Thursday, April 16, 2009

உள்ளத்தனையது உயர்வு



“ஒன்றுபடுதலில் ஒன்றி இருப்போம்” இதுதான் ஆசிய பெசிபிக் நாடுகளின் சிறை சீர்திருத்த நிர்வாகங்களின் கூட்டமைப்பின் உயரிய கோட்பாடு. ஒவ்வொரு வருடமும் இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெறும். 2008-ம் ஆண்டு கருத்தரங்கு மலேசியா நாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்று மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாடும் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் நல்ல செய்முறைகளை மற்ற நாடுகளும் நடைமுறைக்கு ஏற்ப பின்பற்றுவதற்கும் இக்கருத்தருங்கு வழி வகுக்கிறது.

சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நியதிகளுக்கு உட்பட்டு சிறை இல்லங்களில் பாதுகாப்பது சிறை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும். சிறை இல்லவாசிகளுக்கு நல்லியல்புகளை பயிற்றுவித்து சமுதாயத்தோடு மீண்டும் இணைவதற்கான சூழ்நிலை உருவாக்குவது நிர்வாகத்தின் மற்றொரு முக்கிய பணி.


எல்லா நாடுகளிலும் சிறைகளில் நெரிசல் அதிகமாகவே உள்ளது என்பது உண்மை நிலை. சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அந்தந்த நாட்டின் ஜனத் தொகையோடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. ஒரு லட்சம் ஜனத் தொகைக்கு அமெரிக்க, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் 100-க்கு மேற்பட்ட இல்லவாசிகள் உள்ளனர். மற்ற ஆசிய நாடுகள் சைனா உட்பட இந்த கணக்கு சுமார் 60 –லிருந்து 80 வரை. ஆனால் இந்தியாவில் 1 லட்சம் ஜனத்தொகைக்கு 30 இல்லவாசிகளே உள்ளனர். 111 மத்திய சிறைகள் உட்பட இந்தியாவில் உள்ள மொத்த சிறைகளின் எண்ணிக்கை 1336. சராசரி இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். இதில் 20,000 பெண்களும் அடங்குவர்.


சிறையில் நெரிசலை குறைப்பதற்கு ஒரே வழி சிறை இல்லங்களை விரிவுபடுத்துவது, மற்றும் தேக்கத்தில் உள்ள வழக்குகளை துரிதமாக முடித்தல். உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதை மனதில் கெண்டு பல நாடுகளில் சிறை விரிவாக்கப்பணிகள் துவங்கப்படடுள்ளான. ஒரு குற்றத்திற்கு தண்டனை சிறைவாசம் என்று சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் சிறைக்கு அனுப்புவதுதான் தண்டனையே அன்று சிறையில் மேலும் தண்டனை வழங்குவது முறையற்றது.


சிறைச்சாலைகள் குற்றவாளிகளை துன்புறுத்தும் மையம் என்று மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. இல்லவாசிகளை சீர்திருத்துவது தான் சிறைத் துறையின் தலையாய பொறுப்பு என்பதை எல்லா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.


சிறை என்றாலே வானுயர சுவர்கள், ராட்சத கதவுகள், தப்பிக்க முடியாதபடி தானியங்கி தடுப்புகள் என்று உள்ளே வருபவருக்கு அச்சத்தையும், அசாதாரண பிரமிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால் சிறை வளாகங்களின் உள்ளமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைய வேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்து.


மலேசிய நாட்டில் சிறை இல்லவாசிகளை சீர்திருத்தும் முறையில் பரிமாண மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இல்லவாசிகளின் மனித வளத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய யுக்த்திகள் கையாளப்படுகின்றன. சிறைக்கு வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மனோதத்துவ நிபுணர் உட்பட அமைக்கப்பட்ட விசேஷ குழு மூலம் விரிவான நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்களது மனநிலைக்கு ஏற்ப எந்தவிதமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இல்லவாசிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, தங்களது தற்போதைய நிலைகள் பற்றி மனந்திறந்து விவாதிக்கவும், தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


உடற்பயிற்சி, மன அமைதி ஏற்படுத்துவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு, தொழிற்கல்வியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலேசிய சிறைகளில் நன்கு அமைக்கப்பட்ட சிறைத் தொழிற்சாலைகள் உள்ளன. மரச்சாமான்கள், ரெடிமேட் துணிகள், கைவினைப் பொருட்கள், நாட்டு மருந்து வகைகள் என்று பலத்தரப்பட்ட பெருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


