Monday, October 15, 2012

காந்திஜிக்கு உண்மையான அஞ்சலி



காந்தியடிகளை புத்தகத்திலும் ரூபாய் நோட்டிலும் பதித்துவிட்டு காந்திய கோட்பாடுகளைப் புதைத்துவிட்டோம்.  காந்தீய சிந்தனைகளில் மிக முக்கியமானது அஹிம்சை மற்ற உயிரினங்களை வதைக்காமல் இருத்தல்,  பாதுகாத்தல் அஹிம்சை என்று பரவலாக உணரப்படுகிறது.  ஆனால் அஹிம்சை என்பது இது மட்டுமல்ல.  தன்னடக்கத்தின் உச்சகட்டம் தான் அஹிம்சை என்கிறார் காந்தியாடிகள்.  அதாவது தன்னைப்பற்றி சிந்தனையை குறைத்து மற்றவர்கள் நலனில் அதிக கவனம் கொடுப்பது உண்மையான சுயநலமற்ற நிலை. தன்னடக்கம் என்பது தன்னைப்பற்றி குறைவாக மதிப்பிடுவது அல்ல.   தன்னைப் பற்றியல்லாமல் பிறரைப்பற்றி அதிகமாக நினைப்பதே தன்னடக்கம்.  பிற ஜீவரசிகளை பரிவோடும் பாசத்தோடும் பாதுகாக்க நினைப்பவன் உயர்ந்த அஹிம்சைவாதி, தன்னடக்கம் மிகுந்தவன்.  இது தான் அஹிம்சையின் இலக்கணம்.
தனது வாழ்க்கையே இந்தியாவிற்கு தான் அளிக்கும் செய்தி என்றார் காந்தியடிகள்.  தனது சிந்தனைகளையும், கருத்துக்களையும் நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்.  எண்ணங்களும், வாக்கும், செயல்களும்.  ஒருங்கிணைய வேண்டும்.  சொல்வது ஒன்று செயல்வேறு என்ற நிலையால்தான் பின்னடைவு ஏற்படுகிறது.  உண்மையான ஆளுமை என்பது முன் உதாரண செயல்களில்தான் வெளிப்படும்.  காந்தி மகான், அன்னை தெரேசா, விவேகானந்தர் போன்றவர்கள் நேர்மையின் அடிப்படையில் உழைத்தால் வெற்றி கண்டனர்.  சமுதாயம் பயன் பெற்றது.  ‘கொடுப்பதில் ஆனந்தம்’, “கனிவான மக்கள் ஆனந்தமான நகரம்” என்று காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது நிறைவு தருகிறது.
     வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  அந்தப்பிரச்சனைகளைத் தீர்பதற்கான முடிவு நமது கையில்.  எந்த முடிவு எடுப்பது என்பது அன்றாட போராட்டம்.  சிறு விஷயங்களிலிருந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டங்களில் நாம் எடுக்கக்ககூடிய முடிவு திருப்பு முனையாக அமையும். பல நேர்வுகளில் நாமும் எடுத்த முடிவைப்பற்றி வருத்தப்படும் நிலை ஏற்படும்.  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், யோசிக்காமல்  வருவது வரட்டும் என்று அகங்காரத்தோடு செல்லக்கூடிய பாதையை தெரிவு செய்யும் பொழுது இடர்பாடுகள் நிச்சயமாக வரும்.
     பேராசையால் பெரு நஷ்டம் என்பதை கண்கூடாக பல நிகழ்வுகளில் பார்க்கிறோம்.  ஆனாலும் விட்டில் பூச்சிகள் போல் மனிதர்கள் ஆசை என்ற மாயையில் சிக்கி மடிகிறார்கள்.  ஈமு கோழிப்பண்ணை என்று விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் ஒரு கும்பல் சுருட்டிவிட்டது.  ஏமாறுவதற்காகவே சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பணம் பாதாளம் பாயும் என்பார்கள். பணத்தாசை நம்மை ஆட்டுவிக்கிறது.  பண்டம் பரிமாற்றங்களுக்கு பணம் தேவைதான்.  உபயோகமானதும் கூட.  ஆனால் பணம் நமக்கு கீழ்படிய வேண்டுமே தவிர நாம் பணத்திற்கு அடிமையாகக் கூடாது.  பணம் நமக்கு  உதவக்கூடிய வகையில் வழியைக் கண்டுபிடித்தால் அது மனித குலத்திற்கே சேவை செய்யும்.  ஆனால் பணம் பேராசைப் பிடியில் சிக்கியவர்களை கட்டி ஆள்கிறது.
     பணம் சேகரிப்பு என்பது ஒரு கொடிய நோய்.  அது பரவி நம்மை ஆட்கொண்டு விடுகிறது.  எவ்வளவு பணம் சேர்ப்பது.  ஒரு சேர எவ்வளவு அனுபவிக்க முடியும்.  இருப்பதோ ஒரு வயிறு,  இரு கால்கள், இரு கைகள், ஐம்புலன்கள்.  அதிக பணம் சேர்ந்தவுடன் ஒரு வித சோகம் படர்கிறது.  நெஞ்சு குருகுருக்கிறது.  ஏதோ ஒரு குற்ற உணர்வு வாட்டுகிறது.  பணம் குறுக்கு வழியில் சம்பாதித்திருக்கலாம்.  பலரை ஏமாற்றி சேர்த்திருக்கலாம்.  ஏழைகளுக்கு சேர வேண்டியதை மடக்கி வைத்திருக்கலாம். 
