Monday, September 6, 2010

கதவில்லா சிறைகள்

சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை பெற்றவர்களை துன்புற்றவேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதை காண்கிறோம். குற்றம் புரிந்தவர்கள் அனுபவிக்கவேண்டும், வசதிகள் மறுக்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் குற்றம் புரிந்தவர்களை சீர்திருத்தும் நடவடிக்கையே சிறைச்சாலைகளின் முக்கியமான பணி என்ற கருத்தும் மாறி மாறி வரும்.

சாதாரண நாட்களில் சிறைச்சாலைகளில் எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மக்கள் வரவேற்பைப் பெறுகின்றன. அதே சமயம் கொடுங்குற்றங்கள் பெருகும் பொழுது எதற்காக இத்தகைய கொடுங்குற்றவாளிகளுக்கு வசதிகள் கொடுக்க வேண்டும், புரிந்த குற்றத்திற்கு அவர்கள் இன்னலுற வேண்டும் என்பது சராசரி மக்களின் எண்ணம் என்பதை மறுக்க முடியாது.

சமுதாய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிறை நிர்வாகம் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அத்தகைய அணுகுமுறை சரியானதுமல்ல. சிறைச்சாலைகளின் தலையாய பணி நீதிமன்றம் மூலம் சிறையிலிடப்படுபவர்களை பாதுகாப்பாக வைத்து சிறைவாசம் முடிவுற்றப் பிறகு விடுதலை செய்தல். சிறைவாசம் அனுபவிக்கும் பொழுது அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கியதால் அவரது சுதந்திரம் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் மற்ற உரிமைகள் பாதுகாக்க வேண்டியது சிறை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல வரையறுக்கப்பட்ட கடமையாகும்.

தேசிய உரிமைகள் ஆணையம் உணவு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற முக்கிய உரிமை பிரச்சனைகளோடு காவலில் பாதுகாப்பும் முக்கியமாக பேணவேண்டிய உரிமை என்று கூறியுளளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கிய இத்தருணத்தில் சிறைவாசிகள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் மக்களிடையே சிறைவாசிகளை நல்வழிப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு பரவச் செய்து சமுதாயத்தின் ஒத்துழைப்பு பெறுவதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை.

சிறையிலிடப்படுபவர்களை கடுமையான வேலையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற நிலை சிறைநிர்வாகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தது. அவர்கள் சாலை செப்பனிடுதல், சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 1836-38ல் அமைக்கப்பட்ட அகில இந்திய சிறை நிர்வாக கமிட்டி இவ்வாறு கடும் பணிமுறையை ரத்து செய்யவேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆயினும் 1877ம் ஆண்டு நடைபெற்ற சிறைநிர்வாக கலந்தாய்வுக் கூட்டத்தில் கைதிகளை பொதுப்பணியில் ஈடுபடுத்தும் திட்டம் மீண்டும் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1919-1920ல் மீண்டும் கூடிய சிறை நிர்வாக கமிட்டி சிறைவாசிகள் நிலையையும் அவர்கள் செய்யக்கூடிய பணியையும் ஆராய்ந்து விவசாயம், தோட்ட வேலை சம்மந்தப்பட்ட பணிகள் அவர்களுக்கு உகந்த பணி என்றும் இவ்வாறு திறந்தவெளி பணிகளில் அவர்களது மனநிலையும் சீராகும் என்று பரிந்துரை வழங்கியது. ஆனால் நடைமுறை சிக்கல்களால் இவற்றை அமல்படுத்த முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் தலைவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1950-51ல் ஓய்வுபெற்ற நீதிபதி திரு கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் தலைமையில் சீர்திருத்தக்குழு தமிழ்நாடு, கேரளா சிறைகளை பார்வையிட்டு சிறைச்சாலைகள் சிறைவாசிகளை சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்பதன் அடிப்படையில் பல பரிந்துரைகளை அளித்தது.

சிறைச்சாலைகள் சமுதாயத்தின் மருத்துவமனைகள் என்றார் அண்ணல் காந்தியடிகள். சிறைவாசிகள் அடிமைகள் அல்ல அவர்கள் நாட்டின் உடமைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற உயரிய கருத்தினை வலியுறுத்தினார். இந்தியாவில் பல மாநிலங்களில் சிறை நிர்வாக சீர்திருத்த நிபுணர் என்று முத்திரைப்பதித்த திரு டபிள்யூ. ஜி. ரெக்ஸின் என்ற அமெரிக்கர் தலைமையில் 1950-ம் வருடம் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்தியச் சிறைகளை பார்வையிட்டு அளித்த அறிவுரைகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமான பரிந்துரைகள் சிறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி, விடுதலைக்குப்பின் புனர்வாழ்வு, அவர்களின் நன்னடத்தை கவனிப்பு, சமுதாயத்தோடு இணைவதற்கான உதவி, சிறைகளில் மன அமைதிக்கான பயிற்சி என்று பல முற்போக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

1980ம் ஆண்டு நீதியரசர் திரு ஏ.எஸ். முல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சிறை சீர்திருத்தக்குழு சிறைகள் நவீனமயமாக்கல் திட்டத்தை அளித்தது. இதையேதான் 1977ம் வருடம் நீதிபதி இஸ்மாயில் குழு அவசரநிலை பிரகடனத்தின்போது சென்னை மத்திய சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்து சிறைகளை நவீனப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியது. ஓய்வு பெற்ற உயர் போலிஸ் அதிகாரி திரு எஸ்.எம். டயஸ், பேராசிரியர் வெங்கோபராவ் ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டு பாட்னா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன் அவர்கள் தலைமையில் 1978-79-ல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறைகள் சீர்திருத்தக்குழு அளித்த பரிந்துரைகள் சிறை சீர்திருத்த நடவடிக்கைகளின் மைல்கல் எனலாம். இந்தக்குழு மிக சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு 178 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமான பரிந்துரை பல மாவட்டங்களில் திறந்தவெளி விவசாயக் காலனிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான். மருத்துவமனை வசதி, குறைகளை நிவர்த்தி செய்ய கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்தல் ஒருங்கிணைத்த சிறை நிர்வாக சட்டம் அமலாக்கம் என்ற பல முற்போக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

1785 ம் வருடம் ஜெமிமி பென்தாம் என்ற ஆங்கில சமூக சிந்தனையாளர் பான் அப்புகான் என்ற வட்ட வடவமுள்ள சிறை கட்டிட வடிவமைப்பினை புனைந்தார். அதில் கதவுகளோ, சுவர்களோ அதிகம் இல்லாது குறைந்த பணியாளர்களை வைத்து கண்காணிக்க உதவும். சிறையிலிருந்து தப்புவதை யாராவது பார்த்துவிடக்கூடும் என்ற அச்சமே தப்பிக்க முய்ல்வதைத் தடுக்கும் என்பது இந்த வடிவமைப்பின் உள்நோக்கம்.

திறந்தவெளி சிறைகளில் கதவுகள் இல்லை காவல்காக்க காவலருக்கும் அவசியம் இல்லை. இங்கு விவசாய பணி செய்யக்கூடிய சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறைந்தபட்சம் கால்பாகம் அனுபவித்திருக்க வேண்டும். விடுதலையாவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருப்பவர்கள் திறந்தவெளி சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் சாதாரண சிறைகளில் இருப்பவர்கள் ஒழுக்கமாக விதிகள் மீறாமல் நடப்பதற்கு ஊக்கமளிக்கும்.

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் உட்பட 1276 சிறைகள் உள்ளன. இதில் மத்திய சிறைகள் 113. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்கள் உள்ளன. அதிகமான சிறைகள் உள்ள மஉறாராஷ்டிரா மாநிலத்தில் 153 சிறைகள். 13 மாநிலங்களில் தான் திறந்தவெளி சிறைகள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 10 திறந்தவெளி சிறைகளும், மஉறாராஷ்டிராவில் மூன்றும், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாட்டில் தலா 2 திறந்த வெளி சிறைகளும் உள்ளன.

