Thursday, May 19, 2011

வாழ்வின் சாரம் மின்சாரம்


நீரின்றி அமையாது உலகம் என்பது சத்திய வாக்கு. மின்சாரம் இன்றி உழலாது வாழ்க்கை என்ற அளவில் நவயுகத்தில் மின்சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. உணவு, உடை, வீடு எவ்வாறு அத்தியாவசியமோ அதேபோன்று மின்சாரம், குடி நீர், சாலை முக்கியமாக கருதப்படுகிறது. ‘ரோட்டி, கப்டா, மக்கான்‘ என்பதோடு ‘பிஜ்லி, சடக், பானி‘ (மின்சாரம், பாதை, தண்ணீர்) என்று வட இந்தியாவில் அரசு இதை உறுதிசெய்ய வேண்டுமாறு மக்கள் கோஷமிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. மின்சாரமின்மையால் விவசாயம், தொழில், ஏன் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில் மின் விளக்கு எரியவில்லை என்றால் மாணவர்கள் எங்கு சென்று படிப்பார்கள்? இளைய தலைமுறைதான் நாட்டின் எதிர்காலம் அவர்கள் அவதிப்பட்டால் பாதிப்பு சமுதாயத்திற்குத்தான்.

தீர்கதரிசியான பிரதம மந்திரி பண்டிட் நேரு சுதந்திர இந்தியாவில் மின் சக்தியை பெருகுவதற்காக பெரிய அணைகள் கட்டி அதன்மூலம் மின் உற்பத்தி செய்து பல்வகை பயனளிப்பு அளிக்ககூடிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இந்த அடிப்படை கட்டமைப்புகள்தான் நாட்டின் அஸ்திவாரம். மின்சார உற்பத்தி பல வகைப்பட்டது. நீர் நிலைகள், காற்றலை, சூரியவெப்பம், அனல் மின், அணுமின் என்ற ஆதாரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தியில் அரசுதான் பிரதான பங்கு வகிக்கிறது. பல தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிப்பதற்க்கு ஊக்குவிக்கப்படுகிறன. இதற்காக அரசுடன் ஒப்பந்த பத்திரங்கள் பல மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ஆயினும் மின் பற்றாக்குறை தொடர் கதையாகவே உள்ளது. காரணங்கள் பல உள்ளன. தேவைகளை சரியாக கணக்கிடாதல், பயன்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாதல், தடம்மாறி மின்வாரத்தை எடுத்துச் செல்லும்பொழுது ஏற்படக்கூடிய மின் நஷ்டத்தை தடுக்க/குறைக்க, நடவடிக்கை எடுக்க தவறுதல், போன்ற முக்கிய காரணங்கள் மேலும் மின்சாரம் விரயமாக்குவதை தவிர்த்தல், இதற்கு மேலாக மின் உற்பத்தி பெருக்கத்தை திட்டமிடுதல், திட்டமிடப்பட்ட மின்சார உற்பத்தி மையங்களின் கட்டுமானப்பணிகளைத் துரிதப்படுத்துதல் போன்ற பல்முனை சீரான நடவடிக்கைகள் முனைப்பாக எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பிடப்பட்ட வருடாந்திர மின்சாரத் தேவை 59,916 மில்லியன் யூனிட்டுகள். நமது உற்பத்தி 29,370 மில்லியன் யூனிட்டுகள்தான், 30,546 மில்லியன் யூனிட்டுகள் அண்டை மாநிலங்களிலிருந்தும் மற்றவகையிலும் வாங்கப்படுகிறது. மின்சார வாரியத்தின் 2010-11 பட்ஜெட் ரூபாய் 38,665 கோடி அதில் செலவு ரூபாய் 30,833 கோடி, வருவாய் ரூபாய் 21,307 கோடி மின்சார வாரியத்தின் பட்ஜெட் எப்போதும் பற்றாக்குறையாகத்தான் வைக்கப்படும் பட்ஜெட். 2010-11 ல் பட்ஜெட் பற்று ரூபாய் 3,701 கோடி.

மின்சாரத் தேவைக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள இடைவெளி அதிரித்தும் கொண்டே இருப்பது தெளிவு. அதிகமாக விலை கொடுத்து வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதால் நிதி நிலையிலும் இந்த பற்றாக்குறை பிரதிபலிக்கிறது.

தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித்திறன் 10,214 மெகா வாட். இதில் 2,970 மொகவாட் அனல் மின் (தெர்மல்), 2,187 மெகாவாட் நீர்நிலைகளிலிருந்தும் (Hydro), காற்றலை 17 மெகாவாட்(Wind), இதரவகை வாயுகள் மூலம் 515 மெகாவாட்(Gas), தனியார் உற்பத்தி 1,180 மெகாவாட். இதில் சராசரி பயனளிப்பிற்கு எடுக்கப்படுவது சுமார் 8,500 மெகாவாட். மின் உற்பத்தி செய்யும் மையங்கள் தனது தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை பயனளிப்பிற்கு கொண்டுவரப்படுகிறது (Captive power) .

