Tuesday, March 29, 2011

நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு


பரோபகாரம் இரு வகைகளில் புனிதமடைகிறது. கொடை கொடுப்பவரும், கொடை பெறுபவரும் ஆசிர்வதிக்கப்படுவார்கள் உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பொன் வரிகள். ஆனால் விதிகளை மீறுவதற்கு லஞ்சமாக பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்திற்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தேர்தல் களத்தில் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்து வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வருமான வரித்துறை, போன்ற பல துறைகள் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டால்தான் பண ஆதிக்கத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

வோட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாக பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும், தலையிடத்தான் முடியுமா, அது சாத்தியமா, என்ற எண்ணம் சாதாரண பணியாளர்களிடம் மட்டுமின்றி மேற்பார்வையிடும். காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம். காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று வாதம் தொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இதை அறிவின்மை என்று எடுத்துக் கொள்ளவதா, அசட்டையான அணுகுமுறை என்பதா, தனது இயலாமையை நியாயப்படுத்தும் போக்கு என்பதா, அல்லது இத்தகைய முயற்சிகளுக்கு சட்டத்தை அமல்படுத்துபவர்கள் கண்டும் காணாது இணங்கியுள்ளார்கள் என்பதா? கிரமப்படி தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம். அரசியல் சாசனத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக பாரபட்சமின்றி செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர் வசதி படைத்தவர் ஏழை என எந்த பாகுபாடுமின்றி எல்லா குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே பூரண வாக்குரிமை, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் வழங்கப்பட்டது.

பிரம்மாஸ்திரம் என்று புராணங்களில் எந்த யுக்தியும் பலிக்காத நேரத்தில் போர்வீரர்கள் இறுதியாக உபயோகிக்கக்கூடிய ஆயுதம் என்று விவரிக்கப்பட்டிருப்பதை படித்திருக்கிறோம். வாக்குரிமை என்பது அத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதம். வேறு வழியின்றி இறுதியாக பிரயோகிக்கும் ஆயுதம் மட்டுமல்ல இது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அல்லது எப்போது தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரயோகிக்க வல்ல சக்தி வாய்ந்த அம்பு. நல்லவர்களையும், வல்லவர்களையும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவல்ல சக்தி படைத்தது. வாக்குரிமை என்ற ஆதீத சக்தியை, விற்பனைக்குரிய பொருளாக, குலைந்து வரும் நமது சமுதாயத்தில் விகாரப்படுத்துவது நம் எல்லோருக்கும் தலைக்குனிவு. முன்னாள் தேர்தல் ஆணையர் தேர்தல் முறைகேடுகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்று கூறியிருப்பது தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சிந்திக்க வைக்க வேண்டும்.

தேர்தல் நடத்துவது ஏதோ மற்றுமொரு அரசுப் பணி என்று எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தல் விதிகள் இருக்கின்றன. அதில் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் தேர்தல் முறைகேடுகள், ஊழல்கள் தெளிவாக 123-வது பிரிவில், வேட்பாளர்களுக்கு வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுப்பது, வாக்காளரை வேறு வகையில் வயப்படுத்துவது தேர்தல் குற்றங்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆயினும் வாக்குகளைப் பெற பணமும் பொருளும் பட்டுவாடா செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை தொகுப்பில் தவிர்க்கப்படவேண்டிய ஊழல்கள் என்ன என்பது தெளிவு டுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணிநேர கால அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போய்வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் ஊழல்கள், குற்றங்கள் என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்”.

திரு சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையாளராகப் பொறுப்பேற்ற உடன் தேர்தல் விதிகள் முறையாகவும், கடுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் பலனாக தேர்தல் ஆணையம் வலுவடைந்தது. அரசியல் கட்சிகளும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாயினர். 1990 ல் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் தேர்தலின் போது வேட்பாளர் செலவு செய்வதை கண்காணிக்க பிரத்யேகமாக மத்திய வருவாய்த்துறை மற்றும் வருமானவரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையால் பல வரவேற்கத்தக்க மாறுதல்கள் நடைமுறைக்கு வந்தன. முக்கியமாக காவல்துறைக்கு பிரச்சனைகள் வெகுவாக குறைந்தது.

