Friday, December 26, 2008

இரண்டாவது சுதந்திரப் போர்


டி மேல் இடி என்று இந்த வருடம் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல அப்பாவிகள் உயிர் இழந்தனர். உத்திரபிரதேசம், பெங்களூரூ, குஜராத், ராஜஸ்தான், ஐதராபாத், தில்லி இப்போது மும்பாய் ஆகிய முக்கிய நகரங்களையும் சேர்த்து 59 இடங்களில் நடந்த தாக்குதலில் 441 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபடும் திவிரவாதிகளின் நோக்கம் சகஜ வாழ்க்கையை நிலைகுலைய செய்து சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது, விரோதத்தை வளர்ப்பது, முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பது, பாதிப்பு அடைய செய்வது, கலகம் விளைவித்து ஆதாயம் தேடுவது. நடந்த நிகழ்வுகளில் சமுதாயத்தில் வேறு விதமான மதம் சார்புடைய கலகங்கள் நடவாமல் தடுக்கப்பட்டதில் ஒரளவு திருப்தி அடையலாம். இது சாதாரண மக்களின் முதிர்ச்சியான அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். நவம்பர் 26-ம் நாள் மும்பாயில் நடந்த கொடூரமான தாக்குல் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. மக்களை பிளவுபடுத்த நினைத்த கலகக்காரர்களின் குறிக்கோள் வெற்றியடையவில்லை மாறாக தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், ஒன்று சேர்ந்து தகர்த்தெறிய வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் வளர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.
பலவிதங்களில் மும்பாய் தாக்குதல் வித்தியசமானது எல்லாவிதத்திலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில் இருக்கக்கூடிய குறைகளையும், தவறுகளையும் படம் பிடித்து காட்டியுள்ளது.
தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது.எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை.
தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.பொது மக்கள் காவல்துறையின் பணிகளில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பை பெற காவல்துறையினரும் தமது பணிகளை திறம்பட செய்திட வேண்டும். பொது இடங்களில் சந்தேகிக்கும் பொருள்கள் இருந்தாலோ, சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. இது இந்திய ஆளுமைக்கே சவால். மக்கள் சக்தி மகத்தானது. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி லத்தி மட்டும் ஏந்திய துணிச்சலான காவலர்களால் சாதிக்க முடிந்தது என்பது நெஞ்சுறுதியும் வீரமும்தான் உண்மையான ஆயுதங்கள் என்று தெளிவுபடுத்துகிறது. மக்களிடையே விரோதத்தை வளர்க்கும் பிரிவினை சக்திகளுக்கு இடம் கொடாது தீவிரவாதத்தை ஒடுக்குவோம், பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்போம். மனித நேயத்தை வளர்த்து பாரதி கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்.


இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 21.12.2008 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Monday, December 15, 2008

காவல்துறை செயல்பட வேண்டும்; செயல்படவிடப்படவேண்டும்.

“உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி”

மும்பையில் நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழிசுமத்தி தங்களைப் பொறுத்தவரையில் தவறொன்றுமில்லை என்று பொறுப்பில் உள்ளவர்கள் கூறியது மேற்சொன்ன பாடலைத் தான் நினைவுபடுத்தியது. ஒவ்வொரு அரசு அமைப்பும் தான் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாக தற்காப்பு தன்னிலை விளக்கங்கள் மக்களை சலிப்படையச் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது பெறுப்பை சரிவர செய்திருந்தால் ஏன் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்தது? இந்த தாக்குதல் நம் எல்லோருக்கும் பல பாடங்களை கற்பித்திருக்கிறது.

· விரல் விட்டு எண்ணக்கூடிய தற்கொலைப் படையினர் ஒரு கொடிய போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளை விட பயங்கரமான மனநிலை பாதிப்புகள் மக்களின் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்பது நிதர்சன உண்மை.

· டில்லி தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பின் மும்பை நகர தாக்குதலுக்குள்ளாகும் என்ற தகவல் கொடுக்கப்பட்டும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது. நடவடிக்கை எடுக்கக்கூடிய குறிப்பிட்ட தகவல் இல்லை என்று சால்ஜாப்பு காரணம் காட்டியது.

· தீவிரவாதிகள் தாக்குதல் துவங்கிய பிறகு மும்பாய் போலீஸின் திட்டமிடாத முதல்கட்ட அணுகுமுறை.