மின்சாரம் உற்பத்தி மையத்திலிருந்து பல இடங்களுக்கு விநியோகிக்கும் பொழுது மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் லாஸ்ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்த வேண்டும். சராசரி பதினெட்டு சதவிகிதம் தான் ஏற்படுகிறது என்று பதிவு செய்தாலும் மின் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. பல பொது நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதியின்றி மின் இணைப்பு தற்காலிகமாக இழுப்பதும் இதில் அடங்கும். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள ட்ரான்ஸ்ப்பார்மர்கள், மற்றும் நூதன இணைப்பு, விநியோக உபகரணங்கள் மிக உன்னிப்பாக பராமரிப்பு செய்து உரிய நேரத்தில் பழுடைத்த பொருட்களை மாற்றப்படுவதை உறுதி செய்தால் மின் இழப்பை கணிசமாக குறைக்கலாம். இதை மேற்பார்வையிடுவதில் சுணக்கம் இருப்பது பொதுவான குற்றச்சாட்டு. இதை மேலிடம் உரிய நேரத்தில் தலையிட்டு சீர் செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு வீட்டு உபயோகத்திற்காக கொடுக்கப்படும் குறைந்த அழுத்த மின்சாரம் 12,575 மில்லியன் யூனிட். இது மொத்த தேவையில் 23.8 சதவிகிதம். தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் உயர் அழுத்த மின்சாரம் 15,434 மில்லியன் யூனிட். மொத்த தேவையில் இதன் நிலை 29.21 சதவிகிதம். இவை இரண்டும் சீராக வழங்கப்பட எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் மாநிலங்களில் தழிகமும் ஒன்று. 12,420 மில்லியன் யூனிட் மின்சாரம், அதாவதுமொத்த தேவையில் 21.5 சதவிகிதம் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக உபயோகிக்கப்படுகிறது. இலவச மின்சாரம் வரையறுக்கப்பட்ட நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குறை இருக்கிறது. எப்போது பாசனத்திற்கு தண்ணீர் இரைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் ‘லோட் ஷெட்டிங்‘ என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் பல இடங்களில் டீசல் மோட்டார் மூலம்தான் தண்ணீர் எடுக்க முடியும். ஏழை விவசாயகளுக்கு இதுவும் முடியாது. வானம் பார்த்த பூமி என்று நிலத்தை விடவேண்டிய நிலை. குறைந்த அளவில் கட்டணம் வசூலித்தாவது உறுதியாக மின்சாரம் வழங்குவது சாலச்சிறந்தது.

சிறு குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள் ஆனால் பெரிய வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். கீழ்நிலை அரசு ஊழியர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கோடி கோடியாக அள்ளுபவர்கள் சுதந்திரமாக பவனி வருகின்றனர். இந்த நிலை மின்சாரக் கட்டணம் வசூலிப்பதிலும் நிரூபணமாகிறது. சிறு உபயோகிப்பாளர்கள் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் பல தொழிற்சாலைகள் மற்றும் அதிக உபயோகிப்பாளர்களிடமிருந்து பெறப்படவேண்டிய கட்டணம் நிலுவைத் தொகை சுமார் ஆயிரம் கோடிக்கு குறையாமல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவும் மின்சாரம் விரையமாகுவதற்க்கு காரணம். புதிய சட்டங்கள், நிலையாணைகள், விதிகள் வரையப்படுகின்றன. ஆனால் அவை செயல்படுத்துதில்தான் பிரச்சனை. வசதிக்கு ஏற்றவாறு அமல்படுத்துதல், வேண்டப்பட்டவர் என்றால் நடவடிக்கை தவிர்த்தல் என்ற அணுகுமுறை எந்த நிர்வாகத்தையும் பாதிக்கும் என்பதை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் உணரவேண்டும். அவர்களது தலையாய கடமை சட்டதிட்டங்களை பாரபட்சமின்றி ஒரு சீராக அமல் படுத்துவதுதான்.

மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருப்பதும் ஒருவகை மின்சாரத்திருட்டு என்று கொள்ள வேண்டும். இது தவிர வாரியத்திற்கு விண்ணப்பிக்காமல் சுயமாக இணைப்பு எடுத்து மின்சாரத்தை திருடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது, இதுவும் நிர்வாகத்தின் சீர்கேட்டின் அறிகுறி. 2006-07 ம் அண்டில் 2,910 வழக்குகள் பதிவாயின, 2008 ம் வருடம் 3,746 வழக்குகள், 2009 ஆம் அண்டு 4,425 வழக்குகள், 2010-ல் 6,236 வழக்குகள் என்று ஒரு புறம் அமலாக்கம் முடுக்கப்பட்டாலும், மின்சாரத் திருட்டு தொடர் கதையாகவே உள்ளது. கடந்த வருடம் மட்டும் மின்சாரத்திருட்டினால் ஏற்பட்ட இழப்பு சுமார் ரூபாய். 5,000 கோடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எல்லா கிராமப்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கும் மின் வசதி அளிக்க வோண்டும் என்று திட்டமிடப்படுகிறது. இவ்வாறு பல கோடி ரூபாய் செலவில் கொடுக்கப்படும் மின் இணைப்பினை எவ்வளவு பொறுப்புடன் உபயோகிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். பல இடங்களில் சர்வசாதாரணமாக கொக்கிப் போட்டு மின் திருட்டு நடைபெறுகிறது. களத்தில் உள்ள பணியாளார்கள் அதனை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்பார்வையிடும் அதிகாரிகள் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்‘ என்றில்லாமல் களத்தில் நேரடியாக பார்வையிட்டால் அத்தகைய முறைகேடுகள் நடவாமல் கடும் நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.

மின் உற்பத்தி பெருக்குவதற்க்கு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தல் அத்தியாவசியம். நீர் முலம் மின்சாரம் உற்பத்தி தான் குறைவான முதலீட்டில் குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியும். நான்கு அனல் மின் நிலையங்கள், எண்ணூர், அத்திப்பட்டு, மேட்டூர், தூத்துக்குடி அகிய இடங்களில் உள்ளன. மேலும் மூன்று அனல் மின்நிலையங்கள் மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வர இருக்கின்றன இதன் மூலம் 1,800 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். அனல் மின்நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு வருடங்களாகும். அண்டை மாநிலம் ஆந்திராவில் அதிக அளவில் அனல் மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. இத்தகைய போர்கால நடவடிக்கை நமது மாநிலத்திலும் தேவை. விசைமூலம் பாய்ச்சப்படும் நிரின் முலமே மேலும் சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனை மாதிரியாக திரு.நீதிச்சாமி என்ற இளைஞர் தயாரித்துள்ளார். இது பரீட்சார்த்த நிலையில் உள்ளது. இத்தகைய யுக்திகள் மற்றும் சூரிய சக்தி முலம் மின்சாரம் தயாரிப்பு, கழிவு பொருட்கள் முலம், சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் தாதுக்கள் வைத்து மின்சாரம் தயாரித்தல், காற்று, பல்வகை வாயுகளின் ஆதாரம் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்படவேண்டும்.

உடனடியாக மின்வெட்டினை சமாளிக்க மின்சார உற்பத்தி மையங்களின் மேலாண்மையை மேம்படுத்தி முழுமையான பயன்பாட்டினைப் பெற வழிவகை செய்ய வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் கரும்புச்சக்கை, மற்றும் சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் உபரிப் பொருட்களை வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் வரையப்பட்டன, ஆனால் செயல்படுத்தவில்லை, இதன் முலம் குறைந்த காலத்தில் மின் உற்பத்தி செய்யலாம்.

மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வளர்ந்து கொண்டிருக்கும் மூன்று அனல் மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்தி இந்த வருட இறுதி அல்லது 2012 ஆரம்பத்தில் பயனளிப்பிற்கு கொண்டு வரவேண்டும். மின்சார வாரியத்தின் நிர்வாகத்தை சீர்செய்து பொருளாதார நஷ்டத்தை குறைக்க வேண்டும். ஊழலுக்கு இடம் கொடாமல் குறைந்த விலையில் வெளிமாநிலங்கலிருந்து மின்சாரம் வாங்கும் வெளிப்படையான நிர்வாகமுறை கொண்டு வரவேண்டும். நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நேரடியாக மின் வாரியம் இடைத்தரகர்களைத் தவிர்த்து கொள்முதல் செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் நிர்வாகத்தில் திறமைசாலிகளான திரு. விஜயராகவன் போன்றவர்கள் மின் வாரியத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் திறம்பட சுயமாக, அரசு மற்றும் மக்கள் நலனுக்காக செயல்பட்டனர். ஆனால் இன்றைய நிலை வேறு ஆமாம் சாமி போடும் நிர்வாகிகள் மற்ற ‘விதத்தில் சௌகரியமாக‘ இருக்கலாம். ஆனால் சீர்மையான நிர்வாகத்திற்கு உகந்தது அல்ல. மிகச்சிறந்த திறமையான பொறியாளார்களையும், அனுபவமிக்க களப்பணியாளர்களையும் கொண்ட சிறப்புவாய்ந்த நிறவனம் தமிழக மின்வாரியம். அவர்களை ஊக்கப்படுத்தி, மின் வெட்டு வாரியம் என்ற அவப் பெயரை போக்கி மக்கள் நல மின் வாரியம் என்ற உந்நத நிலை அடைய வேண்டும். அரசின் நேர்மையான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயமாக முடியும்.

This article is publised in Kumudham Reporter (22.05.2011)

தருமம் வெல்லும்; வெல்ல வேண்டும்!


மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும், வைகையின் வளமும் சங்க இலக்கியமும்தான் ஞாபகம் வரும் வர வேண்டும். ஆனால் இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையினால் மதுரை என்றாலே ஒரு பயம் மக்களைக்கவ்வுகிறது. அந்த நிலை வருந்ததக்கது. இதற்கு காரணம் பல பயங்கர நிகழ்வுகள், கொள்ளை, தீவைப்பு, ரௌடிகளின் அட்டகாசம் என்று சமூக அமைதியை விரும்பும் நடுநிலையாளர்கள் மனம் வெதும்புகின்றனர். ஒரு உயர் காவல்துறை அதிகாரியும் ரௌடிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முயற்ச்சிக்கவில்லை, ஏன் எச்சரிக்கை கூட விடவில்லை என்று அங்கலாய்க்கின்றனர்.

காவல் துறையின் அடிப்படை பொறுப்பு சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்கள் நடவாமல் தவிர்த்தல், நடந்த குற்றங்களை துரிதமாக கண்டுபிடித்தல் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. காவல் பணி சமுதாயத்தை கட்டுக்கோப்பாக காக்கும் பணி. சுதாரிப்பும், கவனமும் தொடர்ந்து இருப்பது அத்தியாவசியம். இது ஏதோ மற்ற அரசு அலுவலகங்கள் போல் கோப்புக்கள் மூலம் அன்றாடம் வரையறுக்கப்பட்டுள்ள நேரப்பணி அல்ல. மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய முக்கிய பணி. அதை சரிவர களப்பணியாளர்களுக்கு உணர்த்தி அவர்களை உற்சாகப்படுத்தி பணித்திறனை மேப்படுத்த வேண்டிய பொறுப்பு மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகளுடையது.

ஒரு ஏட்டின் தொப்பியும், லத்தியும் மாட்டு வண்டியில் வந்தாலே கிராமத்தில் தானாக அமைதி வந்துவிடும் என்று அந்த காலத்து போலீசைப்பற்றி தெற்கு மாவட்டங்களில் பெருமையாக சொல்வார்கள். அன்றைய போலீஸின் கஞ்சி போட்ட அரை நிஜாரும், பூட் பட்டியும் அதில் சொருகிய பென்ஸிலும், கையில் சிறு நோட் புக்கும், உயர்ந்த சிவப்புத் தொப்பியும் பார்த்தால், மக்களுக்கு ஒரு வித பயம் கலந்த மரியாதையை தானாக வரவழைத்தது. ஆனால் இப்போதோ எந்த ஒரு சிறு பிரச்சனை என்றாலும் உயர் அதிகாரிகள் புடை சூழ நிலமையை சமாளிக்க வேண்டிய நிலை. அப்படி வந்தாலும் பிரச்சனைகள் முழுமையாக தீர்வதில்லை. ஏதோ அப்போது எரியும் தீயை அனணத்து விட்டு செல்கின்றனர். பிரச்சனை உருவாக்கதின் காரணம் ஆராயப்படுவதில்லை களைய முயற்சிப்பதில்லை.

இன்றைய உலகம் தகவல் வேட்கையில் திளையும் உலகம். வெகு விரைவாக ஊடகங்கள், இனணயதளம் மூலம் தகவல்களும் கருத்துக்களும் பரவுகின்றன. இந்த நவயுகத்தில் காவல்துறையின் செயல்பாடு ஹைதரலி காலத்தில் இருந்தால் மக்களின் கதி அதோ கதிதான். ஏதோ சில நவீன கருவிகள் வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது காவல்தறையின் அணுகுமுறையும், சிந்தனையும் மாறவேண்டும். காவல் உதவி மையங்கள் ‘சமுக சேவை மையம்‘ என்றிருந்த பெயரை மாற்றி காவல் நேய சேவை மையம் என்று வைக்கப்பட்டது. மனித நேயமே இல்லா காவல் நேயத்தால் யாருக்கு பயன்?மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வை‘ என்ற பாரதியாரின் வரிகளை எண்ணிப்பார்க்க வேண்டும். மக்கள் நோகும் படியான பார்வைதானே காவல்துறைக்கு என்று காவல் நிலையதிற்கே வர அஞ்சுகின்றனர். ஏதாவது புகார் கொடுக்க வேண்டுமென்றாலும் காவல் நிலையித்திற்குப் போய் பழக்கமில்லை என்று சிபாரிசைத் தேடி அலையும் நிலை.

வெளிப்படையான நிர்வாகத்தை சர்வதேச அளவில் அளவிடும் ‘ட்ரான்பரன்ஸி இன்டர்நேஷனல்‘ என்ற அமைப்பு ஊழலில் திளைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற கணிப்பு, இப்போது பேசப்படும் ஊழல் செய்திகளைப்பார்க்கையில், ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அரசு துறைகளில் மக்களோடு நேரடியாக அதிகம் தொடர்புடைய துறைகள் சுகாதாரத்துறை, மக்கள் நலத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை. இருபது சதவிகிதம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்பு கொள்கின்றனர். இருபத்தைந்து சதவிகிதம் கல்வித்துறை, காவல்துறையோடு நான்கு சதவிகிதம் தான் மக்கள் தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசுத் துறைகளில் ஊழல் மலிந்த துறை காவல்துறை என்பது மக்களின் கருத்து என்று வெளிப்படையான நிர்வாகத்தின் ஆய்வில் வெளிவந்துள்ளது. ஊழல் மற்றத்துறைகளில் அதிகமாக இருந்தாலும் காவல்துறை ஊழல்தான் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது. இது காவல்துறை ஆளுமையை சிந்திக்க வைக்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் உத்திர பிரதேசத்தில் அப்போதிருந்த காவல்துறை தலைவர் திரு.சாக்ஸனா அவர்களால் வழக்குகளை உடனே தவறாமல் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முந்தைய வருடங்களை விட பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பன்மடங்காக பெருகின. மக்கள் வரவேற்பைப் பெற்றது, ஆனால் நாளடைவில் ‘பழைய குருடி கதவதிறடி‘ என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஜல்பாய் குடி என்ற மாவட்டத்தில் இளம் துடிப்புடைய காவல் கண்காணிப்பாளர் மக்கள் புகார்களை உடனே பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளும் முறையை துறை எதிர்ப்புகளுக்கிடையில் நடைமுறைப் படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். ஏனைய காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நல் நடைமுறை என்ற பாராட்டையும் பெற்றுள்ளது.

மக்கள் விரும்புவது அவர்களது குறைகளை கேட்டு உரிய விசாரணை மேற் கொள்வது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது. இதை செய்ய தவறும் பொழுதுதான் அதிருப்தி ஏற்படுகிறது. பொது மக்கள் காவல் நிலையம் வருவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்? சில காவல் நிலைய அலுவளர்களின் அலட்சியப் போக்கு, மனுக்களை பதிவு செய்ய மறுப்பது, பாதிக்கப்பட்டோர் கூறுவதை சந்தேகிக்கும் வகையில் வேண்டாத குறுக்குக் கேள்விகள் கேட்பது, உடனடியாக விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வர அஞ்சுகின்றனர். சாதாரணமாகவே அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையை நாடிச் சென்றாலும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை. ஒரு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் காவல் நிலையத்தில் மேலும் கடுமையான அணுகுமுறை இருக்கும் என்று மக்களே தீர்மானித்து விடுவது வருத்தம் தரும் உண்மை. ஆதலால் காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயரளவில் மட்டுமில்லாது முழுஈடுபாடுடன் செயலில் காண்பிக்க வேண்டும்.

காவல் நிலைய அதிகாரிக்கு இரண்டு முகம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை மனிதாபிமானத்தோடு நடத்தி துரிதமான நேர்மையான நடவடிக்கை வேண்டும். இது கனிவான முகம். குற்றம் புரிந்தவர் சட்டத்தை மீறுபவர்கள் போன்ற சமுதாய விரோதிகளுக்கு கடுமையான முகம் காண்பிக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு உடனடியாக குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குற்றத்தடுப்பு என்பது ஏதோ காவலர்களை ரோந்து அனுப்புவதோடு நின்று விடுவதில்லை சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிப்பது, சந்தேக நபர்களை விசாரிப்பது, குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை சேகரிப்பது, வேறு நகரங்களின் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் தாக்கத்தை கணித்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது என்ற பல ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அடங்கிய மிகக் கடினமான பொறுப்பை காவல்நிலைய அதிகாரி நிர்வகிக்க வேண்டும். இதில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அந்தரத்தில் சட்டம் அமலாக்கப்படுவதில்லை. மக்கள் நலம் தான் பிரதானம். உதாரணமாக வாகன சோதனை என்று வாகன ஒட்டிகளையும், சாமானிய சிறு வியாபாரிகளையும் வேதனைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகன விபத்துக்களை தடுப்பதற்குதான் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். நம்பர் ப்ளேட் இல்லாமல் வளைய வரும் வாகனங்கள், காதைப்பிளக்கும் விரச பாடல் ஒலிக்க அதிவேகமாக கார் ஒட்டும் புதுப் பணக்காரர்கள், ஷோலவரம் பந்தயத்திற்கு ஒட்டுவது போல் மோட்டார் சைக்கிளை ஒட்டும் ரோமியோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பின் அடிப்படை திட்டமிட்ட செயலாக்கம், மேலோட்டமாக நுனிப்புல் மேயும் மேலதிகாரிகள் ஏட்டளவில் திட்டமிடுதலிலும், வீண் கூட்டங்களிலும் நேரத்தை விரயமாக்குவர். செயலாக்க வீரர்கள் திட்டங்களை நிறைறேற்றுவதற்கு எவ்வாறு களப்பணியாளர்களை ஊக்குவித்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து முழுமையான பயன் பாட்டை பெறுவதில் கவனம் செலுத்துவார்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டார்கள். அவர்களது குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உற்பத்தி செய்ய முடியாதது நிலம் ஒன்றுதான். காணி நிலமானாலும் ப்ளாட் போட்டு விற்கும் இடைத்தரகர்கள் எங்குபார்த்தாலும் முளைத்துள்ளனர், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை. அது பறிக்கப்படும் நிலை இந்த நிலதாதாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரிப்பது, வயதானவர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடங்களை பயமுறுத்தி வாங்குவது, வெளி நாடுகளில் தற்காலிகமாக வசிப்பவரின் சொத்துக்களை பறிப்பது. இப்போது அதிகமாகியுள்ளது. இது மக்களிடத்தில் பயத்தை விளைவித்துள்ளது என்றால் மிகையில்லை. வாடகைக்கு இடம் பிடித்து அதையே அபகரிக்கும் கயவர்கள் அதிகமாகியுள்ளனர். நில தாதாக்களால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன என்பதை மறுக்க முடியாது. இதை முறியடிக்க வேண்டிய உடனடி பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது. நிலம் சம்பந்தப்பட்டது ஏதோ சிவில் வழக்கு என்று விட்டு விட முடியாது.