காவல்துறையின் தேர்தல் பணிகள் மூன்று கட்டமாக பிரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடக்கும் வேட்பு மனுத்தாக்கல், தேர்தல் பிரச்சாரம், மக்களை சந்தித்து வாக்குக் கேட்டல் முதல்கட்டம். இரண்டாவது கட்டம் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின் தேர்தல் நாளுக்கான ஆயத்தப்பணி மற்றும் அமைதியாக வாக்களிப்பு நடைபெற பாதுகாப்பு, ஓட்டுச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைத்தல் இதில் அடங்கும். மூன்றாவது கட்டமாக வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, முடிவு அறிவித்தபின் வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலப் பாதுகாப்பு, தேர்தல் முடிவுகள் குறித்து அந்தந்த சரகங்களில் எழக்கூடிய சர்ச்சைகள், அதனால் விளையும் கைகலப்பு இவற்றை கணித்து தடுப்பு நடவடிக்கை எடுத்தல் என்று காவல்துறைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது.

ஒவ்வொரு சரகத்திலும் எழக்கூடிய பிரச்சனைகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால் தேர்தல் அமைதியாக நடக்கும். இதற்கு அடிப்படை பாரபட்சமற்ற நேர்மையான பணி. தேர்தல் பிரச்சாரத்தின் போதும், பிரச்சாரம் முடிவுற்று தேர்தல் நாளுக்கு முன் 48 மணி நேர கெடுவின் போது தான் அதிகமாக விதிமுறை மீறல்கள் அதுவும் பணம் பொருள் பரிமாற்றம் நடக்கக்கூடிய தருணம். அப்போதுதான் காவல்தறையும் தேர்தல் பார்வையாளர்களும், வருவாய்த்துறையும் கவனமாக இணைந்து செயல்படவேண்டும்.

தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், பணியாளர்கள், ஓட்டுச் சாவடிககள், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஏற்பாடுகள் இவை சரியாக உள்ளனவா என்பதைப் பற்றி அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்துதல், தேர்தல் பணியாளர்கள் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தல், பொதுக் கூட்டங்கள் விதிகள் படி பல்வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, சரியான நேரத்தில் முடிவுறுகிறதா, தேர்தல்விதி மீறல்கள் பற்றிய புகார்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் படுகிறதா, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணைகள் பாரபட்சமின்றி நிர்வகிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