· சம்பவ இடத்தை பாதுகாக்க வேண்டும், பொதுமக்களின் இடையூறின்றி பணிகள் செய்ய இடைவெளி ஏற்படுத்தத் தவறியதால் சுற்றுப்புறச் சாலை ஏதோ திருவிழாக்கூட்டம் போல் காட்சியளித்தது.

· உபயோகமாக ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கைப் பார்க்கும் மக்களின் மனப்போக்கு.

· தீவிரவாதிகள் போலீஸ் வாகனத்தையே கடத்திச் செல்லும் அளவிற்கு போலீஸ் கவனக் குறைவாக இருந்தது.

· மீன் பிடிக்கும் துறைமுகத்தில் சந்தேகப்படும் வகையில் மூட்டைகளை சுமந்து சிலர் இறங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியது.

· அசாதாரணமான நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முக்கியத்துறைகள் கூடிய அவசரநிலைகுழு செயல்படாதது.

· தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பணிகளை மேற்கொள்ள பல மணி நேரத்திற்கும் மேற்பட்ட கால தாமதம்.

· தனியார் தொலைக்காட்சிகளின் பொறுப்பற்ற விமர்சனங்கள். பாதுகாப்பு படையினரின் பணிகளில் இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் குறுக்கீடு.

· அசம்பாவிதம் நிகழக்கூடிய இடங்களில் உயர் அதிகாரிகள் ஒரே வாகனத்தில் பயணிக்கக்கூடாது என்ற விதிகள் இருந்தும் மூன்று அதிகாரிகள் ஒரே வாகனத்தில் சென்று தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானது.

இவ்வாறு பல தவறுகள் நமக்கு பாடம் புகட்ட வேண்டும்.

1990-ல் இருந்து மும்பாய் நகரில் பல தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாடு 1980-ல் இருந்தே இலங்கை உள்நாட்டு கலகத்தினால் இம்மாதிரி பிரச்சனைகளை சந்தித்துவிட்டது. 1984-ம் வருடம் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் 33 பயணிகள் உயிரிழந்ததை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் இந்த வருடம் 59 தீவிரவாத நிகழ்வுகளில் 441 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 26 மும்பை தாக்குதல் பலவகையில் வித்தியாசமானது. அமெரிக்காவின் 9/11-க்கு ஒப்பிட்டு கூறலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.

தற்போது சென்னையிலும், மும்பை தாக்குதலுக்குப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் கடற்பகுதியியைப் கொண்டது. 1993-ம் வருடம் கடலோர பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது. சென்னை கடலோர ஆழமில்லா பகுதியில் ரோந்து செய்ய மிதக்கும் காவல்நிலையம் சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை. கமாண்டோ பயிற்சிப் பள்ளியும் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதி நவீன துப்பாக்கிகள், இரவில் உபயோகிக்கக்கூடிய பைனாகுலர்கள், துண்டு துளைக்காத கவசங்கள் வாங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்க்கும் மேலாக கமாண்டோக்களுக்கு விசேஷ பயிற்சி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களிலும் தனி கமாண்டோ குழுக்கள் பயிற்சி பெற்ற மாவட்ட ரிசர்வ் படையில் உள்ளனர்.

1998-ம் வருடம் கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடாது கையாளப்பட்டன. அதே சமயம் சிறுபான்மையினரின் குறைகளை களையும் விதத்தில் சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.

கோர சம்பவங்கள் 26-ம் தேதியில் நிகழ்வது வினோத ஒற்றுமை.
டிசம்பர் 26 சுனாமி தாக்குதல்
ஜனவரி 26 எல்லைப் பகுதி கட்ச் நிலநடுக்கம்
பிப்ரவரி 26 குஜராத் ‘கோத்ரா’ நிகழ்வு
ஜுன் 26 குஜராத்தில் வெள்ளம்
ஜூலை 26 மும்பை ரயில் குண்டு வெடிப்பு
செப்டம்பர் 26 அகமதாபாத் குண்டு வெடிப்பு
நவம்பர் 26 மும்பை படையெடுப்பு
26-ம் தேதியில் துரதிருஷ்டம் இந்தியாவை துரத்துகிறதா?

