Monday, May 25, 2009

சிலிர்க்க வைக்கும் சிக்கிம்







இந்திய துணை கண்டம் என்று நமது நாட்டைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானதொன்று. ஏனெனில் பலதரப்பட்ட மக்கள், மாறுபட்ட சீதோஷ்ணநிலை, விதவிதமான தாவர வகைகள், விலங்கினங்கள், கலாச்சாரப் பரிமாணங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் காணமுடிகிறது. இந்தியா எவ்வளவு மாநிலங்கள் உள்ளடங்கியது என்று கேட்டால் பலருக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. அதிலும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. சிக்கிம் நமது நாட்டின் எல்லைக்குட்பட்டதா என்று ஐயமுறுபுவர்கள் உள்ளனர் என்பது ஆச்சிரியத்திற்குரியது.




1975-ம் ஆண்டு சிக்கிம் நமது நாட்டின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைக்கப்பட்டது. 7110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய இம்மாநிலம் கோவாவிற்கு அடுத்து சிறிய மாநிலம். ஜனத்தொகை 5 லட்சத்து நாற்பதாயிரம். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமும் வடகிழக்கு மாநிலமாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அலுவலர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விடுமுறை பயணச் சலுகை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பதிலாக வடகிழக்கு மாநிலம் ஏதாவது ஒன்றிற்கு செல்லலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் ஒரு ஆணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஆணை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையில் மத்திய அரசு ஊழியர்கள் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வருமானத்திற்கு வழிவகை.




கொல்கத்தா நகரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு சந்திப்பு மையம். சிக்கிம் மேற்கு வங்காளத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிலிகுரி, புதிய ஜல்பாய்குரி பிரதான ரயில் சந்திப்புகள். சிலிகுரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்டோக்ரா கடைசி விமானதளம். இது இந்திய விமானப் படையின் முக்கியமான தளம். சிலிகுரியிலிருந்து சுமார் நாலரை மணி சாலைப் பயணத்திற்குப் பிறகு சிக்கிம் தலைநகரான கேங்டாக்கை அடையலாம்.




மலைப்பாதை டீஸ்ட் நதியின் கரையோரமாக செல்கிறது. பசுமையான அடர்ந்த காடுகள் கண்ணுக்கினிய காட்சிகள். பிரம்மாண்டமான மலைப்பகுதி, மலையிலிருந்து வேகமாக உருண்டோடிவரும் டீஸ்ட் நதி மனதுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.




சிக்கிம் மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டது. மாநிலம் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களுக்கு உண்டான அரசு அமைப்புகள் உள்ளன. சிக்கிம் சட்டசபையில் 32 உறுப்பினர்கள். தலைமைச் செயலகம், காவல், பொதுப்பணி, கல்வி முதலிய எல்லாத் துறைகளும் இயங்குகின்றன. சிக்கிமின் பெருவாரியான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. மக்கள் ஜனத்தொகை சதுர கிலோ மீட்டர் கணக்கில் மிகக் குறைவு. விதிக்கப்பட்ட சில இடங்களில்தான் கட்டிடங்கள் கட்டலாம். வெளிமாநிலத்தவர் இங்கு இடங்கள் வாங்க இயலாது.