‘சாமானியர்கள் சகாப்தம் இது‘ என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் சாமானியர்கள் பெயரைச்சொல்லி கோடிகள் அள்ளும் நிலை வந்துவிட்டது. இந்த சூழலில் சமுதாய மதிப்பீடுகளும் மங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம் காவல்துறையிலும் பிரதிபலிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்தும் காவல்துறை கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் அப்பழுக்கற்றவையாக இருக்க வேண்டும். அதற்கு முன்நோடியாக உயர் அதிகாரிகளின் நடவடிக்கை இருக்க வேண்டும். நேர்மை, சிந்தனை வாக்கு செயலில் பிரதிபலிக்க வேண்டும்.

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தாம் முன்நின்று களப்பணியாளர்களை வழி நடத்தி செல்ல வேண்டும். பாரம்பரியம் மிக்க தழிழக காவல்துறை பல சவால்களை வெற்றிகரமாக சந்தித்துள்ளது. துறையின் வலிமை வல்லவர்கள் விட்டுச்சென்ற நல் செயல் முறைகள். எதையும் சாதிக்கவல்ல அறிவும், ஒழுக்கமும் படைத்த ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும், காவலர்களும் உள்ளனர். நேர்மையான திறமையான வழிகாட்டுதல் மீண்டும் காவல் துறையை மிளிரச் செய்யும்.

This article is published in Dinamani on 17.05.2011

Wednesday, May 11, 2011

சமய சஞ்சீவிகளை மறக்கலமா?


தன்னலமின்றி மற்றவர்களுக்காக தனது சேவையை அர்பணிக்கின்றவன் தான் சமுதாயத்தில் உண்மையாக உயர்ந்தவன் என்பது சுவாமி விவேகானந்தர் பொன்மொழி. பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் தீயணைப்பு விரர் உள்ளபடி உயர்ந்த மனிதர் என்பதில் ஐயமில்லை.

எரங்காட்டூர் என்ற கிராமம் ஈரோடு சத்தியமங்கலத்திலிந்து பவானிசாகர் செல்லும் பாதையில் உள்ளது. அங்கு ஒரு நெசவுத் தொழிற்சாலையில் பஞ்சு கட்டுக்கட்டாக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கிடங்குகளை பராமரிக்க சில வழிமுறைகள் உண்டு. முழுமையாக அடைத்தாற் போல் வைக்கக்கூடாது. காற்று வளைய வர இடைவெளி விடவேண்டும். அப்போது வெப்பத்தில் குமைய வாய்ப்பில்லை வெப்பம் அதிகமாகும் கோடை காலத்தில் இத்தகைய கிடங்குகள் தீப்பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம். எரங்காட்டூர் நெசவுத் தொற்சாலை பஞ்சு சேமிக்கப்பட்டிருக்கும் கிடங்கில் ஏப்ரல் 1 ம் தேதி மாலை தீடீரென்று தீப்பற்றிக் கொண்டது.

பஞ்சு தீப்பற்றிக் கொண்டால் அது வெகு விரைவில் பரவும்,. பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். பிறகு சத்தியமங்கலம் தீயைணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிலையங்களிருந்து வாகனங்கள் விரைந்தன. சேமிப்புக் கிடங்கில் பின்புறம் உயர் பாதுகாப்புச் சுவர் உள்ளது. அதன் வழியாகவும் பெருந்தீயின் தாக்கத்தைக் குறைக்க தீயணைப்பு வீரர்கள் முன் வழி பின் வழி இருபுறமும் தீயணைப்பு தாக்குதலை நடத்தினர். 46 வயதான சத்தியமங்கல தீயணைப்பு நிலைய வீரர் திரு.பிரபாகரன் திறமையான பணிப்பற்றுதலுடைய பணியாளர் பலப் பெருந் தீவிபத்துகளில் பணி செய்து முத்திரைப்படைத்தவர். கிடங்கின் உயர் சுவர் பின் புறம் தைரியமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டார் பழமையான சுவர் நிலை கொள்ளாமல் விழுந்தது. அதில் பரிதாபமாக திரு.பிரபாகரன் சிக்கிக்கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் விலா எலும்பு முறிந்து ரத்தக்குழாய் சிதைந்து அதிக ரத்தக்கசிவு ஏற்ப்பட்டதால் உயிர் பிரிந்தது.

