Monday, October 24, 2011

வினை தீர்க்கும் வித்தகன்


சான்றோர்கள், ஆன்றோர்கள் போன்றோர்க்கு அவர்கள் நல்கிய சமூதாயப்பணியை போற்றும் வகையில் நினைவிடமும், சிலைகளும் வைக்கப்படுகிறன. சிலர் விட்டுச் சென்றதும் இட்டுசென்றதும் ஆன பாதை, வரும் சந்ததியினருக்கு உயர்ந்த வழியையும், ஊக்கத்தையும் உந்துதலையும் அளிக்கிறது. தனி ஒருவருக்கு மட்டுமின்றி காலத்தை வென்று, தொடர்ந்து பணிபுரியும் அமைப்புகளுக்கும் இத்தகைய அடையாளச் சின்னங்கள் உள்ளன.


நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரியும் இராணுவத்திற்கு இத்தகைய சின்னங்கள் பல உள்ளன. போரில் வெற்றிப் பெற்றால் அதற்கு தனியாக வெற்றிச்சின்னம். உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நினைவாலயம் பல இடங்களில் உள்ளன. சென்னையில் புனித தாமஸ் மலை அருகில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு நினைவுச் சின்னம் உள்ளது. இது அழகான முறையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது.


எந்த அளவு இராணுவம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுடிருக்கிறதோ அதே வகையில் காவல்துறை உள்நாட்டுப் பாதுகாப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமை நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் காவல் துறையின் உறுதியான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.


இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் என்பவை இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிக்கும் பொதுவானது. பொது அமைதி மற்றும் காவல்துறை இந்திய அரசியல் சாசனத்தில் 7-ம் உட் பிரிவில் உள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் மாநிலங்களுக்கு முழப்பொறுப்பும் அதிகாரமும் உண்டு. பொது அமைதி காப்பதில் எழும் சவால்களை சமாளிக்க அபரிதமான சக்தியை கொடுக்க வல்ல ஏழாம் அறிவு பெற்றதாலோ என்னவோ காவல்துறை அரசியில் சாசனம் ஏழாம் ஷெட்யூலில் வைக்கப்பட்டுள்ளது! இந்திய ஜனாயகத்தை பாதுகாக்கும் காவல்துறை பல தியாகங்கள் செய்தால் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடைய முடியும். பணிச் சுமை ஒரு பக்கம், இருபத்திநான்கு மணி நேர தொடர்பணி, குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத நிலை, வேளைக்கு சாப்பிட முடியாதலால் வரும் உடல் உபாதைகள், உடற் பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதபடி அகால வேலை பணிகள், சந்திக்க கூடிய கசப்பான பிரச்சனைகளால் மேலும் மன உளச்சல் அதிகரிப்பு என்று மன அழுத்தம் நிறைந்த அன்றாட பணிகளை ஒரு காவலர் சந்திக்கிறார்

தினந்தோறும் குற்றம் புரிந்தவர்களோடு போராடுவதில் பல ஆபத்துகளை எதிர் கொள்ள வேண்டும். பல நேர்வுகளில் உயிரை பணயம் வைத்து அபாயங்களை சந்திக்க வேண்டும். இத்தகைய சூழலில் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது. குற்றம் புரிபவர்கள் பல முறை அவர்களது முயற்சியில் தோற்கலாம் ஆனால் ஒரு முறை வெற்றி பெற்றாலும் அது சமுதாயத்திற்கு பேரிழப்பு. ஆனால் காவலன் ஒவ்வொரு முறையும் குற்றவாளியோடு போராடுகையில் வெற்றி பெற வேண்டும். ஒரு முறை தோற்றாலும் செய்த நற்பணி எல்லாம் மறைந்து தோல்வியே மேலோங்கும். இது மேலும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஆண்டு தோறும் சுமார் 1000 காவல் களப்பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் உயிர் துறக்கின்றனர். போன வருடம் சுமார் 900 களப்பணியாளர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 2010 ஆண்டு நடு ரோட்டில் அமைச்சர் பாதுகாப்புப்பணியில் இருந்த SI வெற்றிவேல் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டு துடிதுடித்து உயிர்ழந்தார். இரு அமைச்சர்கள் அப்போதை மாவட்ட ஆட்சியரும் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தனர். இது செய்தியாக வந்தது. இந்த வருடம் எல்லா மாநிலங்களையும் சேர்த்து 637 போலீஸர் உயிர் துறந்துள்ளர்கள்.