சிக்கிம் மாநிலம் நேபாளம், சைனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையைக் கொண்டது. இது தவிர மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லையும் சிக்கிம் எல்லையில் அடங்கும். நமது நாட்டின் பாதுகாப்பு என்ற நிலையில் பார்த்தால் சிக்கிம் ஒரு முக்கியமான பகுதி என்பது தெளிவு.
சிக்கிம் மாநிலத்தில் பழங்குடி மக்கள் “லெப்சா” இனத்தைச் சேர்ந்தவர். ரம்யமான தமது பிரதேசத்தை “ நயி மேயில்” புதுக்கருக்கு அழியாத இடம் என்று வர்ணிக்கின்றனர். வானத்தைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் வெண்பனி சூழ்ந்த ‘கஞ்சன்சங்கா’ மலைத்தொடர் கண்கொள்ளாக் காட்சி. சுமார் 8596 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த மலைத்தொடர் உலகத்தில் மூன்றாவது உயரமான மலை என்ற பெருமை கொண்டது. புனிதமான மலை என்று சிக்கிம் மக்களால் கருதப்படுவதாலோ என்னவோ இதன் உச்சியை எவரும் முழுமையாக அடைய முடியவில்லை. 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சாலா கணவாய் மலைத்தொடரை நடை பயணமாய் காண விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எங்கும் கண்டிராத தாவர வகைகளையும், அழகிய நீர்வீழ்ச்சிகளயும் காணமுடியும்.




சரித்திரப் புகழ் வாய்ந்த 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள “நாதுலா கணவாய்” கேங்டாக்கிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போய் சேர்வதற்கு மூன்று மணி நேரம் பிடிக்கும். இப்போது சைனா கட்டுப்பாட்டில் உள்ள திபேத்திய நாடு அதற்கப்பால் அமைந்துள்ளது. நமது நாதுலா எல்லைப் பகுதிக்குச் செல்ல சிக்கிம் காவல்துறை அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்திய ராணுவ வீரர்களும், சைனா நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் எதிரும் புதிருமாக நிற்கும் இடம். சைனா ராணுவ வீரர்கள் சிரித்துக் கொண்டு சகஜமாக இந்திய யாத்ரிகர்களை புகைப்படம் எடுத்தனர். ஆனால் நமது எல்லையில் கட்டுப்பாடும் கெடுபிடியும் அதிகம். பீஹார் ரெஜிமெண்ட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் இருந்தனர். நமது மக்களை ஏன் கனிவோடு நடத்தக்கூடாது ஏன் இந்தக்கடுகடுப்பு என்று தோன்றியது. சீருடை அணிந்தால், விறைப்பாக நடந்து கொண்டால் தான் தமது அதிகாரம் மதிக்கப்படும் என்ற பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களின் நினைப்பு எப்போது மாறுமோ? புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சில நாட்களில் நமது ராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என்றார்கள்.
1958-ம் வருடம் பாரதப் பிரதமர் ஜஹர்லால் நேரு அவர்கள் நாதுலா எல்லைக்கு வந்ததற்க்கு அடையாளமாக ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்போது சிக்கிம் இந்திய பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சைனா எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்க்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்வான பகுதியில் கண்காணிப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளான. புதிதாக செப்பனிடப்பட்டுள்ள அகல சாலைகள் போடப்பட்டிருந்தது. சாலை நடுவே பளிச்சென்று மஞ்சள் கோடு, போக்குவரத்தே இல்லாத இப்பகுதியில் எதற்கு என்ற கேள்விக்குறி எழாமல் இல்லை. ஆனால் இந்திய எல்லைப்பகுதியில் கரடு முரடான மண்பாதை வழியே சிரமப்பட்டுத்தான் உச்சியை அடைய முடியும். இதுவும் பாதுகாப்புக் கருதி தடைகள் தடைகளாகவே இருக்கட்டும் என்று விடப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! நமது பக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சிற்றுண்டி விடுதியில் கன ஜோரான வியாபாரம். அருகில் இன்டெர்னட் இணைப்புடன் கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிக உயரமான இன்டெர்னட் மையம் இதுதான் என்ற அறிவிப்புப் பலகை பெருமையோடு பறைசாற்றியது.