போதுமடா சாமி இனியாவது தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று சமுதாயத்தில் உணர்வு மேலோங்குவது வரவேற்கத்தக்கது. என்னதான் நவீன கருவிகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு கொடுத்தாலும் ஜனரஞ்சக தகவல் சேகரிப்பு முறை கைவிட முடியாது. மும்பாய் நிகழ்வில் மீன்பிடித்துறையில் மூட்டைகளுடன் இறங்கிய தீவிரவாதிகளை சந்தேகப்பட்டு காவல்துறைக்கு மீனவப் பெண் கொடுத்த தகவலை உள்ளூர் காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் பிதாயின் தாக்குதல் நடந்த சம்பவத்தில் உத்திரப்பிரதேச போலீஸார் பாஹிம் என்பவனை இந்த வருடம் பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவனிடமிருந்து தெற்கு மும்பையின் பல முக்கிய பொது இடங்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. அவனும் பாகிஸ்தானில் உள்ள முர்ஷிதாபாத்தில் பயிற்சி பெற்றவன். தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்கக்கூடும் என்ற தகவல் சிவில் போலீஸாருக்கு பரிமாற்றம் செய்து சரிவர அவர்கள் உணர்த்தப்படாதது மற்றுமொரு தவறு. இதற்கு மேற்பார்வையிடும் அதிகாரிகளே பொறுப்பு. இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகும் ஒரு பத்திரிக்கையாளர் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் சந்தேகப்படும் பொருட்களோடு படகில் அதே மீன்பிடி துறையில் இறங்கியுள்ளார். எவரும் அவரை சந்தேகிக்கவில்லை. இரயில் நிலைய சோதனையையும் மீறி கையில் துப்பாக்கியோடு கடந்திருக்கிறார். இது நமது கடைநிலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை உணர்த்துகிறது. இப்போது போலீஸின் பிடியில் உள்ள தீவிரவாதி அசல் அமீர் காசப் என்பவன், லத்தி மட்டும் ஏந்திய சில சமயோஜித காவலர்களால் பிடிக்கப்பட்டான் என்பது செய்தி. நெஞ்சுறுதியும், கடமையுணர்வும் தான் நவீன துப்பாக்கிகளைவிட பலமான ஆயுதம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்!

சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பைக்கு ஆபத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எவ்வாறு தவிர்ப்பது, எதிர்கொள்வது என்பதில் தவறவிட்டுவிட்டோம். எல்லா நிலையிலும் காவல்துறை, அரசாளுமை, சமுதாயம், ஊடகங்கள் என ஒன்று சேர்ந்து செயலிழந்தன. தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை எதிர்த்து பல உயிர்களைப் காப்பாற்றி இரத்தம் சிந்திய இரத்தின திலகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாகுபாடின்றி தீவிரவாதத்தை முறியடிப்போம். இனியாவது விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் - செயல்படவிடப்படவேண்டும்.

இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 14.12.2008 அன்று உரத்த சிந்தனை பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது

Wednesday, December 10, 2008

சிறைகளையும் ஊடுருவும் உரிமைகள்

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டது. 1914-18 -ல் நடந்த முதல் உலகப் போர், தொடர்ந்து 1939-45-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் எண்ணில்லா மனித உயிர்களை பலி கொண்டது. இனவெறித் தாக்குதல் நடைபெற்றது. இம்மாதிரி கொடுமை மீண்டும் நிகழக் கூடாது என்ற அடிப்படையிலும், நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு மனித நேய அடிப்டையில் வளர்க்கவும், 1945-ம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி மனைவி எலினா ரூஸ்வல்ட் தலைமையில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு மனித உரிமைகள் சாசனம் வரையறுக்க பல நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 30 பிரிவுகள் கொண்ட அடிப்படை மனித உரிமைகள் தெரிவு செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ம் வருடம் ஐக்கிய நாடுகளின் பொதுக்கழு பாரீஸ் மாநகரத்தில் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்தது. அங்கீகாரம் அளித்த 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த புனித நாளை மனித உரிமைகள் தினமாக 1950-ம் வருடத்திலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினை முன்னிறுத்தப்பட்டு அதற்காக விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுத்தப்படும். கடந்த வருடங்களில் வறுமை ஒழிப்பு, மனித உரிமைக் கல்வி, குழந்தைகளின் உரிமைகள், பெண்ணுரிமை, அகதிகளின் உரிமைகள், விசாரணை கைதிகளின் உரிமைகள் என்று பல உரிமை பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சமநீதி, கண்ணியம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்ற உயரிய குறிக்கோளை செயலாக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. பல நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. பிப்ரவரி 2008-ல் மனித இழி தொடர் வாணிபம் மூலம் மனிதர்கள் நாடு கடத்தப்பட்டு வியாபார பொருளாக ஈடுபடுத்தப்படும் கொடிய செயல் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சிறைவாசிகள் மற்றும் காவலில் உள்ளவர்களின் உரிமைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், சிறைவாசிகளுக்குரிய உரிமைகள் பற்றியும் கருத்தரங்கு நடத்தியது. சிறையில் உள்ளவர்களை மனித நேயத்தோடு நடத்துவதில்லை என்பது சிறை நிர்வாகத்தின் மிது பொதுவாக தொடுக்கப்படும் குற்றச்சாட்டு. இதை மனதில் கொண்டுதான் மகாத்மா காந்தி அவர்கள் மிக அழகாகச் சொன்னர்கள் “சிறைவாசிகள் அடிமைகள் அல்ல, அவர்கள் நாட்டின் உடமைகள்”.

உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் மனித உரிமைகளின் தூண்கள் எனலாம். இந்திய அரசியல் சட்டம் பாகம் மூன்றில் இந்த அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரிமைகளுக்கு சட்டப்படி சில வரைமுறைகள் வகுக்கலாமே தவிர எக்காரணம் கொண்டும் மறுக்கப்பட முடியாது. காலில் ஜிப்ரான் பலம் படைத்தவர்களின் அடக்குமுறை போக்கை “கல் உடைத்தோம் அதை வைத்து சிறை கட்டினாய், நூல் நூற்றோம் அதை சாட்டையாக்கி பிரயோகித்தாய்” என்று விவரிக்கின்றார். தொன்றுதொட்டு வரும் இம்மாதிரியான அடக்கு முறைகளால் சிறைச்சாலைகள் கொடூர மையங்கள் என்ற கணிப்புதான் மேலோங்கியுள்ளது.
எந்த ஒரு குற்ற நிகழ்வும் ஒருவருடைய உரிமை மீறல் சம்பந்தப்பட்டது. இதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினுடையது. அந்த விசாரணை நியாயமானதாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். முறையற்ற விசாரணையால் காவல்துறையின் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுவது வேதனைக்குரிய விஷயம். ஒரு வழக்கு விசாரணையின்பொழுது குற்றம் புரிந்தவரை கண்டுபிடித்து ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து புலனாய்வு மேற்கொள்வது ஒரு முக்கிய கட்ட நடவடிக்கை. ஆனால் இத்தகைய கைது சட்டத்திற்கும், விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். முறையற்ற கைதினால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

மத்திய ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2006-ம் வருடம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 26.53 லட்சம் குற்றவாளிகளும், சமூக நல சட்டங்களின் கீழ் 35.54 லட்சம் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த முப்பது வருடங்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 92.20% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2007-ம் வருடம் 2.01 லட்சம் குற்றவாளிகள் இந்திய தண்டனை சட்ட வழக்குகளிலும், 5.31 லட்சம் குற்றவாளிகள் சமூக நல சட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 65,091 பெண் குற்றவாளிகள் அடங்குவர். கைது நடவடிக்கையின் பொழுது டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வரைமுறைப்படுத்தியுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக கைது செய்த 24 மணி நேரத்திற்குள் பிரயாண நேரம் நீங்கலாக நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் விளைவிக்கக்கூடிய வழக்குகள் தவிர்த்து மற்ற சாதாரண வழக்குகளில் கைது செய்தவரை காவல்துறையே ஜாமீனில் விடுவித்து மனித உரிமை மீறல் குற்றங்களைக் குறைக்கலாம். இங்குதான் காவல்துறையின் மேலதிகாரிகள் முதிர்ச்சியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டும். மேலும் எதிர்மறைத் தாக்குதல் (என்கௌண்ட்ர்) மிக அபாயகரமான நேர்வுகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். சாதாரண நிகழ்வுகளில் இத்தகைய அணுகுமுறை தவறானது.

சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது அந்த நாட்டின் சமுதாய கலாச்சாரத்தின் பிரதிபலப்பு என்பது உண்மை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காவலில் உள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கிறது.

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கைது நடவடிக்கை, காவலில் வைப்பது (சட்டத்தின் அடிப்படையில்) தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் எடுக்கப்பட வேண்டும்.

மனிதாபிமானம், கண்ணியம் பாதிக்கும் வகையில் ஒருவரும் நடத்தப்படக்கூடாது. காவலில் உள்ளவர்களை கொடுமைப்படுத்துதல் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

காவலில் உள்ளவர்கள் கண்ணியமான முறையில், மனிதாபிமான முறையில் நடத்தப்படவேண்டும்.

காவலில் வைக்கபடுவர்கள், காவலுக்குள்ளான உரிமைகளைத்தவிர மற்ற சிவில், பொருளதார, கலாச்சார, சமுதாய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்குண்டான உரிமைகளை பாகுபாடின்றி அனுபவிக்க உரிய சூழல் உருவாக்க வேண்டும்.

உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில் அதைப் பற்றி புகார் கொடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

தேசிய மனித உரிமைகள் ஆணையமும், காவலில் உள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியதை முக்கியமான மனித உரிமையாக அறிவித்துள்ளது (Custodial Justice). எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை வளாகங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20,000 இல்லவாசிகள் தங்க வசதி உள்ளது. இல்லவாசிகளின் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இன்றி பணிகள் நிறைவு செய்யப்படுகின்றன.
சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

· சிறைச்சாலை வளாகங்களில் அடைப்பில் உள்ள சிறைவாசிகளை ‘இல்லவாசிகள்’ என்று சுயமரியாதை பேணும் வகையில் அழைக்கும் முறை அமல்படுத்தல்.

· உணவுப் பண்டங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க தரமான, அத்தியாவசியமான அரிசி, பருப்பு, சக்கரை வகைகளை அரசு சிவில் சப்ளை நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய பரிந்துரையின் பேரில் அரசு ஆணையிடல்.

· எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கு விசேஷ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் எல்லா மத்திய சிறை வளாகங்களிலும் அமைத்தல். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு வழங்கல்.

· 60 வயதுக்கு மேற்பட்ட இல்லவாசிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தனி பராமரிப்பு ஏற்பாடு.

· உடல் ஊனமுற்ற இல்லவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ வசதி மற்றும் உணவு.

· இல்லவாசிகள் கல்வி பயில்வதற்கு முன்னுரிமை. வளர்கல்வி, ஆரம்பக் கல்வி, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் திறந்தவெளி பல்கலை கழகங்கள் மூலம் இளங்கலை கல்வி முறைகளுக்கு ஏற்பாடு.

· செயல் வழிக் கல்வித்திட்டம் அமல்படுத்தல்

· தொழில்நுட்ப கல்வி பயிற்சி அளித்தல்

· சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தி இல்லவாசிகளுக்கு சிறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தல்.

· தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து உழைப்பதற்கு வாய்ப்பளித்து இல்லவாசிகள் பணம் ஈட்ட வழிவகுத்தல்.
· விடுதலையாகும் இல்லவாசிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடு.

· யோகா, தியானம், வாழும்கலை பயிற்சிகள் மூலம் இல்லவாசிகளுக்கிடையே மன அமைதி ஏற்படுத்தல்.

· தேச பக்தி பாடல்கள் தினமும் சிறைச்சாலைகளில் ஒலிக்க ஏற்பாடு. இதன்மூலம் அவர்களின் நாட்டுப்பற்றை வளர்த்தல்.

· எல்லா மத பண்டிகைகளையும் இல்லவாசிகளோடு கொண்டாடுதல்.

· சிறைச்சாலை நிர்வாகப் பணியாளர்கள் பணிகள் பரிமளிக்க விசேஷ பயிற்சி துவக்கம்.

மனித உரிமைகள் புனிதமானவை அவை மனிதனின் இதயத்தில் இயற்கை அன்னையின் விரல்களால் எழுதப்பட்டவை. மனித நேயம் பேணுவோம் மனித உரிமைகள் காப்போம்.

உலக மனித உரிமை நாள் 10.12.2008 அன்று தினமணி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.