மலேசிய சிறை நிர்வாக முறையில் தண்டனை பெற்றவர் சிறைக்கு வரும்பொழுதே மூன்றில் ஒரு பங்கு சிறை குறைப்பு அவரது எதிர்கால நன்னடத்தையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. சிறைக் குற்றங்களில் ஈடுபட்டாலோ, விதிகளை மீறினாலோ அது அவரது சிறை குறைப்பைப் பாதிக்கும். ஒழுக்கமாக சிறையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே அளவில் சிறை குறைப்போடு இணைந்த நன்னடத்தை விதிகள் சிறை நிர்வாகத்திற்கு உதவுகிறது.


ஒருவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்னர் விதிகள் தளர்த்தப்பட்டு, அவர் குடும்பத்தோடும், சார்ந்திருக்கும் மக்களோடும் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. நேர்காணல் முறைகள் எளிதாக்கி அவருக்கு அறிவுரையும் கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் அவர் விடுதலையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சிறை நிர்வாகத்திலும் விடுதலையாகும் இல்லவாசிகளைத் தயார் செய்யும் முறை சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் கர்ப்பமடைந்த தண்டனை பெற்ற பெண்கள் பேறு காலத்தில் குடும்பத்தோடு இருக்க மூன்று வருடம் வரை தண்டனையை ஒத்தி வைக்க சட்டத்திருத்தம் 2007ல் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தண்டனை தள்ளிவைப்பு சில கொடூர குற்றங்களுக்குப் பொருந்தாது. சிறையில் பிறப்பு என்ற அவப்பெயரைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு உறுதி செய்யும் இத்திட்டம் நமது நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.


சிங்கப்பூரில் வருடத்தில் ஒரு நாள் மஞ்சள் கொடி தினம் என்று சிறை இல்லவாசிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று சிறைத்துறை நடவடிக்கைகள் பிரதானப்படுத்தப் படுகின்றன. சிறைவாசிகள் நிலைமை அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது, சீர்திருத்தும் நடவடிக்கையில் சமுதாயத்தின் பங்கு, சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவை பொதுமக்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அரசு கலையுலக, தொழில் மற்றும் சமூகநல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.


பல நாடுகளில் எல்லாக் குற்றங்களுக்கும் சிறை தண்டனை என்றில்லை. சமூக நல சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கு சமுதாய நற்பணி தண்டனையாக வரையறுக்கப்பட்டு, சிறை தண்டனை தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் குற்றம் புரிந்தவர்களின் பணி சமுதாயத்திற்குக் கிடைக்கிறது. இத்தகைய மாற்று தண்டனை முறை நமது நாட்டிலும் வரவேண்டும்.


சமுதாயத்தில் நலிந்தவர்களும், வறுமையில் உழல்பவர்களும் தான் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் நிலை நமது நாட்டில் உள்ளது. மருத்துவ வசதி இல்லாத சூழலில் இருந்து இவ்வாறு சிறைக்கு வருபவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் மருத்துவ வசதியை மேம்படுத்துவது அவசியம். உடல்நிலையோடு அவர்களது மனநிலையும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பலர் மதுவிற்கும், போதை பொருளுக்கும் அடிமையாகி அவை கிடைக்காதபோது உள்ளம் ஏங்கும் நிலையில் பித்தம் முதிர்ந்த எல்லைக்குத் தள்ளப்படுகின்றனர். எப்படியேனும் போதைப் பொருட்களை மறைமுகமாக கொண்டுவர எத்தனிக்கின்றனர். ஆசன வாயிலும், பார்க்கவருபவர்கள் கொண்டு வரும் பொருட்களில் மறைத்துக் கடத்த முயற்சிக்கின்றனர். இத்தகைய நூதன கடத்தல் முறைகள் பற்றியும், இதனை தவிர்க்க சிறை நிர்வாகம் எடுக்கும் முறைகள் பற்றியும் கலந்தாயப்பட்டது. மலேசிய நாட்டில் உடல் பாகங்களில் இவ்வாறு மறைக்கப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க நுணுக்கமான புகைப்படம் எடுக்கும் முறை செயலாக்கத்தில் உள்ளது.


மலேசிய நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது கட்டப்பட்ட அலோர் செடார் சிறை சுமார் நூறு வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. பீனாங் மாகாணத்தில் உள்ள போகாக் சேனா சிறை சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன சிறை வளாகம். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மதில் சுவர்களில் மின்னணு கருவிகள், தானியங்கி கதவுகள், தானியங்கி சமிக்ஞைகள் இவை யாவும் மத்தியக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயங்குகிறது.


