Tuesday, February 7, 2012

குடி மக்களாகிய நாம்


புது வருஷம் கொண்டாட்டம், பொங்கல் திருவிழா என்று கோலாகலமான மாதம் தான் ஜனவரி. ஆனால் நாட்டின் இறையாண்மையை நிலை நிறுத்தும் முக்கியமான நாள் ஜனவரி 26 குடியரசு தினம். இந்தியாவை அகண்ட பாரதமாக ஆன்மீக சேவை வழியில் இணைத்த ஸ்வாமி விவேகானந்தர் பிறந்தது ஜனவரி 12. இந்தியாவின் சுதந்திரம் கனவில்லை அது மெய்ப்படும் என்று உற்சாகப்படுத்திய இளைஞர்களின் ஒளிவிளக்கு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தது ஜனவரி 23. நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த அண்ணல் காந்தி உயிர்துறந்த நாள் ஜனவரி 30 தியாகிகள் தினம். குடிமக்களாகிய நாம் நாட்டைப்பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

உலக நாடுகளில் எழுதப்பட்ட அரசியல் சாசனங்களில் மிகப் பெரியது என்று கருதப்படுவது இந்திய அரசியல் சாசனம். இதில் 395 உறுப்புகளும், பன்னிரெண்டு அட்டவணைகளும் உள்ளன. சட்ட முகப்புரை (Preamble) என்ற பகுதியோடு நமது சாசனம் துவங்குகிறது. இறையாண்மை கொண்ட சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட உறுதி பூண்ட இந்திய மக்களாகிய நாம் அனைத்து குடிமக்களும் முழுமையான நீதி, சுதந்திரம், சமநிலை, தனிநபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம் பெற்றிட உறுதி செய்து இந்த அரசமைப்பு சட்டத்தை ஏற்றி இயற்றி வழங்குகிறோம் என்று மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

‘இறையாண்மை கொண்ட மக்களாட்சி குடியரசு‘ என்ற சொற்றொடருக்கு பதிலாக ‘இறையாண்மை கொண்ட சமதர்ம, சமயசார்பற்ற மக்களட்சி குடியரசு‘ என்ற சொற்கள் 1976-ல் வருடம் 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்ததால் கொண்டு வரப்பட்டன. இறையாண்மை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. யாரையும் தன்னைவிட அதிகாரம் கொண்டவர் என்பதை ஏற்காமல் தன்னுள்ளே முழுமையான அதிகாரத்தை உறைய வைத்துள்ளதோ அதுவே இறையாண்மை கொண்ட நாடாகும் என்பது நிபுணர்களின் விவரிப்பு.

இந்திய அரசியலமைப்பில் மக்கள் தான் அதாரம் அல்லது மூலம். அவர்களிடமிருந்து தான் முழுஅதிகாரம் பொங்கிப் பரவுகிறது. இதுதான் மக்களாட்சியின் வலிமை. அரசியலமைப்பில் எந்த ஒரு சந்தேகமோ உறுப்புகளில் உபயோகிகப்பட்ட சொற்றொடரில் வேறுபாடு இருந்தால் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சிந்தாந்தங்களின் அடிப்டையில் அர்த்தம் காணவேண்டும். அது தான் முகப்புரையின் சிறப்பும் வலிமையுமாகும்.

இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பியல்புகள் பல. மக்களின் தேவைக் கேற்ப சட்ட மாற்றங்களுக்கு இணங்கவல்லது கூட்டாட்சி மற்றும் ஒற்றாட்சி சிறப்புக் கூறுகளின் கலவை, நாடாளுமன்ற அமைப்புள்ள அரசு, அடிப்படை உரிமைகள், ஆட்சியை வழி நடத்திச் செல்லும் நெறிமுறைகள், நீதித்துறை சுதந்திரம், மதச்சார்பின்மை, ஒற்றைக் குடியுரிமை, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சிறுபான்மையினருக்கும் தனிப்பட்டவருக்கும் சிறப்புச் சலுகைகள் போன்றவை இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பியல்புகள்.

நமது அரசியல் அமைப்பின் தூண்கள் சுதந்திரம், சமத்துவம், தனிநபர் காண்ணியம், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு. 1976-ம் வருடம் 42-வது சட்டத்திருத்தம் வாயிலாக அடிப்படைக் கடமைகள் கொண்ட தொகுப்பு சேர்கப்பட்டுள்ளது. பகுதி மூன்றில் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் அரசயில் சாசனத்தின் உட்கரு என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்திள்ளது. எந்த சட்ட மாற்றம் கொண்டுவந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளின் வலிமையை குறைக்க முடியாது. இது மிக சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. எவ்வாறு உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போல் கடமையாற்றுவதற்கும் முன்வர வேண்டும். மக்களாட்சி உணர்வுடன் கூடிய சமூக, பொருளாதார, கலாச்சார பொறுப்புகள் அடங்கிய பத்து கடமைகள் மக்கள் மனமுவந்து செயலாக்க வேண்டும.