கோயமுத்தூர் சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளி சிறை 30.72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வருடத்திற்கு சராசரி ரூ.8,85,360/- லட்சம் வருவாய் அறுவடைசெய்யப்படும் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மூலம் ஈட்டப்படுகிறது. சேலத்திற்கு அருகில் இருக்கும் விவசாய தோட்டம் 10 ஏக்கர் அதிலும் பிரதானமாக காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் புரசுருடைஉடைப்பு என்ற இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கு 87.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகர எல்லையில் திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் 33.06 ஏக்கர் நிலத்தில் விவசாயத் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மத்திய சிறை வெளிப்புறத்தில் 51.03 ஏக்கர் நிலம் சிறைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கும் திறந்தவெளி சிறை அமைக்க உரிய இடம். திருநெல்வேலி வாகைக்குளம் அருகில் திறந்தவெளி சிறை அமைக்க நிலம் தெரிவு செய்ய துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மத்திய சிறை அமைந்துள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது. நகரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் பிரதான இடங்களில் அமைந்துள்ள சிறைத்துறையின் நிலங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். இந்த அரிய இடங்களைப் பாதுகாப்பாக பேணிய சிறைப்பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். கோவை நகரம் மத்திய சிறை அமைந்துள்ள 45 ஏக்கர் இடம் செந்தமிழ் பூங்காவாக பராமரிக்கப்படவுள்ளது. கோவை நகரின் நுரையீரலாக மக்களுக்கு ஆரோக்கியத்தை நல்கும்.

வறுமை, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் இந்த இரண்டு முக்கிமான பிரச்சனைகள்தான் குற்றநிகழ்வுகளுக்கு காரணம். மேலை நாடுகளில் உள்ளது போல் குற்றம் புரிவதை தொழிலாக செய்பவர் வெகு சிலரே. இதை மனதில் கொண்டு தான் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நரசிம்மன் கமிஷன் மணியான பரிந்துரைகளை கொடுத்திருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த ஆணைகளும் அரசு கொடுத்திருக்கிறது. அவைகளை முழுமையாக அமல்படுத்துவது சிறைத்துறையின் பொறுப்பு. அதை ஊக்குவிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. ஜாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றில்லாமல் ஒரு சீராக சிறை சீர்திருத்தம இயங்க வேண்டும். சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் இணைவத்ற்கு வழிவகுத்தல் சிறை சீர்திருத்தத்தின் உயிரிய குறிக்கோள் என்பதை மறந்துவிடக்கூடாது.

சில குற்றங்களுக்கு கம்யூனிட்டி சர்வீஸ் அல்லது சமுதாய பணி மாற்று தண்டனையாக வழஙக வேண்டும் என்ற சட்டம் ஆந்திரா மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறை பொறுமை என்ற சிறந்த குணத்தை வளர்க்கும் இடம். மனது ஆறப்போட்டால் அது பதப்படும். நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியும், உள்ளத்தில் படிந்துள்ள கள்ள கபடங்களை அகற்றவல்ல மன அமைதியை தரக்கூடிய வாழும் கலை பயிற்சியும் திருந்திவாழ்வதற்கான நல்வழிப்பாதை. இயற்கை சூழ்நிலைதான் அதற்கு அரிய மருந்து. கதவில்லா சுவரில்லா திறந்தவெளி சிறைதான் இந்த அரிய காயகல்பத்தை வழங்க வல்லது.

The Article Published in Dinamani on 03.09.2010

Thursday, July 22, 2010

திக்குத் தெரியாது வீதியில்

ல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர். மயானத்தைச் சுற்றி பல கதைகள். சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்கள். மனதை மருளச் செய்யும் இத்தகைய இடங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றால் நம்புவது கடினம். இது நகரங்களில் ஏற்படும் நெரிசலின் விளைவு.