எல்லா வசதிகள் கூடிய சிறை என்றாலும் அங்கு உள்ள விசாரணை இல்லவாசிகளின் நிலை மனதை நெருடாமல் இல்லை. ஒரே அறையில் பலர் என்று சிறை நெரிசலைக் காண முடிந்தது. அறைகளில் மின் விசிறியில்லை புழுக்கத்தில் குமைவதை உணரமுடிந்தது. இந்தியாவில் எல்லா சிறை இல்லங்களிலும் மின் விசிறி வசதி உள்ளது. அதுவும் நமது தமிழக சிறைகளில் மின் ஊக்கி (ஜெனரேட்டர்) உள்ளதால் மின்சார வெட்டுக்கு இடமில்லை.


மலேசியாவிற்கு இந்தோனேசியாவில் இருந்து முகாந்தரமின்றி கடல் வழியாக கள்ள தோணியில் வருபவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிப் பத்திரம் (விசா) இன்றி பிடிபடுவர்களில் தமிழர்களும் அடங்குவர் என்பது வேதனை தந்தது. ‘ஐயா ரொம்ப கஷ்டப்படுகிறோம்’ என்று பல தமிழ் இல்லவாசிகளின் வேதனைக்குரல் கேட்க முடிந்தது. மலேசிய சிறைகளில் உள்ள இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம். அதில் சுமார் 90,000 நபர்கள் இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மலேசிய சிறைப் பணியாளர்களில் சிலர் தமிழர்கள். அவர்கள் நம்மிடம் தமிழில் பேசுவதற்கு தயங்கியது மலேய நாட்டில் அவர்களது இரண்டாந்தர நிலையை விளக்கியது. தாங்கள் மலேயர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள தமழில் பேசுவதை தவிர்த்தனர். ஆனால் மலேசிய குடியுரிமைப் பெற்ற வடஇந்தியர்கள் இந்தியர்களைப் பார்த்து சந்தோஷமாக இந்தியில் உரையாடினர். தமிழருக்கு மட்டும் ஏன் இந்த தன்னம்பிக்கை வரவில்லை – வருத்தமளித்தது.


சிங்கப்பூரில் குற்றவியல் ஆளுமையின் கீழ் தண்டனை கடுமயானது. அதுவும் போதைப் பொருள் கடத்தலுக்கு தடுப்புத் தண்டனை வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் தண்டனை முறையில் கசையடியும், பிரம்பபடியும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு தண்டனையாக கொடுக்கப்படுகின்றன. உலகளவில் மனித உரிமைகள் பற்றியும், தனிமனிதன் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்ச்சி பரவியுள்ள நிலையில் சித்திரவதைக்குள்ளாக்கும் தண்டனை இன்றும் நடைமுறைப்படுத்துவது கொடுமையானது. ஆனால் சிறிய நாடு என்பதால் சில பிரச்சனைகளுக்கு இம்மாதிரியான தண்டனை முக்கிய தடுப்பு நடவடிக்கையாக பார்க்கிறார்கள். சிறைகளில் கசையடி கொடுக்கும்பொழுது மருத்துவர் கண்காணிப்பில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஏதோ மருத்துவர் இருந்தால் வலி குறையும் என்பது போல விளக்கம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய இடைநிலைக் காலத்திய கொடுங்கோலர்களின் தண்டனை முறைகள் முன்னேற்றம் அடைந்த நாடு என்று பெருமிதம் கொள்ளும் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.


உள்ளத்தனைய உயர்வு என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப இல்லவாசிகளை உயர்த்த கல்வி, தொழிற்கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழக சிறையில் மேற்கொள்ளப்படுகின்றன. மனித உரிமைகளை பேணுதல் இல்லவாசிகளுக்கு நல்வழி புகட்டுதலில் மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் தமிழக சிறைகளில் சீராக பணிகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை உறுதியாக கூறலாம்.

இக்கட்டுரை தினமணி நாளிதழில் 16,04,2009 அன்று பிரசுரிக்கப்பட்டது

Thursday, April 9, 2009

புனித வெள்ளி – புத்துயுர் திருநாள்








லெண்ட்’ என்று கிறித்துவ மதத்தில் புனித நோன்பு நோற்பதை சிறந்த வழிபாடாக போற்றப்படுகிறது. இந்த நோன்பின் இறுதி நாட்கள் மாண்டி வியாழன், புனித வெள்ளி, புனித சனி. ஈஸ்தர் ஞாயிறு என்று அனுசரிக்கப்படுகிறது.