“சிப்சு” என்ற பகுதியில் சாலை ஒட்டி மதராஸ் ரெஜிமெண்ட் அணி அமைந்துள்ளது. ‘பத்தொன்பதே வெற்றி நமதே’ என்ற வீர வரிகள் முகப்பில் எழுதப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. தூய்மையாகவும், நேர்த்தியாகவும் ராணுவத்திற்கே உண்டான ஒழுக்கமுடன் பராமரிக்கப்பட்டிருந்தது. முகப்பில் நின்ற வீரர் சகஜமாக அணியின் பொறுப்புகளை விவரித்தார். அவரது பொறுப்புணர்ச்சியும் ஈடுபாடும் மெச்சத்தக்கது. சிப்சு கிராமவழி சாலையில் ஒரு அறிவிப்புப் பலகை இந்தியிலும் ஆங்கிலத்திலும் போடப்பட்டிருந்தது. அதில் ராணுவ விரர்கள் கிராமத்திற்க்கு முகாந்திரம் இன்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தும் வாசகங்கள், எந்த ஒரு உள்ளுர் பிரச்சனையிலும் ராணுவத்தினர் ஈடுபடுக்கூடாது என்பதற்காக ராணுவ தலைமையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.




இந்தியாவின் பொக்கிஷம் என்று உணரப்படுவது பல நூற்றாண்டுகளாக சமுதாயாதோடு இழைந்த கலாச்சாரம், எல்லா நாட்டவரையும் வரவேற்கும் மனப்பாங்கு, வேறுபாடுகளை அனுசரித்துப் பழகும் பக்குவம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், கேங்டாக் நகரில் உள்ள நாம்கியால் திபேத்திய ஆராய்ச்சி மையம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளை தாங்கிய தங்கப் பெட்டகம் என்றால் மிகையில்லை. ஐம்பது வருடங்களாக இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கியக் குறிக்கோள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவின் சித்தாந்தங்களை பண்டை நூல்களிலிருந்து தொகுத்து ஆராய்ந்து மக்களிடையே பகிர்ந்து கொண்டு சமுதாயத்தை மேன்மையடையச் செய்வது, அரிய பல சமஸ்கிருத நூல்களும் அதன் மொழி பெயர்ப்பும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் விஜயம் செய்த புகழ் பெற்ற சர்வதேச யாத்திரிகர்களின் குறிப்புகள், விமர்சனங்கள், வியாக்கியானங்கள், அந்த காலத்திய சமூகநிலையை நன்கு விளக்குகிறது. சிக்கிம் அரசப் பரம்பரையை சேர்ந்த சோக்யால் தோஷி நாம்கியால் அவர்களின் அரசாட்சியின் போது துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் வளர்ச்சியடைய நல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறந்த பராமரிப்பில் உள்ளது, சிக்கிம் விஜயம் இந்த மையத்தை பாராமல் பூர்த்தியடையாது.




டார்ஜிலிங் மிக அழகான குளிர் பிரதேசம். ஹிமாலய மலைத்தொடரை “டைகர் டாப்” என்ற உச்சி இடத்திலிருந்து கண்டு களிக்கலாம். கூர்க்கா இனத்தை சேர்ந்தவர் அதிகம். அண்டை நாடான நேபாளத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களின் வரத்து, அவர்களின் சொந்த பந்தங்கள், நேபாளத்தில் உள்நாட்டு பிரச்சினையின் தாக்கம் என்று டார்ஜிலிங் கொதுவை நிலையில் உள்ளது. செப்பனிடப்படாத சாலைகள், நெரிசல் மிகுந்த மையப்பகுதி, அகற்றப்படாத குப்பைகள் ஒரு முக்கிய சுற்றுலா மையத்திற்கு அழகு சேர்ப்பதாக இல்லை. அரசு அலுவலகங்களில் கோர்க்கா மாநிலம் என்று தன்னிச்சையாக வைக்கப்பட்ட பெயர் பலகை வாகனங்களில் மேற்கு வங்காளம் என்பதற்கு பதிலாக கோர்க்கா மாநிலம் என்பதற்கு அடையாளமாக ஜி.எல்.என்ற பதிவுக் குறியீடு அங்குள்ள பிரச்சனையை பிரதிபலிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை கருத்தில் கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பலதரப்பட்ட பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.பழங்குடி மக்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், காலம் காலமாக வாழ்க்கையில் இழைந்த நம்பிக்கைகள் இவைகளை மனதில் கொண்டு அரசுப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த இடமானாலும் மக்களின் தேவைகளை உணர்ந்து அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாட்டில் ஆட்சி நடத்துவது போன்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது. இத்தகைய மனநிலையுடன் அதிகார தோரணையோடு நடந்து கொள்ளும் சில அரசு அதிகாரிகளால் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. நாட்டின் வளர்ச்சியில் தமக்குரிய பங்கு மறுக்கப்படுகிறது என்ற நிலைக்குத் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பிரிவினைவாதத்திற்கு இடப்படும் முதல் வித்து இதுதான். டார்ஜிலிங் கூர்க்கா தனிமாநிலம் வேண்டும் என்ற போராட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டதுதான். சிக்கிம் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதியில் உள்ளது. பழங்குடி மக்களுக்கே உரித்தான எளிமை காண முடியும். ஆனால் கூருணர்வுடையவர்கள். “செப்பு மொழி பல உடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப பாரத தேசத்தோடு ஒன்றிய சிக்கிம் மாநில மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.





