Wednesday, January 18, 2012

சமயம் இதுவே


இந்திய அரசியல் சாசனத்தில் துவக்கத்தில் கூறப்படும் குறிக்கோள்கள் சாசனத்தின் அடிப்படை நோக்கங்களை விளக்குகின்றன. இந்திய மக்களுக்கு சமுதாய, பொருளாதார சமத்துவ கோட்பாடுகளைப் பகிர்ந்து கொடுப்பது தான் அரசியல் சாசனம் மூலம் தோற்றுவிக்கப்படும் அமைப்புகளான, பாராளுமன்றம், அரசாங்கம், அமைச்சரவை நீதிமன்றங்கள் அரசு நிர்வாகம் போன்றவற்றின் தலையாய கடமை.

எது சிறந்த நாடு என்று பார்த்தால் எங்கு நல்லாட்சி நடக்கிறதோ, எங்கு மக்கள் சுபிட்சமாக அமைதியாக சந்தோஷத்தோடு வாழ்கிறார்களோ. அதுவே சிறந்த நாடு. ‘வண்மை இல்லை வறுமை இன்மையால், உண்மையில்லை பொய்யுரை இலாமையால்‘ என்ற கோசல நாட்டின் பெருமையை நயமுடன் விளக்குகிறார் கம்பன். அவ்வாறு இருந்த நாடுதான் நமது நாடு. சுய நலம் ஆட்கொண்டதாலும் எல்லோரையும் அணைத்துச் செல்லும் ஒப்புரவு குறைவதாலும் பிரச்சனைகள் தீராமல் நின்ற இடத்திலேயே ஒடிக்கொண்டிருக்கிறோம்.

கிரேக்க நாடு சட்ட வல்லுனர் ஐஸ்டின் கூறும் சட்ட கோட்பாடுகள் மூன்று. அவை நேர்மையாக வாழ்தல், ஒருவருக்கும் கெடுதல் செய்யாதிருத்தல், கடன் பட்டதை திருப்பி அளித்தல்.

எந்த சமுதாயத்தில் பாதிப்பிற்கு உள்ளாகாதவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்தியவரை, தவறு இழைத்தவரை தண்டிக்க ஒருங்கிணைந்து முற்படுகின்றனரோ அதுவே வாழ சிறந்த நகரம் என்கிறது பண்டைகால கிரேக்க அடைமொழி. இவை இன்றும் மக்களாட்சிக்குப் பொருந்தும்.

வெளிப்படையான நிர்வாகம், அமைதியான சூழல், திறமையாக இயங்கும் நிர்வாக அமைப்புகள், பயமில்லாத வாழ்க்கை இவற்றை உறுதி செய்தாலே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்,

ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்த ‘ஸ்டீவ் ஜாப்ஸ்‘ ஹார்வர்ட் பல்கலைக்கழக உரையில் பொருளாதார மதிப்பீட்டில் ஈடுகட்டமுடியாத மூலதனம் நேரம் ஒன்று தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். காலம் பொன்னானது என்று பெயரளவில் கூறுகிறோமே தவிர நேரத்தை மதிப்பதில்லை. காலம் ஒடிக்கொண்டுதான் இருக்கும். கழிந்த நேரத்தைப்பற்றி அங்கலாய்க்கிறோம், ஒட்டுனர் நாம் தாம் என்பதை மறந்து விட்டு! இல்லாவிட்டால் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் வறுமை ஒழிந்தபாடில்லை, தரமான கல்வி எல்லோருக்கும் சென்றடையவில்லை. நாற்பது ஆண்டுகளாக ஊழல் ஒழிப்பு மசோதாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலும் ஒழியவில்லை. சட்டமும் நிறைவேற்றப் படவில்லை.