நயவஞ்சகர்களால் யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. தியாகத்தின் உச்சநிலை சமுதாய நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப்பது. “கடவுளே அவர்களை மன்னித்து விடு தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று பெருந்தன்மையோடு தம்மை சிலுவையிலிட்டவர்களுக்காக கடவுளிடம் இறைஞ்சுகிறார்.

ஏழை மக்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களை உய்விப்பதற்கும், உலக அமைதிக்காகவும், சிலுவையிலிடப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் புத்துயிர் பெற்று அவதரித்தார். புதிய ஜீவனின் அடையாளமாக முட்டையை வைத்து (Easter Egg) புத்துயிர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை அறிவோம்.

யேசுபிரானின் வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு மகத்தான பாடம். பேதமின்றி அன்பை அடிப்படையாக வைத்து பிறர் நலனுக்காக வாழ்வதுதான் வாழ்க்கையின் பயன். இந்த நற்செய்தி உலக மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதை மனதில் கொண்டு மனித நேயத்தை வளர்ப்போம். தன்னலமற்ற மக்கள் பணி தான் உண்மையாக கடவுளை நேசிப்பதின் அடையாளம்

ஈஸ்டர் திருநாளில் சிறப்பு நேர்காணல் இல்லவாசிகளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தோடும், குழந்தைகளோடும் அந்நந்நாளில் இறையுணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Thursday, April 2, 2009

நெட்டை மரங்களாய்.....




பாரதியாரின் காவியக் கவிதை பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி – துச்சாதனன் திரௌபதியின் நீண்ட கூந்தலைப் பிடித்து அரசவைக்கு இழுத்துக் கொண்டு வருகிறான். வழி நெடுக மக்கள் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் கொடூரர்கள் முன்பு செய்வதறியாது திகைக்கின்றனர். பாரதியார் இதை அழகாக


“நெட்டை மரங்களாய் நின்று புலம்பினர்
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணையாமோ”


என்று மக்களின் கையாலாகாத மனநிலையை நிந்திக்கிறார். சமீபத்தில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் அமன் கச்ரூ என்கிற மாணவன் ராகிங் என்ற கொடூர நிகழ்வில் கொல்லப்பட்டது எல்லோருடைய நெஞ்சை உலுக்கியது. பல வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் சரிகா ஷா என்ற இளம் மாணவி நவீன துச்சாதனன்களின் இழிசெயலால் உயிரிழந்தது மறந்திருக்க முடியாது. தொடர்ந்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ‘ராகிங்' என்று புதுமுக மாணவர்களை விளையாட்டாக கேலி செய்து வரவேற்கும் முறை விபரீத கொடுமையாக மாறிவருவதும், நாமும் ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

1996-ம் வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசன் என்ற பச்சிளம் மாணவன் ராகிங் கொடுமைக்கு உள்ளாகி பயங்கரமாக சில மூத்த மாணவர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை சமுதாயத்தின் மையத்தில் விசுவரூபம் எடுத்தது. புதுமுக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் சிதைவு சீண்டலை களைவதற்காக தமிழ்நாட்டில்தான் முதலில் 1997-ம் வருடம் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாணவர் வதையில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், குற்றம் புரிந்த மாணவரை நிரந்தரமாக நீக்கவும் இடம் உள்ளது. தமிழகத்தை சேர்த்து ஆறு மாநிலங்கள்தான் பிரத்யேக சட்டத்தை இயற்றியுள்ளன. இளைஞர் அமன் கச்ரூ இறந்த சம்பவம் நிகழ்ந்த இமாசல பிரதேசத்தில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இப்போது ராகிங் குற்றவாளிக்கு மூன்று வருடம் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


உச்சநீதி மன்றம் விஷ்வ ஜாகிரிதி மிஷன் தொடுத்த வழக்கில் மே 2001-ல் ஒரு முக்கிய தீர்ப்பு ராகிங் கொடுமைக்கு எதிராக வழங்கியது. இந்த தீர்ப்பில் கல்வி நிர்வாகம், அரசு அமைப்புகள் எவ்வாறு இணைந்து இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் இதே பிரச்சனை 2006-ம் ஆண்டு கேரளா பல்கலைக் கழகம் (எதிர்) கல்லூரிகள் கூட்டமைப்பு வழக்கின் மேல் முறையீட்டிலும் உச்ச நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இந்த வழக்கில் 2001-ம் வருடம் வழங்கிய தீர்ப்புகள் சரியாக நடைமுறைபடுத்தாததற்கு கண்டனம் தெரிவித்து ராகிங் என்ற சிதைவுச் சீண்டல் முறையை ஒழிப்பதற்கு கூராய்வு மேற்கொள்ள முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் திரு.ராகவன் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.

மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கு இணங்க திரு.ராகவன் தலைமையில் ஏழு அங்கத்தினர்கள் கொண்ட குழுவினை அமைத்து ஆணையிட்டது. கல்வி மையங்களில் புதுமுக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஆராய்ந்து அதைக் களைவதற்கான நெறிமுறைகளை வகுக்கவும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்தக் கமிட்டி இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பங்களூரு, லக்னோ, கொல்கத்தா, கொச்சி போன்ற இடங்களுக்கு சென்று வெளிப்படையான விசாரணை மேற்கொண்டது.


விசாரணையின் ஒரு அங்கமாக கேள்விப் பட்டியல் தில்லி பல்கலைக் கழக மனோதத்துவ பேராசிரியர் அருண் ப்ரூட்டா உதவியோடு தயாரித்து, யூ.ஜி.சி அங்கீகாரம் பெற்ற எல்லா கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது. பெரிய அளவில் சுமார் 12,500 பதில்களும் பெறப்பட்டன. இதைத் தவிர பல தனியார் தொண்டு அமைப்புகளுடனும் கலந்து அவர்களது ஆலோசனையும் பெற்று கமிட்டி தனது முடிவான பரிந்துரையை மே மாதம் 2007-ம் வருடம் சமர்ப்பித்தது.


கமிட்டி நடத்திய கலந்தாய்வில் பல யோசனைகள் சொல்லப்பட்டன. சிலர் புதுமுக மாணவர்களை முதலில் கல்லூரிகளில் சேர்த்து அவர்கள் புதிய சூழ்நிலைக்கு பரிச்சியமான பிறகு மூத்த மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கினால், இளநிலை மாணவர் மூத்த மாணவர்களை எதிர்கொள்ளும் பக்குவம் பெறுவர் என்ற யோசனை கூறப்பட்டது. பலர் தங்களது கசப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ‘ராகிங்’ ஆரோக்கியமான முறையில் செய்தால் இந்நாள், முந்நாள் மாணவர்களிடையே நல்லிணக்கம் எற்படும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இந்த கமிட்டி முக்கிய பரிந்துரையாக ராகிங்கை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ராகிங் பற்றியும் அதை வைத்து இழைக்கப்படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், இவைகளை பாடரீதியாக மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை.


மாணவர்களிடம் ராகிங் முறைக்கு எதிரான விதிகள் பட்டியலைக் கொடுத்து அதில் உள்ளவற்றை புரிந்து கொண்டு நடப்பதாக உறுதிமொழி ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனம் வாங்க வேண்டும். உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி மையங்களில் ராகிங் கொடுமை அதிகமாக இருப்பதுமட்டுமல்லாது கல்வியின் தரத்தை ராகிங் கலாச்சாரம் வெகுவாக பாதிக்கிறது என்று கமிட்டியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆதலால் விதிமுறைகளை சரியாக அமல்படுத்தாத கல்வி நிறுவனம் மீது அங்கீகார மறுப்பு அல்லது பறிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மாணவர் சிதைவுச் சீண்டலைத் தடுக்க ஊடகங்கள் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும்; ராகிங் தடுக்கும் கமிட்டிகள் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டிகளில் ‘தாதாக்களாக’ திரியும் மாணவர்களையும் அமர்த்தி அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்க முடியும். எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு நிகழ்வு நடந்தால் கல்வி நிறுவனம் உடனடி விசாரணை நடத்தி அதில் உண்மை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் ராகிங் கொடுமைக்கு பிரத்யேக தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரையில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றமும் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று அவை நடைமுறைப்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் வெவ்வேறு நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய தீர்க்கமான தீர்ப்பிற்கு பின்பும் ‘ராகிங் எமன்’ அமன் கச்ரூவை பலி கொண்டான்.