     இத்தகைய நிலையில் பணக்கார மனிதன் இரண்டு வகைப்படுகிறான்.  குற்ற உணர்வைப் போக்குவதற்காக  மற்றவர்களுக்கு பண உதவி செய்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறான்.  குற்ற உணர்விலிருந்து விடுபட முயற்சிக்கிறான்.  மற்றொரு வகை பேராசைப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மனம் நொந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறான். எவ்வளவு பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை பணம் இருந்தும் வருவதில்லை.
     வாழ்க்கையில் சிலவற்றை விலைபேச முடியாது.  பணத்தால் வாங்க முடியாது.  அன்பு, பாசம், பரோபகாரம், தியானம், நன்றி மனப்பான்மை நம்முள் வளர வேண்டும்.  பணத்தால் வாங்க முடியாது.  ஆனால் இவற்றைப் பற்றி பலர் யோசிப்பதில்லை, யோசித்தார்கள் என்றால் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் பெருகியிருக்குமா,  இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன, மலைகள் மடுவாகின்றன.  பெயர்த்தெடுத்த கிரானைட்டுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்,  ஏற்றுமதி வளர்கிறது என்று இருமாப்படைய முடியுமா?  நமது வளங்கள்தான் அழிகின்றன.  ஆந்திர மாநிலத்தில் மலைகள் கொடையப்படுவது எல்லை மீறியது என்பதால், மலைகளைப் பாதுகாக்க பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன.  ஆயினும் கிரானைட் க்வாரிகளின் அழித்தொழிப்பு தொடர்கிறது.  ஆங்கிலேயர் ஆண்டபோது கூட இந்த அளவு கொள்ளைப் போகவில்லை என்று சில கணிப்புகள் கூறுகின்றன.  தேசத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா?
            தாராளமயம், உலகளாவிய வர்த்தகம் என்ற புதிய பொருளதார கொள்கைகள் சில வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் கூடவே ஊழலும் பெருகியுள்ளது என்பதை ஐக்கிய உலக நாடுகள் அமைப்பு கவனத்தில் கொண்டு, 2000-ம் ஆண்டு ஊழல் ஒழிப்பதற்கான கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான தீர்மானம் பொதுச்சபையில் கொண்டு வந்தது.  2005-ம் வருடம் டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.  ஊழல் நடவாமல் இருப்பதற்கான தடுப்பு வழிகள், கடுமையான சட்டம் அதன் அமலாக்கம், ஊழல் புரிந்தவர்களின் சொத்துக்கள் முடக்கம், சர்வதேச குற்றவாளிகள் இனம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்தல்,  பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார்துறை நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் போன்ற பல முக்கியமான பிரிவுகள் ஒப்பந்தத்தில் உள்ளன. 2005-ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு இந்தியா 2011-ம் வருடம் மே 9-ம் தேதி தான் ஒப்புதல் அளித்தது.  ஆனால் இந்திய ஊழல் தடுப்பு சட்டத்தில் மாற்றம் இன்னும் கொண்டுவரப்படவில்லை.
சமீபத்தில் மத்திய புலனாய்வுப்பிரிவுகளின் தேசிய கூட்டத்தில் பேசிய பிரதமர் அவர்கள் சட்டம் மாற்றப்பட வேண்டியதின் அவசியத்தை வலுயுறுத்தியுள்ளார்.  லஞ்சம் பரிமாற்றங்களில் தனியார் நிறுவனங்களின் இணக்கமாக துணைபோகும் முறையற்ற நடவடிக்கைகளை சட்ட மாற்றங்கள் மூலம் குற்றங்களாக கருதப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.  இங்கிலந்து நாட்டில் லஞ்ச ஒழிப்பு புதுச்சட்டம் “ப்ரைபரி ஆக்ட்” ஜீலை 1 2011-ம் வருடம் அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களின் மோசடி நடவடிக்கை உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் நடைபெற்றிந்தாலும் சட்டம் பாயும். ஏழு வருடம் முதல் 10 வருடம் வரை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம்.
     சட்ட நடவடிக்கை ஒருபுறம் அதே சமயம் நேர்மையாக செயல்படுவர்களுக்கு ஊக்கம் அளிப்பதும் அவசியம்.
     அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு ஏழையின் நிலையை மனதில் இறுத்தி எடுக்கப்படவேண்டும் என்றாரே காந்தியடிகள்,  எவ்வளவு  உண்மை! நாம் ஈட்டுவது நமது முயற்சியில், உழைப்பில் பெற வேண்டும்.  ஒரு பதவியில் இருப்பதாலோ அல்லது பதவியில் இருப்பவர்கள் உறவினர் என்ற முறையில் ஏதாவது பெற்றால் அது எந்த வகையிலும் நேர்மையான முறை ஆகாது.   இதைத்தான் காந்தியடிகள் அவர்கள் திரும்பத் திரும்ப நேர்மையின் உறை கல்லாக  ஒவ்வொரு செய்கையையும் நாம் சோதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.  சத்திய சோதனை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது கடினம்.  நேர்மை பாதையிலிருந்து வழுவா நிலை எய்துவதற்கு கடுமையான பயிற்சியும் சத்தியத்தின் மீது அசையா நம்பிக்கையும் அவசியம்.
உலக நாடுகளில் இளம் வயதுள்ள ஜனத்தொகை அதிகமாக உள்ள நாடு நமது நாடு.  உலகிற்கு உழைப்பாளிகளை இந்தியா அளிக்கும்.  அதற்கு நாம் இளைஞர்களை நல்ல நிலையில்  தயார் செய்ய வேண்டும்.  செயலாக்கத்தையும் தனித்திறன் வளர்ப்பது ஒரு பக்கம்.  அதே சமயம் ஆத்ம பலத்தை வளர்க்க வேண்டும்.  வலிமையான பாரதம் உருவாக வேண்டும் என்றால் மனித வளம் உயர வேண்டும்.  அதற்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் அவசியமாகிறது.
n  நாட்டுப்பற்று, இந்தியாவைப் பற்றி உயர்வான எண்ணம்,  நாடு மேன்மையுற தன்னை அர்ப்பணித்தல்.
n  ஆரோக்கியமான வாழ்க்கை, நன்நடத்தை, மது, மாது, போதை, முறையற்ற உறவு போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்த்தல்.
n  யோகா, தியானம் மூலம் மனவலிமையை வளர்த்தல், மனவலிமை வளர்ந்தால்தான் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும்.
n  அறிவாற்றல் பெற வேண்டும் அறிவாற்றலை ஆக்கப்பூர்வமாக உயயோகிக்கும் திறன் வளர்க்க வேண்டும்.
n  இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். பேணிப்போற்ற வேண்டும்.
n  ஆத்ம பலம் பெற வேண்டும்
n  பரந்த விரிந்த பார்வை, உலகளாவிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒன்றுமை, இணைந்திருப்பதற்கு இறைவுணர்வும் ஆன்மீக பலமும் தான் முக்கிய அடிப்படை காரணம் என்பது நிதர்சன உண்மை.  சுவாமி விவேகானந்தார் கூறுவார் சகிப்புத்தன்மையே இந்தியாவின் பலம் நாம் சகித்துக்கெள்ள முடியாதது சகிப்புத்தன்மையின்மையே!
காந்தியடிகளின் பிறந்த நாள் உலக அஹிம்சை தினமாக அனுவரிக்கப்படுகிறது.  வன்முறையை ஒழித்து அமைதிகாக்க உறுதியெடுக்க வேண்டும்.   ஊழலின் பாதிப்புதான் கொடுமையான வன்முறை.  மனித உரிமை மீறலும் கூட. சத்தியத்தை நம்பவேண்டும்.  ஆத்ம சக்தியின்றி இலக்கை அடைய முடியாது.  அவை இருந்தால் தோல்வி நம்மை தழுவாது.
காந்தி மகானுக்கு நாம் செலுத்துக்கூடிய குறைந்தபட்ச அஞ்சலி ஊழல் ஓழிப்பு ஒன்றுதான்.
000
இக்கட்டுரை தினமணி நாளிதழில் சனிக்கிழமை நாள்.13.10.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மக்கள் துணையே மகேசன் துணை



     ஒரு புகைப்படம் ஆயிரம் செய்திகளைச் சொல்லும் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் பெண் போலீஸ் பிரமீளா பதி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தாக்கியதால் காயமுற்றார்.  செய்தியில் வந்த புகைப்படத்தில் பிரமீளாவை ஒருவர் மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறார்.  பின்னால் இருந்து ஒருவர் உருட்டுக் கட்டையை ஓங்கியவண்ணம் பின் தொடர்கிறார்.  இன்னொருவர் கண்ணில் அனல் பறக்கிறது,  வன்முறை வழிகிறது. மற்றொருவர் கதறும் அப்பெண்ணை வீடியோ காமிரா மூலம் முகபாவங்களை பதிவு செய்கிறார்.
     தெருவிற்கு கூட்டமாக வந்துவிட்டால் நல்லது கெட்டது என்ற உணர்வு மறந்து விடுகிறது.  சேர்த்திருக்கும் கும்பலின் ஒட்டு மொத்த குணம் வெளிப்படுகிறது.  தவறு செய்தாலும் நம்மை யாரும் இனம் கொள்ள முடியாது என்ற தைரியம் வந்து விடுகிறது இந்த உருட்டுக்கட்டை கலாச்சாரம் சென்னையில் கல்லூரித் தேர்தலில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் பிரதிபலித்தது.  கூச்சலிடும் மாணவர்களைப்பற்றி தமிழ் ஆசிரியரின் அங்கலாய்பு எவ்வளவு உண்மை “ஒண்ணு சேர்ந்தா குப்பை, தனியா மாணிக்கம்”!  எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நிலை வந்தால் நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும். போராட்டங்கள் நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.

     முன்னறிவிப்பில்லாத கூட்டங்கள், போராட்டங்கள், திசை திருப்பும் அறிக்கைகள், அப்பாவி மக்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.  ஒடிசா மாநிலத்தில் காவலர் பிரமீளா தாக்கப்பட்ட சம்பவம் இத்தகைய முறையற்ற போராட்டங்களின் விளைவு.  ஜனநாயக அமைப்பில் எதிர்ப்புகளை தெரிவிக்க உரிமையுண்டு.  அமைதியாக துவங்கும் இத்தகைய கூட்டங்கள் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறி சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து விளைவிக்கும் பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.  பொது இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.  அனுமதி அளிக்கும் உத்தரவுவில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கடைபிடிக்க வேண்டிய விதிகள் தெளிவாக போடப்பட்டு கூட்டம் ஏற்பாடு செய்யும் அமைப்பின பெறுப்பாளருக்கு சார்வு செய்யபட்டு பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் பெறப்படும்.
     காவல்துறை அனுமதியோடு நடத்தப்படும் கூட்டங்களில் பல முறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படும். உதாரணமாக பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கூட்டமோ ஊர்வலமோ நடத்தப்பட வேண்டும் என்பது விதி.  ஆனால் தடையிருந்தும் தடைகளை தடையின்றி மீறினால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி என்று கணக்கிடுகிறார்கள்!  பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு எப்படியோ நிலமையை சமாளித்தால் போதும் என்று இத்தகைய தடைமீறல்களை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிர்பந்தம்.  எந்த விதியை கராராக அமல்படுத்துவது, எதை தளர்த்துவது என்பது பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரி முடிவு எடுக்க வேண்டும்.
     கூட்டம் ஏற்பாடு செய்பவர்களோடு நயமாக பேசி விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு விதம்.  ஆரம்ப முதலே கெடுபிடி செய்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைப்பது இனொரு வழி.  கடனே என்று முறை கழிக்கும் பாதுகாப்பு அலுவலர்கள், விதிகள் மீறப்பட்டாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடும் நிலையும் உண்டு.  இந்த சொதப்பல் அணுகுமுறைதான் பல பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது.  அமைதியான கூட்டங்களில் கலகக்காரர்கள் கலந்துவிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் போக காவல்துறை கடைசி யுக்தியான கண்ணீர்புகை, தடியடி துப்பாக்கி சூடு என்ற நடவடிக்கை எடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சில கூட்டங்கள் தடையை மீறி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே நடத்திப்படுகிறது.  இத்தகைய சமூக விரோத செயல்கள், அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளின் துஷ்பிரயோகம். எந்த ஒரு அரசும் அராஜகத்தை சகித்துக் கெள்ள முடியாது. சகித்துக் கொள்ளவும் கூடாது.
     ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பாதுகாப்பு முறைகள், சட்டவிரோத கூட்டங்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய சட்டத்திற்கு உட்பட்ட வழிமுறைகள் பற்றிய பயிற்சி காவலர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. காவல் பணி அடிப்படைப் பயிற்சியிலும், புத்தாக்கப்பயிற்சியிலும் இவை விளக்கப்படுகின்றன. செயல் வழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.  பயிற்சியில் வியர்வை சிந்தினால் களத்தில் இரத்தம் சிந்த நேராது என்பது முது மொழி.  ஆனால் பயிற்சியில் கற்றவை எந்த அளவிற்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதுதான் பிரச்சனைக்குரியது.  சில நேர்வுகளில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.  இங்குதான் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆளுமை சோதிக்கப்படுகிறது.
     பொது அமைதி என்பது அன்றாட சமுதாய நிகழ்வுகளின் அடிப்படையில் மாறுபடும்.  ஒரு சீராக இருக்காது.  உள்ளூர் சச்சரவுகள், வட்டார நிகழ்வுகள், மாநிலம், நாடு ஏன் உலக அளவில் நடக்கும் சம்பவங்களின் தாக்கம் இவற்றைப் பொறுத்தது.  செய்திகள் மின்னல் வேகத்தில் பறக்கும் இந்நாளில் உடையும் செய்திகளை ஆராயாவிட்டால் உறைய வைக்கும் காட்சிகளை எதிர் கெள்ள நேரிடும். 
     ஜாதிப் பிரச்சனைகள் அதிகமாக தலைதூக்கும் மாநிலம் பீஹார்.  அங்கு ஒவ்வொரு ஜாதித்தலைவரும் ஒரு பாதுகாப்புப்படை உருவாக்கி தொண்டர்கள் என்ற பெயரில் வலைய வருவார்கள்.  அரசியலில் ஜாதிகளின் ஆதிக்கம் பீஹார் மாநிலத்தில் அதிகம்.  ரணவீர் சேனா என்ற உயர் ஜாதி பாதுகாப்புப்டை தலைவர் பிரம்மேஷ்வர் சிங் இந்த வருடம் ஜீன் மாதம் கொல்லப்பட்டார்..  அதன் விளைவாக பெரும் கலவரம் ஏற்பட்டது.   வாகனங்கள் எரிக்கப்பட்டன.  சாலைகள் முடங்கயது. மதிப்பிடமுடியாத சொத்து சேதமாகியது.    