நகரங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருகிறது. பிரகாசமான எதிர்கால கனவை மனதில் தேக்கி வேலையைத்தேடி கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் 10 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். நமது நகரங்களின் ஜனத்தொகை அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகைக்கு சமம். இந்த அதிகரிப்போடு நகரங்களின் அடிப்படை வசதிகளின் தேவையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, நல்ல சுகாதாரம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படவேண்டும் என்றும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சமுதாயத்தின் பொறுப்பும் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. தென்ஆப்பிரிகா நாட்டின் அரசியல் சாசனத்தில் அந்நாட்டு மக்களுக்கு வீடு அடிப்படை உரிமை என்றும் வசதி செய்து கொடுக்கவேண்டியது அரசின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியில் நீதிமன்றம் மூலம் நிலை நிறுத்தக்கூடிய பிரிவுகளாக உள்ளன. ஆயினும் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி போன்றவற்றை அரசாங்கம் தனது அடிப்படை கொள்கைளாக வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வசிக்க வீடில்லாமல் பராரியாக அண்டியும் ஒண்டியும் வாழும் மக்களின் பிரச்சனை பெரிய சமுதாயப் பிரச்சனையாக உள்ளது. அது மேலும் வருங்காலத்தில் பூதாகரமாக உருவெடுக்கும் என்று ஐக்கியநாடுகள் கவலை தெரிவித்திருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 10 கோடி மக்கள் ஸ்திரமான வீடில்லாமல் நாடோடிகளாக திரிகிறார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. அதில் கணிசமானவர்கள் ஏழை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குடியிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலைக்கு ஏழ்மை, வேலையின்மை, ஆயுததாக்குதலால் குடிபெயர்தல், குடும்ப பூசல்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், மனநிலை பாதிப்பு போன்ற பலகாரணங்கள் கூறலாம். நகரங்களுக்கு வேலை தேடிவருபவர்கள் வேலை கிடைக்காமல் சமுதாயத்திற்கு சுமையாக தெரு ஓரங்களிலும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், குடிசைப் பகுதிகளிலும் ஒண்டியிருப்பதைப் பார்க்கலாம். முதலில் தற்காலிகமாக தங்குபவர்கள், மெல்ல அண்டுவதையும் அதில் சிலர் சுரண்டிப் பிழைப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சமுதாய சுமைகளை “ஸ்கவாட்டர்ஸ்” என்றும் “ஸ்பான்ஜீஸ்” என்றும் மேலை நாடுகளில் வரையறுக்கின்றனர். இத்தகைய மனித உண்ணிகளை வழிநடத்தி சமுதாயத்தோடு உபயோகமானவர்களாக இணைப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.

காலம் காலமாக காவல் துறைக்கு பராரியாக திரிபவர்களை கண்காணித்து அவர்கள் குற்றங்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. வேலையற்று திரியும் இளைஞர்கள் அடிமைத் தொழிலாளர்களாக சிக்கி மிக மோசமான நிலையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

வேலையில்லாது தத்தளிக்கும் பல இளைஞர்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் ஏற்படுவது இயற்கை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு இடைத்தரகர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 1993ம் வருடத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல இடங்களில் குண்டு மறைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வைக்க இவ்வாறு பராரியாக ஒண்டியவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுமார் 100 கோடி ஜனத்தொகை கொண்ட நமது நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலாவது இருக்கும். நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவின் திறந்த எல்லையைக் கடந்து குடியிரிமை இல்லாத மக்களின் நிலை மற்றொரு சிக்கலான பிரச்சனை.

மேலை நாடுகளிலோ, மற்ற இடங்களிலோ வேலை வாங்கித்தருவதாக ஆசைக்காட்டி மனிதர்களை வைத்து நேர்மையற்ற வியாபாரம் செய்யும் தரகர்கள் நகரங்களில் அண்டிப் பிழைக்கும் குடும்பங்களை குறிவைக்கின்றனர், அதில் பல பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். உலகில் பல நாடுகளிலிருந்தும் இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதில் 68 சதவிகிதம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வணிகத்தில் சிக்குகின்றனர். நேபாளத்திலிருந்து சராசரி ஆண்டொன்றுக்கு 2 லட்சம் நேபாளி பெண்கள் கடத்தப்பட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதர்களை கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் “க்ரைம் சிண்டிகேட்” என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிக கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தால் போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது என்பது சர்வதேச போலிஸ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.

அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதல் பத்து நகரங்கள் ஆசிய நாடுகளில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோவிற்கு அடுத்து வரும் மும்பை நகரின் ஜனத்தொகை 2015ம் ஆண்டு சுமார் 2 கோடியே எண்பது லட்சத்தை எட்டிவிடும். இந்த ஜனத்தொகை பெருக்கத்தோடு வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

வருங்காலத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கக்கூடிய நெரிசலை சமாளிப்பது ஒன்று தான். இந்த நெரிசல் தனிமனிதனை மறைத்து விடுகிறது. நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் என்று மிதக்கும் மக்கள் கூட்டம் வேறு. இந்த மக்கள் கூட்ட கண்காணிப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சந்தேகமான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல். மற்றவர்களை குற்றங்களில் ஈடுபடாத வகையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களில் உறையச் செய்யும் கயவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட தனிக் காவல் பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுத்தல் என்று மூன்று வகையான முக்கியப் பணிகள் காவல்துறைக்கு உண்டு.

இருக்க இடமில்லாமல் அலையும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. நாற்பது வயதுக்குள் தனியாக முகாந்திரம் இல்லாத பெண் என்றாலே காவல் துறையினர் விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பிவிடுவார்கள். மனித உரிமைகள் விழிப்புணர்வினாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் சந்தர்பவசத்தால் பாலியல் தொழிலில் சிக்கும் பெண்கள் குற்றவாளிகளாக பாவிக்காமல் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்ற நிலை வரவேற்கத்தக்கது. இவ்வாறு மீட்கப்படும் பெண்கள் குடும்பத்தோடு இணைக்கப்படுகின்றனர் அல்லது சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

ஒண்ட இடமில்லை என்றாலே அது ஒருவரது மனநிலையை வெகுவாக பாதிக்கும். நகரங்களில் வீடும் வேலையும் இல்லாதவர்கள் முக்கால் சதவிகிதம் இத்தகைய மனநிலை அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்களை இது மேலும் பாதிக்கும். போதைப் பொருள் கடத்துபவர்கள் இவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி போதைப் பொருள் விற்பதற்கு பரவலாக அனுப்புகிறார்கள். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டாலும் போதை முதலைகளுக்கு கவலையில்லை ஏனெனில் பராரியாக திரிபவர்களுக்கு குறைவில்லை. இந்த குற்றச் சூழலை முறியடிப்பது நகரக் காவல்துறையின் தலையாய பணி. தவறினால் அது சட்டம் ஒழுங்கை வெகுவாக பாதிக்கும்.

ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதில் செம்மையான பணிகள் செய்து வரும் நிறுவனம் “பானியன்” என்ற தன்னார்வ தொண்டு மையம். 2004ம் வருடம் பானியனோடு சென்னை புறநகர் காவல்துறை இனணந்து “டயல் 100” என்ற திட்டத்தை வகுத்து சென்னை நகரில் ஆதரவற்று வாடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்தோடு இணைப்பது அல்லது சுயமாக வேலை செய்து பிழைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே சுமார் 300 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. காவல்துறைக்கு நல்லவடிவம் கொடுக்கும் இத்திட்டம் இன்றும் செயலாக்கத்தில் உள்ளது.

நாடு முன்னேற்றம் அடைந்து வருவதின் பயன் எல்லோருக்கும் சென்று அடைந்தால் தான் சமுதாயம் சுமுகமான நிலையில் செயல்படும். ஏழைகளின் நிலை ஓரளவு உயர்திருந்தாலும் பணக்காரகள் பன்மடங்கு பெருகிவருவதோடில்லாமல் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. சமுதாயத்தில் உள்ள இத்தகைய மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவது நமது கடமை. சட்டீஸ்கர், ஒரிசா, பீஉறார் மாநிலங்களில் சில பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ந்துவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை இந்தியாவின் நெரிசல் மிக்க நகரங்களுக்கும் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியின் பயன் நிறைவாக எல்லோருக்கும் நிரவப்பட்டால் தான் அமைதி காக்க முடியும். முதல் கட்டமாக அண்டியும் ஒண்டியும் வீதியில் இருக்கும் திக்கற்றவர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தால் தான் சமுதாய அமைதி சாத்தியமாகும்.

Published in Dinamani Newspaper on 19.07.2010