சட்டங்களும், விதிமுறைகளும் நன்றாக அமைக்கப்பட்டு ஏட்டளவில் உள்ளன, நடைமுறையில் உள்ளனவா என்பது கேள்விக்குறி என்பது நமது நாட்டில் பல கட்டங்களில் மெய்ப்பிக்கப்படுகிறது. இதற்கு முன் உதாரணம் ராகிங்கிற்கு எதிராக உள்ள விதிகள் சரியாக நடைமுறைப்படுத்தாதது ஒன்றே போதும். அமன்கச்ரூவின் பெற்றோர்கள் இந்தக் கொடுமைக்கு எதிராக சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளதாகவும், தனது மகனுக்கு நடந்த கொடுமை வேறு எந்த இளைஞருக்கும் நிகழக்கூடாது, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவனது மரணம் உதவட்டும் என்று நெஞ்சுருக அறிவித்துள்ளனர்.


ஏன் இவ்வாறு மனிதன் நோக மனிதன் பார்த்து கொடுமையில் இறங்க வேண்டும்? கொடுமைக்கு உள்ளான புதுமுக மாணவன் ஏன் அடுத்த வருடம் அதே கொடுமையை மற்ற புதிய மாணவர்களிடம் நடத்த வேண்டும்? ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை நமது சமுதாய சூழல் வளர்க்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இல்லங்களில் பெற்றோர்களின் ஆதிக்கம், பள்ளியில் ஆசிரியர்களின் ஆதிக்கம் பொது இடங்களில் அரசு ஊழியர்களின் ஆதிக்கம் என்று இந்த ஆதிக்கத்தின் பாதிப்புதான் மூத்த மாணவர் இளைய மாணவரிடம் தனது ஆதிக்கத்தை செலுத்த தூண்டுகிறது என்பது ஒரு கணிப்பு.


இந்திய தொழில் நுட்பக் கல்லூரிகளில் கடினமான தேர்விற்குப் பிறகுதான் சேரமுடியும். அத்தகைய உயர்கல்விக் கூடங்களில் புதுமுக மாணவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மை நிகழ்வுகள் பல உண்டு. பொதுவாகவே கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்பது உண்மை. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி முதல்வர் தனது கல்லூரி மாணவர்கள் நல்லவர்கள், நல்லொழுக்கம் கொண்டவர்கள் என்று முதலில் நினைத்ததாகவும், முதல்வராக கல்லூரியை நிர்வகிக்கும் போதுதான் எண்ணற்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனால் மற்ற மாணவர்களை வதைக்கும் கலாச்சாரம் ஊடுருவியுள்ளதைப் பற்றியும் விவரிக்கின்றார்.


நமது கல்லூரிகளிலும் போதைப் பொருள், டாஸ்மாக் ஆதிக்கம் இல்லாமல் இல்லை. இவைதான் மாணவர்களை வன்முறையில் இறங்கத் தூண்டுகின்றன என்பது கொடுமைப்படுத்தும் மாணவர்கள் போதையில் தங்களை சித்ரவதை செய்ததாக புதுமுக மாணவர்களின் அனுபவங்கள் பறைசாற்றுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 200 சிதைவுச் சீண்டல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஒன்பது வழக்குகள் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் தலா 22 வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்குகள் ஒரு பக்கம் போடப்பட்டாலும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உள்ள கல்லூரிகளில் புதுமுக மாணவர்களை வதைக்கும் பழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் அங்குள்ள இளைஞர்கள் மனநிலையில் முதிர்ச்சி பெற்றவர்களாக கல்லூரிக்கு வருகிறார்கள். பழைய மாணவர்களும் புதியவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்து வரவேற்று கருத்து பரிமாற்றம் செய்து ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கிறார்கள். அதிகம் செலவழித்து படிக்க வேண்டியிருக்கிறது. அந்த செலவிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் அந்த நிலை இல்லை. கல்விக்கான பெரும் செலவு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. பெற்றோர்கள் முதலீடு செய்ய வேண்டிய நிலை. இருக்கிற நிலபுலன்களை விற்றாவது தமது செல்வங்களை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் போற்றத்தக்கது. அதற்கேற்றவாறு மாணவர்களிடமும் பொறுப்பு வளர வேண்டும். வளர்க்க வேண்டியது நமது கடமை. நெட்டை மரங்களாக பெட்டைப் புலம்பலைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமாக இளைய சமுதாயத்தினரிடம் நல்லியல்புகளை வளர்ப்போம். பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் ‘அடிபிடி’ அடாவடித்தனக் கலாச்சாரத்தைத் தவிர்த்து நாம் முன்மாதிரியாக நடப்போம்.


இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 02.04.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது