Monday, May 31, 2010

திரும்ப வழியில்லை

‘குருதிப்புனல்’ என்ற கமல்ஹாசன் படத்தில் தீவிரவாதிகளின் வெறித்தனம் திறம்பட சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர்களோடு மோதும்போது நல்லது கெட்டது பார்க்க முடியாது. விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா இல்லையா என்பதை ஆராய நேரமிருக்காது. யுத்தக்களத்தில் உயிரோடு இருப்பவன்தான் வெற்றி பெறுகிறான். சிஐடி போலிசார் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அங்கிருந்து தகவல் அனுப்புவது நுண்ணறிவுப் பிரிவின் உச்சகட்ட வெற்றி எனலாம். குருதிப்புனல் படத்தில் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவிய அதிகாரி அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்பைப் பெறுவதற்கு சக அதிகாரியை தன்னை சுடச் சொல்லி உயிரைத் தியாகம் செய்வது படத்தின் உச்சகட்ட காட்சி. இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து பல சாதுர்யமான சாகசங்களை காவல்துறை செய்திருக்கிறது என்றாலும் மதவாத தீவிரவாத இயக்கங்கள் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளில் ஊடுருவுவது அவ்வளவு எளிதல்ல.

மும்பை 26/11 பயங்கர நிகழ்விற்குப் பிறகு தீவிரவாதம் பூனேயில் தலைதூக்கியது. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நாள்: 13 பிப்ரவரி 2010; இடம்: பூனேயில் உள்ள பிரபலமான ஜெர்மன் பேக்கரி. இது சாதாரணமாக வெளிநாட்டினர் வந்து போகும் இடம். இது ஆச்சார்ய ரஜ்னீஷ் என்ற ஒக்ஷோவின் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது. ஆசிரமும் தீவிரவாதிகள் குறியில் இருந்தது. ஆனால் தெய்வாதீனமாக தப்பியது.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லியின் இந்திய வரவு பற்றியும் பல இடங்களில் குண்டு வைத்து தீவிரவாதத்தை பரவவிடச் செய்யும் திட்டம் பற்றியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பை, பூனே என்று மராட்டிய மாநிலத்தில் உள்ள பல இடங்களில் மட்டுமின்றி தமிழகம் உட்பட பல மாநிலங்களை அவன் கண்காணித்தாகவும் அறியப்படுகின்றன.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது மிகவும் கடினம். சாதாரணமாக நுண்ணறிவுப் பிரிவுகளில் ஒவ்வொரு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குழு அமைத்து கண்காணித்து தகவல் சேகரிப்பது என்பது வெளிப்படையான தகவல் சேகரிக்கும் முறை. இரகசியமாக உளவாளிகள் மூலம் தகவல் சேகரிப்பது இரண்டாவது வகை. தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை உபயோகித்து தகவல் சேகரிப்பது மற்றொரு வகை. செய்தித் தாள்கள், இணையதளம், தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வரக்கூடிய செய்திகள், நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் இவற்றை ஆராய்ந்து நடக்கப்போவதை அனுமானித்து சொல்வது பயிற்சி பெற்ற நுண்ணறிவு அதிகாரிகளுக்கு கைவந்த கலை. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது நுண்ணறிவுப் பிரிவின் மேல்மட்ட அதிகாரிகளின் பணி.

மே நான்காம் தேதி ஃபாய்ஸல் ஷாசாத் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவன் நியூயார்க் நகரின் டைம் சதுக்கம் என்ற பிரசித்திப்பெற்ற பொருளாதார மைய சாலையில் காரில் குண்டு வைத்தற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அமெரிக்காவிற்கு நல்லகாலம் குண்டு வெடிப்பதற்கு நிறுத்திவைத்திருந்த காரிலிருந்து வந்த புகையைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வாகனத்தை கைப்பற்றி வைக்கப்பட்ட குண்டினை செயலிழக்கச் செய்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புகை வந்ததை முதலில் பார்த்தவர் லான்ஸ் ஆர்டன் என்ற தெருவில் சில்லறை துணி விற்கும் நடைபாதை வியாபாரி அவர் உடனே ரோந்து செய்து கொண்டிருந்த வேய்ன் ராடிகன் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அந்த ரோந்து அதிகாரி தகவலை அலட்சியம் செய்யாமல் உடனடியாக களத்தில் இறங்கி அந்த இடத்தில் இருந்தவர்களை முதலில் வெளியேற்றினார். பதறிப்போய் தலைமையிடத்திற்கு தகவல் கொடுத்து அதிரடிப்படை ஒன்றும் வரவழைக்கவில்லை. நிதானமாக அந்த நேரத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் ரோந்து பணியில் இருந்த அலுவலர்களை வைத்து பாதுகாப்பு சிறந்தவகையில் செய்யப்பட்டது. இது நிகழ்ந்தது சனிக்கிழமை. இரண்டு நாட்களுக்குள் அந்த வண்டியின் உரிமையாளர் பற்றியும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைத்தும் சந்தேக நபர் ஷாசாத்தை போலிஸார் கைது செய்ய முடிந்தது. அவர் நியூயார்க்குக்கு அருகில் உள்ள கனெக்டிகட்டில் கம்யூட்டர் என்ஜினியர் துபாய்க்கு தப்ப இருந்தவரை, விமானத்திலிருந்து இறக்கியது, மின்னல் வேகப் புலனாய்வின் முதல் வெற்றி.