வருடா வருடம் எல்லா மாநிலங்களிலும் ஆக்டோபர் 21-ம் நாள் காவல் பணியில் உயிர் நீத்தவர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் இதுவெகு விரிவாக பொதுமக்கள் ஆதரவோடு இரத்த தானம், காவலர் பொதுமக்கள் நல்லுரவு கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டிகள், கவிதை கட்டுரை போட்டிகள் என்று பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சில மாநிலங்களில் மாநில உள்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு காவல் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், தலமையிடத்திலும் போலீஸ் விசேஷ அணிவகுப்பு, மலர் அஞ்சலி, மூன்று முறை வானம் நோக்கி துப்பாக்கி வெற்று குண்டு சுடப்பட்டு வீரவணக்கம் தெரிவிக்கப்படுகிறது.


ஜம்மு காஷ்மீர் லடாக் எல்லைப் பகுதியில் திரிசூல் என்ற எல்லைப்பகுதி இருக்கிறது. இந்த எல்லைக்கு மேல்புறம் சைனாவின் எல்லை உள்ளது. இந்தப்பகுதிக்கு செல்வதற்கு லடாக் தலைநகர் ‘லே‘ விலிருந்து ஜீப்பில் ஃபோப்ராங்க் என்ற இடம்; அதன் பிறகு 5 நாட்கள் நடை பயணமாக, சோக்சாலு, மார்ஸ்மிக்லா, ஹாட்ஸ்பிரிங்க் போன்ற பனி சூழ்ந்த இடங்களை கடந்து செல்ல வேண்டும். ‘மார்ஸ் மிக்லா‘ சுமார் 19,000 அடி உயரே உள்ளது. இது எப்போதும் பனி சூழ்ந்த இடம், கடும் குளிர். இந்த எல்லைப்பகுதியில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த காவல் வீரர்கள் பணியில் இருந்தனர். 1959-ம் வருடம் ஆக்டோபர் 21-ம் நாள் சைனா தன்னிச்சையாக இந்திய செக் போஸ்ட் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 10 பாதுகாப்புப் படைவீரர்கள் உயிரிழந்தனர். ஆயினும் மடிவதற்கு முன் எல்லைப்பகுதியை பாதுகாத்து எதிர்தாக்குதல் நடத்தினர். அந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த காவல் வீரர்களின் நினைவாக ஹார்ட்ஸ்பிரிங்கில் ஒரு நினைவிடம் நிறுவப்பட்டுள்ளது. 1960-ம் வருடம் நடந்த மாநில காவல்துறை தலைவர்களின் மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் பணியில் இறந்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த எல்லைக் காவல்படை பி.எஸ்.ஃப்(BSF) உருவாக்கப்பட்டது. இப்படை நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணிகளை செவ்வனே செய்து வருகிறது.


தலைநகர் தில்லியில் இராணுவத்திற்கு நினைவாலயம் இருப்பது போல வீரமரணம் எய்திய காவல் வீரர்களுக்கும் நினைவாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. திரு.பிரகாஷ்சிங், ரிபைரோ போன்ற ஒய்வு பெற்ற டிஜீபி-க்களின் முயற்சியால் நினைவிடத்திற்கான வடிவமைப்பு வல்லுனர்களிடமிருந்து கோரப்பட்டு அதில் ஒன்று தேந்தெடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா சுதந்திரம் அடைந்து 64 வருடங்களில் சுமார் அறுபதாயிரம் காவல் வீரர்கள் வீர மரணம் அடைந்த பிறகாவது புது தில்லியில் இந்த நினைவிடம் அமைய முதல் முயற்சி எடுக்கபப்பட்டதில் திருப்தியடையலாம். இன்னும் ஒரு வருடத்திற்குள் கட்டுமானப்பணிகள், புல்வெளித்தடம் அமைவது முடிக்கப்பட்டுவிடும். அதில் இது வரை உயிர் நீத்த எல்லா காவல் ஆளிநர்களின் பெயர்களும் பொறிக்கப்படும். தியாகிகளின் குடும்பத்தினருக்கு இவ்விடம் புனிதமான ஒன்றாகவும் மனச்சுமையை இறக்கி வைக்க ரம்மியமான வனமாகவும் அமையும். நமது மாநில காவல் தலைமையிடத்தில் முதல் முதவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. ஆனால் போன வருடம் ஏதோ ஒரு நிபுணர் மூலம் மாற்றியமைக்கப்பட்டதில் பழைய நினைவுக்கல் அகற்றப்பட்டது. கருவூலத்தின் வெளிப்பகுதியை அழகுப்படுத்தலாம் ஆனால் காவல் முன்னோர்கள் நிறுவிய ஸ்தூபியை அதே இடத்தில் நிறுவ வேண்டும்.


