Friday, October 9, 2009

கவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை

“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா”
என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது
“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா
ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா” என்று கேட்கக் தோன்றுகிறது.
“சிட்டி லிமோசின்ஸ்” என்ற நிறுவனத்தில் அப்பாவி மக்கள் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்துள்ளர்கள். இழப்பு நூறு கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லியில் இயங்கி வருகிறது.
. “டைம் ஷேர்” என்று சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் வருடத்திற்கு சில நாட்கள் பங்கு வாங்கும் வர்த்தக முறை பல வருடங்களாக இயங்குகிறது. வாங்கிய குறிப்பிட்ட நாட்கள் அடிப்படையில் அந்த விடுதியிலோ அதோடு இணைந்த மற்ற விடுதிகளிலோ தங்கலாம், அதை வாடகைக்கு விடலாம் போன்ற பல வகையில் உபயோகிக்கலாம். இதன் அடிப்படையில் தான் வாகன உரிமை என்று வாகனங்களின் மீது ஒரு தொகை முதலீடு செய்து அந்த வாகனம் வாடகைக்கு விடப்பட்டு ஈட்டும் லாபத்தில் பங்கு முதலீட்டை பொருத்து கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் லிமோசின் நிறுவனம்.
கவர்ச்சிகரமான பல திட்டங்கள் மக்களை ஈர்ப்பதற்கு அறிவிக்கப்படுகின்றன. நாம்தான் முதலீடு செய்வதற்கு முன் திட்டங்களை ஆராய்ந்து வியாபார நோக்கத்தை அறிந்துகொண்டு வியாபாரம் துவங்குபவரின் நாணயத்தையும், தகுதியினையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.
1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதலீடு செய்த பணம் விவசாயப் பண்ணை பராமரிப்புதற்கு செலவிடப்பட்டு முதலீட்டார்களுக்கு அரிசியும், தானிய வகைகளும், காய்கறியும் வழங்கப்படும், பால்பண்ணை மூலம் பால் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டங்களின் பரிமாணங்கள் பல. அப்பாவி மக்களும் கவர்ச்சியில் மயங்கி தாம் கொடுத்த பணத்திலிருந்துதான் ஒரு பங்கு முன்வட்டி, பரிசு என்று கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தனர். இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.
இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.
நூதன மோசடிகளுக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சார்லஸ் பான்ஸி’ என்ற இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1949ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர் மிக அதிகமான பயன் மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்று ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவார். முதலில் வரும் முதலீட்டார்களுக்கு தடங்கலின்றி சொல்லியபடி முதலீட்டின் லாபம் என்று ஒரு தொகை திரும்பி கொடுக்கப்படும். இதில் பயனடைந்தவர்கள் மூலமாக மற்றவர்களும் புற்றீசல் போல பணம் போடுவார்கள். இவ்வாறு புதிதாக வரும் முதலீட்டார்களின் பணத்தை வைத்து திட்டத்தின் லாபம் என்று முதலீட்டார்களுக்கு திருப்பிக் கொடுப்பதால் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஒரு மாயை உண்டாகும். இத்தகைய தொடர் அடுக்கு மோசடி திட்டங்கள் ‘பான்சி திட்டம்’ என்று பிரபலமாகியுள்ளது.
‘பான்ஸி திட்டம்’ தொடர புதிய முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்கள் வரத்து குறைந்தால் இந்த திட்டம் குறுகிய காலத்தில் அதனுடைய பளுவாலேயே தொய்ந்து விடும். திட்டத்தை துவக்கியவர் சுருட்டியவரைக்கும் லாபம் என்று மறைந்து விடுவார். அல்லது சட்டப்படி திட்டம் தூய்மையானதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கையில் சாயம் வெளுத்துவிடும்.
சமீபத்தில் ‘பெர்னி மெய்டாஃப்’ என்பவர் பல வருடங்களாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்கு மார்க்கெட்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மோசடி செய்தது வெளிவந்துள்ளது. இவர் செய்தது பல உறர்ஷத் மேத்தாக்களை உள்ளடக்கிய மோசடி. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அதிகபட்சமாக 150 வருட சிறைதண்டனை இந்த வ்ருடம் ஜுன் மாதம் நீதிமன்றம் விதித்துள்ளது.
பரிசுச்சீட்டு மற்றும் பணம் பட்டுவாடா திட்டங்கள் தடுக்கும் சட்டம் மத்திய அரசால் 1978-ல் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி பல அடுக்கு வியாபார திட்டங்கள் மூலம் தொடர்ந்து பலரை திட்டத்தில் இணைத்து லாபம் ஈட்டுவது குற்றமாகும். சமீபத்தில் தமிழகத்தில் தொடரப்பட்ட ‘தங்கப் புதையல்’ வழக்கு இதில் அடங்கும். உச்சநீதிமன்றம் மேற்கு வங்காளம் எதிர் ஸ்வபன் குமார் என்ற வழக்கில் (AIR 1982 SC 949) இம்மாதிரியான பணப்பட்டுவாடா திட்டம் என்ன என்று விவரித்துள்ளது. எளிதிலும் விரைவிலும் பணம் ஈட்டக்கூடிய திட்டம் என்ற அறிவிப்பும், பணமோ, பொருளோ ஒரு இலக்கை அடைந்தாலோ அல்லது புதிய அங்கத்தினர்களை சேர்த்தாலோ கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அடங்கிய திட்டம், இந்த பரிசுச் சீட்டு ஒழிக்கும் சட்டத்தின் பார்வையில் வரும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த சட்டம் அரசியல்சாசன சட்டம் 19(1)(ஜி) அடிப்படை உரிமைக்கு புறம்பானது அல்ல என்றும் உச்சநீதிமன்றம் சீனிவாசா தொழிலகம் எதிர் மத்திய அரசு (AIR 1981, 504 SC) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் அவர்கள் இந்த தீர்ப்பில் தனக்கே உரித்த நடையில் “ஒளியில் மாயும் விட்டில் பூச்சியை காப்பாற்ற ஒரே வழி அழிக்கும் ஒளியை ஒழிப்பது ஒன்றுதான்” என்று கூறியுள்ளார் !
தமிழ்நாட்டில் அமலில் உள்ள முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம்.
பொருளாதார குற்றங்களில் புலன் விசாரணை கடினமானது. தமிழக பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு 2007, 2008-09 ஆண்டுகளில் சுமார் 170 கோடி ரூபாய் மீட்டு சாதனை படைத்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளில் ஒப்பந்த மீறலும் இருப்பதால் இவை சிவில் வழக்குகள் என்றும் குற்றவியல் வழக்குகள் முறையில் விசாரிக்க முடியாது என்ற வாதமும் இருக்கிறது. ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.
சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன. உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.


This Article published in Dinamani Newspaper on 03.10.2009

1 comment:

ROAD TRAFFIC said...

sir,
good thinking has come out as a good article! the diwali charm is slowly fading every year. tv shows have substituted it.new dress, sweets, crackers had taken our pride days ago. i am sivaji fan. those were the days to see sivaji film in first show, first ticket in first class.engiruntho vandhal and sorgam were screened in the same day, a diwali. morning show engirundho vandhal and evening show sorgam!
sir, i forgot to ask you:
ganga snananm acha?