Friday, October 16, 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி


தீபாவளி நமது கலாச்சாரத்தோடு ஒன்றி தொன்று தொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்த சமயத்தவரது பண்டிகை எனினும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ளவேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல். விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாக கழியும் நாட்கள். வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெயரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதை காணலாம். தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமர்சையான கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாட்கணக்காக தையல்காரரிடம் அலைவது, கூட்டுசேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதை காப்பாற்றி வெதுவெதுப்பாக பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் - 30 வருடங்களுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சி பெட்டி முன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்கத் தோன்றும்.

தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துக்கள். மாறிவரும் சமுதாய சூழலில் முன்பு இருந்தது போல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது. குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துக்கள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

தமிழகத்தில் சராசரி வருடத்திற்கு 20,000 தீ விபத்து சம்மந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008 ஆம் வருடம் 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துகள் 393 ஆகும். சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008 ம் வருடம் பட்டாசுவெடி தீ விபத்தினால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாக கழிக்க வேண்டிய நாளில் வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியநிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை.



விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் விதிகளை மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தீ பாதுகாப்பு தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்திற்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெறவேண்டும். 200 கிலோவிற்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு பொருட்கள் தயாரித்தால் 5000 ரூபாய் அபராதம் மற்றும் 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக்கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுதப்படும் இராசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.



அங்கீகரிக்கப்படாத இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கக் கூடாது.
இரசாயனக் கலவைகள் தேவையான அளவு தயார் செய்யவேண்டும். மிதக்கலவைகளை ஒருமணி நேரத்திற்கு அதிகமாக வைத்தல் கூடாது.
ஒவ்வொரு இரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.



வேலை துவங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் அறைகளை பார்வையிட வேண்டும். வேண்டாத பொருட்களோ, விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலை துவங்கக்கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது
ஒரு அறையில் நிர்யணிக்கப்பட்ட பணியாள்ர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.



பட்டாசு பொருட்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலரவைக்க வேண்டும். இரும்பு பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இருப்பு ஆணிகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
இடி, மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடி சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.

2004 ம் வருடத்திலிருந்து செப்டம்பர் 2009ம் வருடம் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் 225 நபர்கள் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ. 68.60 இலட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும், விதிகளை பின்பற்றாததாலும் ஏற்பட்டவை.



பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்த பட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண் தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24.09.09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டிடமும் நிலைகுலைந்து 10 பேர் உயிரிழந்தனர்.



சென்னை உயர்நீரிமன்றம் ரிட் மனு எண். 38180/2005 ராமசாமி எதிர் தீயணைப்பு, காவல் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசு கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை கொடுத்துள்ளது. கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவிற்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்கவேண்டும். தற்காலிக கடைகள் தீக்கிறையாகாத பொருட்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் உச்சநீதிமன்ற ரிட்மனு 72/1998 மஉறாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஒலி மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளை போட வேண்டும். அடுக்கு மாடி கட்டிடத்தில் ராக்கெட் போன்றவைகளை கொளுத்தக்கூடாது. குடிசைப் பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம்.



பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிட கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும், பட்ட இடம் விகாரம் அடையும். சமீபத்தில் விருதுநகரில் நடந்த விபத்தில் கொடியமுறையில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். அவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி பட்டாசை மறைத்துவைத்த அறையினுள் நுழைந்து கிடைத்த பட்டாசை வெடிக்க முயன்றிருக்கிறது. விபத்து ஏற்படுகிறது. புகைமண்டலத்தில் சிக்கி குழந்தை இறந்து விடுகிறது. வேலையிலிருந்து திரும்பிய பெற்றோர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்று பள்ளிக்குச் சென்று தேடுகின்றனர். பின்புதான் வீட்டிலேயே குழந்தை உயிர்விட்டது தெரியவருகிறது. இதைவிடக் கொடுமை இருக்க முடியாது.

பாதுகாப்பு நமது கையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது, வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டை பாதுகாப்பாக வைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது, தீ விபத்துகள் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உல்லாசமான தீபாவளி துன்பமில்லா இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.








This Article Published in Dinamani Newspaper on 16.10.2009

1 comment:

ROAD TRAFFIC said...

a good article with good thinking! diwali festival mood is replaced by tv shows. new dress, sweets and crackers are slowly fading away.i am sivaji fan. getting fiest ticket in first class for first show was the craze those days. engiruntho vandhal and sorgam were screened in the same day for a diwali! what to do? norning show engiruntho vanthal and sorgam for first show!
sir, i forgot ask you:
ganga snanan acha?