கள்ள ஓட்டு போடுவதை ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வாக்குச் சீட்டு முறை இருந்த காலத்தில் அராஜகமாக கும்பலாக வாக்குச்சாவடியில் நுழைந்து வேண்டியவர்களுக்கு வரிசையாக குத்திவிட்டு வாக்குப் பெட்டியில் போட்டுவிடுதல் -- இது தான் வாக்குச் சாவடியை கைப்பற்றுதல் என்ற உச்சகட்ட மோசடி. இது பல மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்கத்தான் பிரச்சனை உண்டாகக்கூடிய வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. இப்போது மின்னணு வாக்குப்பெட்டி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தவறுகள் வெகுவாக குறைந்துள்ளது. மின்னணு வாக்குப்பெட்டியில் ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுகள்தான் போட முடியும். அரை மணி நேரத்தில் அதிகபட்சமாக 150 வோட்டுகள் தான் போடமுடியும். ஆனால் வாக்குச்சீட்டு முறையில் ஆயிரம் ஓட்டுகள் கூட குறைந்த நேரத்தில் போட்டுவிடமுடியும். ஆயினும் வாக்குச்சாவடியில் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை சரிகட்டி பலத்த கட்சிகள் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போடக்கூடும். ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுதல் மக்கள் பிரதிநிதத்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 171 பிரிவு (D)-ன்படி குற்றம். வாக்குச் சாவடியில் அமர்வு அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பலம் வாய்ந்த வட்டார தாதாக்களின் அச்சுறுத்தல் மற்றும் பணத்தாசை ஆகியவற்றால் இணங்கும் அமர்வு அதிகாரிகளின் இசைவோடு கள்ள ஓட்டு வேண்டிய வேட்பாளர்களுக்கு போடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பலம் வாய்ந்த கட்சிகள் வாக்காளர் பட்டியலை வாக்குச் சாவடி வாரியாக விவரங்களை சேகரித்து, தமது கட்சிக்கு சாதகமாக ஓட்டுபோட கூடியவர்கள், எதிரணிக்கு ஓட்டு போடக்கூடியவர்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என்று பிரித்து, வாக்களிப்பு துவங்கிய உடனேயே தமக்கு சாதகமாக ஓட்டுபோடக் கூடியவர்களை வாக்களிக்க வைத்து விடுவார்கள். கள்ள ஓட்டு மதியத்திலிருந்து தான் துவங்கும். தேர்தல் பணியில் உள்ளவர்களும் சற்று சோர்ந்து இருப்பார்கள் மதியஉணவு நேரம். இந்த தருணத்தில் தான் மேற்பார்வை அதிகாரிகள் உஷாராக பணியில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவல் துறையை திசை திருப்புவதற்காக வேறு இடத்தில் பிரச்சனை இருப்பதாக தகவல் கொடுத்து குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் கயவர்கள் உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்பொழுது வாக்குச்சாவடிகளை மையமாக வைத்து பாதுகாப்பு பணிகள் திட்டமிடப்படுகின்றன. வாக்குச்சாவடியின் பாதுகாப்பு, அதனை சுற்றி முதல் வளைய ரோந்து பாதுகாப்பு, முக்கிய சந்திப்புகளில் அதிரடிப்படை வைத்திருப்பு, சரக ஆய்வாளர்கள் அதிரடிப்படையுடன் ரோந்து, சரக துணை கண்காணிப்பாளர் ரோந்து, முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை என்று பாதுகாப்பு வளையங்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடியைச் சுற்றியும் போடப்படும். இத்தகைய பாதுகாப்பு வளையங்களை முறியடித்தால் தான் சட்டவிரோத செயல்கள் நடக்க முடியும்.

தேர்தல் பாதுகாப்பு பணி வெற்றி பெற வேண்டும் என்றால் காவல்துறை ஆளினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலையில் நேர்மையாக பணியாற்ற வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் அவர்களது முன்மாதிரியான நடவடிக்கை இன்றியமையாதது. உயர் அதிகாரிகள் களப்பணியில் உள்ள பணியாளர்களை திரும்ப திரும்ப சந்தித்து அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் உடன் உதவிக்கு வந்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மையாக பணி செய்யுங்கள் என்று அறிவுறுத்த தயங்கக்கூடாது, ஆனால் தயங்குகிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.

தேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெற பணம் கொடுப்பதும், வாக்களிக்க பணம் பெறுவதும் தமது வீட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதற்கு ஈடாகும். பணம் கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் தன்மானம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வாக்களிக்கும் மக்கள் சுயமரியாதையுடன் நேர்மையாக வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தேர்தல் பணியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பணியாளர்களைச் சார்ந்தது. அது கௌரவமாக நிர்வகிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்பட வேண்டும்.

Saturday, March 5, 2011

பயணமா? உயிர் பணயமா?


