Saturday, June 6, 2009

வற்றுமா குற்றம்?

தினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர் ஹென்றி ஃபீல்டிங் ‘குற்ற நிகழவுகளுக்கான காரணங்களை களையெடு’ என்ற அறைகூவல் விடுத்தார்.

சமீபத்தில் நிதின் குமாரி என்ற விமானப்பணிப் பெண் சென்னை நொளம்பூர் குடியிருப்புக் பகுதியில் கோரமான முறையில் கொல்லபட்டது எல்வோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். பீஹாரிலிருந்து வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி தன்னம்பிக்கையோடு வாழ்ந்த இப்பெண்ணுக்கு ஏன் இந்த முடிவு? தனியாக நிர்பந்தத்தின் பேரில் வாழும் பெண்கள் அதுவும் பார்வையாக இருக்கக்கூடிய பெண்கள் என்றாலே அவதூறு சொல்வதற்கு கூசாத நபர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். முதலில் சந்தேக மரணம் என்ற செய்தியில் பல ஆண்களோடு சகவாசம் இருந்தது, போதைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்று அவளைப் பற்றி அபாண்டமாக கூறப்பட்டது. புலன் விசாரணையில் அதே பகுதியில் வாழும் ஒரு வாலிபன் அந்த பெண்ணின் செல்போன் திருடுவதற்காக இந்த கோரக் கொலையை செய்தான் என்பது பல வியாக்கியானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. திறம்பட விசாரணை செய்து குற்றவாளியை துரிதமாகக் கண்டு பிடித்ததற்கு சென்னை காவல்துறைக்கு சபாஷ் போடலாம்.

நிதின் குமாரியின் கொலை பல பாடங்களை நமக்குப் புகட்டுகிறது. வீட்டுக்கு கட்டுப்படாத இளைஞர்கள், அவர்களை கட்டுப்படுத்தத் தவறிய பெரியவர்களால் சமுதாயத்திற்கு எத்தனை பாதிப்பு என்பது முக்கியமான பாடம். அந்த குற்றவாளி பல சில்லறைத் திருடுகளில் ஈடுபட்டுள்ளான் என்பதைப் பற்றிய தகவல் சரக காவல் நிலையம் சேகரித்திருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் அடிப்படை பாதுகாப்பு நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு பாடம். தெருவில் நடக்கும் பொழுதோ, வாகனம் ஓட்டும் பொழுதோ செல்போன் உபயோகிக்க கூடாது என்று காவல் துறை பல முறை எச்சரித்து வருகிறது. நடந்து கொண்டே செல்போன் பேசுபவர்களிடமிருந்து பலமுறை சமுக விரோதிகள் செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி போன் பேச அவசியம் ஏற்பட்டாலும் நின்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு இருப்பிடம் சென்று பேசுவது பாதுகாப்பானது. எல்லோருடைய கண்படும்படி விலையுயர்ந்த செல்போனை அந்தப் பெண் உபயோகித்தது கயவன் கண்களிலும் பட்டு விபரீத முடிவு ஏற்பட்டது. அசிரத்தையாலும் அசட்டையாலும் ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோனது.

குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, சரியான தடுப்பு முறைகள் என்ன, தனிமனிதனையும் திட்டமிட்டுக் குற்றப் புரிபவர்களையும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சமுதாய வல்லுனர்களால் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. காலப்போக்கிற்கேற்ப சமுதாய வளர்ச்சியைப் பொறுத்து குற்றப்பரிமாணங்களும் மாறிக்கொண்டு வருகின்றனவே ஒழிய குற்றம் ஏன் நடக்கிறது என்பதற்கு விடை கிடைக்காமல் இருக்கிறது.

டேவிட் ஆபிராஹம்ஸன் என்ற சமூகவியல் மேதை குற்ற நடப்பிற்கு காரணங்களை விகிதாச்சார முறையில் துல்லியமாக கணக்கிட முற்பட்டார். தனிமனிதனின் உள்ளக்குமுறல்கள், மன அழுத்தம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை இதனை சேர்த்து, சமுதாயக் கட்டுப்பாடு, தனிமனிதனின் நல்லியல்புகளின் எதிர்ப்பு சக்தியால் வகுத்தால் குற்றத்தின் பரிமாணம் புலப்படும் என்கிறார். அதாவது சமுதாயக் கட்டுப்பாடும், தனிமனித நற்பண்புகள் மேலோங்குதலும், குற்ற நிகழ்வுகளை குறையச் செய்யும். அதே சமயம் சமுதாயத்தில் ரம்யமான சூழல் உருவானால் தனி மனித மன அழுத்தம் குறையும். சுயக் கட்டுப்பாடு வளரும் நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையும் எதிர்மறை விளைவுகளுக்கு வித்திடாது. இத்தகைய அடித்தளம்தான் சீர்மிகு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழிவகை செய்யும்.

தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஒத்து இருந்தாலும், பொதுநலன் மேலோங்கினால்தான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும். குடும்ப வாழ்க்கை, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், கேளிக்கை மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற சமுதாயத்தின் நிலையான ஆதாரங்களின் கூட்டமைப்பின் மூலம் மனிதனிடையே நல்லிணக்கத்தைத் பரவச் செய்ய வேண்டும். தனி மனிதன் சுய கட்டுப்பாடு, நற்பண்புகள் பயிற்றுவித்தல் போன்றவை சமுதாய கூட்டமைப்பில் நடைபெற்றதால் தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயத்தில் அமைதி நிலை நாட்டுதலுக்கு மூன்று கட்ட நடவடிக்கை அவசியம் ஆகிறது. முதல் கட்ட நடவடிக்கையில் எத்தகைய மக்கள் குற்றவலையில் சிக்கக்கூடும் என்பதை கணித்து அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து சீரான பாதையில் எடுத்துச் செல்லுதல். இந்த நடவடிக்கையின் போது குற்றம் இன்னும் தலைதூக்கவில்லை, இந்த தருணத்தில் குற்றப்பாதையை தவிர்த்து நல்வழிகளில் இட்டுச் செல்லும் முயற்சி முக்கியமானது.

இரண்டாவது கட்டம் தண்டனையுற்றவர்களை சிறை இல்லங்களில் நல்வழிப்படுத்தும் முயற்சி. இதில் சிறைத்துறைக் களப்பணியாளர்கள், நன்னடத்தை பிரிவினர் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இணைந்து குற்றம் புரிந்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள அசூயயை நீக்கி நற்பாதையை தெரிவு செய்ய உதவி நல்க வேண்டும்.

மூன்றாவது கட்டம் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளி வரும்பொழுது அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது, சமுதாயத்தோடு இணைவதற்கு ஏற்பாடு செய்வது. ஆக இந்த மூன்று நிலைகளிலும் தீர்க்கமான அணுகுமுறையோடு செயல்படவேண்டியது இன்றியமையாதது.

சமுதாயக்கட்டுப்பாட்டுக்குள் குற்றத் தடுப்பு முயற்சிகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. அந்தந்தப்பகுதி மக்கள் ஆரோக்கியத்துடன் மன உளைச்சலின்றி வாழ்க்கையை நடத்துவதற்க்கு ஏற்ற வகையில் நன்மை பயக்கக் கூடிய சூழல் உருவாக்கிட வேண்டும். குடியிருப்பு பகுதி அருகில் பள்ளிகள், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மையங்கள், சந்தோஷத்திற்கு மக்கள் கூடி உறவாடுவதற்கான கேளிக்கை மையங்கள் ஆனந்தமான சூழலை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை. 1884-ம் வருடம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரக் கிழக்குப்பகுதியில் முதலில் இத்தகைய திட்டம் விவாதிக்கப்பட்டு செயல் முறைக்கு வந்தது. அமெரிக்காவில் சிக்காகோ நகரில் மேலே கூறிய அடிப்படைக் கருத்தினை விரிவாக சமுதாயப் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஜப்பான் நாட்டில் சுமார் 40,000 தன்னார்வு தொண்டர்கள் இலவசமாக நன்னடதையாளர்களாக பணி புரிகிறார்கள். தாம் வசிக்கும் பகுதியில் குற்றத்தடுப்பு முறைகளை செயல்படுத்துகின்றனர்

தமிழ்நாட்டிலும் பாய்ஸ் க்ளப் என்று சிறார் மன்றங்கள் 1960-ல் இருந்து பல முக்கிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் நலனுக்காக சமீபத்தில் சென்னையில் அதுவும் வடசென்னையில் நிறுவப்பட்ட விளையாட்டு மையங்கள், கண்ணுக்கினிய பூங்காக்கள் வரவேற்கத்தக்கது.
மும்பாய், தில்லி, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களில் வேலைத் தேடி நகரத்திற்கு குடிபெயரும் மக்கள் அதிகரிக்கும்பொழுது புதிதாக குடிசைப் பகுதிகள் உருவாகுகின்றன. மும்பாயில் தாராவி, கொல்கத்தாவில் துறைமுகப் பகுதி என்று லட்சக்கணக்கான குடியிருப்புக்களைக் கொண்ட குடிசைப்பகுதிகள் உள்ளன. ஆனால் சென்னையில் ஒரே இடம் என்றில்லாமல் சுமார் 900 குடிசைப் பகுதிகள் நகரில் பரவலாக அமைந்துள்ளன. இது தவிர கடற்கரையொட்டி சுமார் 50 மீனவர் குடியிருப்பு பகுதிகள். இந்தப் பகுதிகளில் இயங்கும் “சிறார் மன்றங்கள்” அங்கு வாழும் இளைஞர்களுக்கு விளையாட்டு மையமாகவும் நல்லியல்புகளைப் புகட்டும் இடமாக காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, தமழகத்தில் 125 சிறார் மையங்கள் அரசு நிதி உதவியோடு இயங்குகிறது. இந்த மன்றங்கள் சிறப்பாக அமைந்திட தன்னார்வு தொண்டு நிறுவானங்களும் உதவுகின்றன. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 7 வயதில்ருந்து 17 வயதிற்குப்பட்ட சுமார் 7000 சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்திலும் குற்றங்களில் ஈடுப்படக்கூடியவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மாற்று வழி அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நலன் பேணும் திட்டங்களில் தனிமனிதன் குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் கெடுதலை எதிர்க்கும் சக்தி வளர்வதற்கும் உதவும்.