லான்ஸ் ஆர்டன் கடமைவுணர்வோடு செயல்பட்ட நாள் மே 2-ம் தேதி சனிக்கிழமை, இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஆர்டனின் கடமைவுணர்வையும், உரிய சமயத்தில் தகவல் கொடுத்ததை ஒபாமா அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் என்ற செய்தி பரவியது. சாதாரண தெரு வியாபாரி, மக்களின் பாராட்டைப் பெற்ற நாயகனானார். ஜனாதிபதி நேரில் பாராட்டியது, ஒரு பேராபத்திலிருந்து பொருளாதார தலைநகர் காப்பாற்றப்பட்டது, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது என்பதற்காக மட்டுமல்ல ஆர்டன் போல் பொதுமக்களும் கடமைவுணர்வோடும், விழிப்புணர்வோடு இருந்தால்தான் தீவிரவாதத்தை முறியடிக்கமுடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

எந்த ஒரு பெரிய சதிதிட்டம் தீட்டப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு உள்ளுர்வாசிகளின் உதவி இன்றியமையாதது. ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் புலன் விசாரணனயில் சம்பவம் நடந்த இடத்தில் உடந்தையாக இருந்தவர்கள் சம்பந்தப்படடிருப்பதும் கைது செய்யப்பட்டபின் இவர்களா அப்படி சூழ்ச்சி செய்தார்கள் என்று மலைக்கும்படி இருக்கும்.

தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எங்கு பயங்கரங்களை நிகழ்த்த திட்டமிடுகிறார்களோ அங்கு ‘ஸ்லீப்பர் செல்’ என்று ஒரு சிலரைக் கொண்ட கமுக்க குழாம் ஒன்றினை அமைப்பார்கள். இவர்கள் மூலமாக தகவல் பெற்று சதித் திட்டத்தை நிறைவேற்றுவார்கள் இத்தகைய கமுக்கப்படை பற்றி தகவல் சேகரிப்பது காவல்துறைக்கு ஒரு சவால் எனலாம்.

மும்பாய் குண்டு வெடிப்பு சதியில் உதவிய இரண்டு குற்றவாளிகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம், மருத்துவமனை, லியோபால்ட் சிற்றுண்டி விடுதி இவைகளுடைய வரைபடம் கைப்பற்றப்பட்டது. ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் கமுக்கக் குழாமை சேர்ந்த இவர்கள் கச்சிதமாக தகவல் சேகரித்திருக்கிறார்கள். இவ்வாறு தகவல் சேகரிப்பது, முக்கிய இடங்களை நோட்டமிடுவது, பாதுகாப்பு வளையங்களை சோதித்துப் பார்ப்பது, வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் சேகரித்தல், தாக்குதலுக்கு குறிவைத்த இடத்திற்க்கு வெள்ளோட்டம் விடுவது, இறுதியாக தாக்குவதற்கு தயார் நிலையில் இருத்தல் இந்த ஆறு ஆயத்த ஏற்பாடுகள் இன்றி தீவிரவாத திட்டம் நிறைவேறாது. இந்த ஆறு கட்ட நடவடிக்கையில் ஏதாவது ஒன்றை இனம் கண்டால் பாதுகாப்பு படை வெற்றி கண்டு விடும். சந்தேக நபர் சம்பந்தப்படாத இடத்தில் நடமாடுவதை விழிப்போடு கண்காணித்தாலே போதும்.

“தீவிரவாதி பலமுறை தோற்கலாம்; ஒருமுறை வென்றால் போதும்; ஆனால், பாதுகாப்புப் படை ஒவ்வொரு முறையும் வெல்ல வேண்டும்”, என்ற சாத்திரம் இந்த பாதுகாப்பு பணியின் சாபக்கேடு!