காவல்துறைக்கு தர்மசங்கடம். கடுமையான நடவடிக்கை எடுத்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.  அதன் விளைவுகள் மேலும வன்முறையைத் தூண்டக்கூடும்.. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மெத்தனப் போக்கு என்று குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்.  ஆனால் நிதானமான நடவடிக்கைதான் பீஉறார்  காவல்துறை எடுத்தது.  காலப்போக்கில்தான் நிலமையும் கட்டுக்குள் வந்தது.  காவல்துறை எடுத்த நடவடிக்கைப் பற்றி விவரிக்கும் பொழுது, பீஹார் டிஜிபி, தனது அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை தவிர்த்து, பார்த்து, கவனித்து நிதானமாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். வன்முறை நிகழம் பொழுது கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வரும்.  ஆனால் அவ்வாறு ஒரு உத்தரவும் பிஹார்  போலீஸ் வன்முறையை கட்டுப்படுத்த எச்சரிக்ககை கொடுக்கவில்லை. இதன்விளைவாக கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
     மும்பையில் ஆகஸ்ட் 10-ம் நாள் அஸ்ஸாம் மாநில மதவாத வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.  இந்த கண்டனக் கூட்டத்தில் வன்முறை வெடித்தது.  இரு இளைஞர்கள் உயிர்ழிந்தனர் மேலும் 50-க்கும் மேற்பட்டவர் பத்திரிக்கையாளர்கள் உள்பட காயமுற்றனர்.  அரசு  ஊடக வண்டிகள் சேதப்படுத்தப்பட்டன.  மும்பாய் போலீஸ் தீர்கமான உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் தடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.   இத்தகைய சுணக்க அணுகுமுறை கலகக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும், வரும் காலங்களில் கோரமான கலவரங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது என்ற வாதங்கள் வைக்கப்பட்டன.  இதன் எதிரொலியாக நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்ட காவல் ஆணையர் ஆரூப் பட்நாயக் மாற்றப்பட்டார். பதவி உயர்வு நிமித்தமாக  மாற்றப்பட்டார் என்று அரசு விளக்கம் கொடுத்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதுதான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை.
     2011 ஆகஸ்ட் மாதம் லண்டன் மற்றும் அண்மை நகரங்களில் பெரும் கலவரம் வெடித்தது.  அப்போது லண்டன் போலீஸார் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கத்தவறினர் என்று அரசே குற்றம் கூறியது. ஆனால் லண்டன் போலீஸ் ஆணையர் எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்தார்.  கடும் நடவடிக்கையால் உயிரிழப்பிற்கு வாய்ப்புண்டு, அதன் விளைவுகளை போலீஸார் சந்திக்க வேண்டும் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுக்கும் என்ற லண்டன் போலீஸார் வாதத்திற்கும் ஆதரவு இருந்தது.  பல கோடி டாலர் சொத்து பாழடைத்தது.  கலவரக்காரர்கள் வெளிப்படையாக கொள்ளையில் ஈடுபட்டனர்.  அதையும் புகைப்படம் எடுத்து சமுதாய இணையதளத்தில் வெளியிட்டனர்.  காலம் தாழ்ந்து லண்டன் போலீஸார் நடவடிக்கை எடுத்தப்பிறகு தான் கலவரம் ஒய்ந்தது.
     நுண்ணறிவு தகவல்கள்மூலம் பிரச்சனைகளை அறிந்து ஆராய்ந்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும். சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை மூலம் வன்முறை பரவாமல் தடுத்தல், முக்கியமாக கலவரக்காரர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் என்பது தான் காவல்துறையின் சரியான அணுகுமுறையாக இருக்கவேண்டும்.  பல சமயங்களில் பிரச்சனைகளை பெரிதாக்க வெளியிலிருந்து தூண்டுவார்கள்.  மக்களை திசை திருப்ப அறிக்கைகள் விடப்படும்.  போராட்டம் நடத்துபவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் முன் நிறுத்தி காவல்துறையை செயலிழக்கக் செய்வார்கள்.  சமீபதில் கூடங்குளம் போராட்டத்தில் ஒரு சிறுமி காவல் படையினர் முன் நின்று கொண்டிருந்த படம் வெளியானது.  ஏதோ சடுகுடு விளையாடுவது போல் அந்த சிறுமி சிரித்துக் கொண்டிருக்கிறாள். காவலர்களும் விளையாட்டாக பார்க்கிறார்கள்.  சமயோஜிதமாக, மிக கட்டுப்பாடுடனும் அதே சமயம் திறமையுடன் தமிழக காவல் துறை கூடங்குளம் பிரச்சனையை கையாள்வதை பாராட்ட வேண்டும்.
     மேலை நாடுகளில் கலவரங்கள்  எதிர்கொள்ளும் அணுகுமறை வித்தியாசப்படும்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகள் அல்ல நம் மக்கள்தான்.  ஆதலால் பொறுமையுடன் தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும்.  மனித உயிர் விலை மதிக்க முடியாதது.  எந்த விதத்திலும் உயிர் பலி தவிர்க்கப்பட வேண்டும்.  பொருள் சேதம் ஏற்பட்டாலும் அவை காப்பீடு செய்யபட்டிருக்கும். ஈடு கிடைத்துவிடும்  பொருள்களை காப்பாற்ற வன்முறையைதுண்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அசம்பாவிதங்களை வீடியோ மூலம் பதிவு செய்து,  குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் வருங்காலத்தில் கலவரங்களை தவிர்க்கலாம் என்பது மேலை நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் நிலைப்பாடு.
     உடனடி கடும் நடவடிக்கை எடுத்து நிலமையை சமாளிப்பதா, காலம் தாழ்ந்தாலும், சேதம் ஏற்பட்டாலும் நிதானமாக குற்ற வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தருவதா,  அல்லது இரண்டு வழிகளையும் கலந்து செய்வதா?  இது காவல் துறைக்கு உயர் அதிகாரிகளுக்கு சவால்! எந்தவழி தெரிவு செய்தாலும் விமர்சனங்கலிருந்து தப்ப முடியாது.  ஏதற்கெடுத்தாலும் காவல்துறையை பழிப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள்.  மக்கள் நலனைப்பற்றி அக்கறையில்லை.  ஊர் இரண்டுபட்டால்தான் அவர்களுக்கு ஆதாயம்.
ஆனால் காவல்துறை  எந்த முடிவு எடுத்தாலும் பொது அமைதி காப்பதே முதல் நோக்கம் என்ற அளவில் நேர்மையாக செயல்பட்டால் மக்கள் துணை இருப்பார்கள். மக்கள் துணையே மகேசன் துணை!
----
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 18.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது














அவசர உலகில்…



ஒவ்வொரு நாளும் எவ்வளவோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்.  ஆனால் சில செய்திகள்தான் நெஞ்சைத் தைக்கின்றன, மனம்பதபதைக்கிறது ‘என்ன கொடுமையப்பா’ என்று சீயோன் பள்ளியில் படித்த குழந்தை ஸ்ருதியின் கோர மரணம் எல்லோர் மனதையும் பாதித்தது.  இத்தகைய விபத்துகளுக்கு முடிவே இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. சில நாட்கள் சம்பவத்தைப்பற்றிய சர்ச்சை விவாதிக்கப்படும்.  அதற்குள் வேறு ஏதாவது சம்பவம் நிகழும்.  பழைய சம்பவம் மறக்கப்படும்.
கோயம்பத்தூரில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனியார் வேன் ஒட்டும் மோஹன்ராஜ், மிஸ்கின், ரித்திக் என்ற இரண்டு பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக கடத்தி பின்பு கொன்ற சோக சம்பவம் மறந்திருக்க முடியாது.  கயவன் மோஹன்ராஜ் பின்பு போலீஸாரால் என்கௌண்டரில் சுடப்பட்டு மாய்ந்தான்.  மோஹன்ராஜ் வழக்கமாக இந்த இரண்டு குழந்தைகளையும் வேனில் பள்ளிக்கு அழைத்து செல்பவன்.  அவன் மனதில் இத்தகைய குரூர எண்ணம் எவ்வாறு வந்தது! தனிமனித ஒழுக்கச் சீரழிவு இந்த அளவுக்கு போய்விட்டதே!
“தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல ஆபத்திற்கு உள்ளாகிறார்கள்.  பள்ளி சென்று வருவதே பெரிய சவாலாக உள்ளது,” என்று சில வருடங்களுகளுக்கு முன்  சென்னையில் பள்ளிச் சிறுவன் ஹர்ஷன் விபத்தில் இறந்தபோது பலர் கூக்குரல் எழுப்பினர்.  அதுவும் அந்த சிறுவன் பள்ளியின் வேனில் வீட்டுக்கு திரும்பி வண்டியிலிருந்து இறங்கி தந்தையின் கண்முன்னாலேயே அதே பள்ளி வேன் சிறுவன் மீது ஏறி உயிரிழந்தான்.
சியோன் பள்ளி சுருதி விபத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஆவடியில் இன்னொரு விபத்து.  ஒன்றரை வயது சஞ்சய் தனது சகோதரர்கள் சந்தோஷ், சுதாகர் பள்ளிக்கு வேனில் செல்வதை பார்க்கையில் பள்ளி வேன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான்.  இதுவும் பெற்றோர் கண்ணெதிரில்.
ஜீலை 27-ம் தேதி மூன்று வயது சுஜிதா ஆம்பூர் ஈச்சம்பட்டு அருகில் பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்தாள்.  ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரைக்கு அருகில் ஆறு வயது ஜெயலஷ்மி பள்ளியிலிருந்து அதிக குழந்தைகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவிலிருந்து விழுந்து உயிரிழந்தாள்.
சுருதி, ஹர்ஷன் அவர்களது பள்ளி வேனே எமனாக வாய்த்ததுபோல காஞ்சீபுரம் படப்பை அருகில் நடந்த விபத்தில் ஐந்தரைவயது ஆகாஷ் பள்ளி வேனைவிட்டு இறங்கி சாலையைக்கடக்கும் பொழுது அதே வேன் அவன் மீது ஏறியது என்ன கொடுமை.
சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஹர்ஷன் விபத்திற்குப் பின் எல்லா பள்ளி வாகனங்களிலும் ஒட்டுனரைத்தவிர நடத்துனரும் பணி அமர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அப்படி இருந்தும் அகாஷ் அவனது பள்ளி ஊர்தியிலேயே சிக்கி உயிரிழந்தான்.
சில மாதங்களுக்கு முன்னால் பஞ்சாப் மாநிலம் அம்பாலா மாவட்டம் பேகதா என்ற இடத்தில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற மினி வேன் லாரியோடு மோதியதில் 11 குழந்தைகள் மாண்டன,  இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன.   இது தவிர பொது இடங்களில் அரசுத்துறையே மேற்கொள்ளும் பல்வேறு செப்பனிடும்  பணிகளில் பள்ளங்கள் நிரப்பபடாமல் விட்டுவிடுவதால் விளையாடும் குழந்தைகள் இத்தகைய குழிகளில் சிக்கி உயிரிழக்கும் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.  இத்தகைய விபத்துகளில் உயிரைக் காப்பாற்றுவது மிக கடினம்.  அதற்குத் தேவையான உபகரணங்களும் உடனடியாக கிடைப்பதில்லை.
ஹரியானா மாநிலத்தில் மாஹி என்ற 4 வயது சிறுமி தண்ணீருக்காக ஆழமாக தோண்டப்பட்ட குழியில், கடந்த ஜுன் மாதம் தவறி விழந்து சிக்கிக் கொண்டாள்.  அதுவும் அன்று அவளது பிறந்த நாள்.  அந்த கொண்டாட்டத்தில் விளையாடும் பொழுது அதள பாதாளத்தில் விழுந்தாள்.  காவல்துறை, ராணுவவீரர்கள், தேசிய ராணுவவீரர்கள் 70 அடி குழியிலிருந்து குழந்தையை மீட்பதற்காக போராடினர். விழுந்த குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழி தோண்டி அடியில் இரண்டு பள்ளங்களையும் இணைக்கும் சுரங்க பாதை அமைத்து குழந்தையை லாவகமாக மீட்கும் நுட்பமான பணி நிறைவேற்ற 48 மணி நேரம் பிடித்தது.  இறந்த குழந்தையைத்தான் எடுக்க முடிந்தது.  அதன் பிறகு அஜாக்கரதையாக குழி வெட்டியவர் மீது குற்ற நடிவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விழிப்புணர்வு வந்ததா என்றால் அது கேள்விக்குறி.  அடுத்த விபத்து நிகழ காத்துக் கொண்டிருக்கும்.
உயர் நீதி மன்றம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கக் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளியின் வேன்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பள்ளி நிர்வாகத்தின் கடமைகள்,  பெற்றோர்களின் பொறுப்பு, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உரிய நடவடிக்கை இவையெல்லாம் ஒருங்கிணைந்தால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்ய முடியும். 
உச்ச நீதிமன்றம் தில்லிக்கு அருகில் பல குழந்தைகள் உயிரிழந்த சாலை விபத்து சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் இத்ததகைய விபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.  அதன்படி குழந்தைகள் பயணிக்கும் எல்லா பள்ளி வாகனங்களும் மஞ்சள் நிறம் பூசப்பட வேண்டும். பள்ளி வாகனம் என்ற அறிவிப்புப் பலகை வண்டியின் முன் மற்றும் பின் பகுதியில் வைக்கப்பட வேண்டும்.  அவசர சிகிச்சைப் பெட்டி இருக்க வேண்டும்.  வேகக்கட்டுப்பாடுக் கருவி பொருத்த வேண்டும்.  வண்டியின் ஜன்னலில்  பாதுகாப்பு வலை கம்பிகள் இருக்க வேண்டும்.  வண்டியில் கதவுகள் பூட்டப்பட வேண்டும். வண்டியில் குந்தைகளை கவனிக்க நடத்துனர் அமர்த்தப்படவேண்டும்.  வண்டி ஒட்டுனர் சுமார் ஐந்து வருடம் பேருந்து ஒட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  போக்குவரத்து விதி மீறல்கள் குற்றங்களுக்கான தண்டனை பெற்றிருக்கக் கூடாது.  மதுபானம் அருந்தி வண்டி ஒட்டியதற்கான குற்றம் ஒருமுறை புரிந்திருந்தால் கூட அவரை நியமிக்கக் கூடாது.  பள்ளியின் ஆசிரியர் அல்லது குழந்தைகளின் பெற்றோர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வண்டியில் பயணம் செய்து பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
2011-ம் வருடம் 3,90,884 மக்கள் விபத்துக்களில் உயிர் இழந்தனர்.  2001-11, பத்து வருடங்களில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது கவலைக்குரியது. ஜனத்தொகை கணக்குப்படி 14 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவிகிதம் விபத்தில் மடியும் குழந்தைகள் மொத்த உயிரிழப்பில் சுமார் 7 சதவிகிதம்.  மேலும் 61 சதவிகிதம் 15 வயதுலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இம்மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர் உழைக்கும் கரங்களை இழக்கிறோம், பாதிப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல மொத்த சமுதாயத்திற்கும் ஏற்படுகிறது.