அவசர உலகில் ஏதாவது ஒரு நாளாவது காவல் முன்னோடிகள் வழிவகுத்த பாதையை நினைவுகூற, ‘’வீர அஞ்சலி’’ ஒரு வாய்ப்பு அளிக்கிறது. துப்பாக்கி குண்டு முழங்க வீர மரியாதைக்குப் பிறகு ஒலிக்கக் கூடிய குழலோசை, நமது நெஞ்சை நிமிரச் செய்து உறுதியாக காவல் பணியில் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த காவல் துறையின் சபத ஒலியாக அமைய வேண்டும். வீர மரணம் எய்திய காவலர் ஆண்டவன் அரவணைப்போடு சொர்க்கத்தில் அமர்த்தப்படுவார் என்பதை பிரதிபலிக்கும் கவிதை.

கனே சரியாக செய்தாயா கடமையை

சிறப்பித்தாயா மனிதப் பிறவியை

அகால சித்தியடைந்த காவலனை கேட்டார் கடவுள்,

‘தேவனே செய்தேன் கடமையை ஒரளவு

துப்பாக்கி ஏந்திய நான் தூய்மையான துறவியுமல்ல

தூய்மையாக இருக்கவில்லை நான் எப்போதும்

தூக்கமில்லா பணி சீர்தூக்க நேரமேது

தொழுகையில் குனிய பொழுதில்லை

பழுதில்லா பணிச்செய்த நிறைவுண்டு.

காவல்துறை என்றாலே கடுப்புத்துறை

கடுஞ்சொல் தொடுத்தேன் மனம் ஒவ்வாத போதும்

ஏன் பல சமயம் அளவோடு வன்முறை

சரளிவரிசையாக வசைப்பாட தவறவில்லை

கயவரை தலைதட்ட கை ஒங்க தயங்கவில்லை

நேர்மையாக பணியில் கைநீட்ட பழகவில்லை

கைக்கெட்டி வாய்க்கெட்டா கஷ்ட ஜீவனம்

சமூதாய சீர் குலைவை தினம் பார்த்து மனம் வெதும்பி அழுதென் பல நாள்

என் நிலையில் ஏழை உயிர், உடமை பாதுகாத்தேன்

பகைவர் பயம் தகர்த்தேன் திறந்த வெளியில் பணி செய்து

காலனால் வென்ற காவலனாய் ஒய்ந்து வந்துள்ளேன் ஒண்ட இடம் கேட்டு

கிடைத்தால் இருப்பேன் இல்லையென்றால் புரிந்து கொள்வேன் என்றான் காவலன் கதையைக் கேட்ட தேவன்

“காவலனே வா“ என்றழைத்தார்

நரகத்தை நுகர்ந்துவிட்டாய் சொர்கத்தில் உலாவு அமைதியாக என்றார்.“

வீர மரணம் எய்திய காவல்துறையினரை நினைவுகூரும் இந்நாளில் காவல் பணியில் வினை தீர்க்கும் வித்தகனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

00000

பணம் ‘சுருட்டிகள்‘


கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததால் கொடி அசைந்ததா

என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது

“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா

ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா என்று கேட்கக் தோன்றுகிறது.

1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.

இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம்.

ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.

சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன. உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.

-------

விரக்தியின் எல்லை



சமீபத்தில் SI மினட்சி மதுரையில் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சித்தரும் நிகழ்வு. காவல்துறையில் பணி மன அழுத்தம் Stress’ அதிகமாகக் கொடுக்கச்கூடிய பணி. உயர் அதிகாரிகளின் சரியான அணுகுமுறையால் இத்தகைய சம்பவங்களை தவீர்த்துருக்கலாம்.


மனோதத்துவர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.

இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனதுக்கு பட்டதை விளைவுகளைச் சிந்திக்காமல் வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது என்பார்கள். பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.


தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008ம் ஆண்டு 2396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் மும்பையில் 1111, தில்லியில் 1107, சென்னையில் 1319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்கு காரணமாகி விடுகின்றன.

தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சனையால் ஆண்கள் பெருவாரியாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான டௌரி பிரச்சனை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகளுக்கு கணக்கில்லை.

ஒருவரது வேலை அடிப்படையில் ஆராய்ந்தால் சுயவேலையில் ஈடுபடுபவர்கள் 39.8 சதவிகிதம் மொத்த தற்கொலைகளில் அடங்குவர். வீட்டை நிர்வகிக்கும் கல்யாணமான பெண்கள் 54.8 சதவிகிதம். ஆனால் அரசு வேலையில் உள்ளவர்கள் 1.7 சதகவிகிதம் தான். மற்றப்பணிகளை ஒப்பிட்டால் அரசுப்பணியில் பணிச்சுமை குறைவு அதனால் மனச்சுமைக் குறைவு என்று கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களின் அளவு 12 சதவிகிதம்.