சர்வதேச அளவில் சென்னை விமான தளம் விரிவடைய வேண்டும். அதற்கு நிலம் 2002 ல் ஒதுக்கப்பட்டும் சில சுயநலவாதிகளின் போராட்டங்களால் ஸ்தம்பித்தது. ஆனால் ஹைதராபாத், பங்களூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டன. சென்னை நகரில் உள்ள நெரிசலுக்குத் தீர்வு சாட்டிலைட் நகரங்கள் சென்னையைச் சுற்றி உருவாக்க வேண்டும். அதற்கு திட்டம் 2001-06 ஆட்சியின் போது வகுக்கப்பட்டது. மீண்டும் சில சுய நலவாதிகள் அரசியல் நோக்கத்தோடு தலையிட்டு முன்னேற்றத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்தனர். இத்தகைய முட்டுக்கட்டைகளினால் விலை மதிக்க முடியாத நேரம் விரயமானது. மற்ற மாநிலங்கள் முந்திக் கொண்டன.

வெளிநாடு சென்று வருபவர்கள் அங்கு இருக்கும் துய்மையையும், வெளிப்படையான நிர்வாகத்தையும், நேர்த்தியான கட்டமைப்புகளையும் புகழ்கின்றனர். நம்மிடம் திறமை இருக்கிறது. பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. இருந்தும் ஏன் சாதாரண பிரச்சனைகளுக்கும் தீர்வு இல்லை?

சாலைகள் செப்பனிடப்படுகின்றன. சில மாதங்களில் மீண்டும் பழுதடைகின்றன. மெரீனா fகடற்கரை உலகப்பிரசித்திப்பெற்றது. கடல் ஆர்ப்பரிப்பிற்கு முன் வேறு ஏதாவது செயற்கை அழகு எடுபடுமா? பீச் முகப்பை செப்பனிடும் பணியில் கோடிக்கணக்கான பணம் விரயமாகப்பட்டது. புறநகர் பகுதிகளில் சாலைகள் எவ்வளவு மோசமாக உள்ளன. அதை செப்பனிடாமல் வேண்டியவர்கள் வீடுகள் இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவது, நன்றாக உள்ள நடைபாதைகளில் டைல்ஸ ஒட்டுவது போன்ற பணிகள்தான் திரும்ப திரும்ப நடந்தன. இந்நிலை மாறவேண்டும்.

முன்னேறிய நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அந்தந்த நாட்டு மக்களின் உழைக்கும் திறன். முன்னேறிய நாடுகளில் உழைக்கும் போது முழு கவனம் செலுத்தி உழைப்பார்கள். நேரத்தை வீணாக்க மாட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் அதற்கு நேர்மாறான அணுகுமுறை. ஈடுபாடின்மை, தாமஸமான செய்கைகள், கவனமின்மை, வம்பளப்பது மொத்ததில் பணி நேரத்தை விரயமாக்குவது போன்ற தரமற்ற குணங்கள் காணப்படும். உழைப்பே உயர்வு என்று போற்றுவதால்தான் ஐப்பான் போன்ற நாடுகள் உற்பத்தியை பெருக்கியுள்ளன.

கடந்த சில வருடங்களில் இலவசங்கள் என்ற மாயையில் மக்களின் உழைக்கும் சக்தியை மங்கடித்து தொலைக்காட்சி மூலம் கேளிக்கைகள், விரசங்கள், அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் தான் பிரதானம் என்ற நிலை உருவாக்கி விட்டனர். மதுவிலக்கு அறுபதுகளில் தளர்த்தப்பட்டு இளைய சமுதாயம் சீரழிக்கப்பட்டதோ அதே நிலை உருவாகாமால் தெய்வாதீனமாக இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிற்கு இப்போது தேவை தரமான கல்வி மற்றும் பொருள் உற்பத்தியில் வேலை வாய்ப்பு. குஜராத் மாநில அரசைப் பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும் அம்மாநிலம் பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை மத்திய திட்ட கமிஷன் அங்கீகரித்துள்ளது. முக்கியமாக விவசாயத்தில் உற்பத்தி பெருக்கம், விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஈடு, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. பல கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு மிக சிறப்பாக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘ஸ்பீட், ஸ்கில், ஸ்கேல்‘ வேகம், திறமை, வளமை என்பதை நிர்வாகத்தின் குறிக்கோளாகக் கொண்டு குஜராத் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலும் சோம்பலும் தான் நிர்வாக சக்கரத்தை பழுதடையச் செய்கின்றன, சரி செய்ததால் நிர்வாகம் நிறைவாக செயல்படுகின்றது என்று கூறப்படுகிறது.

