Monday, November 10, 2014

ஊழலற்ற பாதை வகுப்போம்! Dinamani Article 10.11.2014



உலகம் ஒரு கிராமம் என்றவாறு நாடுகளிடையே இடைவெளி குறுகி வருகிறது. பன்னாட்டு வணிக ஒப்பந்தம் மற்றும்  உலக வணிகமயமாக்கலை தொடர்ந்து பல நாடுகள் இடையே பண்டம் பரிமாற்றல், தொழில் நுட்ப தொடர்பு சுலபமாக அமைந்துள்ளது. 
“வெட்டுக் கனிகள் செய்து தங்கமுதலாம்
வேறு  பல பொருளுங்  குடைந்தெடுப்போம்
எட்டுத்  திசைகளிலுஞ்  சென்றிவைவிற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவருவோம் என்று உலக வணிகத்திற்கு அவன் காலத்தே பாரதி பாடி உரைத்தான். ஆனால் குடைதெடுக்கும் தங்கம் என்ன, பல களிமனங்கள் காற்றலைகள் என்று பஞ்ச பூதங்களில் ஊற்றெடுத்து ஆழிபேரலையாய் உருவெடுக்கும் ஊழலை இப்போது பார்த்தால் மனம் வெதும்பி பாடியிருப்பான். 
உலக வணிக முறை சீராக இயங்க தடங்கலாக இருப்பது ஊழல் என்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழலை தடுக்கவும் தவிர்க்கவும் 1990ல் இருந்து கூட்டு முயற்சி பல கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் எடுத்துள்ளது.  ஊழல் தடுப்பு உடன்படிக்கை 2003ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் கையெழுத்திட்டு டிசம்பர் 14 2005ல் பிரகடனப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்தது.  இதுவரை 140 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தத்தம் நாட்டில் அமல்படுத்த துவங்கியுள்ளன.  இந்தியா 2011ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில் வைத்து பிரகடனத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.   பிரிட்டன் போன்ற பல நாடுகள் கையூட்டு தடுக்கும் சட்டம் (ப்ரைபரி ஆக்ட்) அமல்படுத்தியுள்ளது. இன்னும் லோக்பால், லோக் ஆயுக்தா, ஒருங்கிணைந்த ஊழல் தடுப்பு சட்டம் இந்தியாவில் விவாத அளவில் தான் பாராளுமன்றத்தில் உள்ளது. தனியார் முறைகேடுகளையும் ஒருமுகப்படுத்தும் சட்டம் விரைவிலே நிறைவேற வேண்டும்.
     1964ம் ஆண்டு அரசு நடவடிக்கைகளில் ஊழலை தவிர்க்க எடுக்க வேண்டிய செயல் முறைகளை ஆராய்ந்து சந்தானம் தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளை அளித்தது.  அதன் அடிப்படையில் உருவானதுதான் சிவிசி எனப்படும் மத்திய விழிப்பணர்வு ஆணையம். ஒவ்வொரு வருடமும் முக்கியமான ஊழல் தடுப்பு செய்தியை முன்நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை நாடெங்கிலும் எடுப்பதற்கு எல்லா அரசுத்துறைகளுக்கும் சிவிசி அறிவுறுத்தும், ஊழல் ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்படும்.
2013ம் வருடம் அரசு தனது தேவைக்கான கொள் முதலில் வெளிப்படைத்தன்மையும், ஊழலற்ற முறையையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.  வளர்ச்சிப் பணிகளுக்காக அரசுதுறைகள் முலமாக கொள்முதல் மதிப்பு வருடத்திற்கு சுமார் ரூபாய் பனிரெண்டாயிரம் கோடி.  இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிச் குறியீட்டில் முப்பது சதவிகிதம்.  இதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊழலற்ற நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிவிசி இந்த பொருண்மையை முன் வைத்தது.  எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதன் விளைவாக ஊழல் குறைந்தன என்பது கேள்விக்குறி.  காற்றலை, நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில் எழுந்த முறைகேடுகள் நீதிமன்றங்கள் பார்வைக்கு வந்துள்ளன.    
எட்டு அத்தியாயம் 71 ஷரத்துக்கள் கொண்ட ஐநா உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் ஊழல் தடுப்பு முறைகளை மேம்படுத்தவும் நன்னெறி வழிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் சொத்துக்களை மீட்க பரஸ்பர உதவி நல்க வேண்டும் என்று 54 1A பிரிவில் தெளிவாக உள்ளது. ஊழல் தொடர்பு சொத்துக்களை முடக்க நாடுகளுக்கிடைய சட்ட உதவி புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக கலந்தாய்வு தொடர்ந்து நடந்து சர்ச்சைக்கு முடிவில்லாமல் இருந்தது.  வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் நிலையாமை, ராணுவ ஆதிக்கம் அரசு அதிகாரிகளின் வஞ்சகம் காரணமாக ஊழல் தறிகெட்டு ஊழல் பணம் பாதுகாப்பான நாடுகளில் பதுக்குவது தொடர்ந்து வருவதால் ஒரு கட்டத்தில் சொத்து மீட்பு முக்கியமான நடவடிக்கையாகிறது.  கொள்ளையடிக்கப்பட்ட  சொத்துக்களை மீட்க வழிவகை செய்யும் சர்வதேச சொத்து மீட்பு அத்தியாயம் ஐந்தில் உள்ளடக்கிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டதின்  அடிப்படையில்தான் வளர்ந்து வரும் பல நாடுகள் இந்த உடன்படிக்கையில் ஒப்புதல் அளிக்க முன் வந்தன. 
தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றம் ஆணையின்படி வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கணக்கில் வராத பணத்தை மீட்க விஷேச விசாரணை குழாமை நீதிபதி ஷா தலைமையில் அமைத்துள்ளது.  உச்ச நீதிமன்றம் இதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றதை முனைப்பாக கண்காணிக்கிறது.  அதை விட முக்கியம் நாட்டில் புழங்கும் கணக்கில் வராத பணத்தை வெளிக் கொணரும் நடவடிக்கை.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இரும்பு மனிதர் சர்தார் படேல் அவர்களின் பிறந்த ஜயந்தியை வைத்து நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்தியா சுதந்திரம் அடைந்த மறு வருடமே ராணுவத்திற்கு வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியது.  அப்போதே படேல் அவர்கள் பொது வாழ்வில் தரம் தாழ்ந்து வருவது பற்றியும், ஆளுமையிலும் நிர்வாகத்திலும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, மனவேதனை அளிக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.  நிலமையை சீர்செய்ய தேவை மாற்றம் ஆனால் வீண் சர்ச்சைதான் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அந்த சர்ச்சை முழுநடவடிக்கையின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
இந்த வருடம் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பம் எவ்வாறு ஊழலை தவிர்க்க முடியும் என்பதை மையக் கருத்தாக அறிவுத்துள்ளது.  அரசு நிர்வாகத்தில் பல சட்ட திட்டங்கள் உள்ளன.  பல்வேறு துறைகளில் நிர்வாக நெறிமுறைகள் விதிகள் உள்ளன.  அதனை புரிந்து கொண்டு அமல் படுத்துவதே அரசு ஊழியருக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.  குழப்பமான விதிகளுக்கும் குறைவில்லை.  இத்தகைய குழப்பமான விதிகள்தான் ஊழலுக்கு வித்திடுகிறது.
ஊழலை தவிர்ப்பதற்கு முதல் நடவடிக்கை விதிகளை சுலபமாக்குதல், தேவையற்றவையை நீக்குதல் எல்லோரையும் சமமாக பாவித்து விதிகளை நடைமுறை படுத்துதல்.  ஆனால் சுலபமாக்குவது சுலபமல்ல என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.  உதாரணமாக காவல்துறையில் புகார் கொடுக்க கணினி மூலமாக பதிவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அரசு விதிகளை புரிந்து கொள்வதை ஜனரஞ்சக அறிவு எனலாம். எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்த ஜனரஞ்சக நடைமுறை அறிவை அடைவது பிரம்ம பிரயத்தனம் என்றால் மிகையில்லை. சம்மந்தப்பட்ட துறைகளும் தங்களது உடும்புப் பிடியை லேசில் தளர்த்த மாட்டார்கள்.
இந்த சூழலில் தான் தொழில் நுட்பம் மக்களின் உதவிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பத்தை கடைபிடிக்க அரசுதுறைகளை அறிவுத்தியது வரவேற்றக்தக்கது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக பல போரட்டங்கள் நடத்தி மக்களின் கவனத்தையும் அரசின் பார்வையையும் இந்த முக்கிய பிரச்சனை மீது திருப்பினார்.  அதில் ஒரளவு வெற்றியும் கண்டார்.  தெய்வாதீனமாக அதே சமயம் சிஏஜியின் தலைவர் வினோத் ராயின் 2ஜி அறிக்கையும் ஹிமாலய ஊழலை மக்கள் முன் வைத்தது.
அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்க் கொள்ளும் அரசு துறைகளில் சங்கடமின்றி சேவையைப் பெற தொழில் நுட்பம் அதிக அளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வருவாய், காவல்துறை, கிராம நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு  உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் துறைகள், இவ்விடங்களில் தான் மக்கள் அதிகமாக அல்லல் படுகிறார்கள்.
ஜனத்தொகை அதிகமாக இருப்பதால் தேவைகளும் அதிகம். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எண்ணிக்கைகளை சமாளிக்க முடியாத நிலை. இதனால் வேகமாக சேவையை பெற மக்கள் குறுக்கு வழி நாடுகிறார்கள்.  நப்பாசை பிடித்த ஊழியர்கள் சந்தர்பத்தை பயன்படுத்தி கை நீட்டுகிறார்கள் ஊழல் ஊடுருவுகிறது ஊழியர்கள் கை ஒங்குகிறது.  ஒடுங்கும் அப்பாவி மக்கள் மேலும் ஒதுக்கப்படுகிறார்கள். 
மக்கள் நேராக எதிர்க் கொள்ளும் துறைகளில் கணினி மூலம் தகவல்களை பதிவு செய்து நடவடிக்கை எடுத்தல் மக்களுக்கு அரசின் சேவை சுலபமாக வந்தடையும்.  ‘இ-சேவா’ என்ற முறை பல இடங்களில் வழிமுறைகளை சுலபமாக்கியுள்ளது.
அரசு பணியாளர்கள் நியமனம், பணிமாற்றம், கல்வி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் இவைகளில் நேரும் தவறுகள் நேர்முகமாக பாதிப்பு தெரியாது, ஆனால் அதன் விளைவின் அழுத்தம் அதிகம். பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையும் காலதாமதமின்றி தேர்வுகளின் முடிவுகள் பணிநியமன ஆணை அளித்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.  அரசுப்பணியாளர்கள் சுமார் முப்பது வருடம் பணியில் இருக்கக் கூடியவர்கள்.  அவர்களது தேர்வு நேர்மையாக நடந்தால்தான் அவர்கள் நேர்மையாக பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  நேர்காணலே கோணலாக இருந்தால் பணியும் சறுக்கல்கள் நிறைந்த கோணலான பாதையில்தான் செல்லும். சம்மந்தபட்ட துறையும் சரியும். கணினிமூலம் தகவல் பரிமாற்றம் நிர்வாக சீர்திருத்தம் வெகுமளவு சறுக்கல்களை தவிர்க்கும்.
தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புத்துறை மூன்று வகையாக குற்ற நடவடிக்கை எடுக்கிறது. கையும் களவுமாக கையூட்டு பெறும்போது பிடிப்பது ஒரு வகை.  விதிகளை மீறி சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்து லஞ்சம் பெறுவதை கோப்புகளை ஆராய்வது மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது இரண்டாவது வகை. மூன்றாவது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தலை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல்.  முதல் இரண்டு வழிகளும் தவறு செய்யும் ஊழியரை ஊழல் குற்றத்தோடு நேராக இணைக்கும்.  மூன்றாவது வழியான வரவிற்கு அதிகமான சொத்து என்பது சுற்றி வளைக்கும் வழி.  எந்த ஒரு நபரும் வீட்டில் உள்ள ஒவ்வொரு குந்து மணிக்கும் கணக்கு காட்டுவது முடியாத காரியம். அபாண்டமாக ஜோடனை செய்வதற்கும் நேர்மையற்ற புலன் விசாரணை அலுவலர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கும்.  நேர்மையற்ற விசாரணையும் அதைத் தூண்டி துணை போவதும் ஊழலின் ஒரு பரிமாணம் தானே.