இந்தியாவின் ஜனத்தொகையில் 55 சதவிகிதம் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பது கசப்பான உண்மை குழந்தைப் பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமை பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.

------------

காவல் ஒரு இமயம்


தேசிய பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. இராணுவமும் காவல்துறையும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எது நமக்குப் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லை பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததது என்பது தெளிவாகும்.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர் படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒன்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பது காவல் துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையை குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள் மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

தேசிய விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. உலகளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் காவல்துறையின் பொறுப்பு அசாதாரணமனது மட்டுமல்ல, அதை நிறைவேற்ற அமானுஷ்ய சக்தி உடலளவிலும் மன அளவிலும் ஓங்குதல் வேண்டும். தீயதை ஒடுக்க நடக்கும் தர்மயுத்தத்தில் உயிரிழந்த காவல் வீரர்கள் பலர். ஒவ்வொரு வருடமும் சராசரி 1000 காவல்துறை ஆளினர்கள் உயிர்தியாகம் செய்கின்றனர். காயமுற்றவர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பணிச்சுமையினால் எல்லா விதமான உடல் உபாதைகளையும் சுமந்து கடமையாற்றுவோர் ஏராளம். 1999-ல் இருந்து 2009 வரை 9310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

1959ம் வருடம் திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.ஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

சுயநலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் தான், தன் குடும்பம், ஜாதி, இனம் என்ற உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கின்றன. சமுதாயம் மற்றும் நாடு பற்றி சிந்திக்க நேரமில்லை. இத்தகைய சூழலில் சமுதாய நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரை போற்றுவோம்.

இந்தியாவை இணைக்கும் இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.

-----------

குழந்தைகள் தான் தெய்வம்



குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. 2008ம் ஆண்டு மொத்த குற்றங்கள் 22,500 அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காக கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்திற்கு உதவுகிறோம் என்று இந்த கொடுமைக்கு காரணம் காட்டுகிறோம். அந்த பச்சிளம் குழந்தைகளின் பிள்ளை பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையை கவனிக்க மறுக்கிறோம்.

பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும் பொழுது வேலையாட்களைத் தவிர மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுனர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.

பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. மிட்நைட் மசாலாவாக துவங்கி விரச காட்கள் இப்போது பட்டப் பகலுக்கு வந்துவிட்டது. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்ப திரும்ப விரச காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் எந்த பார்வையில் அவர்களை பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். எலக்ட்ரானிக் ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாக காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை. சின்னத்திரையைப் பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.

பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர் வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்று கூட ஆய்வு செய்வதில்லை.

சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படை பணிகளான குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டு பிடித்தல், அமைதி காக்க தகவல் சேகரிப்பது, இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும்.

காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்சனையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டு துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடி என்ன பயன். சட்டங்களை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பை பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாக குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளை குறிவைக்கும் நிலைவராது.

-------------

விதிகள் மதிக்க மிதிக்கல்ல


சாலை விபத்துக்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டதால் உயிரிழப்பு செய்திகள் மரத்துவிட்டது,. யாராவது எதாவது செய்யுங்கப்பா என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறோம். சாலை போக்குவரத்து அந்த வட்டார மக்களின் கலச்சாரத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் மிகையில்லை. வாகனம். ஓட்டும் முறை defensive driving, offensive driving என்று இரண்டு வகைபடும். வட மாநிலங்களில் இந்த offensive driving முறை பரவலாக இருக்கும். அந்த ஊரில் driver தவறு செய்துவிட்டு நம்மை முறைப்பார். ஏதோ சாலை அவருக்கு மட்டும் ஏற்பட்டது என்ற நினைப்பில்! சாதாரணமாக தென் நாட்டில் அதுவும் சென்னையில் defensive driving தான் பழக்கத்தில் இருந்தது. ஆனால் காலத்தின் கோலம்நம்ம ஊரு நல்ல ஊரு இப்போரொம்ப கேட்டுப் போச்சண்ணே! என்பதற்கேற்ப தாறுமாறாக ஓட்டுவது ஒரு கலையாகவே வளர்ந்துவிட்டது.

வாகன விதிகள் சாலைப் போக்குவரத்தின் ஒழுங்குமுறையை வரைமுறைப்படுத்துகிறது. விதிகள் புத்தகத்தை ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு முன் புரட்டிப்பாத்ததோடு சரி, விதிகளை நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை மதிப்பதுமில்லை விதிகள் மிதிக்கப்படுவதால்தான் சாலை விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம் 15,409 மக்கள் சாலை விபத்தில் தமிழ்நாட்டில் உயிரிழந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் இறுதி வரை 8120 பேர் உயிரிழந்துள்ளனர். போன வருடம் சாலை விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிகை 90,000 க்கும் மேல்.

விபத்தின்மையே முழுமையான சாலை பாதுகாப்பு. வேகம் குறைந்தால் விவேகம் வளரும். விபத்துக்கள் குறையும் முழுமையான சாலை பாதுகாப்பு அமைவதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம். முக்கியமாக நகரங்களில் வாகனங்கள் ஓட்டும் பொழுது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு ஓட்டினால் மன அமைதி ஏற்படும். பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும். சிவப்பு விளக்கை தாண்டக்கூடாது. இது அரசு வாகனங்களுக்கும், போலீஸ் வாகனங்களுக்கும் பொருந்தும். வேகக்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். அவசர வண்டிகளுக்கு வழிவிட வேண்டும். வாகன விபத்து எற்பட்டால் உடனடியாக காயமுற்றவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவேண்டும். ‘Golden Hours” என்று சொல்லப்படும் காயமுற்ற ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் உயிர்ழப்பை தவிர்க்கலாம்.

பிரதான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு ‘Emergency Accident Relief Centre’ தேசிய நெடுஞ்சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அதன் மூலம் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்தன. சென்னையில் மட்டும் நான் காவல்துறை ஆணையாளராக இருந்தபோது சாலை விபத்தில் உயிரிழப்பு 2005-ம் வருடம் சுமார் 30 சதவிகிதம் குறைந்தது. இதன் மூலம் மக்களின் பாராட்டுதலைப் பெற்றது. போலீசாருக்கும், மீட்புப் பணியினருக்கும் முதலுதவி பயிற்சி, வட்டார மருத்துவமனையில் அவசர சிகிச்சை வசதி, உரிய நேரத்தில் சாலை செப்பனிடுதல், சமிஞைகள் சரியாக செயல்படுதல், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் என்ற பல்முனை முயற்சிகள் ஒருங்கிணைந்தால் தான் சாலைப்பாதுகாப்பு முழுமையடையும். உயிர்ழப்பை கணிசமாக குறைக்கலாம். இது சத்திய வாக்கு.

எனக்குள் ஒரு மனசாட்சி


இந்தியில் “A Wednesty” என்ற படம் வந்தது அது தமிழில் ‘எனக்குள் ஒருவன்‘ என்று கமலாஹசன் நடித்து வெளி வந்தது. அதில் ஒரு காட்சி பொதுஜன ஒருவர் அரசு உயர் அதிகாரிகளைப் பார்த்து கூறுவார்கள் ‘சட்டதிட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தேச விரோதிகள் சமூதாயத்தை சீரழீக்க விடக்கூடாது. உகந்த நடவடிக்கை எடுகாவிட்டால் நாட்டின் பிரஜை என்ற அளவில் சமூக விரோதிகள் கொட்டத்தை அடக்க எனக்கு உரிமை இருக்கிறது‘ இந்தக்காட்சியின் போது படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தம்மையும் அறியாது கைதட்டி ஆரவாரித்தனர். இதுமக்களின் உள்ளுணர்வைக் காட்டியது. மிகசிறந்த காட்சி.

மூத்த வழக்குரைஞர் திரு பிரஷாந்த பூஷன் தாக்கப்பட்ட காட்சி தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. அக்காட்சியை பார்த்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். எல்லாத் தலைவர்களும் இத்தகைய வன்முறையை கண்டித்தனர். பேச்சுரிமைக்கு எதிரான உணர்வுகளை எவரும் அமோதிக்கமாட்டார்கள். தாக்குதலில் ஈடுப்பட்ட எதிரிகளின் ஒருவனான தேஜ்வந்த்பால் பக்சாலை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வழக்குரைஞர் பிரஷாந்த ஜம்மு காஷ்மீரின் எதிர் காலத்தை ஓட்டெடுப்பு மூலம் மக்கள் முடிவு செய்யவேண்டும் என்ற கூற்று தேச விரோதமானது என்றும் தனது எதிர்ப்பை இவ்வாறு காண்பித்ததற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்றும் “A Wednesty” என்ற படத்தில் வரும் காட்சியால் உந்தப்பட்டதாகவும் கூறியுள்ளான் எந்த அளவு சினிமா நம்மை பாதிக்கிறது என்பதை உணர வேண்டும்.