நமது முதல்வர் அவர்கள் முன்பு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகர் புறங்களில் முழுமையாக நிறைவேற்றி, வீராணம் குடி நீர் திட்டத்தையும் பூர்த்தி செய்து சென்னைக் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளித்தார்கள். அதுபோல் தமிழ் நாட்டில் உள்ள 17,250 ரெவின்யூ கிராமங்கள், 60 அறுபதாயிரத்திற்குப் மேற்பட்ட குக்கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமலாக்கப்பட்டால் வேளாண்மை பெரும் கிராமங்கள் செழிப்படையும்.

ஒரு மாணவி அரசு அளித்த கணினியை வைத்து படித்துக் கொண்டிருக்கும் படம் மனதைக் கவர்ந்தது. ஆனால் அவள் இருக்கும் வீடோ குடிசை வீடு. இந்த வீடு பசுமை வீடாக மாற்றும் அரசு அறிவித்து இருக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறப்பாக மக்கள் வாழ்கைத் தரத்தை உயர்த்தும். பசுமை வீடுகளுக்கு லட்சக்கணக்கில் செங்கல் தேவைப்படும். செங்கல் உற்பத்தி கிராம குடிசைத்தொழில். தரிசு நிலத்தில் செங்கல் செய்வது மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற தொகையும் கிராம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சூரிய ஒளியில்ருந்து மின்சார உற்பத்தி மிக சிறப்பான திட்டம். வீடுகளில் சோலார் தகடுகள் மூலம் வீட்டிற்கு தேவையான மின் சக்தி கிடைக்கும். மின் வெட்டு வருமோ என்ற கவலை இருக்காது. பல ஐரோப்பிய நகரங்களில் வீடுகளின் மாடியில் சோலார் பேனல் வைப்பதற்காக வாடகை விடப்படுகிறது. அந்த வகையில் சூரிய சக்தி ஈர்க்கும் திட்டம் நகரங்களில் விரிவாக்கப்பட்டால் சோலார் தகடுகளின் விலை குறையும், சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் அதிக செலவு என்ற நிலை மாறும்.

ஐக்கிய நாடுகள் சபை நாட்டின் நிர்வாகத்தின் ஆளுமையைப்பற்றி விவரிக்கும் பொழுது வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் தான் சிறப்பான அமைப்பிற்கு அடித்தளம் என்று உறுதிபட கூறியிருக்கிறது. நாடெங்கிலும் ஊழல் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. எல்லோரும் ஊழலை எதிர்க்கிறார்கள். ஆனால் அதற்கான சட்டம் நிறைவேற்றுவதில்தான் எவ்வளவு சிக்கல்கள்! ஒவ்வொருவரும் ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்‘ என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் சட்டம் நிறைவேற்றுவதில் மட்டும் ஊழல் அடங்குமா என்பது பெரிய கேள்விக்குறி. எந்த செயலை செய்தால் நமக்கு தூக்கம் தொலையுமோ அதுதான் நேர்மையற்ற செயல் என்று முதலமைச்சர் அவர்கள் நேர்மைக்கு தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

2011-ம் வருடம் போராட்டம் நிறைந்த வருடம் என்று கூறலாம். உலகில் பல நாடுகளில் பல இடங்களில் ஆட்சியாளர்க்கு எதிராக போராட்டம் ஏற்பட்டது. எகிப்து, துருக்கி,லிபியா போன்ற மத்திய கிழக்காசிய நாடுகளில் ஒரு விதமான போராட்டம். பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏன் பொருளாதார தலைநகரமாகிய நியூயார்க் நகரத்திலும் தொடர் போராட்டம் ஏற்பட்டது. ஊடகங்கள் விரிவடைந்து விட்டதால் கருத்து பரிமாற்றம் துரிதமாக நடைபெறுவதும் ஒரு காரணம்.