குற்றவாளிகள் தண்டனைப் பெற்ற பிறகு அவர்களை திருத்தும் பணி சிறை இல்லங்களில் நன்னடத்தைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சிறைக் களப்பணியாளர்கள் நிறைவு செய்ய வேண்டும். சிறை என்றாலே எல்லோருக்கும் ஒரு அச்சம் விளைவதற்குக் காரணம் சிறை கொடுமைப் படுத்தும் இடம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது தான். சிறையிலிடப்படுவதுதான் தண்டனையே தவிர அதற்கு மேல் பிராயச்சித்தமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அதற்கு மாறாக சிறை இல்லவாசிகளின் உயிர், கண்ணியம், சமத்துவம் ஆகிய ஆதார மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறையிலுள்ளவர்களை கண்ணியமாக நடத்துவது சமுதாயத்தின் உயரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும் நிலையில் இல்லவாசிகளை நல்வழிப்படுத்தும் பணி மிகக் கடினமானது. ஆதலால் தான் மேலைநாடுகளில் சிறை அடைப்பு என்றில்லாமல் கட்டாய சமுதாயப்பணி மாற்று தண்டனையாக கொடுக்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் கூடாது என்ற அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை 12,000-மாக 1960 வருடத்தில் இருந்தது, படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ஆயிரத்துக்குக் கீழ்தான் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன. இது நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய சமுதாயமேவிய பணிகளை மாற்று தண்டனையாக வழங்குதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறைக்கதவு அடைக்கும் பொழுது ஏற்படும் விரக்தியைவிட சிறைக்கதவு திறக்கும்பொழுது வெளிவரும் நபருக்கு மனவேதனை அதிகமாகிறது என்பது உண்மை. சிறைக்கு செல்வதே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு சிறைவாசம் பழகிவிடுகிறது, உணர்ச்சிகளும் மரத்து விடுகின்றன. ஆனால் சிறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் சமுதாயத்தோடு இணைவதற்கும், மாற்று வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கும் மிக கவனமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

விடுதலை பெற்று வருபவருக்கு முதல் பிரச்சனை பொருளாதாரமின்றி எவ்வாறு வாழ்வை துவங்குவது என்பதுதான். மற்றது சமுதாயம் தன்னை புறக்கணித்து விடும் என்ற பயம். குற்றம் புரிந்தவர்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிலிருந்து விலகியதால் ஊனமுற்றவர்கள் என்று கருதி, ஆனால் இப்போது நல்வழியில் வந்துள்ளார்கள் என்று அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர சமுதாயம் முன்வர வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றவழிப்பாதையில் செல்லாமல் இருப்பதற்கு உதவிக்கரம் கொடுக்கப்பட வேண்டும்.

சிறையிலிருந்து வெளி வருபவர்களுக்கு மாற்றுவழி கொடுப்பதற்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் உதவி மையங்கள் உள்ளன. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இந்த கூட்டுறவு மையங்களோடு இணைந்து செயல்படுகின்றன.

குற்றங்கள் நடவாமல் தடுப்பதில்தான் விவேகம் இருக்கிறது. சுய உந்துதலோடு காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் நடவாமல் தடுக்க முடியும். நிதின் குமாரியின் கொலையிலும் குற்றவாளி பராரியாக திரிந்து கொண்டிருந்தவன், சிறு குற்றங்களில் ஈடுபட்டவன். தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய குற்றம் நிகழாமல் தடுத்திருக்கலாம். செய்ததைவிட செய்யாமல் ஏன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம் என்ற ஏக்கம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கண்கூடாகத் தெரிகிறது.

வற்றுமா குற்றம் என்ற கேள்விக்கு விடை நமது கையில் இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றம் பற்றில்லாமல் வற்றுவது உறுதி.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 06.06.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.