அதே சமயம் பிரஷாந்த பூஷன் ஜம்மு காஷ்மீர் பற்றி கூறிய கருத்து சரியா? பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறலாமா? ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பிற்காகவும் பிரிவினை வாதிகளின் தீவிரவாத தாக்குதலில் எவ்வளவு இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் உயிர் தியாக செய்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் அண்டை நாடான பாகிஸ்தானின் துணை இல்லை என்றால் நிகழ முடியாது என்பது மூத்த வழக்குரைஞருக்கு தெரியாதா? அவ்வாறு இருக்கையில் பொறுப்பற்று அத்தகைய கருத்து பொது மேடையில் கூறுவது கண்டிக்கத்தக்கது என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.

சமூக ஆர்வலர்கள் பலர் தோன்றிவுள்ளனர். சமூதாயத்தில் பிரச்சனைகள் பல தலை தூக்கும் பொழுது மக்களின் எண்ணங்களை இவர்கள் பிரதிபலிப்பதால் ஆதரவு பெற்றுள்ளனர். அதை வைத்து அவர்கள் எது வேண்டுமானால் பேசலாம் என்று எத்தனித்தால் அது விபரீதத்தில் முடியும். எதிலும் நிதானம் வேண்டும். அதே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஒரு உயர் காவல்துறை அதிகாரி சமூக ஆர்வலர்கள் சர்ச்சைக்குரிய வாதங்களை பொது நிகழ்ச்சியில் தெரிவித்தால் அதற்கான எதிர்ப்புகளையும் சந்திக்க தாயாராக வேண்டும் என்று கூறியது கவனத்துக்குரியது.

-----

என்கௌண்டர்


ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிக்கை கருத்துகணிப்பு ஒன்று நடத்தியது. சமூக விரேதிகளை அறுவை சிகிச்சை செய்வது போல நீக்க வேண்டுமா அல்லது சாத்வீக முறையை கையாள வேண்டுமா என்பதற்கு 67 சதவிகிதம் மக்கள் சமூக விரோதிகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். அராஜகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டதால் மக்கள் மனம் வெதும்பி பொருமை இழந்து இவ்வாறு ஒரு நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றனர் என்று கொள்ளலாம். காவல்துறையினர் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுக்காததால் இத்தகைய சமூக விரோதிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனதால் அளவுக்கு அதிகமான பலத்தை உபயோகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றும் அனுமானிக்கலாம். இவ்விரண்டு நிலைப்பாடுகளுமே காவல் துறையின் செய்ல்பாட்டிற்குப் பெருமை சேர்க்காது.

குற்றம் புரிந்தவர்களை Encounter செய்வது சட்ட விரோதமான செயல். நிராயுதமாக நிற்கும் ஒருவனை துப்பாக்கியால் சுடுவது எந்த விதத்தில் வீர தீர செயல்? ஜம்மு காஷ்மிர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் இப்போது சட்டீஸ்கர் மாநிலத்திலும் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க காவல்துறை துப்பாக்கி சண்டையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த சூழலில் நிஜமான Encounter நடக்கும். துப்பாக்கிச் சண்டை ஒய்ந்த பிறகு இருதரப்பிலும் உயிரிழப்பு இருக்கும். இத்ததைய காவல்துறை Encounter –ஐ தவிர்க்க முடியாதது. சமூதாய அமைதியை நிலை நட்டுவதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கை தமது உயிரையும் துச்சமாக நினைத்து போராடுவது மெச்சத்தக்கது.

அதைவிட்டு அமைதியான இடத்தில் சில அதிகாரிகள் தங்களை Encounter Specialist என்று விளம்பரப்படுத்தி சொல்வதற்காக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இதை நியாயம் படுத்துவதும் மிக தவறு. உச்ச நீதிமன்றம். இந்தகைய காவல்துறை வன்முறையை வெகுவாக கண்டித்துள்ளது நீதியரசர் திரு மார்க்கண்டே காட்ஜீ அவர்கள் இத்தகைய Encounter-ரில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும என்று எச்சரித்துள்ளார். எக்காரணத்திற்காகவும் அதிகார வரம்பை மீறக்கூடாது. தனிப்பட்டவருக்கு ஆதாயம் கிடைக்கலாம் ஆனால் அது நிரந்தர தீர்வைக் கொடுக்காது. சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைத்தான் நிலைத்து நிற்கும் நிறைவு தரும். மனிதநேயம் மேவியபணிகள் தான் காவலனை உற்ற நண்பனாக பிரதிபலிக்கும்.

தைலியின் கதை


1972-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். ஜெயகந்தனின் ஒரு பக்கக்கதை படித்த ஞாபகம் ‘தைலி‘ என்ற தலைப்பில் அதன் சாராம்சம் 1947-ம் வருடம் தைலி எப்படி இந்தாளோ அதே நிலையில் இருக்கிறாள். நைந்து போன புடவை குளித்தவுடன் பாதி புடவை உலருகிறது பாதி புடவை உடலை மறைக்க. அது உலர்ந்தவுடன் மறு பாதி உலர்த்துவாள். சுதந்திரம் அடைந்தபோது 1947-ல் தைலியின் நிலை இதுதான். 25 வருடங்கள் கழிந்து 1972-ம் வருடத்திலும் நிலை அதே தான். மனதை நெகிழ வைக்கும் ஒரு பக்கக்கதை இது.

2011-ல் தைலியின் நிலை மாறியாதா? எவ்வளவு தைலிகள் மாற்றுத் துனியில்லாமல் இருக்கிறார்கள்? வழிபாடுத்தலங்களின் வாசலில், சாலை சந்திப்புகளில், கல்யாண வீட்டு வாசலில் ஆதரவற்ற ஏழைத் தைலிகளை பார்க்கிறோம்.

இன்னொரு அன்றாடக்காட்சி. தோலில் ப்ளாஸ்டிக் கோணி, தெரு ஓரக் குப்பத்தொட்டியைப் பீராய்ந்து குப்பையிலிருந்து ஏதாவது பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில், சாப்பாடு மிச்சம் மீதி என்று எடுத்து அதை வைத்து ஜீவனம் நடத்தவேண்டிய நிலை.

இப்போது வயது முதிந்தவர்களுக்கு Senior Citizen மாதம் ரூபாய். 1000/- என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. முன்பு ரூபாய். 500/- மட்டுமே. இது உரியவருக்கு சென்று அடைகிறதா என்பது கேள்விக்குறி. கந்தையான துணியும், உழைக்கு உடலே கந்தலாக கூணக்குறுகி வயது காலத்திலும் ஓடாய் உழைக்கும் பலரை தெருக்களில் பார்க்கிறோம். அவர்களுக்கு இந்த ஒய்வுதியம் கிடைக்குமா? அவர்களுக்கு நியமாக கிடைக் வேண்டியதற்கு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து கையேந்த வேண்டுமா? இம்மாதிரி சலுகை இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளைப் பெற்றுத்தர வேண்டியது யார் பொறுப்பு? இத்தகையக் கஷ்ட நிலையில் உள்ளவர்களை ஏன் அரசு அதிகாரிகள் தேடிப்பிடித்து உதவக் கூடாது? அது தானே உண்மையான மக்கள் சேவை? நமக்கு சேர வேண்டிய சலுகைகளைப்பற்றி குறியாக இருக்கிறோம். கடமைகளை நிறைவேற்றுவதில் அதே துடிப்பு வேண்டாமா? நமது கண்னெதிரே கஷ்ட ஜீவனத்தில் உழலும் இந்த ஏழைகளைப் பார்த்தாவது சுயமரியாதை போர்வையில் வலம் வரும் செல்வந்தர்களின் தன்னநலம் குறையுமா? சமூதாயத்தில் பொது நலம் பெருக வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான சமூதாயம் உருவாகும்.

ஊழலை வீழ்த்துவோம், நேர்மையைப் போற்றுவோம்.

ஊழல் என்றாலே சாதாரண அரசு ஊழியர்களோடு நமக்கு நியாயமாக கிடைப்பதற்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டிய நிலைதான் நமது மனதில் நிற்கும். தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம், சாலை போக்குவரத்து, அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பொதுமக்கள் அல்லல்படுவது அன்றாட நிகழ்வாகியுள்ளது.

இந்திய நாட்டு ஜனத்தொகை 120 கோடி இதில் சுமார் 45 சதவிகித மக்கள் எதாவது ஒரு முறையாவது அரசத்துறையோடு கசப்பான ஊழல் சம்மந்தப்பட்ட அநுபவம் பெற்றிருப்பார்கள் என்று கணக்கிப்பட்டுள்ளது. உலகநாடுகளின் எண்ணிக்கை 197, அதில் வெளிப்படையான ஊழலற்ற நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம் 87. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் முதல் 15 இடங்களில் உள்ளவை. ஊழல் நமது முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டை.

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழல் என்ற பிரச்சனைக்கு தீர்வு இல்லை. 1964-ம் வருடம் ஊழலை ஓழிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக மத்திய அரசு சந்தானம் கமிஷனை அமைத்தது. இந்த கமிட்டி நல்ல பல பரிந்துரைகளை வழங்கியது. அதில் லோக்பால் என்ற அமைப்பு மத்தியிலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற குழு அரசு இயந்திரங்களில் நிகழும் ஊழல் குற்றச்சாட்டுகளை, விசாரிக்க அமைக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானது. இதற்கான சட்டம் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில் 2ஜீ அலைக்கற்றை விவாகாரம், காமன்வெல்த் ஆட்ட நிர்வாகத்தில் முறைகேடுகள், மும்பையில் இராணுவ வீரர்களுக்கான ஆதர்ஷ் குடியிருப்பு கட்டுவதில் ஊழல், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தலைவர் நியமனத்தில் குளறுபடி என்று அடுத்தடுத்து ஊழல் பிரச்சனைகள் தலை தூக்கியதில் மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது. தாமும் ஊழலுக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற எழுச்சியை தூண்டியுள்ளது.

மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் சத்திய வழியில் பல சமூக சீர்திருத்தங்களையும் மக்கள் ஒத்துழைப்போடு கிராம தன்னிறைவுத் திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் ராணுவ வீரரும் காந்தியவாதியுமான திரு. அன்னா ஹசாரே லோக்பால் சட்டம் நிறைவேற போராடிவருகின்றார். மூத்த வழக்குரைஞர் திரு சாந்தி பூஷன், பிரஷாந்த பூஷன், முன்னாள் உயர் அரசு அதிகாரிகள் கேஜரிவால், கிரன்பேடி போன்றவர்கள் அன்னா ஹசாரே குழுவில் இந்தப் போரட்டத்திற்கு வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் முன்மொழிந்த சட்டம் எல்லா தரப்பு அரசு அதிகாரிகளையும் பிரதம மந்திரி உட்பட எல்லா அமைச்சர்களையும் விசாரிக்க வலுவான அமைப்பு எற்படுத்த வேண்டும் என்று விவரிக்கிறது. ஆனால் அரசு தரப்பில் வைக்கப்பட்ட மாதிரி சட்டம் உப்பு சப்பில்லாத நோஞ்சான் அமைப்பு.

திருமதி அருணா ராய் அவர்கள் தலைமையிலான சமூக ஆர்வலர் குழு இவ்விரண்டிற்கும் நடுவிலான சில மாற்றங்கள் அடங்கிய ஆலோசனை கூறியுள்ளது. பாராளுமன்ற விசாரணைக் குழு, பாராளுமன்ற உறுப்பினரும் வழக்குறைஞ்ருமான திரு சிங்வி தலைமையில் எல்லா தரப்பினரிடமிருந்து பெறப்படும் குறிப்புகளை ஆராய்ந்து மனதுக்கு நிறைவான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வைக்கப்படும் என்று எதிர்பார்கலாம்.

சட்டம் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் அதை வழிமுறைப்படுத்துவதிலும் தீர்க்கமான அணுகுமுறை வேண்டும். நமது அமைப்பில் சட்டங்களையும், விதிகளையும் நடைமுறைப்படுத்திவதில்தான் சிக்கல் உள்ளது. பாரபட்சம் பார்க்கக்கூடாது.

பொதுமக்களும் அவரவர் நிலையில் ஊழலை ஒழிக்கவும் ஊழலுக்கு துணை போகமாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்கவேண்டும். நியாயமாக கிடைப்பதற்க்கு லஞ்சம் கொடுக்க கூடாது. கேள்வி கேட்க தயங்கக்கூடாது. உயிர், உடமைகள் பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம் கண்ணியம், இவை அடிப்படை உரிமைகள். எந்த விதத்திலும் தனிமனித அவமதிப்பை தாங்கிக்கொள்ளக்கூடாது. சுயமரியாதைப்பற்றியும், பகுத்து அறியும் முறையை மேடையில் முழுங்குபவர்கள் வாய்ச்சொல் வீரர்கள், ஆனால் உண்மையான சுயமரியாதை ஊழலுக்குத்துணை போகாத எண்ணம் சொல் செயல். லஞ்சம் பெறுவதும், லஞ்சம் கொடுப்பதும் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல் என்ற அளவில் தீயது விட்டீட்டல் பொருள்என்ற ஒழுக்கமான வாழ்க்கையே உண்மையான சுயமரியாதை.

ஊழலை வீழ்த்துவோம்.

நேர்மையைப் போற்றுவோம்.