சமுதாயத்தில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளில் அன்றாடம் எல்லோரையும் முட்டி மோதுவது போக்குவரத்து நெரிசல் ஒன்று தான். நாலு வழிச்சாலை நெரிசலை ஓரளவு சீர்செய்தாலும் வேகம் தறிகெட்டுப் போய் உயிர் பலி நாள்தோறும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரோடு நெடுஞ்சாலையில் மூன்று மருத்துவர்களைப் பலி கொண்டது. எவ்வளவு பெரிய இழப்பு இது.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 4873 கி.மீ., மாநில நெடுஞ்சாலையின் நீளம் 10,549 கி.மீ. தவிர மாவட்ட சாலைகள், கிராமச் சாலைகள் உள்ளன. அவற்றின் மொத்த நீளம் 46,252 கி.மீ. வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவு பெருகுகிறதோ அந்த அளவு சாலைகளின் வாகனக் கொள்ளளவு வளர்ச்சி அடைவதில்லை. ஒரு சாலையினை அகலப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டு, பணி நிறைவு பெறுவதற்குள் முதலில் கணிக்கப்பட்ட நெரிசல் பன்மடங்கு பெருகிவிடுகிறது. சாலை ஆக்கிரமிப்பு அகற்றல், அகற்றிய இடங்களில் மீண்டும் ஊடுருவல் என்று பல பிரச்சனைகளால் நெரிசல் ஒரு தொடர் கதையாகவே உள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் எல்லா வகை வாகனங்களையும் தயாரிக்கும் வாகன தொழிற்சாலைகள் உள்ளன. அந்த வகையில் வாகன தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் இந்தியாவின் டெட்ராய்ட் தமிழகம். அதற்கேற்றவாறு வாகன எண்ணிகையும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 3,750 வாகனங்கள் பதிவாகின்றன. இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் 108.39 லட்சம் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 25.21 லட்சம் இரண்டு சக்கர வாகனங்கள், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 132.20 லட்சம். 1964ம் வருடம் வாளிப்பான கிராமமாக இருந்த சென்னையில் சில ஆயிரம் வாகனங்கள் மட்டும் இருந்தன. இப்போதுள்ள நிலையைக் கணக்கிடுகையில் ராட்சத வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

எந்த வளர்ச்சியும் பின்னிப்படரும் பிரச்சனைகளின்றி விளையாது. சாலை தோறும் வியாபித்திருக்கும் வாகன நெரிசல் நம்மை மலைக்க வைக்கிறது. திடீரென்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டு பயணிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. பொது இடங்கள், சுற்றுலா தடங்கள், வியாபார மையங்கள், சிற்றுண்டி விடுதிகள் என்று எல்லா இடங்களிலும் நெரிசல். கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ கடன் பட்டாவது மக்கள் பணம் செலவழிக்கும் மனப்பாங்கினை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும் காவல்துறைக்கும், உயிர்மீட்புப் பணிகளில் முதல் பங்கு வகிக்கும் தீயணைப்புத் துறைக்கும் மக்கள் பாதுகாப்பில் புதிய தோன்றல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அழகான இளமைக்கே உரித்தான பிரகாசத்தோடு ஒரு கல்லூரி மாணவன் ஆனால் அவனது கண்களில் பிரகாசம் இல்லை. அதை மறைக்க நிரந்தர கறுப்புக்கண்ணாடி. தந்தையோடு முன்சீட்டில் 4 வயது சிறுவனாக நெடுஞ்சாலையில் பயணித்தபோது நேர்ந்த கொடூர விபத்தில் குழந்தையின் கண்களை கண்ணாடி துண்டு துளைக்க ஓடி விளையாடி மகிழ்ந்த சிறுவனை இருள் சூழ்ந்தது. இம்மாதிரி எவ்வளவோ சோக நிகழ்வுகள். சென்னை ஊர்க்காவல்படை தலைவரின் மகனையே சாலை விபத்து பலி கொண்டது.

சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழும் மாநிலம் தமிழகம் எனலாம். 2009-ஆம் ஆண்டு 60,794 சாலை விபத்துக்கள் பதிவாகின. அதில் உயிரிழப்பு 13746, காயமுற்றவர்கள் எண்ணிக்கை 10,664. காயமுற்று போராடுபவர்களின் நிலைதான் கவலைக்குரியது. 2010 ம் வருடம் 64,996 சாலை விபத்தில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15,409. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,666. கடந்த மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