எல்லா மக்களும் விரும்புவது அமைதியான அபிவிருத்திக்கு வித்திடும் சூழல். நிர்வாகத்திறன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இந்த பற்றாக்குறையை சரிசெய்வது ஒன்றும் கடினமல்ல. துறைக்கு உகந்த அமைப்பை உருவாக்க வேண்டும். செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் தெளிவாக மேற்பார்வையிட வேண்டும். குறுக்கீடுகள் இல்லாது நேர்மையான பணிகளை உறுதி செய்ய வேண்டும்.

முன்னேற்றப்பாதையில் தடைக் கற்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் அவற்றை தகர்த்து வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றுவது தான் நிர்வாகத்தின் திறமை. நிர்வாகத் திறமை முக்கியம், ஆனால் அதே நேரத்தில் திண்மையான ஈடுபாடும் மக்கள் மேல் அக்கறையும் இருக்க வேண்டும். நல்லியல்புகளும் நேர்மையும் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையும் திண்மையும் இருந்தாலும் விழலுக்கு இறைத்த நீர் போல மறைந்து விடும். நேர்மை தான் நிர்வாகத்தை நிமிர்த்தும் முது கெலும்பு.

திறமை, திண்மை, நேர்மை தாரக மந்திரமாக அமைந்தால் மேலை நாடுகளைப்பார்த்து நாம் ஏங்க வேண்டாம். மற்றவர்கள் நம்மைப் பார்த்து வியப்பார்கள், போற்றுவார்கள், கூட்டுச் சேர விழைவார்கள்.

‘தேவி ப்ரோவ சமயமிதே‘ காப்பாற்றும் சமயமிதுதான் என்று தேவியை துதிக்கும் அழகான கர்நாடக சங்கீதப் பாடல். திறமை, திண்மை, நேர்மை இவற்றை அணிகலன்களாக கொண்டு துணிவுடன் நிர்வாகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் ‘சமயம் இதுவே‘.

Dinamani article

Friday, December 16, 2011

நோக்கு வர்மம்


ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கு உலக நாடுகள் மேற் கொள்ள வேண்டிய புத்தாயிர இலக்குகள் ஒன்று நிர்ணயித்தது. வறுமை ஒழிப்பு, கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவை இதில் அடங்கும். ‘மில்லனியம் கோல்ஸ்‘ என்ற இந்த இலக்குகள் 2015 க்குள் எட்ட வேண்டும் அதற்கு எல்லா நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் நல்லாட்சி எவ்வாறு அமைய வேணடும் என்பதையும் விவரித்துள்ளது. வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புணர்ச்சி, திறமை, செயல்திறன் நிரம்பிய அரசு அமைப்புகள், வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி பல தரப்பினரின் பங்களிப்பிற்கு துவான நிர்வாகம், குறை நிறைகளை கவனத்தில் கொண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் இசைவான நிர்வாகம் தான் சிறந்த நிர்வாகம். அதுவே சுயாட்சிக்கு வலிமை சேர்க்கும் நல்லாட்சி.