பணியில் உயிர்துறந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர ஆஞ்சலி செலுத்தும் நாள் ஏப்ரல் 14, இந்த நினைவு நாள் நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. 1944-ஆம் வருடம் மும்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடிமருந்துகள் தாங்கிய கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் துறைமுகத்திற்கு பெரும் சேதாரம் ஏற்பட்டது. பல கப்பல்கள் பாழடைத்தன, தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் துறைமுக பணியாளர்களும் போராடினர். விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழ்ந்தனர். தீ விபத்து நேர்ந்தால் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அளவிடமுடியாதது. தீயால் அழியாதது எதுவுமில்லை. மும்பாய் விபத்து நிகழ்ந்தது ஏப்ரல் 14 அந்த நாள்தான் தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள்.

1908-ம் வருடம் நியூயார்க் தீயணைப்புபடை தலைமை வகித்த தளபதி எட்வர்ட் க்ராகர் கூறுவார். ஒரு தியணைப்பு வீரர் பணியில் சேரும் பொழுதே உயிர் தியாகத்திற்கு தயாராகி விடுகிறார். எந்த ஒரு தீயணைப்பு அழைப்பும் அபாயத்தை குறிக்கும் அபாயத்தில் சிக்கிய அபயக் குரல் கொடுக்கும் ஜீவனை காப்பாற்ற நேரம்தப்பாமல் விரைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு தீயணைப்பு வீரருடையது. உயிருடன் திரும்புவாரா என்பது கேள்விக்குறி ஆதனால் தான் தீயணைப்பு பணியில் அமர்வதே ஒரு சிறந்த தியாகம்.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் பின்னிப் படர்கின்றன. பொருளாதார வளர்ச்சியோடு நகரங்கள் விரிவடைகிறது. புதிய நகரங்கள் தொழிற் கூடங்கள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் வர்த்தக முதலீட்டார்களை வரவேற்கின்றனர், வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் நிரந்தர கட்டமைப்புகள். அத்தகைய வளர்ச்சிப்பணிகளை திட்டமிடும் பொழுதும் சரி நிறைவேற்றப்படும் பொழுதும் போதிய பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. உயர்மாடிக்கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானப்பணிளை ஒழுங்குப் படுத்தும் விதமாக தேசிய கட்டிட விதிகள் 2005-ம் வருடம் வெளியிடப்பட்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடை பிடித்து தான் 15 மீட்டருக்கு அதிகமாக உயரம் கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

முக்கியமாக உயர்மாடிக்கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ மீட்புப்பணி வீரர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிவதற்கு உதவும் வகையில் கட்டிடத்தை சுற்றி போதிய இடைவெளி, அகலமான நுழைவுவாயில், விஸ்தாரமான தாழ்வாரங்கள், தடைகள் இல்லாத மாடிப்படிகள், பிரத்யோக அவசரகால லிஃப்ட், தீயணைப்பு தெளிப்பான்கள், கட்டிடப் பரப்பளவுக் கேற்றவாறு நீர் சேமிப்பு கிடங்கு போன்ற பல விதிமுறைகள் வரையறுக்கப்பட்ள்ளன. இவை சரியாக நிறுவப்பட்டுள்ளதின் அடிப்படையில் தீயணைப்புத்துறை உரிமம் வழங்குகிறது.

2004 ம் வருடம் நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 93 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து பள்ளிகளில் குறைந்தபட்சம் தீப்பாதுகாப்பு மேற்கொள்ப்பட்டிருக்கிறதா என்பதை பார்வையிட்டு சான்றிதழ் தீயணைப்புத்துறை வழங்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 55,000 பள்ளிகள் உள்ளன, இவ்வாறு தீயணைப்புத்துறைக்கு பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 தீயணைப்பு அழைப்புகளும், உயிர் மீட்புப்பணிக்கான அழைப்புகள் சுமார் 10,000 வருகின்றன. தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தீயணைப்பு நிலையங்கள் 300, மீட்புப்பணி நிலையம் இரண்டு. ஒப்பளிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் எண்ணிக்கை 6741.