காவல்துறை இந்த பொருதிலாப் போரில் முந்தவேண்டும் என்றால் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தில்லி பாட்லா பகுதியில் செப்டம்பர் 19 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தில்லி போலீஸ் ஆய்வாளர் ஷர்மா உயிரிழந்தார். பாட்லா வீட்டினை காவல்துறை முற்றுகையிட்ட பின் தான் அங்கு தீவிரவாதிகள் தங்கியிருந்தனர் என்பது அக்கம்பக்கத்வருக்கு தெரிய வந்தது. அதற்கு பிறகுதான் அங்கிருந்தவர்களில் சந்தேக நடவடிக்கைப்பற்றி மக்கள் கூற ஆரப்பித்தனர், முன்னமே தகவல் கொடுத்திருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இம்மாதிரியான நேர்வுகளில் தான் காவல்துறையின் அணுகு முறையில் நூதனம் தேவை. எடுத்த எடுப்பிலேயே எங்கே, யார், எவர், எப்படி, எவ்வாறு என்று கேள்விகளை அடுக்கினால் ஒன்றும் பேராது. முதலில் நம்மிடம் உள்ள வெளிப்படையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அப்பகுதி மக்களின் நம்பிகையைப் பெற வேண்டும். வெறியர்களின் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்ப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் எந்த பொது இடத்தை தாக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. சமுதாயத்தின் சமன் நிலையைக் குலையச்செய்வதுதான் பயங்கர வாதிகளின் நோக்கம்.

இத்தகைய பயங்கரவாத தாகுதல் என்ற விகார யுத்தத்தில் பொது மக்கள் முக்கிய பங்குதாரர்கள் என்பதை மறக்கலாகாது. சமுதாயத்தை பொதுவாகப் பாதிக்ககூடிய பிரச்சனைகளான சுகாதாரம், தொற்று நோய், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, ஹெச்ஐவி (HIV) போன்றவைகளுக்கு பல விழிப்புணர்வு முகாம்களும், பேரணிகளும் மக்களை ஈடுபடுத்தி நடத்தப்படுகின்றன. அதே வகையில் பொது மக்களும் தெரிந்தோ தெரியாமலோ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவக் கூடாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும். நமக்கேன் வம்பு என்று தகவல் கொடுக்காமல் ஒதுங்குவதும் ஒரு வகையான மறைமுக உடந்தை என்பதை மறுக்க முடியாது.

தீவிரவாதம் ஒரு வழிப்பாதை. அதில் உழலும் வெறியர்கள் திரும்ப வழியில்லை. ஆனால் அவர்கள் பிடியில் வழியில்லாமல் சிக்கியவர்கள் திருந்த வழியுண்டு. காவல் துறையின் பாரபட்சம்மற்ற நேர்மையான துணிவான நடவடிக்கையும் பொதுமக்களின் ஈடுபாடும்தான் அதற்கு வழி வகுக்கும்.


published in Dinamani on 20.05.2010

Wednesday, May 12, 2010

முதல் காப்பாளர்

1907-ம் வருடம் - அப்போதைய மதராஸ் நகரில், வருவாய் துறை வாரியத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பல முக்கிய ஆவணங்கள் சேதமடைத்தன, இந்த விபத்தை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் தீ விபத்து ஏற்படும் பொழுது தீயணைப்பு ஊர்திகளையும் கையிருப்பில் உள்ள உபகரணங்களையும் முறையாக பயனபடுத்த ஒரு சீரான நெறிமுறைகள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் 1908 ம் வருடம் மெட்ராஸ் ஃபயர் ப்ரிகேட் என்ற சிறு தீயணைப்புப் படை உதயமானது.

சென்னை நகர காவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிர்வாகம் போலிஸ் கமிஷனரின் கீழ் இயங்கியது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் மூண்ட போது விமானத்தாக்குதல் ஏற்பட்டால் விளைவுகளை சமாளிக்க தீயணைப்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டது. 1942ம் வருடம் தீயணைப்பு வல்லுனர் திரு டோஸர் என்பவர் தலைமையில் தீயணைப்புத் துறை சீரமைக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட திறமைவாய்ந்த 58 தீயணைப்பு அதிகாரிகள் மதராஸ் தீயணைப்புத் துறைக்கு பலம் கொடுத்தனர். 1945ம் வருடம் எல்லா முக்கிய நகரங்களிலும் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தவும், சென்னை துறைமுகத்தில் தீப்பாதுகாப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த துறை 1967ம் வருடம் தனித்துறையாக பரிட்சார்த்தமாக துவக்கப்பட்டு 1969ம் வருடம் நிரந்தரமான தீயணைப்புத் துறையாக நிறுவப்பட்டது.