ஏழாம் அறிவு படத்தில் நோக்கு வர்மக்கலை எவ்வாறு தமிழகத்திலிருந்து சீனவுக்கு சென்று தற்காப்புக்கலைக்கே அடித்தளமாக அமைந்தது என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. வர்மக்கலை உடலின் சக்தியை உள்ளிருத்தி மன வலிமை மூலம் வெளிப்படுத்துவது. பண்டைக்கால மருத்தவ முறைகள் சித்த வைத்தியத்தின் நெறிகளை கற்றறிந்த போதிதர்மர் என்ற தமிழனின் வெற்றிப்பயணம் சீன மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். நோக்கு வர்மம் மூலம் ஒருவரை தன் வயப்படுத்த முடியும். இந்த நோக்கு வர்மம் அவ்வபோது மக்களுக்கும் வருகிறது. நல்லாட்சி நெறிகளிருந்து தவறினால் தமது கோபத்தை தேர்தலின் போது வாக்குச்சாவடியில் காண்பிக்கிறார்கள். துர்க்கி, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்களின் நோக்கு வர்மம் தீவிரமடைந்திருக்காவிடில் போராட்டம் வெடித்திருக்காது.

டிசம்பர் 10-ம் நாள் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் அடிப்படை உரிமைகளாக கருதப்படுகிறது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ற்படுத்த வேண்டும் என்று 1997-ல் இருந்து ஐயக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தி வருகிறது. மனித உரிமைகள் கல்வி பாடமாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் ஆய்வு மையங்களில் அமைத்தால்தான் விழிப்புணர்வு வளரும். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் புரிதலும் பல நாடுகளில் மிககுறைவு. இந்தியாவிலும் இதே நிலைதான். இல்லாவிடில் அடுத்தடுத்து இமாலய ஊழல்கள் தழைக்க விட்டிருப்பார்களா? நோக்கு வர்மம் என்ன சாதாரணப்பார்வையும் மங்கி விட்டதே!

அதனால் தான் மனித உரிமைகள் விழிப்புணர்வை தீவிரப்படுத்த சமுதாய கருத்துப் பரிமாற்ற முறைகள் மூலம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. பேஸ் புக், ட்வீட்டர், ப்ளாக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் சமுதாய இணைய தளங்கள் மூலம் மனித உரிமைகள் பற்றியும், எங்கு எவ்வாறு மீறப்படுகின்றன என்பதை எடுத்துத் சொல்ல வேண்டும். ஆனால் நேர்மாறாக மது நாட்டில் பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சர் தனி மனித இணைய தளங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது பலரால் ஒப்புக்கொள்ளப்படாமல் விவாதிக்கப்படுகிறது.

தகவல் பரிமாற்றம் தடையின்றி தாரளமாக இருந்தால் தான் உண்மை வெளிவரும். உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் உறைந்திருப்பது மீதி என்பது நிதர்ஸனம். தர்மத்தை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம் ஆனால் ஏன் அது லேசில் நடவாதிருக்கிறது? ஏன் கெட்டவை எளிதில் தலைதூக்குகிறது நல்லவை மங்குகின்றன? எதை முதலில் செய்ய வேண்டும்? கெட்டவற்றை களைய வேண்டுமா அல்லது நல்லவற்றை ஊன்றி போற்ற வேண்டுமா? இது பற்றி ஆய்வு பிரபல அமெரிக்க பல்பலைக்கழகத்தில் ராய் பாமிஸ்டர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. காலங்காலமாக சரித்திரத்தில் நல்ல சக்திகள் தீய சக்திகள் இடையே போராட்டம் நிகழ்ந்துள்ளன. நாடுகள் இடையே இனம், ஜாதி, மொழி, மதம், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக போராட்டங்கள் வெடித்துள்ளன. தனி மனிதனிடம் தாஸம், சாத்வீகம் ஆகிய இரண்டு குணங்களும் உண்டு. அந்த குருஷேத்திரப் போராட்டம் மனதில் தினமும் நிகழும். மேல் குறிப்பிட்ட ஆய்வில், கெட்ட நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கின்றது ஆனால் நல்லவற்றை அவ்வளவு நாம் ஆதரிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. நன்மைகள் நடக்கின்றன அவை நல்லவற்றை போற்றுபவர்களுக்கு மட்டும் ஆறுதலளிக்கிறது. ஆனால் தீயவை, நன்மைகள் தீமைகள் மட்டுமின்றி நல்லவர்கள் கொடியவர்கள் எல்லோரையும் பாதிக்கின்றது, சும்மாவா சொன்னார் வள்ளுவர் ‘தீயவை தீயன பயப்பதால் தீயவை தீயுனும் அஞ்சப்படும்‘ என்று!