தீயணைப்புத்துறையை மேம்படுத்த நீதியரசர் பக்தவத்சலம் தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டு அது நல்ல பல பரிந்துரைகளை 2005-ம் ஆண்டு வழங்கியது. நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், பேரிடர் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் கருவிகள் வாங்கவும் அரசு ஆணையிட்டது. அதன் பலனால் தீயணைப்புத்துறை நவீனமயமாக்கும் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் நலனுக்காக நிறைவேற்றப்படும் எந்த ஒரு திட்டமும் அவர்களது ஒத்துழைப்பின்றி முழுமையடையாது. அதுவும் பொதுமக்களுக்கு சேவை என்பதையே பிரதானமாக கொண்ட காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் இத்தகையை ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு தீயணைப்புத்துறையில் தீப்பாதுகாப்பு தொண்டர்களாக அந்தந்த சரகத்தில் தெரிவு செய்து பாதுகாவலர்களாக இணைத்துக்கொள்ள அரசு 2006 ம் ஆண்டு ஆணையிட்டது. இதுவும் பக்தவத்சல கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆணை. பாதுகாப்பு தொண்டர்களை பள்ளிமாணவ மாணவியர், கல்லூரி இளைஞர்கள், சமுதாய தொண்டர்கள் என்று மூன்று நிலையாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஃபயர் மார்ஷல் என்ற ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் திட்டம் வகுக்கபப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்விக் கூடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் அதே வேளையில் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்பு சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அரசுப்பள்ளிகளுக்கு அது சம்மந்தமாக அறிவுரை வழங்கி அதை மேலும் திறம்பட செயல்ப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அரசுக்கு அனுப்பப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஏனோ ஆணையிடப்படாமல் தவக்கத்தில் உள்ளது.

மாநிலங்களில் உள்ள தீணைப்புத்துறைகளை ஒருங்கிணைக்கவும், பேரிடர் நிகழ்வுகளில் மக்களைப் பாதுகாக்கவும் மத்தியில் பேரிடர் மேலாண்மைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை இயக்குனர் தீப்பாதுகாப்பு என்ற உயர் அதிகாரி டிஜிபி அந்தஸ்தில் பணிபுரிகிறார். தீப்பாதுகாப்பும், ஊர் காவல் படையும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. பல மாநிலங்களில் தீயணைப்புத்துறையும் ஊர்காவல்படையும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலைவேறு. தீயணைப்புத்துறையை டிஜிபி நிலை அதிகாரி தலைமை வகிப்பதால் அவரது கட்டுப்பாட்டில் ஊர்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு துறையை கொண்டு வர வேண்டும் என்ற கருத்தருவும் இரண்டு வருடங்களாக அரசுப் பரிசீலனையில் உள்ளது. இது மக்கள் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்ககில் அறிவு அரிதானது வேதனையளிக்கிறது.

மாநிலங்களில் உள்ள தீயணைப்புத்துறைகளின் செயலாக்கத்தை மேம்படத்தவும் குறைகளை ஆய்வு செய்யவும் மத்தியில் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. பேரிடர்களை எதிர் கொள்வதில் குறைபாடுகள் 97 சதவிகிம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மாநிலங்களின் சராசரி ஆயத்த நிலை முன்று சதவிகிதம்தான். இதை சீர் செய்வதற்கு முதல் கட்டமாக ருபாய் 7000 கோடி முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்ட தலைமையிடங்களில் பேரிடர் மற்றும் தீப்பாதுகாப்பு மேம்படுத்த அந்தந்த நகராட்சிகள் முலம் மத்திய அரசு நடப்பு நிதி அறிக்கையில் ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோயம்பத்தூர் நகரங்களில் பேரிடர் பாதுகாப்பு மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு காலவரையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் பொது இடங்களிலும் வர்த்தக மையங்களிலும் மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு இருந்தால் அந்த கட்டிடம் செயல்பட முடியாது அது மூடப்படும். அத்தகைய நிலை நமது நாட்டிலும் வர வேண்டும். பல அரங்குகளையும் பல மாடிக்கட்டிடங்களையும் நிறுவுபவர்கள் அவை பாதுகாப்பானவை என்று பெருமை கொள்ள வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பு இல்லாத வர்த்தக மையங்களை புறக்கணிக்க வேண்டும்.

தீயணைப்புத்துறைக்கு தொழில்நுட்பமும் நவீன சாதனங்களும் இன்றியமையாதது. வெறும் கையில் ழுழம் போடமுடியாது. தீயணைப்பு வீரருக்கு உரிய மீட்புப்பணிக்கான சாதனங்கள் கொடுக்கப்பட வேண்டும். தீயென்று அலறும் போதும் ஆபத்து நெருங்கும் போதும் கடவுளே காப்பாற்று தீயணைப்பு வீரரை உடனே அனுப்பு என்று வேண்டுவோம் ஆனால் தீயணைந்த பிறகு ஆபத்து விலகிய மாத்திரத்தில் கடவுளை மறந்தோம் பாதுகாப்பு வீரரை இகழ்ந்தோம் என்றில்லாமல் சமய சஞ்சீவியான தீயணைப்பு விரரின் கைகளை பலப்படுத்துவோம் துறையை மேம்படுத்துவோம்.

This article published in Dianamani on 10.05.2011

00000