எந்த ஒரு ஆபத்திலும் முதல் காப்பாளனாக செயல்படுவதால் 2001 வருடம் மீட்புப்பணியை சேர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையாக அறிவிக்கப்பட்டு, 2008 ஆம் வருடம் நூறு ஆண்டுகள் நிறைவுற்று பெருமிதத்தோடு மக்கள் பணியில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

“காற்றே மெலிந்த மெழுகுவர்தீயை வலிய அணைத்து விடுகிறாய்
உதவாத பெருந் தீயை பெரிதாக்கி பரவ விடுகிறாய்”
என்பது பாரதியாரின் வசனவரிகள்.

பிராணவாயு, உஷ்ணம், ஏரிபொருள் தீ முக்கோணம் என்று கூறப்படுகிறது. தீப்பிடித்த இடத்தில் புகை வெளியேற செய்யவேண்டும். அதே சமயம் காற்றோட்டம் தீயை பரவச் செய்யும். ஆதலால் தீப்பற்றக்கூடிய பொருட்களை தனியே பிரித்து பாதுகாக்க வேண்டும். தீயின் மையக் கண் பகுதியை தனிமைப்படுத்தி அணைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக முதலில் தீயில் சிக்குண்டவரை வெறியேற்ற வேண்டும். அதிலும் வயோதிகர்கள், குழந்தைகள், மாற்றுதிறன் படைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பது முக்கியம். இவ்வாறு அறிவுபூர்வமாக விஞ்ஞான முறையில் தீயுடன் போராடுவது ஒரு புறம். மனிதாபிமான முறையில் மக்களை காப்பாற்றுவது மறுபுறம் என்ற கடினமான பணியை செய்பவர் தீயணைப்பு வீரர்.

கல்மிஷம் இல்லாத தூய்மையான பணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி.

ஏப்ரல் 14ஆம் நாள் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளாகவும், அதிலிருந்து ஒருவாரம் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது. அதே ஏப்ரல் 14ஆம் நாள் 1944 ம் வருடம் மும்பை துறைமுகம் விக்டோரியா டாக் என்ற இடத்திற்கு வந்தடைந்த SS Port Stikins என்ற கப்பலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அக்கப்பலில் 1200 டன் அளவிற்கு வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் ட்ரம்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெடிவிபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் பல கப்பல்கள் தீக்கிரையாகின. மும்பை தீயணைப்பு துறையைச்சார்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 நபர்கள் பலியானார்கள். இந்த நிகழ்வின் நினைவாக ஏப்ரல் 14ம் நாள் தீயணைப்பு வீரர்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் நாள்.

தீ விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை மையக்கருத்தாகக் கொண்டு பாதுகாப்பு பணிகள் நிறைவு செய்யவேண்டும் என்ற இலக்கு தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இயற்கை சீற்றங்களின் போதும், மனிதனால் ஏற்படுத்தப்படும் சேதங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் உன்னத மீட்புப் பணியை தீயணைப்பு வீரர்கள் செய்கின்றனர்.

தீயை கட்டுக்குள் உபயோகித்தால் நமக்கு ஆதாயம், கட்டுக்கடங்காமல் போனால் விபரீதம். சரித்திர ஏடுகளைப் புரட்டினால் ரோம் நகரில் முதல் நுற்றாண்டில் ஏற்பட்ட கோரமான தீ 7 நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து நகரையே அழித்தது. 1666ம் வருடம் செப்டம்பர் 2ம் நாள் மிகப் பெரிய தீ விபத்து லண்டனில் ஏற்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ந்து கொழுந்துவிட்ட தீ பழைய லண்டனில் 70,000 வீடுகள், 87 வழிபாட்டு தலங்கள், நகர அலுவலகங்கள் அழிந்தது. எவ்வளவு மக்கள் மாண்டனர் என்பது கணக்கிட முடியவில்லை.
அமெரிக்காவில் மிகப்பெரிய தீ விபத்து 1871ம் வருடம் அக்டோபர் 10ம் நாள் சிக்காகோ நகரில் ஏற்பட்டது. மாட்டுத் தொட்டியில் எண்ணெய் திரியினால் ஆன விளக்கினை ஒரு மாடு தட்டிவிட்டதில் அருகில் இருந்த வைக்கோல் தீப்பற்றி தீ பரவ காரணமானது என்று கூறப்படுகிறது. எப்போதும் காற்று வேகமாக வீசக்கூடிய நகரம் சிக்காகோ. அதனால் தீ விரைவாக பரவி நகரின் முக்கியமான பகுதிகளை அழித்தது. இந்தப் பெருந்தீயின் நினைவாக ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் தீப்பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை நகரில் 1975ம் வருடம் ஜுலை மாதம் 11ம் நாள் எல்.ஐ.சி 14 மாடி கட்டிட தீ விபத்து, 1981ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் ஸ்பென்சர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 1985ம் வருடம் மே மாதம் 30ம் நாள் மூர் மார்க்கெட் தீக்கிரையானது மறக்க முடியாத நிகழ்வுகள்.