தீயவை, நல்லவை எவ்வாறு நிர்வாகத்தை பாதிக்கிறது என்று பார்த்தால் ஒரு தீய குணம் படைத்த லஞ்சத்தில் உழலும் அதிகாரியால் அந்த நிர்வாகமே குலையும். எவ்வாறு ஆப்பிள் கூடையில் ஒரு அழுகின ஆப்பிள் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் கெடுப்பது போல. நிர்வாக சரிவிற்கு அந்த ஒரு ஊழல் அதிகாரி போதும். கெட்டுப் போன ஆப்பிளை உடனே தூக்கி எறிவது போல திறமையற்றவர்கள் சுயநலவாதிகளை உடனே களையெடுத்தால்தான் நிர்வாகம் சீராக இயங்கும் என்று ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

எந்த ஒரு நபர் தன்னை முதலில் இருத்தி சக ஊழியர்களை புறக்கணிக்கிறாரோ, எவர் சுய நலத்திற்காக துறையின் மேலாண்மையை அவமதிக்கிறாரோ அத்தகையவரை உடனே நீக்க வேண்டும். எவ்வளவு நல்ல திறமைசாலிகள் இருந்தாலும் ஒரு சுயநலக்காரர் நிறைவான பணிச் சூழலை கெடுத்துவிடுவார். இத்தகைய களையெடுப்பை திறம்பட செய்த ஒரு அமெரிக்க கம்பனி, திறமையாளர்கள் பிரகாசிக்கும் சூழலை உருவாக்கியதற்கான பரிசைப்பெற்றது.

ஆனால் அரசு நிர்வாகத்தில் சில இடங்களில் நேர்மாறாக நடக்கிறது. நெளிவு சுளிவு தெரிந்தவர்கள் தான் நிலைக்கிறார்கள், வேண்டப்படுகிறார்கள் போற்றப்படுகிறார்கள். இது எதானால் சாத்தியமாகிறது என்று அதிகம் ஆராய வேண்டியதில்லை. ஊழலுக்கு துணை போவது ஒன்றுதான் காரணம்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒவ்வொரு மாதமும் 80 லட்சம் புதிய மொபைல்ile phone இணைப்புக்கள் பதிவாகின்றன. இதில் 90 சதவிகிதம் முன் கட்டணம்(pre-paidpaid) அதுவும் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு டாப் அப்up செய்யும் ழைகள். தகவல் பரிமாற்றம் விரிவடைந்தால் வர்த்தகம் பெருகும், உழைக்கும் வர்கம் பயன்பெறும். இதைமேலும் வலுவடைச் செய்வதை விட்டு விட்டு இதில் லஞ்சம் மூலம் அதாயம் தேடுபவர்கள் தேச துரோகிகள்.

ஜெயிலுக்கு செல்வது இப்போது வெற்றியின் அடையாளமாக திரிக்கப்படுகிறது. ஜெயிலிலிருந்து தற்காலிகமாக வெளிவருபவர்களுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாட்டின் நலனுக்காக போராடி சிறைவாசம் செய்து தியாகம் செய்தவர்கள் எங்கே? மக்கள் பணத்தை சூறையாடி சட்டத்தை அவமதிப்பவர்கள் எங்கே? தாழ்ந்துவிட்ட தமிழகமே என்று வேதனைப்படாமல் இருக்கமுடியாது.

தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று அமைத்து பொது நலத்தில் ஈடுப்பட்டிருக்கும் ஒய்வு பெற்ற உயர் அதிகாரி அரசு அமைப்புகளோடு தொடர்பு கொள்வதில் உள்ள சிக்கல்களை மனம்வெதும்பி தனது இணையதளத்தில் விவரிக்கின்றார். பொதுவாக அரசு நிர்வாகத்தில் சுயநலவாதிகள் தான் அதிகம். தில்லி அரசு அலுவலகங்களில் விளையாட்டாக கூறுவார்களாம் ‘முதலில் என் சொந்த வேலை, பின்பு உன்னுடையது நேரம் இருந்தால் அரசுப் பணி‘ என்று! இந்த நிலை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது உண்மை. அரசு நிர்வாக அமைப்பில் எடுக்கக்கூடிய முடிவுகளை எதிர்த்து முறையிட வழியில்லை. எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு செல்ல சாத்தியமில்லை. பல முடிவுகள் தவறு மட்டுமல்ல தார்மீக அடிப்படையில் கொடியவை என்று மனம் வெதும்புகிறார் அந்த உயர் அதிகாரி.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையம் உள்ளது. தகவல் அறியும் சட்டம் உள்ளது அதற்கான ஆணையம் இயங்குகிறது. அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு இந்த அமைப்புகளின் கடமை முடிந்துவிடுமா? எவ்வளவு சமூக ஆர்வலர்கள் போராடி முடிவுகள் பெற வேண்டியிருக்கிறது. இந்த ஆணையங்களில் உள்ளவர்கள் சுய உந்துதலோடு செயல் படுகிறார்களா? மக்களுக்கு எந்த அளவு உதவுகிறார்கள்?

சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகியும் மலங்களை மனிதர்கள் சுமந்து அகற்றும் நிலை இன்னும் பல கிராமங்களில் இருக்கின்றதே, கை வண்டி இழுத்து உடல் நோக சிலர் உழைத்து ஜீவிக்க வேண்டியிருக்கிறதே, எச்சில் இலைகளில் மீதம் உள்ளவற்றை வைத்து வயிற்றை கழுவ வேண்டியிருக்கிறதே, ங்கும் இடம் இல்லாததால் கல்லறைக்கு அருகில் ஒண்டி குடும்பம் நடத்தும் அவல நிலை இன்றும் இருக்கிறதே, இவை எல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா? பொதுவான புள்ளி விவரங்கள் சங்கடமில்லா தகவல்கள் தவிர தேவையான தகவல்கள் பெறமுடிகிறதா? தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்களுக்காக போராடிய சத்யேந்திர தூபே, நாகராஜன் போன்ற 15 சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையான நிலமை. அவர்கள் செய்த ஒரே குற்றம் நிர்வாகத்தில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தது ஒன்று தான்.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி. மனித உரிமைகள் தினத்தை ஒட்டியே அந்த மகா கவியின் பிறந்த தினமும் வருகிறது. ஜகத்தினை அழிப்பது அல்லது திருத்துவது ஒரு பக்கம், குறைந்த பட்சம் கேள்வி கேட்பவருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர் ஏதோ சமூக எதிரிபோல பார்க்கப்படுகின்றார் வன்முறைக்கு பலியாகிறார். இது தான் வேதனை. தமது உரிமைகள் பற்றி போதிய புரிதலைப்பெற்று எல்லோரும் கேள்விக் கேட்க வேண்டும் அப்போது தான் நிலமைமாறும் என்பது தான் மனித உரிமைகள் தினத்தை தொடர்ந்து சர்வ தேச மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள செய்தியின் மையக்கருத்து.

மூன்றாவது சுதந்திரப் போராட்டம் என் வகையில் ஊழலுக்கு எதிரான குரல் ஒங்கியுள்ளது. ஊழல் மிகப்பெரிய மனித உரிமை மீறல். வலுவான சட்டமும், தீர்கமான நடைமுறையும் தான் மனித உரிமைகளை நிலை நாட்ட வழி செய்யும்.

தீய சக்திகளுக்கு எதிரான மக்களின் ‘நோக்கு வர்மம்‘ தீவிரமடைய வேண்டும்.

(ஆர்.நடராஜ்,இ.கா.ப.,)

natarajips@gmail.com

This article published in Dinamani on 14.12.2011