இந்த கட்டுரை தினமணி நாளிதழில் கதிர் இணைப்பில் 24.05.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Monday, May 18, 2009

சிறைதான் தீர்வா?


குற்றமே ஒரு நோயா அல்லது நோயினால் குற்றம் விளைகிறதா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் சமுதாயத்தில் உள்ள அவல நிலையால் குற்றத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது தெளிவு. வெற்றியடைந்த ஆண்மகன் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஒரு குற்றமிழைக்கும் பெண் பின்னால் ஒரு ஆண் இயக்குகிறான் என்பதை கண்கூடாக பல குற்ற நிகழ்வுகளில் காண்கிறோம். மத்திய புலனாய்வு சென்னைப் பிரிவின் சமீபத்திய பரபரப்பு வழக்கு இதை நிரூபிக்கிறது.

இந்தியாவில் ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 30 சிறை இல்லவாசிகள் உள்ளனர். சிறையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை சுமார் 15,000. தமிழகத்தில் பெண்களுக்கு பிரத்யேகமான சிறை இல்லங்கள் உள்ளன. ஆனால் பல மாநிலங்களில் பெண்கள் ஆண் சிறைகளின் ஒரு பகுதியில் வைக்கப்படுகின்றனர். தனிப் பெண்கள் சிறை சென்னை புழலிலும், திருச்சி, வேலூர், கடலூர் ஆகிய இடங்களிலும் உள்ளன.
சிறையிடப்படும் பெண்களை ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பாக வருகைப் பதிவு, வகைப்படுத்துதல், நல்வழிப்படுத்தும் முறைகள், தொழிற்கல்வி பயிற்றுவித்தல், சுகாதாரம், மருத்துவவசதி, மனநிலை குறைபாடுகள், மறுவாழ்வுக்கு வழி ஆகிய பணிகளில் கவனமாக செயல்பட வேண்டிய பொறுப்பு சிறைத்துறைக்கு உள்ளது. சிறைக்கு வரும் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வருகிறார்கள். சமீபத்தில் NIMHANS என்ற பங்களூரில் உள்ள பிரபலமான மனநல மருத்துவ மையம் கர்நாடக மாநில மத்திய சிறைகளில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 60 சதவிகித சிறை இல்லவாசிகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று கண்டறிந்தது. இந்த அனுமானம் மற்ற மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கும் பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளலாம். மனச் சோர்வடைதல், தாழ்வு மனப்பான்மை, தனி மனித பண்பியல் குறைபாடுகள், அச்சமுறுதல், கோபப்படுதல், போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுதல் போன்ற பல மனநல குறைபாடுகளுடன் உளளனர். இதை உணர்ந்து அவர்களை கையாளுவது அவசியமாகிறது.