2004 ம் வருடம் ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரிடர், குஜராத், மஉறாராஷ்டிர மாநிலங்களில் உண்டான பூகம்பம், அவ்வப்போது புயல் வெள்ளங்களால் ஏற்படும் சேதாரம் இவற்றை கருத்தில் கொண்டு தேசிய அளவில் தேசிய பேரிடர் ஆளுமை ஆணையம் 2005ம் வருடம் உருவாக்கப்பட்டது. பிரதம மந்திரியின் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு எட்டு பட்டாலியன்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளது. தென்இந்தியாவை பொறுத்தவரை 1180 வீரர்களைக் கொண்ட படை அரக்கோணத்தில் உள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பரில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது இந்த படையைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர். அணுமின்நிலையத்தினால் பாதிப்பு, விஷவாயு தாக்குதல், கதிர்வீச்சினால் பாதிப்பு, போபால் விஷவாயு கசிவு போன்ற நிகழ்வுகள், கொடிய உயிர் உண்ணிகள் தாக்குதல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள இந்த சிறப்புப் படை முதல் காப்பாளனாக செயல்படும்.

ஒவ்வொரு மாநிலமும் பேரிடர்களை சமாளிக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட ஒவ்வொரு நகரமும் பேரிடர் பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மத்திய அரசு, இந்த ஆண்டு நிதி அறிக்கையில் ரூ. 7000 கோடி நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ளது.

செயல்திறன் படைத்த பணியாளர்களைக் கொண்ட கட்டமைப்பு எந்த ஒரு அவசர காலத்திலும் பக்க பலமாக இருக்கக் கூடியது. ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை இத்தகைய அவசர கால நேர்வுகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆயினும் இத்தகைய நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்படவேண்டும். மேலை நாடுகளில் இத்தகைய பேரிடர் மேலாண்மை திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். இதன் மூலம் நம்மிடம் உள்ள குறை நிறை என்ன, எத்தகைய சாதனங்கள் இருக்கின்றன, எவ்வாறு அவைகளை ஒருங்கிணைக்க வேண்டும், நவீனமயமாக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை போன்றவை முறையாக ஆராயப்பட்டு எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராகலாம். இடைவிடாத பயிற்சி மிக அவசியம் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பேரிடர் சேதங்களை வெகுவாக குறைக்கலாம்.

2001ல் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் தனது உரையில் புகை மண்டலம் சூழ்ந்த உயர்மாடி கட்டிட படிகளில் துணிந்து சென்று சேவை புரியும் தீயணைப்பு வீரர் போன்ற வீரர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தின் விடிவிளக்கு என்று நெஞ்சார பாராட்டியுள்ளார்.

சேவையே மையமான பணி தீயணைப்புப் பணி. ஒவ்வொரு அழைப்பும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கான அழைப்பு. ஏதோ ஒரு தெய்வீக சக்தி இந்த வீரர்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்துகிறது. அலுவலகம் போவதற்கு சம்பளம் வேலை செய்ய கிம்பளம் என்ற இந்நாளில் தன்னலமற்ற சேவைபுரியும் தீயணைப்பு வீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தீ விபத்தற்ற சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

“கவனக் குறைவான ஒரு கணம் தீ விபத்து
கவனமிக்க ஒவ்வொரு கணமும் தீப்பாதுகாப்பு“
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


Published in Dinamani 07.05.2010

Saturday, May 1, 2010

மே தின சிந்தனைகள்








"ஏழையின் சிரிப்பில் இறைவன்"

"எல்லா புகழும் இறைவனுக்கு"

என்று வெட்டி வார்த்தைகள்.

ஏழைக்கு மிஞ்சியது காயும் வயிறு

வளமும், செம்மையும் பணம் படைத்தவருக்கே !

இது பொழைப்பவர் உலகம் உழைப்பவர்க்கு அல்ல

நிதர்சன உண்மை ஆயினும்

உண்மையாக உழைப்பவரால் சுழல்கிறது உலகம்.