சாலை எல்லோருக்கும் பொதுவானது. பாதசாரிகள், சிறுவாகனங்கள், நடுத்தர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஏன் கால்நடைகள் என்று பல்வகை உபயோகிப்பாளர்கள். அவர்களை ஒழுங்குப்படுத்தி சட்ட விதிகளுக்கு உட்பட வைக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. நெடுஞ்சாலைகளை கண்காணிக்க பிரத்யேக போக்குவரத்து காவலர்கள் வாகனத்தோடு ரோந்து புரிகின்றனர். இத்தகைய ரோந்து நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 120. இது தவிர காவல் போக்குவரத்து நிலையங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளன. சென்னையில் மட்டும் 49 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் மோட்டார் வாகன சட்டங்கள் அமல்படுத்தும் அணி, சாலை விபத்து வழக்குகளை புலன் விசாரணை மேற்கொள்ளும் அணி என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு வாகன விபத்து நிகழ்ந்தால் புலன் விசாரணை மேற்கொள்ளும் பொழுது விபத்தின் காரணம் என்ன என்று ஆராய்ந்து அந்த இடத்தில் வருங்காலத்தில் விபத்து நிகழாத வகையில் நெடுஞ்சாலை, வருவாய்த் துறைகளோடு இணைந்து காவல்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமையிடத்தில் போக்குவரத்து திட்ட மேம்பாட்டு உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறு ஒரு ரயில் விபத்து நிகழ்ந்தால் ஆய்வு நடத்தப்படுகிறதோ அதே வகையில் சாலை விபத்து அதுவும் அதிகமானவர்கள் மாண்ட விபத்துக்களுக்கு கட்டாய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பட்ட காலிலேயே படும் என்று சில இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் நிகழும். அத்தகைய இடங்களில் தொடர் கண்ணிப்பு மேற்கொண்டால் தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

எந்த ஒரு வாகன விபத்தினை ஆராய்ந்தாலும் அதில் தனி மனிதனின் அஜாக்கிரதை வெளிப்படும். சட்டங்களை மதிக்காத மனப்பாங்கு, தன்னை ஒன்றும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு, போகும் பாதையில் கவலையின்றி செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுதல், போதாததற்கு மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்துவது என்று பல காரணங்களைக் கூறலாம். பலஇடங்களில் செப்பனிடாத சாலைகள், விபத்துக்களுக்கு வித்திடுகின்றன. நெடுஞ்சாலை பொறியியல் நுட்பத்தின் அடிப்படையில் சாலைகள் நேராகவும், சீராகவும் அமையவேண்டும். வளைவுகள் இருந்தாலும் அவை அகலப்படுத்தப்பட்டு முடிந்தவரை நேராக இருந்தால் எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியும். சாலை நடு மடுவுகள் அமைக்கப்பட்டு எதிரும் புதிரும் வரக்கூடிய வாகனங்கள் பிரிக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சனைகளை ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான தீர்வுகள் என்ன என்பதை முடிவு செய்யக்கூடிய மேலாண்மை ஒரு பிரத்யேக தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. பொறியியல் தொழில்நுட்பம் , சாலைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கல்வியும், கடுமையான அமலாக்கம் என்ற மும்முனை கணயங்கள் சாலை ஒழுக்கத்திற்கு இன்றியமையாதவை. இவற்றோடு பலமும் பலனும் சேர்க்கும் வகையில் போக்குவரத்து மேலாண்மையின் பங்குதாரர்களுக்கு முழுமையான அதிகாரம் அளித்தல் வேண்டும்.

அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு மற்ற வாகனங்களுக்கு இடம் கொடாது அதிவிரைவாக முதலில் யார் சேரும் இடத்திற்குப் போவது என்று குறியாக போட்டிப்போடுவது விபத்துக்கு வித்திடுபவை. பேருந்து ஓட்டிகள் சரியான கனரக வாகனப்பயிற்சி பெறுவதில்லை. பணியில் சேர்ந்த பிறகு தான் முழுமையாக ஓட்டப் பழகுகிறார்கள். இரவு செல்லக்கூடிய வாகனங்களில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பணிமாற்ற இரண்டு ஓட்டிகள் இருக்க வேண்டும். சில பேருந்துகளில் இருக்கும், ஆனால் லாரி போன்ற மற்ற கனரக வாகனங்களில் இரண்டு ஓட்டிகள் பரஸ்பரம் ஓய்வெடுத்து வாகனம் ஓட்டும் முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு செலுத்தப்படும் தனியார் கார்களிலும் ஓய்வின்றி மணிக்கணக்காக வாகனம் ஓட்டுவதும் விபத்துகளுக்கு காரணம்.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவது பணப்புழக்கத்தின் அறிகுறி என்று சந்தோஷப்படுவதா? கொடிய பழக்கத்தின் அடிமைகளின் சங்கமம் என்று வேதனைப்படுவதா?இந்த அளவு குடிமக்கள் குடிப்பதற்கு மற்ற மாநிலங்களில் வசதி இருக்குமா என்பது சந்தேகம்தான். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது வாகன விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம். காவல்துறை விசாரணையில் இது முழுமையாக வெளிப்படுவதில்லை.

சாலைகளின் மற்றொரு கொடிய வில்லன் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள். மணல் லாரி ஓட்டுனர்களின் நிலை ஒரு விதத்தில் பார்த்தால் பரிதாபத்திற்குரியது. அவர்கள் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு மணல் ஆற்றுப் படுகையிலிருந்து எடுத்தால்தான் தகுந்த ஊதியம் கிடைக்கும். அதிகம் அள்ளினால் அதற்கேற்றவாறு கூடுதல் ஊதியம். மணல் லாரிகள் தறிகெட்டு சாலையில் செல்வதற்கு இது முக்கிய காரணம். சம்பரதாயத்திற்காக வாகனத் தணிக்கை செய்யப்படுகிறதே தவிர மணல் லாரிகளை கட்டுப்படுத்த நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஓரம் போ ஓரம் போ மணல் லாரி வருகுதுஎன்று சாலைகளிலிருந்து நாம் ஒதுங்கினால் பிழைத்தோம்.

சாலைகளில் உயிரிழப்பவர்களில் அதிகம் பாதசாரிகள். சாலைகள் அகலப்படுத்தும் போது நடைபாதைகள் சுருங்குகின்றன. வாகனப் பெருக்கத்தால் இதுவும் போதவில்லை என்று இரண்டு வழிப்பாதை ஒருவழிப்பாதையாகின்றது. மேலை நாடுகளில் பாதசாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சாலையைக் கடப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது. சில சாலைகள் பாதசாரிகளுக்கென்றே ஒதுக்கப்படுகிறது. வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஜனத்தொகை அதிகமுள்ள நமது நாட்டில் எவ்வளவு செய்தாலும் கடலில் கரைத்த பெருங்காயம் தான் அதிலும் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படாத மேல்தள பாதசாரி கடவுகள். நிதி உதவிய தலைவரின் பெயர் தாங்கிய இந்த விளம்பர மேல்தளங்களின் பயனளிப்பு மிகக்குறைவு.

சராசரி ஒரு வருடத்திற்கு 6163 பாதசாரிகள் உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்பில் இது 40 சதவிகிதம். அதற்கு பிறகு வருவது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள். அவை ஆட்கொள்ளும் உயிர்களின் எண்ணிக்கை 4623 இது மொத்த உயிரிழப்பில் 30 சதவிகிதம்.

காவல்துறை மக்களோடு இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்துகிறார்கள். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும். சாலை போக்குவரத்து விபரீதங்களின் விளைவாக மடிவோரின் எண்ணிக்கையை காவல்துறை முனைப்பாக செயல்பட்டால் குறைக்க முடியும். 2005-ம் ஆண்டு சென்னை மாநகர காவலின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் சாலை உயிரிழப்பு 30 சதவிகிதம் குறைந்தது. விபத்தின்மையே முழுமையான சாலைப் பாதுகாப்பு. அதற்கு அடிப்படை ஊழலற்ற அணுகுமுறை.