ஒவ்வொரு இல்லவாசியின் குற்றத்தின் தன்மை, அவரது கல்வித்தகுதி, அவர் சார்ந்திருக்கும் சமுதாயப் பின்னணி இதன் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி சிறையில் இடம் ஒதுக்க வேண்டும்.

இல்லவாசிகளை சீர்திருத்துவது ஒரு முக்கிய பணியாதலால் ஒவ்வொருவரது மனநிலை பொறுத்தும் அவரது செயல்திறனை வைத்து தொழிற்கல்வியில் ஈடுபடுத்த வேண்டும். சிறைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் ஆண் சிறை இல்லவாசிகள் போல் படிப்பறிவு இல்லாதவர்கள். குறைவாக படித்தவர்கள் ஆயினும் படிப்பார்வத்தில் குறைவில்லை. கணினி பயிற்சி பெற மிகுந்த ஆர்வம் காட்டும் பெண்கள் பலர் உள்ளனர்.
சிறையிலிடப்படும் பெண்கள் குடும்பப்பிரிவை தாளாது தனிமையில் மனம் புழுங்கி வேதனையுறுகின்றனர். இருபது சதவிகிதம் பெண்கள் இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குப்பட்டவர். குழந்தை பெறக்கூடிய பருவம். முப்பத்தைந்து சதவிகிதம் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டவர் தமது சிறுகுழந்தைகளை விட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய கட்டாயம். அவர்களது குழந்தைகள் தாயாரின் அரவணைப்பின்றி ஏங்கும் நிலை.
உச்ச நிதிமன்றம் உபாத்தியாயா (எ) ஆந்திர மாநிலம் என்ற வழக்கில் சிறையிலிருக்கும் பெண்களது குழந்தைகள் நலன் கருதி குறைந்தபட்சம் பராமரிப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இப்பொது பெண் சிறை இல்லவாசிகள் தமது ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை தம்மோடு சிறையில் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு போதிய போஷாக்குள்ள உணவு, பேறு காலத்தில் உரிய மருத்துவ வசதி, பாலூட்டும் பெண்களுக்கு புரதச்சத்துணவு என்று விசேஷ உணவு வழங்கப்படுகிறது. பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் குழந்தைகள் காப்பகம் உள்ளன. அதில் குழந்தைகள் விளையாடுவதற்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கு விளையாட்டு வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்துணவு அளிக்கப்படுகிறது.

பெண் சிறை இல்லவாசிகளின் மனநிலையை ஆராயும் போது தமது விதிவசத்தால் சிறைவாசம் அனுபவிப்பதாகவும், பெரியோர்களுடைய அறிவுரையை கேட்காததால் தமக்கு இந்த தண்டணை என்று தம்மையே நொந்து கொள்கின்றனர். தமது கணவர் அல்லது ஆண்துணை தம்மை இந்த நிலைக்கு தள்ளியதை உணர்கின்றனர். தமது குழந்தைகள் குற்றச்சூழலில் விழக்கூடாது என்று கவலையுறுகின்றனர். ஆனால் ஆண்களது மனநிலை வேறு. தமது பெற்றோர் தமக்கு நேர்பாதை காண்பிக்கவில்லை என்ற மனத்தாங்கல் உண்டு. போதைப் பொருட்களுக்கு அடிமையானதாலும் கெட்ட சகவாசத்தால் சீரழிந்தோம் என்று உணர்கின்றனர்.

பெண்கள் சிறையிலிடப்படுவதால் தலைமுறை சார்ந்த குற்றவாளிகள் உருவாக நேரிடும். வாழையடி வாழையாக குற்றங்கள் தழைத்தோங்குவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் வழிகாட்டுதலின்றி வளரும் குழந்தைகள். ஒவ்வொரு வீட்டிலும் உரிய கட்டுப்பாடோடு குழந்தைகளை வளர்த்தால் சமுதாயத்தில் குற்றங்கள் இருக்காது என்று அமெரிக்க மத்திய புலனாய்வின் முன்னாள் இயக்குநர் திரு.எட்வர்ட் ஹீவர் கூறுவார். இந்த அன்பும் கட்டுப்பாடும் அன்னையால் மட்டும்தான் கொடுக்க முடியும். சிறைவாழ் பெண்கள் தமது குடும்பத்தைப் பற்றியே நினைக்கின்றனர். குழந்தைகள் எவ்வாறு வளர்கின்றனரோ என்று ஏங்குகின்றனர். இவர்கள் ஒருபுறம் இவ்வாறு ஏங்கினாலும் அவர்களது குடும்பத்தினரால் இப்பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது உண்மை. குடும்ப நிகழ்வுகளை இவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை. குடும்பப் பிரச்சனைகளில் முக்கிய முடிவுகளைப் பற்றி இவர்களோடு ஆலோசிப்பதில்லை. இவ்வாறு ஒதுக்கப்படுவதால், ஓரங்கப்பட்டப்படுவதால் இப்பெண்களது மனநிலை மேலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. குற்றம் புரிந்தாள் என்ற சுமை பெண்களை மேலும் கீழே தள்ளுகிறது. சிறையிலிருக்கும் ஆண்களது நிலை இவ்வாறில்லை. குடும்பத்தினர் மீது அவரது ஆதிக்கம் தொடர்கிறது.

தமிழக சிறைகளில் தற்போது தண்டனையுற்ற பெண்களில் 127 பெண்கள் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். 16 பெண்கள் சீதன தடுப்புச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள். நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இல்லவாசிகளாக சுமார் 800 பெண்கள் உள்ளனர். இவர்களில் 50 சதவிகிதம் கள்ளச்சாராயம், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். இந்த குற்றங்கள் ஆண்களின் தூண்டுதலும், அவர்களது பின்னணியும் இல்லாது நடைபெற்றிருக்காது.
புழல் பெண்கள் சிறையில் சுமார் 50 பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதில் ஒரு பெண்மணியின் வயது 85. அவர்கள் சமுதாயத்திற்கு பாதகம் விளைவித்தவர்கள் என்று தனிமைப்படுத்தி சிறையில் வைத்திருக்கிறோம்! சட்டம் தனது வேலையை செய்ய வேண்டும்தான் அதற்காக இவ்வாறு பாய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும். அதுவும் டவுரி சம்பந்தப்பட்ட வழக்குகளில் கணவனது தூண்டுதலால்தான் இந்தக் கொடுமை தொடர்கிறது. அதற்காக பெற்றோர்களை உரிய விசாரணையின்றி இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது.

சந்தர்ப்ப வசத்தால் சிறையில் பிறக்கும் குழந்தை என்ன தவறு செய்தது? உள்ளூர் பதிவு அலுவலகத்தில் இந்தக்குழந்தைகளின் பிறப்பை சிறை பிறப்பு என்பதைத் தவிர்த்து பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் தமிழக சிறை இல்லங்களில் 22 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுகின்றன. இந்த வருடம் ஏப்ரல் மாத கணக்கு முடிய ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் சிறையில் உள்ளனர். இப்போதுள்ள சிறை விதிகள்படி பிரவசத்திற்கு சிறப்பு விடுமுறையாக பதினைந்து நாட்கள் வழங்கலாம். சிறப்பு விடுமுறைக் காலம் முடிந்த பின் சிறைக்கு வந்துவிட வேண்டும். குழந்தையை தன்னோடு வைத்துக் கொள்ள அனுதியுண்டு. ஆறு வயது வரை இத்தகைய கைக்குழந்தைகளை சிறையில் அந்த பெண்மணி வைத்துக் கொள்ளலாம்.

தாய்லாந்து நாட்டில் தண்டனை அடையும் தருணத்தில் பெண் கர்ப்பமுற்றிருந்தால் மூன்று வருடம் தண்டனை தள்ளி வைக்கப்பட்டு குழந்தை ஓரளவு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிறகு தண்டனை அமல் படுத்தப்படுகிறது. இந்தத் திருத்தம் 2007-ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறை சீர்திருத்த நடவடிக்கையில் இது மிக சிறந்த அணுகுமுறை. நமது நாட்டிலும் இந்த மனித நேய அணுகுமுறை அவசியம். சமுதாய சீர்திருத்த நடவடிக்கையில் முன்மாதிரி மாநிலமாகிய தமிழ்நாட்டில் இத்தகைய தற்காலிக தண்டனை தள்ளி வைப்பு நடைமுறைப்படுத்த வேண்டும்.

குற்ற நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால் பரிமாண மாற்றங்கள் காணமுடிகிறது. ஏமாற்றுதல், ஆள் கடத்தல், பணயக் கைதிகளை வைத்து பணம் பறித்தல், இணையதளம் சம்பந்தப்பட்ட சைபர் குற்றங்கள் என்று பல வகையான குற்றங்கள் பெருகி வருகின்றன. கடந்த முப்பது வருடங்களில் இந்தியாவில் கைது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை 95% உயர்ந்துள்ளது. 1973-ம் வருடம் பிரதான தண்டனைச் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 13.8 லட்சமாக இருந்தது. 2006-ம் வருடம் 26.53 லட்சமாக உயர்ந்துள்ளது. சராசரி தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு ஏழு லட்சம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். இதில் சுமார் 65,000 பெண்களும் அடங்குவர். மதுவிலக்குச் சட்டம் போன்ற சமுதாய நல சட்டங்களில் அதிமாக பெண்கள் கைதாகின்றனர். அகில இந்திய அளவில் மொத்த சிறை இல்லங்களில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 4 சதவிகிதம் ஆனால் தமிழ்நாட்டில் சுமார் 7 சதவிகிதம்.

பெண்களை கைது செய்வதில் காவல்துறையினர் குற்றம் புரிந்தவர்கள் என்ற கோணத்தில் மட்டும் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். அதிலும் கர்ப்பமுற்ற பெண்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது. காவல்நிலைய களப்பணியாளர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். குழாயடிச் சண்டை, அண்டை வீட்டினரோடு சச்சரவு போன்ற வழக்குகளில் பெண்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர். மேற்பார்வையிடும் அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இருந்தால் பெண்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற அனுமானம் இருந்தாலோ அல்லது கொடுங்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர் அல்லாது மற்ற சாதாரண வழக்குகளில் பெண்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.

இல்லவாசிகளுக்கு தொழில் கல்வி மூலம் மறுவாழ்வு அமைத்து அவர்கள் மீண்டும் சமுதாயத்தோடு இணைவதற்கான பாதையிடுவது சிறை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு. இதில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் பேணுபவர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. சிறையிலிருந்து விடுதலையாகும் பெண்கள் மீண்டும் குற்ற வலையில் சிக்கக்கூடாது. அதற்காக அவர்களை வேறு இடத்திற்கு குடிபெயரச் செய்து புதுவாழ்வு கொடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், விடுதலையாகும் பெண்கள் பரிச்சயமான தனது இருப்பிடத்திற்குத்தான் செல்ல விரும்புவார்கள். சொந்த இடமே பாதுகாப்பு என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆதலால் ஆரோக்கியமான சூழலில் அவர்கள் மீண்டும் வாழ்க்கையைத் துவக்குவதற்கு சமுதாயம் தோள் கொடுக்க வேண்டும். இதில் காவல்துறைக்கும் முக்கியபொறுப்பு இருக்கிறது “பழைய குருடி கதவ திறடி” என்று குற்றத்தடுப்பு முறையாக பழங்குற்றவாளிகள் மீது மீண்டும் வழக்கு புனையும் குறுக்கு வழியை காவல்துறை கைவிட வேண்டும்.