பகுதி மூன்றில் முக்கிய உறுப்புகள் 14-லிருந்து 22 வரை சட்டத்தின் முன் எல்லோருக்கும் சமத்துவம் சட்டத்தில் சமபாதுகாப்பு அளிக்கிறது. உறுப்பு 15 சமயம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகிய காரணங்களால் வேற்றுமை பாராட்டுவதை தடை செய்கிறது. உறுப்பு 16 அரசுப்பணிகளில் சமவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. உறுப்பு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. உறுப்புகள் 19 –லிருந்து 22 வரை சுதந்திரத்திற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பேச்சு உரிமை, அமைதியாக ஆயுதமின்றி கூடும் உரிமை, சங்கங்கள் அமைக்கும் உரிமை, இந்தியாவில் சுதந்திரமாக நடமாடும் உரிமை, இந்தியாவின் எந்த நிலப்பகுதியிலும் வசிக்க குடியேறுவதற்கான உரிமை, தொழில், வேலை, வணிகம் செய்ய உரிமை. இந்த உரிமை சில ஒப்புக்கொள்ளக்கூடிய வரையரைகளும் உட்பட்டவை.

உறுப்பு 20, 21 குற்றம் சம்மந்தப்பட்டவை. ஒரு செயல் குற்றமெனக் கருதப்படுமாயின் அது அமலில் உள்ள சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஒரே குற்றத்திற்கு இரண்டுமுறை தண்டனை வழங்கலாகது. தன் செயலால் தானே குற்றச்சாட்டிற்கு உட்படுதலுக்கு தடை, சட்டத்தினால் நிலை நாட்டப்பட்ட நடைமுறையின்றி எவருடைய வாழ்க்கை மற்றும் தனி நபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்பது மிக முக்கிய உறுப்பு.

சுதந்திரமாக நீதிமன்றம் செயல்படுவதற்கு அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது. மேலும் தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ உரிமை மீறல்கள் குறித்து உயர் நீதிமன்றம் அல்லது உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள் நீதிப் பேராணைகள் பிறப்பிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து பேராணைகள், ஆட்கொணர்விற்கு (Habeas Corpus) செயலுறுத்துவதற்கு (Mandamus), தடை விதிக்கும் ஆணை (prohibition) நெறிமுறை உணர்த்துவது (Certiorari), தகுதி உள்ளதா என்று கேட்பது (Qua-warranto) என்ற ஐந்து வகை ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. உறுப்பு 32-ன் கீழ் ஒர் அடிப்படை உரிமை மீறுதலுக்காகவும் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் பொது நல வழக்குகள் இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது நீதியரசர்கள் பகவதி, கிருஷ்ணயர் போன்றவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நீதிபதி சாதாரண குடிமகன் தன் உரிமை மீறல்கள் பற்றி போஸ்ட்கார்டில் அனுப்பியதையே விசாரணக்கு எடுத்துக்கொண்டு நீதிப் பேராணை பிறப்பித்தார் என நெஞ்சை நிமிர்த்தக்கூடிய செய்தி உண்டு.

தனிமனிதர் சுதந்திரம் பாதுகாப்பதில் தனித்துவம் வாய்ந்த ஆணைகள் உச்ச நீதிமன்றம் உறுப்பு 21 அடிப்படையில் கொடுத்திருக்கிறது. இந்த பாதுகாப்பு இந்திய குடிமகனுக்குமட்டுமின்றி எந்த ஒரு தனி நபருக்கும் இது பொருந்தும், இந்த சுதந்திரம், பாதுகாப்பு உண்டு என்பது மிகச் சிறப்பான அம்சம்.

வணிக வர்த்தகம் மற்றும் வர்த்தகத் தொடர்பு சுதந்திரம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் உறுப்பு 301-ல் இது குறித்து பொது விதியும் வரையறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் வாணிகம், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் தொடர்பு சுதந்திரமாக இருத்தல் வேண்டும் என்பதாக உறுப்பு 301-ல் வலியுறுத்துகிறது. வரிவிதிப்புச் சட்டங்கள் இந்த உறுப்பின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

கடந்த 62 ஆண்டுகளில் நவம்பர் 2006-ம் ஆண்டு வரை 94 மாற்றங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை.

