பட்ட தகவலை பூரணமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதை கண்காணிக்கும் பொறுப்பு அந்த பொது நிறுவனத்தின் விழிப்புத்துறை உயர் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி வாரம் மத்திய ஆணையம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ல் இருந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்ச்சி வாரமாக அனுசரிக்கப்படும் என்று 2000- ம் ஆண்டு முதன்முதலாக அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கௌடில்யாவின் அர்த்தசாஸ்த்திரத்தில், எவ்வாறு தண்ணீரில் நீஞ்சும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்று தெரியாதோ, அதே போல் பொதுப் பணியாளர்கள் எப்போது ஊழல் புரிகிறார்கள் என்பது கணிப்பது கடினம் என்று மிக அழகாக உவமையோடு விவரிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், அரசு துறை தனியார் துறை என்று எந்த ஒரு அமைப்பிலும் ஊழலின் விளைவுகள் சரி செய்ய முடியாதவை. அவை மீள முடியாத பாதையில் கொண்டு சேர்க்கும். அதுவும் சட்ட அமலாக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காவல் துறையில் இம்மாதிரியான நெறியின்மை குற்றங்கள் வளர்ந்திட வழி செய்யும். சட்டம் சார்ந்த நிர்வாகத்திற்கு கேடு விளைவிக்கும்.
காவல் துறையின் மீது சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள் - நிகழ்வுகளை உண்மையாக பதிவு செய்வதில்லை.
• முறையற்ற கைது
• பண பலம், முக பலத்திற்கு அடிபணிதல்.
• ஒரு தலைபட்ச நடவடிக்கை.
• குற்றவாளிகளுக்கு துணைபுரிதல்.
• கையூட்டு பெறுதல்.
இவ்வாறு சிலர் செய்யும் தவறுகளால் பலர் செய்யும் நற்பணிகள் சோபிக்காமல் போகின்றன.
உயிர், சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் என்பவை மனித உரிமைகளின் முக்கிய அங்கங்களாக கருதப்படுகின்றன. எந்த ஒரு நேர்மையற்ற பணியும் இந்த மனித உரிமைகளை பாதிக்கும் என்பது மறுக்க முடியாது. ஊழல் ஒரு முக்கிய மனித உரிமை மீறலாகவே கொள்ள வேண்டும்.
சர்வதேச காவல் கூட்டமைப்பு – ‘இண்டர்போல்’ போலீஸ்துறையில் இருக்கும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகளவில் போலீஸ் தரம் உயர்த்துவதற்கான இலக்குகள் நிர்ணயித்தது. 2002-ம் ஆண்டு காமீருன் நாட்டில் 181 நாடுகள் பங்கேற்ற இண்டர்போல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய சி.பி.ஐ.இயக்குநர் திரு.ஷர்மா அவர்கள் போலீஸ் துறையில் ஊழலின் ஊடுருவலை விவரிக்கையில் காவல்துறைக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களைவிட போலீஸ்துறையின் ஆளுமையின் பலவீனம்தான் கொடுமையானது என்று கூறியுள்ளார். குற்றங்களைக் களைய மேற்கொள்ளப்படும் எந்த போலீஸ் திட்டமும் ‘குற்றவாளிகள் -காவல்துறை’ பரஸ்பர மறைமுக தொடர்பால் வெற்றியடைவதில்லை என்று இண்டர்போல் கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இழிதொழில் வாணிப முறையில் மனிதர்களை கடத்துவது, பாலியல் கொடுமைகள், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்ற சின்டிகேட்டுகள் தழைத்து வருவது உலக அமைதிக்கு பெரும் அபாயம் என்பது கண்கூடு. இதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி போலீஸ்துறையில் உயர்ந்த செயல்திறனை வளர்க்கும் கோட்பாடுகளை பின்பற்றுவதில் தான் உள்ளது. இந்த கோட்பாடுகள் எல்லா காவல்துறை அமைப்புகளுக்கும் பொருந்தும். இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னோடியாக இருந்து அப்பழுக்கற்ற நேர்மையான வழிகாட்டுதலைக் கொடுக்க வேண்டும். ஒரு நேர்மையான அதிகாரி அபரிமிதமான அளவிற்கு நன்மை பயக்கும் மாறுதலைக் கொண்டு வரமுடியும். அதே சமயத்தில் கோட்பாடற்ற உயர் அதிகாரி மற்றும் அவர் கீழ் பணிபுரியும் நேர்மைற்ற ஊழியர்களின் கூட்டணி நிர்வாகத்தின் முதல் எதிரி என்பதில் ஐயமில்லை.
தமிழக காவல்துறை தோன்றி வளர்ந்த சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் முதலில் ‘கொத்வால் போலீஸ்’ என்ற முறையில் வணிக சந்தைகளுக்கு பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்காமல் பார்த்துக் கொள்வது, பொது இடங்களில் சுகாதாரம் தரம் குறையாது கவனித்தல் போன்ற பொறுப்புகள் இருந்தன, பணம் புரளும் இடங்களில் பணி செய்வதால் மனம் தடம் புரண்டு மாமுல் வாங்கும் பழக்கம் காவல்துறையை தொற்றிக் கொண்ட நோய் இன்றும் தொடர்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைவு. சுய சாமர்த்தியத்தில் குறைவை நிறைவு செய்ய வேண்டும். அலுவலகம் வருவதற்கு சம்பளம், வேலை செய்ய ‘கிம்பளம்’ என்ற நிலை இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் பல வசதிகள் பெருகியும் ஊழல் என்ற நோய் தொடர்வது நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும்.
ஊழலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள் தான். சட்ட அமலாக்கமும் ஏழை மக்கள் மீது தெளிவாகப்பாயும். சிறைச்சாலைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கக்கூடிய இல்லவாசிகளின் பொருளாதார தரத்தைப்பார்த்தாலே வெட்ட வெளிச்சமாகும். தப்பித்தவறி வசதி படைத்த குற்றவாளி சிறைக்கு வர நேரிட்டால் வசதி செய்து கொடுக்க முனைபவர்களும் இருக்கிறார்கள்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்பது அறிஞர் அண்ணா அவர்களின் அமர வாக்கு. தன்பணிகளை செவ்வனே செய்து ஏழை மக்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரம் பொருளைக் உணரக்கூடிய வாய்ப்பு அரசுப்பணியில் தான் உள்ளது. அதுவும் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையில் நற்பணிகளின் பிரதி பலன் உடனே காணக்கூடியது. அதில் வரக்கூடிய ஆத்மதிருப்தி அலாதியானது. வீரப்பன் வேட்டைப் பணியில் பல நேரங்களில் கிராம மக்களின் தன்னலமற்ற போக்கையும் நேர்மையையும் உணர முடிந்தது. விடிவதற்கு பல மணிநேரம் முன்னால் இருட்டிலேயே 10 நாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் காட்டிற்குள் சென்றுவிடவேண்டும். வனப்பகுதியில் பரிச்சியமான அங்குள்ள ஆதிவாசிகள் உதவியை நாடவேண்டிவரும். அவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தால் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் தனக்கு தெரிந்ததை சொல்லி உதவியதற்கு எதற்கு வெகுமதி என்று மறுத்துவிடும் வெகுளியான ஏழை மக்களின் நடத்தை எங்களுக்கு ஒருபாடமாக அமைந்தது. அவர்களது கிராமங்களுக்கு சென்று மருத்துவ வசதியும் மற்ற அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டு பல மக்கள் நல நற்பணிகள் அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மனித நேய அணுகுமுறை முடிவில் வீரப்ப வதத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.
அரசுப்பணி என்பது மக்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பை அளிக்ககூடியது. அரசுப்பணியாளார்கள் கையாளும் கோப்புகள் முகமற்றதல்ல. அதனுள் பலரின் எதிர்காலம் புதைந்திருக்கிறது. சாதி ஜனம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் நம்மை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முன்னேற்றத்தின் பயன் சென்றடைந்தால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்ற உணர்வு வளர வேண்டும். இல்லையேல் ஏழையின் சிரிப்பில் இறைவனுக்கு பதில் ஏழையின் வெறுப்பில் சாத்தானைத்தான் காணமுடியும். “தம்மில் மெலியவரை நோக்கி நமதுடமை அம்மா பெரிதென்ற” அகமகிழ்வோடு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மேலோங்கினால் தான் ஊழல் குறையும் பணிகள் பரிமளிக்கும்.
தினமணி நாளிதழில் 14.11.2008 தேதி அன்று பிரசுரிக்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)