பள்ளி வண்டிகள் பிரத்யேகமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.  ஒட்டுனர்களுக்கு பள்ளி வாகனம் கவனமாக ஒட்டுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.  குழந்தைகள் வண்டியில் ஏறி அமர்ந்த பிறகுதான் நகர வேண்டும்.  பயிற்சிக் பெற்ற நடத்துனர் ஒவ்வொரு வண்டியிலும் குழந்தைகளை மேற்பார்வையிட இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளி வாகனங்களிலிருந்து இறங்கி சாலையை கடக்கும்பொழுது அதிகமான விபத்துக்கள் நிகழ்கின்றன. குழந்தைகள் வாகனத்தின் முன்னால் அல்லது பின்னால் சாலையைக்க கடக்கக் கூடாது.  எதிரும் புதிரும் வரும் வாகனங்களை பார்க்க முடியாது.  பள்ளியின் வாகனம் நகர்ந்த பிறகு முன்னும் பின்னும் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்.  குழந்தைகள் பயணிக்கும் வாகனங்கள் தனியாருடையதோ அல்லது பள்ளியின் பராமரிப்பில் உள்ளதாக இருந்தாலும் விதிகள் கடைபிடிக்கப்பட்ருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை.  பள்ளியின் உயர்மட்டக் குழு மேற்பார்வையிட வேண்டும்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அரசாங்கம் வழங்குகிறது.  அவர்களுக்கென்று காலையும் மாலையும் சிறப்பு அரசு ஊர்திகள் ஏற்பாடு செய்தால் மக்களுக்கு நிம்மதியைத்தரும் குழந்தைகள் தான் நமது நாட்டின் எதிர்காலத்தை தாங்கப்போகிறார்கள்.  அவர்களைப் பேணுவது நமது கடமை.
தனது பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இத்தகைய கோர சம்பவத்தை செய்தியாக அனுப்புவதில் தனக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது என்று அஸ்சாம் மாநிலம் குவாத்தியில் போன மாதம் அசிங்கமான முறையில் பொது இடத்தில் ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்ட நிகழ்வை விவரிக்கையில் ஒரு செய்தியாளர் மனக் குமுறலுடன் தெரிவித்தார்.  இந்த தலைகுனிவு போதாது என்று ஜீலை மாதம் மங்களூரில் கடற்கரை ஓர கேளிக்கை விடுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலாச்சார பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மற்றும் பெண்களை தாக்கியதாக செய்தி வந்தது.  கேளிக்கையில் ஈடுபட்டவர்களை கண்முடித்தனமாக தாக்கியது மட்டுமின்றி தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.  காவல்துறையின் தலையிட்டு நடவடிக்கை எடுத்த பிறகு நிலமை சிரானது.
     இத்தகைய அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.  தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.  சுதந்திரம் என்பது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் அனுபவிக்க மட்டும் தான் சட்டத்தில் இடமுண்டு.   தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை வந்தால் குழப்பம் தான் விளையும்.
 அஸ்சாம் மாநிலத்தில் இனக்கலவரம் மலைவாழ் மக்களுக்கும் அண்டை நாடான பங்களாதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவருக்கும் பிரச்சனை.  பலர் வீடுகள் உடமைகள் இழந்து தவிக்கின்றனர்.  அடி மேல் அடி ஏழைகளுக்குத்தான். இதன் எதிரொலி மும்பையில் கண்டன ஊர்வலம் ஆயிரக்கணக்கானவர் திரண்டனர்.  காவல்துறை சமயோஜிதமாக கூட்டத்தை சமாளித்து கலைத்துவிட்டனர்.  துப்பாக்கி சூடு தவிர்க்கப்பட்டது.  கர்நாடகா மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று விஷமிகள் வதந்தி கிளப்பி விட்டனர்.  அதன் விளைவு வேலை நிமித்தமாக பங்களூரில் தங்கி இருக்கும் பல அஸ்சாமியர்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி சொல்லத்துவங்கியுள்ளனர்.
நமது நாட்டின் வலிமையே வேற்றுமையில் ஒற்றுமை அவை குலையும் வகையில் இத்தகைய நெருடல்கள்.  இவை தற்காலிக இடரல்களாக மறைய வேண்டும்.  அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  நாட்டுப் பற்று, சகோதரத்துவம், பரஸ்பர ஒற்றுமை போன்ற நற்குணங்கள் நாட்டின் இறையாண்மையோடு ஒன்றியவை,  இதற்கு அரசை நாட வேண்டியதில்லை.  மக்களின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரவேண்டியவை.
விஷமிகளால் தூண்டப்படும் விபத்துகள் ஒரு புறம்.  அன்றாடம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் மறுபுறம்.  இரண்டு வகை நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள், அதுவும் நடுத்தரம் மற்றும் ஏழை மக்கள்.  அவசர உலகில் இத்தகைய விபத்துகள் தவிர்க்க முடியாது என்று விட்டு விடக் கூடாது. விழிப்புணர்வும் விதிகளை மதிக்கும் கவனமும் இருந்தால் விபத்துகள் குறையும்.  தூண்டப்படும் விபத்துகளை ஒடுக்க வேண்டும்.  ஏனைய விபத்துகள் தவிர்க்க வேண்டும்.
---
தினமணி நாளிதழ்கட்டுரை 23 ஆகஸ்ட் 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது