Thursday, July 22, 2010

திக்குத் தெரியாது வீதியில்

ல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர். மயானத்தைச் சுற்றி பல கதைகள். சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்கள். மனதை மருளச் செய்யும் இத்தகைய இடங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றால் நம்புவது கடினம். இது நகரங்களில் ஏற்படும் நெரிசலின் விளைவு.

நகரங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருகிறது. பிரகாசமான எதிர்கால கனவை மனதில் தேக்கி வேலையைத்தேடி கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் 10 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். நமது நகரங்களின் ஜனத்தொகை அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகைக்கு சமம். இந்த அதிகரிப்போடு நகரங்களின் அடிப்படை வசதிகளின் தேவையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, நல்ல சுகாதாரம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படவேண்டும் என்றும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சமுதாயத்தின் பொறுப்பும் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. தென்ஆப்பிரிகா நாட்டின் அரசியல் சாசனத்தில் அந்நாட்டு மக்களுக்கு வீடு அடிப்படை உரிமை என்றும் வசதி செய்து கொடுக்கவேண்டியது அரசின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியில் நீதிமன்றம் மூலம் நிலை நிறுத்தக்கூடிய பிரிவுகளாக உள்ளன. ஆயினும் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி போன்றவற்றை அரசாங்கம் தனது அடிப்படை கொள்கைளாக வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வசிக்க வீடில்லாமல் பராரியாக அண்டியும் ஒண்டியும் வாழும் மக்களின் பிரச்சனை பெரிய சமுதாயப் பிரச்சனையாக உள்ளது. அது மேலும் வருங்காலத்தில் பூதாகரமாக உருவெடுக்கும் என்று ஐக்கியநாடுகள் கவலை தெரிவித்திருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 10 கோடி மக்கள் ஸ்திரமான வீடில்லாமல் நாடோடிகளாக திரிகிறார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. அதில் கணிசமானவர்கள் ஏழை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குடியிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலைக்கு ஏழ்மை, வேலையின்மை, ஆயுததாக்குதலால் குடிபெயர்தல், குடும்ப பூசல்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், மனநிலை பாதிப்பு போன்ற பலகாரணங்கள் கூறலாம். நகரங்களுக்கு வேலை தேடிவருபவர்கள் வேலை கிடைக்காமல் சமுதாயத்திற்கு சுமையாக தெரு ஓரங்களிலும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், குடிசைப் பகுதிகளிலும் ஒண்டியிருப்பதைப் பார்க்கலாம். முதலில் தற்காலிகமாக தங்குபவர்கள், மெல்ல அண்டுவதையும் அதில் சிலர் சுரண்டிப் பிழைப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சமுதாய சுமைகளை “ஸ்கவாட்டர்ஸ்” என்றும் “ஸ்பான்ஜீஸ்” என்றும் மேலை நாடுகளில் வரையறுக்கின்றனர். இத்தகைய மனித உண்ணிகளை வழிநடத்தி சமுதாயத்தோடு உபயோகமானவர்களாக இணைப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.

காலம் காலமாக காவல் துறைக்கு பராரியாக திரிபவர்களை கண்காணித்து அவர்கள் குற்றங்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. வேலையற்று திரியும் இளைஞர்கள் அடிமைத் தொழிலாளர்களாக சிக்கி மிக மோசமான நிலையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

வேலையில்லாது தத்தளிக்கும் பல இளைஞர்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் ஏற்படுவது இயற்கை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு இடைத்தரகர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 1993ம் வருடத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல இடங்களில் குண்டு மறைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வைக்க இவ்வாறு பராரியாக ஒண்டியவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுமார் 100 கோடி ஜனத்தொகை கொண்ட நமது நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலாவது இருக்கும். நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவின் திறந்த எல்லையைக் கடந்து குடியிரிமை இல்லாத மக்களின் நிலை மற்றொரு சிக்கலான பிரச்சனை.

மேலை நாடுகளிலோ, மற்ற இடங்களிலோ வேலை வாங்கித்தருவதாக ஆசைக்காட்டி மனிதர்களை வைத்து நேர்மையற்ற வியாபாரம் செய்யும் தரகர்கள் நகரங்களில் அண்டிப் பிழைக்கும் குடும்பங்களை குறிவைக்கின்றனர், அதில் பல பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். உலகில் பல நாடுகளிலிருந்தும் இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதில் 68 சதவிகிதம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வணிகத்தில் சிக்குகின்றனர். நேபாளத்திலிருந்து சராசரி ஆண்டொன்றுக்கு 2 லட்சம் நேபாளி பெண்கள் கடத்தப்பட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதர்களை கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் “க்ரைம் சிண்டிகேட்” என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிக கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தால் போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது என்பது சர்வதேச போலிஸ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.

அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதல் பத்து நகரங்கள் ஆசிய நாடுகளில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோவிற்கு அடுத்து வரும் மும்பை நகரின் ஜனத்தொகை 2015ம் ஆண்டு சுமார் 2 கோடியே எண்பது லட்சத்தை எட்டிவிடும். இந்த ஜனத்தொகை பெருக்கத்தோடு வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

வருங்காலத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கக்கூடிய நெரிசலை சமாளிப்பது ஒன்று தான். இந்த நெரிசல் தனிமனிதனை மறைத்து விடுகிறது. நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் என்று மிதக்கும் மக்கள் கூட்டம் வேறு. இந்த மக்கள் கூட்ட கண்காணிப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சந்தேகமான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல். மற்றவர்களை குற்றங்களில் ஈடுபடாத வகையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களில் உறையச் செய்யும் கயவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட தனிக் காவல் பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுத்தல் என்று மூன்று வகையான முக்கியப் பணிகள் காவல்துறைக்கு உண்டு.

இருக்க இடமில்லாமல் அலையும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. நாற்பது வயதுக்குள் தனியாக முகாந்திரம் இல்லாத பெண் என்றாலே காவல் துறையினர் விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பிவிடுவார்கள். மனித உரிமைகள் விழிப்புணர்வினாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் சந்தர்பவசத்தால் பாலியல் தொழிலில் சிக்கும் பெண்கள் குற்றவாளிகளாக பாவிக்காமல் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்ற நிலை வரவேற்கத்தக்கது. இவ்வாறு மீட்கப்படும் பெண்கள் குடும்பத்தோடு இணைக்கப்படுகின்றனர் அல்லது சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

ஒண்ட இடமில்லை என்றாலே அது ஒருவரது மனநிலையை வெகுவாக பாதிக்கும். நகரங்களில் வீடும் வேலையும் இல்லாதவர்கள் முக்கால் சதவிகிதம் இத்தகைய மனநிலை அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்களை இது மேலும் பாதிக்கும். போதைப் பொருள் கடத்துபவர்கள் இவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி போதைப் பொருள் விற்பதற்கு பரவலாக அனுப்புகிறார்கள். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டாலும் போதை முதலைகளுக்கு கவலையில்லை ஏனெனில் பராரியாக திரிபவர்களுக்கு குறைவில்லை. இந்த குற்றச் சூழலை முறியடிப்பது நகரக் காவல்துறையின் தலையாய பணி. தவறினால் அது சட்டம் ஒழுங்கை வெகுவாக பாதிக்கும்.

ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதில் செம்மையான பணிகள் செய்து வரும் நிறுவனம் “பானியன்” என்ற தன்னார்வ தொண்டு மையம். 2004ம் வருடம் பானியனோடு சென்னை புறநகர் காவல்துறை இனணந்து “டயல் 100” என்ற திட்டத்தை வகுத்து சென்னை நகரில் ஆதரவற்று வாடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்தோடு இணைப்பது அல்லது சுயமாக வேலை செய்து பிழைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே சுமார் 300 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. காவல்துறைக்கு நல்லவடிவம் கொடுக்கும் இத்திட்டம் இன்றும் செயலாக்கத்தில் உள்ளது.

நாடு முன்னேற்றம் அடைந்து வருவதின் பயன் எல்லோருக்கும் சென்று அடைந்தால் தான் சமுதாயம் சுமுகமான நிலையில் செயல்படும். ஏழைகளின் நிலை ஓரளவு உயர்திருந்தாலும் பணக்காரகள் பன்மடங்கு பெருகிவருவதோடில்லாமல் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. சமுதாயத்தில் உள்ள இத்தகைய மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவது நமது கடமை. சட்டீஸ்கர், ஒரிசா, பீஉறார் மாநிலங்களில் சில பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ந்துவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை இந்தியாவின் நெரிசல் மிக்க நகரங்களுக்கும் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியின் பயன் நிறைவாக எல்லோருக்கும் நிரவப்பட்டால் தான் அமைதி காக்க முடியும். முதல் கட்டமாக அண்டியும் ஒண்டியும் வீதியில் இருக்கும் திக்கற்றவர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தால் தான் சமுதாய அமைதி சாத்தியமாகும்.

Published in Dinamani Newspaper on 19.07.2010

Friday, July 16, 2010

Reform in Uniform

The Ariticle "Reform in Uniform" Published in Conversations- A chronicle of Social currents the links is below

http://www.4shared.com/document/p6_KAkJH/CSIM_Conversations_July_Celebr.html

Wednesday, July 7, 2010

மெய்வருத்தம் கூலிதரும்


1947-ம் வருடத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்களுக்கு ஒரு புறம் சுதந்திர நாட்டில் பிறந்தோம் என்ற நிம்மதி இருந்தாலும், மறுபுறம் ஆரம்ப காலகட்டத்தில் நாடு சந்திக்க நேர்ந்த சமுதாய, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சனைகளால் மகிழ்ச்சிகரமான இளமைக்காலமாக இருந்திருக்க முடியாது, 1960-ல் இருந்து 1971 வரை மூன்று போர்களை இந்தியா எதிர்கொண்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைந்தது. வேலையில்லா திண்டாட்டம் பெருகியது. பொறியியல் முடித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. அரசாங்க உத்தியோகம் ஒன்றையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை. அப்போது வங்கிகள் தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து வங்கி வேலைகளுக்கு போட்டா போட்டி இருந்தது.

1973ம் வருடம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதால் உலக பொருளாதாரத்தில் ஒரு மாறுதல் மட்டுமல்லாமல் புரட்சியே ஏற்பட்டது. எல்லா நாடுகளிலும் எரிசக்தி பற்றாக்குறையால் பல துறைகளில் நெருக்கடி ஏற்பட்டன. இதில் ஒரு பிரகாசமான விளைவு கச்சா எண்ணெய் தயாரிக்கும் அரபு நாடுகள் திடீரென்று செல்வத்தில் கொழித்தன. அங்கு வேலைவாய்ப்புகள் பெருகின. வாய்ப்பில்லாமல் திணறிய இந்திய இளைஞர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணக்கர்கள், கட்டுமானப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் வளமையை தேடி பயணித்து பயன்பெற்றனர்.

மேல்நோக்கி செல்லும் எந்த ஒரு நிகழ்வும் சமன் நிலையை அடையும். இந்த தெவிட்டு நிலை அடைந்தபோது தான் பஞ்சாப் தீவிரவாதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உலைவைக்கும் வகையில் உருவாக்கிய உள்நாட்டு பிரச்சனையை சந்திக்க நேர்ந்தது. நக்சலைட் பிரச்சனையும் மீண்டும் தலைதூக்கியது. வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகளின் போராட்டம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் தாக்கம் என்று பல்முனை காளான்கள் நாட்டில் முளைத்தன.

சரியான தரும் தேவையான மனிதரை தோற்றுவிக்கும் என்பதற்கேற்ப ராஜுவ்காந்தி இந்தியப் பிரதமரானார். இளமை பொங்கும் வசீகரமான தோற்றம், எவரையும் கவரக்கூடிய சிரிப்பு, சிரத்தை, ஈடுபாடு, துணிவு, எளிமை என்று ஆளுமையின் குணாதிசியங்கள் பொருந்திய தலைமை நாட்டிற்கு புத்துணர்ச்சி ஊட்டியது. குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் தேவையானதுதான் ஆனால் அதை சகிக்க முடியாத தீவிரவாதிகளின் சூழ்ச்சி ஒரு உன்னத மனிதரை அழித்தது.

ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மே 21ம் நாள் தீவிரவாத ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயக முறையில் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு நமது கடமையாற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த உறுதிமொழி செயலாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

1991ல் இருந்து எவ்வளவு வன்முறைகள், பாப்ரிமஸ்ஜித் இடிப்பு, 1993ல் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 1998ல் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு, இனக்கலவரங்கள், ஜாதிச்சண்டைகள், பலநகரங்களில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், மும்பையில் உலகையே அதிரவைத்த 26/11 தாக்குதல் இப்போது மீண்டும் மாவோயிஸ்டு தீவிரவாதம் என்று நிகழ்வுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன.

ஏன் நாம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்? சட்டங்கள், நிலையாணைகள் இருக்கின்றன. பயிற்சி பெற்ற பாதுகாப்பு படையினர் உள்ளனர். உலகிலேயே அதிக பட்டாலியன்களைக் கொண்ட துணை ராணுவப்படை மத்திய ரிசர்வ் படை. க்ரௌன் ரிசர்வ் படை என்று 1939ல் உருவாக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படை இந்தியாவின் அமைதியை நிலைநாட்டுவதற்கு மூலை முடுக்கில் எல்லாம் பணிசெய்திருக்கிறது. ‘உள்நாட்டு அமைதியின் பாதுகாவலன் என்ற புகழ்மொழிக்கேற்ப பணியாற்றும் திறன் படைத்த காவலர்களைக் கொண்டது. ஒரு உண்மையான போர் வீரனுக்கு இலட்சணம் சாதுர்யமாக போராடி எதிரியை வீழ்த்த வேண்டும். வீழ்ந்தாலும் போர்க்களத்தில் பேராண்மையோடு சண்டையிட்டு வீரமரணம் அடையவேண்டும். அந்த விதத்தில் மத்திய படைவீரர்கள் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீறுகொண்டு எதிர் தாக்குதல் நடத்திய பின்னரே வீர மரணம் எய்தினர். போர்க்களத்தின் உண்மை நிலை அறியாது வாய்க்கூசாமல் குறைகூறும் வாய்ச்சவடால் சுயவிளம்பர வல்லுநர்களை என்னவென்று சொல்வது. துளியேனும் தேசப்பற்று இருந்தால் மனைவி மக்களைத் துறந்து நாட்டின் நலன் ஒன்றையே மனதில் தாங்கி போராடும் வீரர்களை குறைகூறத் தோன்றுமா?

சமீபத்தில் அண்டை மாநிலம் ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளை தீயிட்டு கொளுத்தினர். அரசு சொத்து நாசமாக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், படித்தவர்கள் இருந்தும் ஏன் இந்த ஒழுக்கமற்ற அநாகரிக நடத்தை?

கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகள் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று போற்றுகிறோம். ஆனால் அங்கு சிறு பிரச்சனை வந்தாலும் நாசவேலை காணமுடிகிறது. சென்னைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியின் மாணவிகள் தங்கும் விடுதியில் ஒரு மாணவியின் இறப்பு தற்கொலையா, அதற்கு காரணம் என்ன என்ற விசாரணையை துவங்குவதற்கு முன்னர் சகமாணவர்கள் வன்முறையில் இறங்குகின்றனர். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணினிகளும், மேஜை நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கணநேரத்தில் வன்முறை தலைதூக்குகிறது.

வன்முறை கலாச்சாரம் வளர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பல நிலைகளில் கசப்பான ஆனால் சரியான முடிவுகள் உரிய தருணத்தில் எடுக்காமல் பின்வாங்குதல் ஒரு முக்கியமான காரணம். பள்ளிகளில் தவறுசெய்யும் மாணவனைக் கண்டித்தால் ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்.

எந்த ஒரு நிகழ்வு என்றாலும் ஊடகங்கள் அதை படம்பிடித்து காட்டுகின்றன. காவல் துறையினர் தாக்கப்படுவதையும் காண்பிக்கின்றனர். தமக்கு காயம் ஏற்பட்டாலும் நிலைமையை சுமுகமாக சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவது பாராட்டப்படுவதில்லை. இதுவே மற்ற வன்முறையாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.

வன்முறை சம்பங்களை தொடர்ந்து பார்க்கும் பொழுது உணர்வுகள் மறத்துவிடுகின்றன. மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இக்காட்சிகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு வன்முறையில் இறங்கினால் தான் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் மற்றவர்கள் தம்மை கண்டு பயப்பட வேண்டும் என்ற அடிப்படை ஆதிக்க குணமும் மேலோங்கும். மேலைநாட்டு வன்முறை விரசகாட்சிகள் தோய்ந்த தொலைக்காட்சி கலாச்சாரம் நமது நாட்டிலும் உலகமயமாக்க தாக்கத்தில் வந்துவிட்டது. குழந்தைகள் பார்க்கக்கூடாத பாலியல் காட்சிகள், குடும்பங்களில் கைகலப்பு, பெண்கள் அடிக்கப்படுவது, சீருடை அணிந்த காவலர்களை இழிவு படுத்துதல் போலிஸார் அடிக்கப்படும் காட்சிகள், நடனம் என்ற போர்வையில் விரசமான அசைவுகள், குழந்தைகளை வயதுக்கு மீறிய நடனமாடச்செய்வது சகிக்கமுடியாத பாடலுக்கு ஆடவைப்பது என்று பலவகையான காட்சிகள் தொலைக்காட்சி மூலமாக வீட்டின் வரவேற்பறைக்கு வந்துவிட்டன. பணம் பண்ணுவது தான் குறி சமுதாயம் சீரழிந்தால் கவலையில்லை என்றநிலை வருந்தத்தக்கது.

பல திசைகளிலிருந்து நல்லது கெட்டதுமான தகவல் கதிர்களின் தாக்கத்தின் இடையே நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கான இளைஞர்களுக்கு முன்னேற்றப்பாதையை அமைப்பது சமுதாயத்தின் பொறுப்பு. அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவின் இளமையான ஜனத்தொகை. இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியிருக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட இளைய வயதினர் ஜனத்தொகையில் 36 சதவிகிதம். சைனாவுக்கு அடுத்து உழைக்கக்கூடிய இளம்வயதினர் அதிகமாக உள்ள நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளலாம். இது தான் நமது வலிமை. இந்த உழைக்கும் வர்க்கம் நன்றாக உழைத்தால் தான் நாடு முன்னேறும். நேர்மையான உழைப்புதான் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் உழைப்பதற்கு தூண்டுகோலாக அமையும் எதையும் சுலபமாக அடைந்து விடலாம் என்ற நிலை ஆபத்தானது. ஏனெனில் நினைத்தது கிடைக்காவில் அது ஒருவரது பொறுமையையும் நிதானத்தையும் இழக்கச்செய்து வன்முறைக்கு வழிவகுக்கிறது.

உழைப்பு அவரவர் மனநிலையை பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வெறும் கூலிக்காக கடனே என்று ‘கழப்பணி’ செய்வது, இரண்டாவது உடல் வருந்த உண்மையாக உழைப்பது, மூன்றாவது வகை தன்னலமற்று சமுதாய நன்மைக்காக உழைப்பது, தன்னலமற்ற இந்த தெய்வ மனிதர்கள் ஒரு சிலரே உள்ளனர் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பலர் தமக்கு நன்மை செய்து கொண்டு தமக்கு தீங்கு வராத வகையில் மற்றவர்க்கு சில நன்மை செய்வார்கள். ஆனால் மற்றொரு வகையான மனிதர்கள் பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தீங்கிழைப்பார்கள். இதையும் மீறி நல்லவர்களின் ஆதிக்கம் வளர வேண்டும் என்றால் அதற்கு அசுர உழைப்பு தேவை.

நல்லவர்களாக இருப்பதே வளமையான கலாச்சாரத்தின் அடையாளம். மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதை சிந்தனையாலும் கூடாது என்று ‘மனத்துக்கண் மாசின் ஆதலே’ உயர்ந்த அறம் என்கிறார் வள்ளுவர் பெருமான்.

சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் இன்று பெரியவர்கள். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் நடத்தையும் இருக்க வேண்டும். நிறைவான வழிகாட்டுதலையும் தரவேண்டும். தாய் தாயாகவும், தந்தை தந்தையாகவும், ஆசிரியர் ஆசிரியராகவும் இருந்தால் தான் மகன் மகனாக இருப்பார். நாடு நாடாக வளம் பெறும். ஒவ்வொருவரும் தமது நிலையில் உண்மையாக கடைமையாற்ற வேண்டும். சிறுமையைக் கண்டு பொங்க வேண்டும். வன்முறையைக் களைய வேண்டும். அத்தகைய முனைப்பான மெய்வருத்தம்தான் கூலிதரும்.


தீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம்


வீரப்பன் கூட்டாளிகளுடன் பர்கூர் வனப்பகுதியில் கொட்டமடித்துக் கொண்டிருந்த வருடங்களில் மலைவாழ் ஏழை மக்களின் அன்றாட நிலையற்ற வாழ்வு மேலும் பாதிப்புக்குள்ளானது. தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிரடிப்படையினரின் விசாரணை நடவடிக்கை ஒருபுறம், வீரப்பன் கூட்டாளிகளின் அச்சுறுத்தல் மறுபுறம் என்று இருதலைகொள்ளி எறும்பு போல் அவஸ்தையான வாழ்க்கை. வீரப்பன் கேங்கும் பச்சை சீருடை கையில் துப்பாக்கி. அதிரடிப்படையினரும் அதே கெட்அப். மலைவாழ்மக்களுக்கு இருசாராரரும் “கேங்க்” தான் வரும் தொல்லையும் ஒன்றுதான்! வீரப்பன் வேட்டை முடிவுற்றது அங்கு வாழும் மக்களுக்கு விடிவுகாலம் எனலாம்.

சட்டீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா, ராஜ்னந் கிராமம், பிஜாபூர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படையிருக்கும் நடக்கும் அதிரடி தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். கொத்துக் கொத்தாக மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஒரே தாக்குதலில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் இந்த பிரச்சனை பாதுகாப்பு வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்துள்ள இந்த பிரச்சனையில் அணுகுமுறை, அதிரடிப்படையினரின் பயிற்சி, ஆயத்த நடவடிக்கைகள், இருப்பில் உள்ள ஆயுதங்கள், கண்ணி வெடியை தவிர்க்கக்கூடிய வாகனங்கள் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும் சாதனங்களின் அளவு மற்றும் செயல்திறன் இவைகள் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.

காட்டுப் பகுதியில் இனம் தெரியாத எதிரிகளை சல்லடைப் போட்டு தேடுவது என்பது மிகவும் கடினமானது. சில அடர்த்தியான காட்டுப்பகுதியில் 10 அடிக்குமேல் பாதை தெரியாது. வனப்பகுதியில் பல குக்கிராமங்கள் இருக்கும். காலம் காலமாக வனப்பகுதியில் வாழும் மலைவாழ்மக்களுக்கு காட்டுப் பாதைகள் அத்துப்படியாக இருக்கும். அவர்களது உதவியில்லாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரால் குறைந்தபட்ச இலக்கையும் அடைய முடியாது.

சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மற்றும் அதை சுற்றியிருக்கக்கூடிய மலைவாழ்மக்கள் பகுதியில் நிலவிவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை ஏதோ ஒளிந்துகொண்டிருக்கும் சில தீவிரவாதிகளால் உருவாக்கப்படுகிறது என்று கணித்து அணுக முடியாது. இது இருமுனை சமுதாய இனப் பிரச்சனை. ஒன்று சட்டம் ஒழுங்கு மற்றொன்று மக்கள் நலம் அவர்களது முன்னேற்றம். சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்தும் மலைவாழ்மக்களின் ஏழ்மை நிலையில் மாற்றம் இல்லை என்பதை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் விதத்தில் வன்முறையை தூண்டி இருக்கிறார்கள். இரு கோரமான நிகழ்வுகள். சிந்தல்நாரில் 76 மத்திய ரிசர்வ் போலிசார் ஏப்ரல் மாதம் கண்ணி வெடி மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் உயிரிழந்தது. மற்றொன்று மே மாதம் 17ம் தேதி சிங்காவரம், தாண்டேவாடா அருகில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கண்ணிவெடியால் தகர்த்தப்பட்டு 35 அப்பாவி மக்கள் உயிரிழந்தது. இந்த இரு சம்பவங்களும் அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு பெரும் பின்னடைவு எனலாம்.

மத்திய ரிசர்வ் போலிஸ் ஒரு மாநிலத்திற்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டால் அந்தப்படை மாநில காவல்துறையோடு இணைந்து பணிபுரிய வேண்டும். உள்ளூர் காவல்துறைக்கு அந்தப்பகுதி போக்குவரத்து தெரியும் மக்களைத் தெரியும். போதிய தகவல் இல்லாமல் உள்ளூர் காவலரின் உதவியின்றி “வனப்பகுதி ஆதிக்கம்” என்ற குறிக்கோளை நிறைவேற்ற முற்பட்டதால் வந்த விளைவு இந்த உயிரிழப்பு என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படை செயல்இயக்கங்களை மேற்கொள்வதற்கு முன்பு பாதையில் உள்ள ஆபத்தை தெரிவு செய்து முன்னேறவேண்டும். இந்த ‘தடம் திறவு ரோந்து’ ஒரு அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வீரர்கள் ஒரு வரிசையில் செல்லவேண்டும். கும்பலாக செல்லக்கூடாது. இடைவெளிவிட்டு செல்லவேண்டும். மற்றவர்களுக்கு தெரியாத வகையில் இயற்கை மறைவுகளை பயன்படுத்தி முன்னேறவேண்டும், பேசக்கூடாது, சமிக்ஞை மூலம் தகவல் கொடுப்பது, அதிக சுமையை தவிர்த்தல் போன்ற எச்சரிக்கை விதிகள் ஒழுங்காக கடைபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இன்றி அதிக நாட்கள் தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து சென்றதால்தான் இந்த பேரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் பஞ்சாப் மாநில அதிரடிப்படைத் தலைவர் திரு கே.பி.எஸ் கில் குறைகூறியுள்ளார்.

மாவோயிஸ்டுகளாலும், பாதுகாப்புப் படையின் நடவடிக்கையாலும் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாழாவதோடு ஒருபுறம் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாவது வேதனைக்குரியது. அதைவிடக் கொடியது தினமும் பயத்தில் செத்துப் பிழைப்பது. அவர்களது மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

‘வசந்தகால இடி முழக்கம்’ என்று விவரிக்கப்பட்ட தீவிர கம்யூனிசப் புரட்சி 1969ம் வருடம் நக்ஸல்பாரியில் சாரு மாஜும்தார், கானு சன்யால் என்பவர்களால் துவங்கப்பட்டு காட்டுத் தீ போல் பலமாநிலங்களுக்கு பரவியது. நிலச்சுவாந்தாரர்கள், அடைமான தொழிலில் அதிகவட்டி ஈட்டுபவர்கள், பணக்காரர்கள் போன்ற சமுதாயத்தின் எதிரிகள் ஒழிந்தால்தான் சமுதாயம் நிலைப்படும் என்ற வன்முறைக் கலாச்சாரத்தை மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை கொள்கையாகக் கொண்டு பரவவிட்டனர். துவங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் சுமார் நாலாயிரம் வன்முறைச் சம்பங்கள். மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 3000 அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பை குலைக்கும் இப்போராடத்தை முறியடிக்க ராணுவம், மத்திய ரிசர்வ் படை, காவல்துறை கொண்ட மும்முனை எதிர்தாக்குதல் ‘ஆபரேஷன் ஸ்டீபில்சேஸ்’ என்ற பெயரில் இடர் தகர்ப்புப் போர் முடுக்கிவிடப்பட்டது. ஜுலை 16 1972ம் வருடம் இவ்வியக்கத்தின் தலைவர் சாரு மாஜும்தார் கைது செய்யப்பட்டு ஜுலை 28ம் நாள் போலிஸ் காவலில் உயிரிழந்தார். அதன் பிறகு எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளால் இந்த இயக்கம் தொய்வு அடைந்தது.

1970 – 85 ல் தமிழக போலிசார் மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால் இடதுசாரி தீவிரவாதம் களையப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் “க்ரே ஹெளன்ட்ஸ் என்ற சிறப்பு காவல்படையின் துணிவான நடவடிக்கையால் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டு அவர்கள் அண்டை மாநிலங்களான சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்டில் தஞ்சம் புகுந்தனர். மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு நவம்பர் 2000 ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத விழுதுகள் வேரூன்றியுள்ளது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைப்பிடித்தது இடது தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். இந்தியாவில் உள்ள 602 மாவட்டங்களில் சுமார் 190 மாவட்டங்களில் இவர்களது ஆதிக்கம் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2005ல் இருந்து இந்த இயக்கம் “சிவப்பு இடைவழி” மாநிலங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொண்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது காவல்துறையின் முக்கிய பொறுப்பு. அதனை அவர்கள் சரிவர செய்வதற்கு எல்லாவிதமான உபகரணங்கள், பயிற்சி பெற்ற வீரர்கள் கொண்ட மத்திய ரிசர்வ் படை, தரமான தகவல் பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த செயல்திறனால் அமைதி என்ற இலக்கை அடைய முடியும். அமைதி ஏற்பட்டால்தான் வளர்ச்சிப் பணிகள் சரிவர இயங்கும். மக்களின் அடிப்படை தேவைகளான வாழ்வாதாரம், கல்வி, மருத்துவ வசதி, தண்ணீர், மின் இணைப்பு சரிவர கொடுக்கப்படாமல் கனிவளம் கொண்ட பகுதிகளில் சுரங்க உரிமம் கொடுப்பது மட்டும் வளர்ச்சியாகாது. சுரங்க கம்பெனிகள் தோண்டுவதற்கு தேவையான வெடிமருந்து பொருட்களை மாவோயிஸ்டுகள் அபகரித்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குவதற்கு உபயோகிக்கிறார்கள் என்பது உண்மை. இதனால் தான் வீரப்பன் வேட்டையிலும் வெற்றி பெறுவதற்கு கனி சுரங்க உரிமம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டது. வெடிமருந்து நடமாட்டம் அறவே நிறுத்தியதால் தான் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்த முடிந்தது.

“சல்வா ஜுடும்” என்ற பாதுகாப்புப் படையினருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு குழுவைச் சேர்ந்தவர்கள் தான் சமீப தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். சல்வா ஜுடுமை சேர்ந்தவர்கள் போலிஸாருக்கு உளவு பார்த்து தகவல் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை பழிவாங்கினோம் என்கிறார்கள் மாவோயிஸ்டுகள். சல்வா ஜுடுமின் சட்ட விரோத செயல்களும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களை துன்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

தீவிரவாதத்தை முறியடிப்பது ஒரு தொடர் போராட்டம். விடிவதற்குள் வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியுமல்ல சாத்தியமுமல்ல. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை மூலம், செயற்கையாக வெற்றியடைந்தோம் என்ற புள்ளி விவரங்களால் பலன் இல்லை. அதே சமயம் மாவோயிஸ்டுகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு அவர்களது சட்டவிரோத போராட்டத்தை போற்றிடும் மேலோட்ட மனித உரிமை ஆர்வலர்கள், பாதுகாப்பு படையினர் மீதும், அப்பாவி மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் அவர்களது இரட்டை நிலைப்பாடு சமூக விரோதிகளை தூண்டும் வண்ணம் உள்ளது என்றால் மிகையல்ல. எந்தத் தரப்பில் உயிர் பறிபோனாலும் அது சமுதாயத்திற்கு இழப்பு.

தீவிரவாத இயக்கத்தலைவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி கடுமையான நடவடிக்கை, மக்களை அரவணைத்து பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படை வளர்ச்சிப் பணிகள் என்ற ஒருங்கிணைந்த மும்முனை திட்டம் வளமான பாதைக்கு அழைத்துச் செல்லும். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்பிருந்தது போல் தண்டகாரண்ய மேம்பாட்டுத் திட்டம் என்ற பாதுகாப்போடு அடங்கிய வளர்ச்சித் திட்டம் இதற்கு வழிவகுக்கும்.