1975-ம் வருடம் மன்னர்களுக்கு உண்டான மானியங்கள் சம்மந்தப்பட்ட திருத்தங்கள், வங்கிகள் தேசியமயமாக்கல், 51 A என்ற உறுப்பில் அடிப்படைக்கடமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ள திருத்தம், அடிப்படைக்கல்வி கட்டாயமாக்கப்பட்ட 21 A என்ற உறுப்பு இணைப்பில் திருத்தம் ஆகியவை மிக முக்கிமான சாசன மாற்றங்கள் ஆகும்.

இந்தியர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள் அமெரிக்காவில் எல்லா முக்கியத்துறைகள் விண்வெளித்துறை நாஸா போன்ற நுணுக்கமான பணிகளில் இன்றியமையாதவர்களாக விளங்குகிறார்கள் என்றாலும் இந்தியாவில் நாம் ஏன் அவ்வாறு முழு ஈடுபாடுடன் பணிபுரிவதில்லை?

சிங்கப்பூரில் ஒழுக்கமாக இருக்கும் இந்தியன் சென்னை வந்தவுடன் துப்பத் துவங்குகிறான் குப்பையை கண்ட இடத்தில் வீசுகிறான் உள்ளாட்சியும் என்ன செய்ய முடியும் பெருக்க பெருக்க குப்பை பெருகுகிறதே. ஒழுக்கமும் கட்டுப்பாடும் பொதுமக்கள் கடைபிடித்தால் எவ்வளவோ சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். உறுப்பு 51 A வில் அடிப்படைக்கடமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

i) அரசமைப்பை பின்பற்றுதல் ii) சுதந்திரப் போராட்டத்தின் உயரிய கருத்துக்களைப் பின்பற்றுதல் iii) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரித்தல் iv) தேசிய சேவைக்கு தன்னை முன் நிறுத்தல் v) மக்களிடையே இணக்கத்தையும் பொது சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்தல் vi) இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை மதித்தல், பெண்களின் கண்ணியத்தை காப்பாற்றுதல் vii) சுற்றுச்சூழலைக்காப்பாற்றுதல் viii) மனித நேயத்தை வளர்த்தல் xi) வன்முறையை கைவிட்டு பொதுச் சொத்தை பாதுகாத்தல் x) நாடு மேலோங்க தன்னாலான எல்லா முயற்சியும் நாட்டுக்கு அர்ப்பணித்தல்.

அரசியல் சாசனத்தில் மிக முக்கிய உறுப்பு அரசின் கொள்கைகளை வழி செலுத்தும் நெறிமுறைகள் பகுதி 4-ல் உறுப்பு 36 முதல் 59 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற வாழ்வாதாரத்திற்கான வழிகள் பொது நன்மையை கருத்தில் கொண்டு மூலவளங்களின் பகிர்வு, தொழில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு, சம நீதி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் இதில் அடங்கும். ஆனால் இந்த நெறிமுறைகளை வழக்கிட்டு பெறமுடியாது.

குடியரசாக 62 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் பல நெருடலான பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு இல்லை. ஐந்து வயதுட்குட்பட்ட 42 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்து கிடைப்பதில்லை. அதில் 7 சதவிகிதம் குழந்தைகள் இறந்து விடுகின்றன. 30 கோடி மக்கள் உண்ண உணவின்றி பசியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதியில்லை. சுமார் 70 லட்சம் மக்கள் இன்னும் மனித மலங்களை அகற்றும் பணியில் உள்ளனர். பாதி இந்தியர்களுக்கு படிப்பறிவில்லை. இன்னும் 66 சதவிகித மக்கள் திறந்த வெளியில் தான் மலம் கழிக்கும் நிலை. இவ்வாறு எவ்வளவோ பிரச்சனைகள்.

அரசியல் சாசனத்தில் பல உரிமைகள் கடமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிலையாணைகள் விதிகள் உள்ளன, திட்டங்கள் தீட்டப்படுகின்றன, நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை நிறைவேற்றுவதில்தான் எல்லாப் பிரச்சனைகளும்.

என்று அழியும் இந்த அவலங்கள்?

என்று தணியும் இந்த ‘சுரண்டர‘ மோகம்

என்று வளரும் நம் உழைப்பில் உற்சாகம்என்ற ஏக்கம் தொடர்கிறது. அதற்கு விடை நேர்மையான உழைப்பு ஒன்று தான். உழைப்பால் உயர்வதே நாட்டுக்கு உயர்வு. ஒவ்வொரு இந்தியனும் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு தன் பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் உண்மையான சுதந்திரம் மக்கள் அடைய முடியும்.

இந்த கட்டுரை தினமணி 03.02.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.