அரசு நிர்வாகம் கோப்புக்களோடு நின்றுவிடாது மக்களின் வாழ்க்கையை கோலமிட வல்லது.  அன்றாட வாழ்க்கைக்கு இடையூறின்றி உதவிக்கரம் கொடுக்கும் அரசே வல்லரசு. மத்திய அரசில் உள்துறை,பாதுகாப்பு, தொழில்கள், உணவு,நிதி என்று ஐம்பத்தொரு அமைச்சகங்கள் உள்ளன.  சிவிசி, மனித உரிமை என்று கண்காணிப்பு ஆணையங்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் எல்லா நேர்வுகளையும் பார்வையிடுகின்றன.
நிர்வாக மேல் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சட்ட திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்கள் பயன்படுத்தல், அரசியல் சாசன கட்டமைப்பை பாதுகாத்தல் இவை அரசியல் திறம் சார்ந்தவை.  இங்கு தொழில் நுட்பத்தைவிட நேர்மையான சிந்தனையும் மக்கள் பயன்பாட்டை உள்ளடக்கிய நோக்கமும் தான் முக்கியம். அவைதான் ஊழலற்ற பாதையை வகுக்கும்.


Monday, November 3, 2014

இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்! - தினமணி கட்டுரை 16.10.2014



     அக்டோபர் மாதத்திற்கு என்ன ஒரு மகிமை! நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் இவ்வுலகில் அடி வைத்த மாதம் என்ற பெருமை! நமது தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயபிரகாஷ் நாராயணன், இரும்பு மனிதர் வல்லபாய் படேல், சுப்பிரமணிய சிவா பிறந்த  மாதம் அக்டோபர். ஏன் வால்மீகியின் ஜெயந்தியும் புரட்டாசி மாதத்தில்.  நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஜெயந்தி அக்டோபர் ஒன்று. ஆனால் அவரை நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.
     1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தவரின் ஆத்மார்த்த வரவேற்பை பெற்ற நிகழ்வை அந்த மாநாட்டிற்குச் சென்ற அன்னி  பெசன்ட் நேரில் கண்டார்.  மனிதப் பிறவியின் நோக்கம் இந்த பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவைகளுக்கான விடைகளின் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உதிக்க அதே ஆண்டு இந்தியாவின் தென்முனை தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினர்.
     அன்னி பெசன்ட் இளம்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருதால் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.  ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, இரு சிறு குழந்தைகளை  வைத்து அன்னியின் தாயார் தனது உழைப்பால் இன்னல்களுக்கு  இடையில் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது.  ஆனால் அதுவே மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற ஒரு ஆழமான வைராக்கியத்தை அளித்திருக்க வேண்டும். 
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இறங்கினாள். தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தியது. உண்மையை தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக அமையவில்லை. இந்நிலையில் பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம்.  பத்தாம் பசலியான புகுந்த இடத்தில் நிம்மதியில்லை.  அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை நலம் பெற வைப்பதில் மாதக்கணக்காக போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள். குடும்ப வாழ்க்கை சகிக்காமல் விவாகரத்து,  குழந்தைகள் மீது உரிமை பெற கோர்ட்டில்  வழக்கு, அன்புத்தாயாரின் மரணம் கொடுத்த வேதனை மதங்கள் மீது கொண்ட அவ நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
     1872-ம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிஸ கொள்கைகளில் அதிக பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து அப்போதைய உயர்ந்த சிந்தனையாளர்கள் பர்னாட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப். போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.   மனித பிறவி, மதம், அரசியல் சமுதாய ஏற்றத்தாழ்வு பற்றிய நிதர்ஸன உண்மைகள் அவரை மிகவும் பாதித்தது.  சமுயத்தில் மனிதப்பண்பு உயரவேண்டும் மனித நேயம் நிலைப்பட வேண்டும் என்ற திடமான முடிவோடு பிரம்ம ஞான சுவையோடு இணைத்துக் கொண்டார்.
     எவ்வாறு ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு ஞான ஒளி சீடராக விவேகானந்தர் அமைந்தாரோ அதே போல் பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் உண்மை தொண்டராக பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டதோடு அதே சமயம் இந்தியாவின் பழம்பெருமை, கலாச்சாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்து கொண்டு அதைப்பற்றி ஸ்மரணையின்றி கொத்த அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.
     கல்வி மூலமாகத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் அதுவும் பெண் கல்வியின் அவலநிலை கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.  1898ம் ஆண்டு வாரணாசியில் பெண்களுக்கான கல்வி கூடத்தை நிறுவினார்.
     காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை மையமாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவாக அஸ்திவாரம் போடப்பட்டது.  இந்து சமயத்தையும் இந்திய பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித்திட்டம் அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் 1904ம் அறிமுகப்படுத்தினார்.  அந்த கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது.  1921ம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி கொளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
     கல்வி பயில்வது பள்ளி கல்லூரியில் மட்டும் அல்ல வாழ்க்கையும், சூழலும் சுற்றமும் கல்வி புகட்டுகின்ற அதனை கிரகிக்க முயல வேண்டும் என்ற மூதுரையை முற்றிலும் அன்னி செயலாக்கியதினால்தான் அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் சோபிக்க முடிந்தது. 
     அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னை சமுதாயப்பணியில் அர்ப்பணித்தது மட்டுமல்ல உண்மையாகவும் தைரியமாகவும் கருத்துக்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  அவரது கருத்து சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது.  அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து ஆண் பெண் மணம் புரிதல், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து இவர்களது மதசார்பற்ற கொள்கைகள், பிற்போக்கான மதபோதகர்கள் மாற்றத்தை சுயநலதிற்காக புறக்கணிக்கும் கனவான்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.   நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்டது.  அதனால் அசரவில்லை அன்னி.  மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் பெண் உறவு, விவாகம் பற்றிய கருத்துக்களை துண்டு பிரசுரமாக வெளிட்டடார்.  அவை லட்சக்கணக்கில் விற்பனையானது.  பல மொழிகளிலும் வெளிவந்தது.
     முற்போக்கு சிந்தனை நிறைந்த அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாய சூழலைக் கண்டு மாற்றம் கொண்டு  வர  வேண்டும் என்று விழைந்ததில் வியப்பில்லை.  சமுதாய முன்னேற்றம், மாற்றம், விழிப்புணர்வு, ஆண் பெண் சம நோக்கு இவைகளை தனது துவக்கப்பணியாக  தமிழ்நாட்டில் செயலாக்கியது தமிழருக்கு பாக்கியம்.  ‘மகன்கள் மகள்கள்’ என்ற அமைப்பை 1912ம் வருடம் ஏற்படுத்தி மகன் மகள் பாகுபாடின்றி குடும்பத்திலும் வெளி உறவுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை  வலியுத்தினார்.
இந்தியாவில் முதல் மாமன்ற உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். இரு சமூக சீர்திருத்தவாதிகள் ஒருமித்த கருத்தோடு இணைந்ததில் வியப்பில்லை. இந்திய பெண்களின் நிலையை உயர்த்தவும் சமுதாய பிற்போக்கான பிணைப்புகளிலுருந்து பெண்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913ம் வருடம் ஊருவாக்கினார். டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து பெண்களுக்கு சம கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமைகளை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற் கொண்டார்.
     இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் அதற்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டவர் அம்மையார் அவர்கள்.  “இந்தியாவே விழித்தெழு” என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913ம் வருடம் வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் பரவச் செய்தார்.
     நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு தேவை என்று உணர்ந்து இந்திய இளைஞர்கள் சங்கம்(YMIA) 1914 வருடம் துவங்கினார். எவ்வாறு உடற் பயிற்சிக் கூடம் மூலம் உடலை வலுவடைச் செய்கிறோமோ அதுபோல, கல்வி, விவாதம் மூலம் சீரிய குடிமகனாக அரசியல் உணர்வோடு உருவாகும் மையமாக இச்சங்கம் வளர்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்தார்.  இச்சங்கம் இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.
     “சுயாட்சி பேரியக்கம்” என்ற விடுதலை போராட்டத்தை சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலக் அவர்கள்.  விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி தலைவராக செயல்பட்டார். அடையார் ஆலமரம் போல அன்னி பெசன்ட் தூவிய விடுதலை விருட்சத்தின் விழுதுகள் நாடெங்கும் விழுந்தன.  மூதறிஞர் ராஜாஜி,
சர் சி.வி. ராமசாமி, வி.கலியாண சுந்தரனார்,சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்ற பல பெருந்தலைவர்கள் அகில இந்திய அளவிலும் முனைந்து செயல்பட்டனர்.  அன்னையின் சுதந்திர முழுக்கம் பல இடங்களிலும் ஒலித்தது.  பிரிட்டிஷ் அரசு 1917 ஜுன் மாதம்  அன்னையை சிறையிலிட்டது.  ஆனால் எதிர்ப்பு மேலும் வளர்ந்தது.  அன்னை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
     அகில இந்திய காங்கிராஸ் தலைவராக 1917-ம் வரும் கல்கத்தாவில் நியமிக்கப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
          அன்னையின் மனித வாழ்க்கையின் தாத்பரிய தேடல்  பிரம்ம ஞான சபையில் ஐக்கிய மானதில் முடிவுற்றது.  பிரம்ம ஞான சபை தலைவராக 1907ல் இருந்து மதங்களின் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார்.  உண்மை நெறி நேர்மையான பாதை மனித நேயம்,சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.  அவைதான் எல்லா மதங்கள் சங்கமிக்கின்ற கோட்பாடுகள்.
     அன்னை இந்தியாவையும் இந்தியர்களையும் வெகுவாக நேசித்தார்.  மகாத்மா காந்தி அவர்கள் அன்னி பெசன்ட் தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை செலுத்தினார் என்று பாராட்டியுள்ளார்.  தமிழறிஞர் திருவிகா அவர்கள் அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.
     “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்றுக் கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது. வெஸ்லி கல்லூரிப் பணியை விட்டு விடத் தூண்டியது.  தேசபக்தன் இதழ்க்கு ஆசிரியனாக்கியது.  தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது.  என வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்.” என்று மனம் நெகிழ கூறியுள்ளார்.
     புனித அக்டோபர் மாதத்தில் “சான்றோர்களை போற்றுதும்” என்று காலச்சுவட்டில் தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தி, அன்னி பெசன்ட், சாஸ்திரி, ஜெய பிரகாஷ், படேல் போன்றவரை நினைவு கூர்வோம். அவர்கள் சமுதாய இன்னல்களுக்கு எதிராக போராடினார்கள் வெற்றி கண்டார்கள். ஆனால் நமது சுணக்கத்தால் சமுதாயத்தை வலுவிழக்கச் செய்யும் காளான்களாக முளைத்துள்ள சாதி மத பேதம், பாலியல் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை நமக்கு சவாலாக இருக்கின்றன.
     நாலாந்திர நடிகர்களை பின் தொடர்கிறோம் ஒரு கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு கிடைத்தபிறகுதான் யார் இந்த இந்தியர் என்று அறிய முற்படுகிறாம்.  குலையும் சமுதாய மதிப்பீடுகள் முகத்தில் அடிக்கிறது.
     இன்னொரு அன்னை வசந்தை, காந்தி, சாஸ்திரி, காமராஜ் அம்பேத்கர் வரமாட்டார்கள்.  அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிக பெரிய சமூக சேவை.



Tuesday, September 23, 2014

கைப் பொருள் கல்வியே! -தினமணி நாளிதழ் கட்டுரை தேதி 23.09.2014

        ஒரு நல்ல பள்ளி  இரு வகையாக உருவாகலாம். சாதாரணமாக நடக்கக்கூடியது கடவுளே வந்து அமைத்துக்கொடுப்பது அகஸ்மாத்தாக நடக்ககூடியது சம்பத்தப்பட்டவர்கள்  எல்லோரும் ஒத்துழைத்து நிறுவுவதுஎதிலும் ஒத்துழைப்பை பெறுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும்
பொய்யுரை இது! ஆனால் ஒத்துழையாமை  நடைமுறையில் நற்பள்ளிகள் உருவாகுவதில் தடங்கலாக உள்ளது  என்பது நிதர்சனம்.
.
      சமீபத்தில் கல்வித்துறை  அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நமது பள்ளிகளில் மாணவர்களின் செயல் திறன் , புரிதல், கற்றதை வெளிப்படுத்தும் திறமை மோசமாக உள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. மாணவர்களுக்கு எழுத்துக்கூட்டிக்கூட தமிழில் படிக்க வரவில்லை .ஆங்கிலம் கேட்கவே வேண்டாம் . ஆய்வில் நகர் புறத்து இளஞர்கள் ஓரளவு பரவாயில்லை, ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி விருதுநகர்  போன்ற மாவட்டங்களில் மாணவர் திறமை மிக குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயம்.
          புகழ் பெற்ற ஹார்வேர்டு பல்கலை கழகம் ஆராய்ச்சியாளர் மைக்கேல் க்ராமர் இந்தியாவில் ஆரம்ப பள்ளிகளில் உள்ள தரத்தை ஆய்வு செய்தார். உலக வங்கி பிரதினிகள் அடங்கிய குழுவோடு இந்த ஆய்வு 2003 ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சராசரி நான்கு ஆசிரியர்களில் மூன்று ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகளில் வருவதில்லை, பணிக்கு வரும்  இரண்டில் ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துவதில்லை என்ற உண்மையை கல்வியாளர்களுக்கு தெரிவித்தனர். நாட்டில் சுமார் பதினைந்து லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் ஐம்பது சதவிகிதம் சரியாக போதிப்பதில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் அறிவு வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்கலாம். பல பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் வேறு ஒருவரை குறைந்த தொகைக்கு அமர்த்திவிட்டு தான் சொந்த வியாபாரத் தொழில் செய்யும் அவல நிலையும் நடக்கிறதுதர்மத்தை போதிக்கும் ஆசிரியர்களே அதர்ம வழியில் சென்றால் சமுதாயம் எந்த நிலையில் இருக்கும்? தர்மம் என்பது தனி மநித உணர்வு மட்டுமல்ல  சமுதாயம் மற்றும் அரசியல் நற்பண்பின் பிரதிபலிப்பு , எந்நிலையிலும் கடமை என்னும் தர்மத்தை புறக்கணிக்கலாகாது.
   பள்ளிக்கூட சீர்திருத்தம் நாட்டில் உள்ள எல்லோரது பொறுப்பும் முக்கிய பணியுமாகும் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் ப்ளோட்டோ அறிவுரை இன்றும் பொருந்தும். ஒழுக்கம் கட்டுப்பாடு தார்மீக பணி காவலர்க்கும் ஆசிரியருக்கும் மிக அவசியம். அது கற்றுக்கொடுத்து வருவதில்லை. நன்னடத்தை மூலம் பழக்கத்தில் வரவேண்டும். அலக்ஸாண்டரின் நல்லாசிரியர் அரிஸ்டாட்டிலின்  கூற்றுப்படி எவ்வாறு ஒரு சங்கீதம் பயிலப்படுகிறதோ அவ்வாறு நல்லொழுக்கமும் தினந்தோறும் நடத்தை மூலம் பயில வேண்டும்.
கல்வியின் நோக்கம் தெரியாததை அறிவது மட்டுமல்ல எவ்வாறு வாழ்க்கையில் நன்னெறிகளை கடைபிடிப்பது அவ்வழியில் நடப்பது என்பதை பயிற்றுவிக்கும் தளம் பள்ளிக்கூடம். படித்த பண்டிதர்கள் நடமாடுகிறார்கள், ஆனால் நன்னடத்தையுடைய பண்பாளர்கள் இல்லையே என்ற கவி தாகூரின் அங்கலாய்ப்பு இன்றும் பொருந்தும்.
    இங்கிலாந்தில் சமீபத்தில் கல்வியின்.தரத்தை உயர்த்தடாலண்ட் ரேய்டிட்” திறனை அதிரடியாக கண்டுபிடி என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பள்ளிகளை, மாணவர் சேர்க்கை, அவர்கள்  பெற்ற மதிப்பெண் அதன் அடிப்படையில் தரம் வாரியாக பிரித்து எவ்வாறு சில பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றனபின் தங்கும் பள்ளிகளின் பின்னடைவுக்கு காரணம் என்ன எவ்வகையில் தரவுயர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. முக்கியமாக கணிதம் ஆங்கிலம் இவ்விரண்டில் எவ்வளவு மதிப்பெண் மாணவர்கள் பெற்றிருக்கிரார்கள் என்பதின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு பின்னடைவடையும் பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி முன்னேற்றம் அடையச்செய்வது அடிப்படை செயலாக்கமாக வைத்தது நல்ல பலனை அளித்துள்ளது. பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் சமுதாய சூழல், பெற்றோர்களின் வருமானம், அவர்களது படிப்பறிவு மாணவர்களின் செயலாற்றலில் வெளிப்படும். உதாரணமாக பொருளாதாரம் குறைந்த இடம் , கல்வி பயிலும் முதல் தலைமுறை இவற்றை கருத்தில் கொண்டு பள்ளியின் தரத்தை நிர்ணயித்து அதற்கு ஏற்றவாறு வசதிகள் விசேஷ பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
    மாணவர்கள் பெறும் மதிப்பெண் நூறு சதவிகிதம் தேற்சி இதை மட்டும் கணக்கில் கொண்டு ஆசிரியர்களை பாராட்டுவதும் இல்லை சாடுவதும் தவறான அணுகுமுறை. ஒரு பள்ளியில் நடந்த உண்மை சம்பவம். அந்த பள்ளியில் மாணவர்கள் சரியாக வருவதில்லை பல ஆசிரியர்கள் முயன்றும் மாணவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை. இம்மாதிரி நிலை சில பள்ளிகளில், ஏன் பல பள்ளிகளில் சில வகுப்புகளில் பார்க்கமுடியும். ஆனால் பல ஆசிரியர்கள் செய்யமுடியாததை ஓராசிரியர் செய்து வெற்றி கண்டார். படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வில் வெற்றிப் பெற்றது மட்டுமல்ல வாழ்க்கையிலும் பணியிலும் முத்திரை பதித்தனர். வெற்றிக்குக் காரணமாக இருந்த நல்லாசிரியரை கேட்டபோது அவர் தான் ஒன்றும் விசேஷமாக செய்யவில்லை, பின் தங்கிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தேன், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தேன் அன்பும் பரிவும் காட்டினேன் வழி நடத்தினேன் என்றாராம். இதுதான் கற்றலில் இனிமையை புகட்டும் சூக்ஷமம்.  பள்ளியில் சேரும் எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள் தான் அவர்கள்  வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் ஆசிரியர் வழிநடத்தலிலே என்பது உண்மை.
 கட்டாய அடிப்படை கல்வி அடிப்படை உரிமையாக அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு சட்டமும் இயற்றப்பட்டுவிட்டது , கல்வி உரிமை சட்டப்படி 25 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் , ஆனால் ஏனோ நடைமுறை படுத்துவதில் சிக்கல். முக்கியமாக  சம்பத்தப்பட்ட துறையிலிருந்து மானியம் பெறுவதில் தாமதம், வசதிபடைத்தவரின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகள். சில ஐரோப்பிய நாடுகளில் பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி மானியம் கடவு சீட்டுகளாக கொடுக்கப்படுக்கின்றன. அதை வைத்து எந்த பள்ளியிலும் சேரலாம் கல்வி நிர்வாகம் கடவுசீட்டை வங்கியில் கொடுத்து கல்வி கட்டணத்தை பெறலாம். இம்முறையில் கல்வி நிர்வாகமோ பெற்றோரோ யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை , கையூட்டு பிரச்சனையும் இருக்காது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் ஓரளவு வயிற்றுக்கு உணவு கிடைக்கிறது செவிக்கு உணவு கிடைப்பதில்லை என்ற நிலை மாற வேண்டும். கட்டாய கல்வி கட்டாந்தரை கல்வியாகக் கூடாது. பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். பள்ளி தேர்வுகளில் மாணவிகள் மாணவர்களைவிட பிரகாசிக்கிரார்கள், ஆனால் பல கிராமங்களில் மாணவி பூப்பெய்தினால் மஞ்சள் நீராட்டு, பள்ளிக்கு கால்பூட்டு எப்போது மாறும்?. கல்விப் புரட்சியில் இருந்து இடைநிலையில் நீங்குபவர்கள் எண்ணிக்கை எடுத்தால் சிறுமிகளே அதிகம். அதிலும் பழங்குடியினர் முஸ்லிம் பெண்கல்வி இன்னும் குறைவு.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பிரச்சனைகள் பல. “ பிச்சை புகினும் கற்றல் நன்றே” என்பதன்றி கற்பதை விட பிச்சை நன்றே என்றாகி விட்டது மாற்றுத்திறனாளிகளுக்கு விசேஷ பள்ளிகள் குறைவு, ,இருப்பவை அருகில் இல்லை. பார்வை, பேச்சு, கேட்புத்திறன் குறையுள்ள மாணவர்களையும் சாதாரண பள்ளிகளில் சேர்க்க வகை செய்ய வேண்டும்.. அமரிக்காவில் ‘டஸ்கீ’ என்ற பள்ளியில் வாரம் ஒரு நாள் சாதாரன மாணவர்களுக்கும் செயற்கை ஊனம் செய்து ஊனத்தின் வலியை உணரச்செய்வார்களாம். நலிவுற்றவர்களுக்கு உதவும் மனப்பக்குவம், மனித நேயம் வளர்க்க வித்தியாசமான அணுகுமுறை .
  இது தவிர கல்வி போதனையில் நீதி போதனை, உடற்கல்வி இல்லாத மனப்பாட தேர்வுக்கல்வி, ஏட்டு சுரக்காய் கரிக்குதவாது என்ற நிலை எப்போது மாறும்? தேர்வு ஒரு சடங்காகி விட்டதே, தேர்வில் அதிக மதிப்பெண் பெற உத்திரவாதம் தரும் பணம் பறிக்கும் கல்விக்கூடங்கள் புற்றீசல் போல் வளர்ந்துவிட்டதே இதற்கு ப்ளாட்டோ கூறியது போல் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!
     ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடன் கலந்துரையாடலில் பிரதமர், பி ஏ, எம் ஏ படித்த பட்டதாரிகளிடம் ஏதாவது வேலை செய்யக்கூடிய செயல் திறன் இல்லை என்ற முக்கிய கருத்தினை பகிர்ந்து கொண்டார்கள். புத்தகக் கல்வி மட்டும் போதாது புதியதை பயின்று சுய புத்தாக்கம் அவசியம் வாழ்க்கையில் முன்னேற என்பதை பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.
 கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் தரமான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இன்னும் அதிகம். வேலைக்கு உத்திரவாதம் தரும் என்று மாணவர்களை மயக்கி பாட திட்டத்தை சிறிது மாற்றி பட்டப்படிப்பு என்ற சம்பிரதாய கல்வியால் யாருக்கு லாபம்? கல்லூரிக்கு படிக்க வருகிறார்களா அடிக்க பழக வருகிரார்களா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் காம்பஸ் வையலன்ஸ் என்ற வன்முறை கலாச்சாரம் எப்போது ஒழியுமோ, கல்லூரி தேர்தல் அரசியல் தேர்தல் போல் நடக்கிறது. காலத்தின் அருமை தெரியாமல் இளமை பருவம் வீணாகிறது.
 ஆப்பிள் கணினி நிறுவுனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுவார் ஒரு திட்ட நிறைவேற்றலுக்கு எல்லாமூலதனைத்தவிட மிக முக்கியமான மூலதனம் நேரமும் காலமும். நேரத்தை எவ்வாறு பயனுள்ளவாறு செலவு செய்கிரோமோ அதில் தான் நமது வளர்ச்சி அமையும்.
நமது நாடு தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைந்து உலகில் வல்லரசாக வளர வேண்டும் என்றால் மனித வளமேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவது அவசியம். தரமான கல்வி அடிப்படை கல்வி அடித்தட்டு மக்கள் வரை பெற வேண்டும். உலகின் முப்பது சதவிகித் படிப்பறிவில்லாத மக்கள் இந்தியர்கள் என்பது பெருமைக்குரிய குறியீடல்ல. பதினைந்து சதவிகிதம் மாணவர்கள் தான் மேல் நிலை பள்ளி செல்கிறார்கள். அதில் ஏழு சதவிகிதம்  பட்டப்படிப்பு முடிக்கிறார்கள். உலக மேற்படிப்பு தர வரிசையில் நமது நாட்டு கல்விக்கூடங்கள் இடம் பெறவில்லை.
நமது இளைய தலைமுறைக்கு நாம் கொடுக்கவேண்டியது பொன் அல்ல மண் அல்ல கல்வி செல்வம் ஒன்று தான்.
 “ கல்லா வறியர்க்கு கைப்பொருள் கல்வியே!

இல்லை என்பது கல்வி இல்லாமையே உடையவர் என்பவர் கல்வி உடையவரே” என்ற பாரதிதாசன் பொன்மொழிக்கேற்ப  காலத்தை அருமை கருதி தரமான கல்வி விரைந்தளிக்க முனைந்து செயல்படுவோம்.  

Monday, August 4, 2014

நீர்மலமே பொதுநலம் - தினமணி கட்டுரை 4.08.2014


    வறுமையின் எதிர்மறை செல்வமா என்றால் செல்வமல்ல, நீதியும் நியமும் தான் வறுமையை வெல்ல வல்லது என்பது தான் உண்மை.     
       2011-ன்படி ஜனத்தொகை கணக்கெடுப்பில் ஒரு முக்கியமான புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.  67 சதவிகிதம் கிராம குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெட்ட வெளியில்தான் வெளிக்க வேண்டிய அவல நிலை நமது நாட்டில் தொடர்கிறது.  எந்த ஒரு பிரச்சனை எடுத்துக் கொண்டாலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
    நகரங்களில் சகட்டு மேனிக்கு மக்கள் இயற்கை அழைப்பிற்கு பொது இடங்களில் ஒதுங்கிவிடும் அருவருப்பான காட்சி சகஜமாகிவிட்டது.  “இங்கு மலம் கழிக்கக் கூடாது” என்று எச்சரிக்கையிட்ட இடங்களிலேயே கூச்சமின்றி இருந்துவிடுகிறார்கள். இதில் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லை.  பல லட்சம் பெறுமான காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு நடைபாதையில் அசுத்தம் செய்வது, குழந்தைகளை உட்கார வைக்கும் நாகரிக பெண்களையும் பார்க்கலாம்.
    2011 ஆண்டு ஜனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 16.78 கோடி குடியிருப்புகளில் 11.30 கோடி குடியிருப்புகளில் கழிப்பறை வசதியில்லை என்று தெரியவந்துள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தில் 91.67% கிராம குடியிருப்புகள், சட்டிஸ்கர் மாநிலத்தில் 85.15% கிராம குடியிருப்புகளில் கழிப்பறை வசதி இல்லாதது மட்டுமல்ல அந்த மாநிலங்களில் பொது கழிப்பறை வசதியும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
    திறந்த வெளி அசுத்தமாவதால் அந்தந்த சுற்றுப்புறம் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி மையம் அருகில் உள்ள பிரதான சாலை முத்துசாமி பாலம் அகலமான நடைபாதை உள்ளது.  ஆனால் அதில் நடக்க முடியாது.  பார்க்க சகிக்காத காட்சி.
ஊட்டச்சத்து குறைவால் இந்தியாவில் உள்ள 45 சதவித குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதற்கு முக்கிய காரணம் பொது சுகாதாரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறந்த வெளி கழிப்பிடங்கள்.
    இத்தகைய திறந்த வெளிதான் தெரிந்த வழி என்ற நிலை குடிசைவாழ் மக்களை மட்டுமல்ல எல்லோரையும் பாதிக்கிறது.  திறந்த வெளி அசுத்தங்களிலிருந்து பரவும் கிருமிகள் சொகுசான ‘அமுல்பேபி’ மாடி வீட்டுக் குழந்தைகளையும் தாக்கும்.  தாயின் கருவில் இருக்கும் வரை குழந்தையை நன்கு வளரச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியோடு இயற்கை நமக்கு அளிக்கிறது.  நலம் தரும் பாக்டீரியாக்கள் நமது உடலில் ஜீரணத்திற்கும் ஊட்டச்சத்தை உணவிலிருந்து உடல் வளர்ச்சிக்கு கிரகிப்பதற்கும் அசுத்தங்களை வெளியேற்ற பயன்படுகிறது.  இயற்கையாக நன்மை பயக்கும் நுண்மங்கள்  நல்ல மண்ணிலும் காய்கறிகளிலும் தானியங்களிலும் உள்ளன.  சுத்தமான ஆற்று மண்படுகையில் குழந்தைகள் மண்ணில் விளையாட வைத்தனர் நமது முன்னோர்கள்.  சுத்தமான சுவாசம், ரம்யமான பொழுதுபோக்கு, நன்மை பயக்கும் நுண்மங்களின் சகவாசம் கிடைத்தது.  கண்ணன் மண்ணில் விளையாடி அதையே வாயில அள்ளிப்போட்டு யசோதையின் கோபத்திற்கு ஆளான கதை எவ்வளவு தரம் கேட்டாலும் நடன நிகழ்ச்சியாக பார்த்தாலும் அலுக்காது.  அதன் உட்கருத்து கண்ணன் தன் பிஞ்சுவிரல்களால் அளாவி வாயில் திணித்த மண்ணில் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அடங்கும் என்பதுதான்.  அத்தகைய நன்மை பயக்கும் சூழல் இப்போது இல்லை.  இருப்பதையும் கெடுப்பது திறந்த வெளி அசுத்தம்.
   
    நமது நாட்டில் விளையும் தானியங்கள் பழவகைகள் காய்கறிகள் அதை வைத்துதான் உணவுப்பழக்கம், உணவு வகைகள் காலங்காலமாக செப்பனிடப்பட்டு உருவாகியுள்ளது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு அதிக ஈரப்பதம் கலந்த உணவு உட்கொள்கிறோம்.  ஆனால் மேலை நாடுகளில் உலர்ந்த உணவு வகைகள். நமது உணவு வகையில் நன்மை பயக்கும் நுண்மங்கள் உள்ளன,  எல்லா ருசியும் கலந்திருப்பதால் ஜீரணிக்க உதவும் பாக்டீரியாக்கள் உணவுக் குழாயிலும் குடல் பகுதிகளிலும் குடி கொண்டு செரிமானத்திற்கு உதவுகின்றன.  அத்தகைய உணவு வகைகளை மறந்து வெளிநாட்டு உணவு வகைகளின் மோகத்தால் தேவையான ஊட்டச்சத்து வசதியான குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.
    விவசாயத்திலும் அதிகமான ரசாயன உரங்கள் மண்ணின் இயற்கையான வளத்தை பாதிக்கின்றன.  போதாதற்கு பூச்சி மருந்து வேறு தெளிக்கப்படுகிறது.  பூச்சி கொல்லி எவ்வாறு மருந்தாகும்!  மனிதன் உட்கொள்ள முடியுமா? இது சர்வ சாதாரணமாக பயிர்களுக்குத் தெளிக்கப்படுகிறது.  அதைத்தான் உட்கொள்கிறோம், இதனால் மேலும் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.
    இயற்கை விவசாயி நம்மாழ்வார் எவ்வாறு ஒவ்வொரு உயிரினமும் இயற்கை பாதுகாப்பிற்கு அவசியம் என்பதை அழகாகக் கூறுவார்.  ஒரு தும்பியை எடுத்துக்கொண்டால் அது கொசு முட்டையை தின்று கொசுப் பரவாமல் தடுக்கும். ஆனால் பூச்சிக் கொல்லியால் தும்பிகள் அழிந்து விட்டன.  கொசு பரவலாக பெருகி அதை அழிக்க மேலும் ரசாயனத்தை உபயோகிக்கிறோம்.  இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.
1999 –ல் மத்திய அரசு நிர்மல் பாரத் அபியான் என்ற சுகாதார திட்டத்தை அறிமுகம் படுத்தியது.  முழுமையான கழிவு நீக்க ஏற்பாடு என்ற திட்டம் இதற்கு முன்னோடியாக இருந்தது.  அத்திட்டத்தின்படி 2017 ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறிக்கோளாக வைக்கப்பட்டது.  அந்தந்த பகுதி மக்களே முன்வந்து சுகாதார முறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறையை ஆராய்ந்து சுகாதாரத்திற்கு ஏதுவாக மாற்றம் கொண்டுவருவது, கலாச்சார நிலைகளை மனதில் கொண்டு நல்வாழ்விற்கு வழிவகுப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
    மராட்டிய மாநிலத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டு 2000 கிராம பஞ்சாயத்துகளில் திறந்த வெளி கழித்தல் பிரச்சனை ஒழிக்கப்பட்டு விட்டது வரவேற்கத்தக்கது.  இந்த திட்டத்தை நன்கு நிறைவேற்றும் கிராம பஞ்சாயித்துகளுக்கு பரிசு கொடுக்கப்படுகிறது.  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்துப்பட்ட மக்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்களது குடியிருப்புகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க இத்திட்டம் வழிவகுக்கிறது.  இது மட்டுமல்லாது கிராம துவக்கப் பள்ளிகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள், மக்கள் கூடும் இடங்களில் கழிப்பறை வசதி நிர்மாணிப்பது இத்திட்டத்தில் அடங்கும்.
    இந்த சமுதாய சுகாதாரப் பிரச்சனைக்கு மனித உரிமை சம்மந்தப்பட்ட பரிமாணமும் உண்டு.  மனித மலத்தை தலைச் சுமையாக அகற்றும் பரிதாபம் நமது நாட்டில் தான் இன்னும் நீடிக்கிறது.   இந்தியாவில் உள்ள பல கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உலர்ந்த கழிப்பறைகளில் உள்ள மலங்கள் மனிதர்களால் அகற்றப்படுவது வேதனை அளிக்கும் விஷயம் மட்டும் அல்ல மனித உரிமை மீறலும் ஆகும். 1993-ம் வருடம் கைகளால் அசுத்தங்கள் அகற்றும் முறை ஒழிப்புச் சட்டம் மத்திய அரசால் இயற்றுப்பட்டு ஆறு மாநிலங்கள் ஆந்திரா, கோவா, கர்நாடகாக, மஹராஷ்ட்ரா, திரிபுரா, மேற்கு வங்காளம், மற்றும் யூனியன் பிரதேங்களிலும் அமலாக்கத்தில் உள்ளது.  இவ்வாறு மனிதர்களை மலங்களை அகற்றுவதற்கு உட்படுத்தினால் தண்டனை ஒரு வருடம் அபராதம் ரூபாய் 2000/- என்று விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் சட்டத்தில் இந்த இழிவு முறையை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நகரங்களில் சாக்கடையில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்ற இப்போது இயந்திரங்கள் உபயோகத்தில் உள்ளன, முன்பு பணியாளர் குழியில் உள்ளே சென்று அடைப்புகளை கையால் அகற்றுவார்.  உடம்பில் கிருமிகள் தாக்காமல் இருக்க உப்புப் பசையை உடம்பில் தெளித்து இறங்குவார்.  கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் சாக்கடை கழிவு நீக்கும் பணியாளர்களை இணைத்து வயிற்றில் உப்புப் பூசிக் கொள்ளும் காட்சி வரும்.  நோய் தாக்கமல் இருக்க உப்புப் பசைதான் முதல் பாதுகாப்பு.
    1214 ம் வருடத்திலிருந்து ஐரோப்பா நாடுகளில் உலர்ந்த கழிப்பறையிலிருந்து மனிதர்களால் மலங்களை நீக்கும் முறை இருந்துள்ளது.  1596ம் வருடம் ஜான் ஹாரிங்டன் தண்ணீர் மூலம் அசுத்தங்களை வெளியேற்றும் வழியை கண்டு பிடித்தார். இந்தியாவில் சமூகத்தில் ஒரு பகுதியினர் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் மலம் நீக்கும் முறைக்கு எதிராக முயற்சிகள் எடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் தானே முன்நின்று எல்லா கழிப்பறைகளையும் சுத்தம் செய்து,  அவரவர் சுத்தம் செய்ய கட்டுப்பாடு விதித்தார்.
    நிர்மல் பாரத் அபியான் திட்டத்திற்கு  12-ம் ஐந்தாண்டு திட்டடத்தில் ரூபாய் 37,159 கோடி ஒதுக்கப்பட்டு கழிப்பறை கட்டும் திட்டம் நிறவேற்றப்படவுள்ளது. சமுதாய பங்களிப்பும் ஒத்துழைப்பும் இத்திட்டம் வெற்றியடைய மிக அவசியம்.  அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
    “சுலப் சௌசாலயா” என்று 1970-ல் டாக்டர் பிந்தேஷ்வர் பாடக் என்பவர் பொது இடங்களில் மக்கள் சுலபமாக உபயோகிக்க கழிப்பிடங்கள் நிறுவினார்.  இதன் முக்கிய அம்சம் விஞ்ஞான முறையில் கழிவுப் பொருட்களை அகற்றும் தொழில் நுட்பம்.  குறைந்த கட்டணம், சுகாதார பராமரிப்பு பலருக்கு வேலைவாய்ப்பு என்பதால் பல நகரங்களில் இச்சேவை மக்களால் வரவேற்கப்படுகிறது.  ஐக்கிய நாடுகளின் பொது மக்கள் குடியிருப்பு மையம், ‘சுலப்’ சேவையை வெகுவாக பாராட்டியுள்ளது.  இச்சேவையின் மூலம் நமது நாட்டில் 240 நகரங்களில் கழிவுப் பொருட்கள் அகற்றும் முறை சுலபமாகிவிட்டது. 
மனிதவளம் மேம்பாட்டிற்கு சுற்றுப்புற சுகாதாரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மனிதவள மேம்பாடு குறியீட்டில்  உலக நாடுகளில் நமது நாடு 134-ம் நிலையில் உள்ளோம் என்பது நம்மை இடிக்க வேண்டும்.
    பொது இடங்களில் அசுத்தம் செய்யும் போக்கு தமிழ் நாட்டில் அதிகம் உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அண்டை மாநிலமான கோரளாவில் இந்த அளவில் சாலைகளை மக்கள் அசுத்தம் செய்வதில்லை. கண்ட இடத்தில் குப்பை போடுவதில்லை.   முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பொது இடங்களை அசுத்தம் செய்தால் சிறு குற்றமாக கருதி போலீஸ் வழக்குப் போடுவார்கள், பயம் இருந்தது. இப்போது காவல்துறையினருக்கு வாகனத் தணிக்கைக்கே நேரம் போதவில்லை!
சைனாவை பல முன்னேற்ற நடவடிக்கைக்கு உதாரணமாக ஒப்பிட்டு கூறப்படுகிறது.  சைனாவில் பொதுக் கழிப்பிடங்களை உபயோகிக்க இலவசம், பொது இடங்களை அசுத்தம் செய்தால் அபராதம்.  ஆனால் நம் நாட்டில் பொதுக் கழிப்பிடங்களுக்கு கட்டணம் பொது இடங்கள் இலவசம். இந்த நிலை மாறவேண்டும்.

சுகாதாரமான ‘நிர்மலமா’ அல்லது பொறுப்பற்ற நடவடிக்கையால் சுற்றுப்புற ‘நிர்மூலமா’ என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும்.