Tuesday, August 4, 2009

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . . .


குற்றம் புரிபவர்களை சமுதாயம் ஒரு சுமையாகவே பார்க்கிறது. குற்ற நிகழ்வுக்கு சமுதயாத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் காரணமாகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். குற்றவாளிகளை சிறை என்ற கூண்டில் அடைப்பதோடு நாம் திருப்தி அடைந்து விடமுடியுமா? குற்றம் புரிபவர்களை நல்வழிப்படுத்தி மாற்றுப்பாதை வகுப்பது சிறை நிர்வாகத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிறைவாசம் அது ஒரு அலாதியான வாசம். அங்கு அடிக்கக்கூடிய காற்று, க்ரோதம், துவேஷம், விரோதம் இவற்றின் கலவை. அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கும், அவர்கள் பாதுகாக்கும் இல்லவாசிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. நிர்வாகத்தால் ஒருசாரார் பராமரிக்கப்படுகின்றனர் மற்றொருவர் சம்பளம் பெறுகின்றனர். உண்மை, நேர்மை என்பதற்கு இடமில்லை. சிறைக்கு வருபவர்களை கொடுமைப்படுத்துவதில் அலாதி இன்பம், தவறு செய்தவரை பிரம்பால் அடித்து கை வலிக்கிறது என்று சலிப்போடு தற்பெருமை அடித்துக் கொள்ளும் வீரர்கள் இத்தகைய நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு 1832 முதல் பல சிறை சீர்திருத்த கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு சிறை நிர்வாகம் குற்றவாளிகளை திருத்த வேண்டும் ‘தவறு செய்தவன் வருந்தியாகணும், தப்பு செய்தவன் திருந்தியாகணும்’ என்ற அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமை. எந்த ஒரு மாறுதலுக்கும் தட்ங்கல் இருக்கத்தான் செய்யும். பொதுவாக மாறுதலை விரும்பாது இருந்த இடம் பள்ளம் என்று பழகிப்போனதில் சுகமும், பாதுகாப்பும் நாடுவது மனித இயல்பு. மாற்றுப்பாதையில் என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், புதிய நுட்பங்களை அறிவதில் எடுக்கவேண்டிய முயற்சிகளை எண்ணி சோம்பிக்கொண்டு தவிர்க்கும் மனப்பான்மை, என்று மேம்படுத்துதலுக்கு தடைக்கற்கள் பட்டியல் கண்க்கில் அடங்காதது. பல சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருத்தலுக்கும், எடுக்க எத்தனித்தாலும் முடிக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

குற்றம்புரிபவர்களை திருத்தமுடியாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் பலர், குற்றம் புரிந்தவர்கள் வருத்தத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிலர். குற்றவாளிகள் கொடுமைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர். குற்றவாளிகளுக்கு ஏன் சலுகைகளும் அடிப்படை வசதிகளும் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புபவர்கள் ஒரு சாரர். தாம் முயற்சி எடுத்து குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்றவர் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் காவல்துறை. அவர்களும் மனிதர்கள், அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து சமுதாயத்தோடு இணைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லுணர்வோடு உள்ளவர்கள் வெகு சிலரே.

குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம், குற்றங்களில் ஏன் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு உளவியல் பொருளாதார ரீதியாக பல அனுமானங்களை முன்வைக்கலாம். மேலை நாடுகளில் வசதி இருந்தும் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பலர். ஆனால் நமது நாட்டில் போதாமையினால் தான் பலர் குற்றங்களில் உழல்கின்றனர். படிப்பறிவில்லாததினால் நல்லது கெட்டது தெரிய வாய்ப்பின்றி சுலபமாக குற்றப்பாதையில் ஈர்க்கப்படுகின்றனர். ஏழை மக்கள், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் குற்றவலையில் சிக்கி சிறையிலடப்படுகின்றனர். சட்டம் தனது கடமையை இத்தகைய மக்கள் மீது மட்டும் எவ்வாறு குறைவில்லாமல் செய்கிறது?

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள சீர்குலைந்த நிலையைப் பார்த்து முன்னாள் தலைமை நீதிபதி திரு வெங்கடாசலய்யா அவர்கள் சிறைச்சாலைகள் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையம் என்ற உயர்ந்த நிலைப்பாடு சிதைந்து விட்டது, சிறைச்சாலைக்கு வரும் புதுமுக குற்றவாளி தேர்ந்த முதுகலை பட்டதாரியாக வெளிவருகிறார் என்று மனம் வெதும்பி கூறியிருக்கிறார். எவ்வளவோ சீர்திருத்த நடவடிக்கைகள் தனிப்பட்டமுறையில் அதிகாரிகளால் சில மாநிலங்களில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையாக நடைமுறையில் வரவில்லை. “ஜாண் ஏறுதல் முழம் சறுக்கல்” என்ற நிலையில் உள்ளது. அரசு நிர்வாகம், குற்றவியல் நிர்வாகம், சிறைத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் விரும்புவோர் என்று பலதரப்பட்டவரின் ஒத்துழைப்பின்றி சிறை தீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையடையாது.

சுதந்திர போராட்ட வீரர் திரு குமரப்பா பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்டிருக்கிறார். அவர் தனது சிறை அனுபவங்களைப் பற்றி கூறுகையில் சிறை அமைப்பு, சிறைப்பணியாளர்களின் அணுகுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணிகள், நடைமுறைகள், இவையாவும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட்டால்தான் சிறைச்சாலை என்ற அமைப்பு முழுமையடையும் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கும் என்று விவரித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் ஜெயில் நிர்வாக நிபுணர் டாக்டர் ரெக்லஸ் 1951ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து வ்ந்து சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளிகளை திருத்துவதற்குமான வழிமுறைகள் பற்றியும் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1956 ஆம் வருடம் அகில இந்திய ஜெயில் விதிகள் குழுமம் அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல நிலையாணைகள் மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்க வழிவகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சிறைகள் விரிவாக்கம், சுகாதார சூழல், காற்று, தண்ணீர் வசதி, நிலையான உணவு, மருத்துவவசதி மேம்படுத்தப்பட்டது.

1978 ஆம் வருடம் தமிழகத்தில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன், அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தீர்க்கமான பரிந்தரைகளை வழங்கியது. இந்த கமிஷனில் உறுப்பினராக முக்கிய பங்கு வகித்தார் காவல்துறை ஐஜி திரு டயஸ், குற்றவியல் மற்றும் சமூகவியல் நாட்டம் கொண்டவரும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய திரு டயஸ் அவர்கள் பல முற்போக்கு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதில் முக்கியமானது இல்லவாசிகளை சீர்திருத்தவது, மாற்று வாழ்க்கை அமைத்தல், தொழில் கல்வி கற்பித்தல் போன்றவை அடங்கும். சிறைகளில் பஞ்சாயத்து முறை கொண்டுவர வேண்டும், இல்லவாசிகளுக்கு ஜனநாயக உணர்வு புகட்ட வேண்டும் என்ற பரிந்துரையும் முக்கியமானது.

தமிழகத்தில் மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களில் 20,000 இல்லவாசிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. குற்றவாளிகள் நல்வழிப்படுத்துவதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் கல்வி, அவர்களுக்கு உகந்த வேலைக்கான பயிற்சி ஆகிய இரண்டு ஏற்பாடுகள் தான் முக்கியமானது. கல்வி ஒன்று தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் உண்மையான சுயமரியாதையையும் அளிக்கவல்லது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருடம் தமிழக சிறைகளில் கல்வியை பிரதானமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறையினரே சமூக சீர்திருத்தவாதிகளாக பணிபுரியவேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் சிறைச்சாலைகள் நலம் பேணும் மருத்துவமனைகளாக உள்ளிருக்கும் இல்லவாசிகளை அன்போடும் பரிவோடும் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இல்லவாசிகளது மனநோய்க்கு கல்வியைத் தவிர வேறென்ன சிறந்த மருந்து இருக்க முடியும்? தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும், மூன்று விசேஷ பெண்கள் சிறைகளிலும் ஆரம்பப் பள்ளியும், இடைநிலைப் பள்ளியும் இயங்குகின்றன. இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் முலம் பல பாடங்களில் டிப்ளமோ பயிற்சியும், பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் வரை பயில்வதற்கு வசதி செய்யப்பட்டள்ளது. திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் பட்டப்படிப்புகளுக்கும், முதுகலைப்பட்டம் பெறுவதற்கும் பாளையங்கோட்டை சிறையில் பயிற்சி அளிக்கிறது. நூதன முறையில் 2008-ம் வருடம் ஜுலை மாதம் பாளையங்கோட்டை சிறையிலுள்ள 17 இல்லவாசிகளுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக துணைவேந்தர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. இந்த முதன்மை நிகழ்ச்சி மற்ற இல்லவாசிகளுக்கு உந்துதலாக அமைந்து சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டய பயிற்சிக்கு பதிவு செய்தனர். அவர்களது மேல்படிப்பு பயிற்சிக்காக சுமார் ரூ.7 லட்சம் சிறைத்துறை மூலம் செலவிடப்பட்டது.

கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு அனைத்து இல்லவாசிகளும் பயில்வதற்கு ஏதுவாக நூற்றுக்கு நூறு கல்வித்திட்டம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிளைச்சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களிலும், கிளைச்சிறைகளில் 1500 இல்லாவாசிகள், மத்திய சிறைகளில் 4500 என மொத்தம் சுமார் 6000 இல்லவாசிகள் இந்தக் கல்வி இயக்கத்தில் பயனடைகின்றனர்.

எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்றவை என்றார் திருவள்ளுவர். கைநாட்டு ஒன்றே போட்ட பலர் எண்ணையும் எழுத்தையும் படிக்க முடிகிறது என்று ஆனந்தம் கொண்டனர். விடுமுறையில் செல்லும் போது மற்றவர் உதவியை நாடாமல் பஸ் ஏறி செல்லமுடிகிறது என்பதே தனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை என்றார் ஒரு இல்லவாசி. சிறை அலுவலர்கள் அரட்டல் மிரட்டலை விட்டு ஆசிரியர்களாக இல்ல வாசிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். கல்வித் துறையினரோடு தொடர்பு கொண்டு மத்திய சிறை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நட்த்தப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்வில் 76 இல்லவாசிகளும், பத்தாம் வகுப்பு தேர்வில் 100 இல்லவாசிகளும் பங்குகொண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 84 சதவிகிதம் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். தினகரன் என்ற பாளையங்கோட்டை சிறை ஆயுள் தண்டனை இல்லவாசி 66 சதவிகிதம் மதிப்பெண் பெற்றது, எடுத்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. கோவில்பட்டி கிளை சிறை உதவி ஜெயிலர் திரு சித்திரைவேல் தனிப்பட்ட முறையில் கல்வி பயிற்றுவிக்க சிறப்புபடிவங்கள் அமைத்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த தமிழக மைய அதிகாரி முனைவர் ராஜன் தலைமையில் மிக சிறப்பாக சர்வசிக்ஷா அபய்யன் மூலம் உதவி அளிக்கின்றனர். இதுதான் முழுமையான உண்மையான சிறை சீர்திருத்தம் என்று பலரது பாராட்டையும் சிறைத்துறை பெற்றது.

சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம் என்றார் அறிஞர் அண்ணா. அவர்கள் தனது சிறை அனுபவங்கள் அடங்கிய புத்தக்த்தில் சிறையிலிருந்து வெளியே செல்பவர்களை ‘நல்லவர்களாக‘ மாற்றவேண்டும் என்பது எவ்வளவோ முக்கியமானதோ, அவ்வளவு முக்கியம் வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது. குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க சமூகத்தில் பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கே உரிய நயத்துடன் சிறைப்பணியாளர்களின் மனப்போக்கையும், அவர்கள் பணிகள் செய்யும் விதத்தில் உள்ள முரண்பாடுகளையும் விவரிக்கின்றார். இந்த முரண்பாடுகள் களையப்படவும், அவர்கள் தலைநிமிர்ந்து பணிபுரிய தொடர்ந்து அவர்களை செம்மையான சிறை சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

குற்றவாளியை திருத்துதல் அவர்களுக்கு சமுதாய நற்பண்புகள் பயிற்றுவித்தல், புனர்வாழ்வு அமைத்தல், சமுதாயத்தோடு இணைத்தல் இவையே குற்றங்களை களையவல்ல நான்குமுனை கணைகள். அவையே தான் சிறை சீர்திருத்த கட்டமைப்பை தாங்கவல்ல தூண்கள்.


This Article Published in Dinamani Newspaper on 03.08.2009

No comments: